என் மலர்
நீங்கள் தேடியது "JDU"
- நிதிஷ் குமார் 20-ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
- இலாகா தொடர்பாக பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.
நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இதனால் 20-ந்தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி வழங்க நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் அமைச்சராக தேர்வு செய்யக் கூடியவர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
யார் யாருக்கு எந்த இலாகா என்பதை முடிவு செய்ய பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இரு கட்சிகளுக்கும் இடையில் பெரும்பாலான இலாகாக்களை பிரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், உள்துறை அமைச்சர் இலாகாவை பாஜக-வுக்கு வழங்க ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. அதேபோல், சபாநாயகர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்க பாஜக விரும்பவில்லை எனத் தெரிகிறது.
இரண்டு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவுடன்தான் செயல்பட வேண்டிய நிலை. ஒருவேளை மோதல் ஏற்பட்டால் ஆட்சி மற்றும் பெரும்பான்மையை தக்கவைக்க இரண்டு பதவிகளும்தான் முக்கியமானவை. இதனால் இந்த பதவிகளை தக்கவைக்க இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டு வருகின்றனர்.
- பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்படுகின்றன.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மேலும், அவருடைய உதவியாளர்கள் மணிகாந்த் தாக்குர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பாட்னா போலீஸ் அதிகாரி கார்த்திகேய சர்மா, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
- 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு நவம்பர் 6, 11 தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- சட்ட மேலவை உறுப்பினர்கள் சஞ்சய் பிரசாத் மற்றும் ரன் விஜய் சிங் ஆகியோர் அடங்குவர்.
243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) இடம்பெற்ற பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன்(இந்தியா) கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் உட்பட 11 தலைவர்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஜேடியுவிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களில் முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் ஷியாம் பகதூர் சிங் மற்றும் சுதர்சன் குமார், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்கள் சஞ்சய் பிரசாத் மற்றும் ரன் விஜய் சிங் ஆகியோர் அடங்குவர்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இந்த தலைவர்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விடுதி மாணவர்களுடன் உரையாட ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.
- அவரது காரை தடுத்து நிறுத்தி விடுதிக்கு செல்ல விடாமல் நிர்வாகம் தடுத்தது.
பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் பொதுத் தொடர்பு நிகழ்ச்சி (public interaction programme- Shiksha Nyay Samvad) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள மிதிலா பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் விடுதியில், ராகுல் மாணவர்களை சந்தித்து உரையாட இருந்தார். ஆனால் ராகுல் காந்தி காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி நடந்து சென்று மாணவர்களை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் தலித் மாணவர்களோடு தொடர்பு கொள்வது பாவமா? என கேள்வி எழுப்பி ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
தலித், பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மணாவர்களுடன் தொடர்பு கொள்வது அரசியலமைப்புக்கு எதிரானதா?. அவர்களின் படிப்பு, தேர்வுகளுக்கான தேவைகள், வேலைகள் பற்றி அவர்களுடன் பேசுறது பாவமா?.
பீகாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வதை ஐக்கிய ஜனதா தளம்- பாஜக அரசு தடுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம்.
இவ்வாறு கார்கே குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் "இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அது அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல. சமூக நீதி மற்றும் கல்விக்காக நாம் குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள் 2 பேர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க,வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.க்கள் முகமது காசிம் அன்சாரி மற்றும் முகமது நவாஸ் மாலிக் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக நிதிஷ்குமாருக்கு கடிதம் அனுப்பிய அவர்கள், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தனர்.
- கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
- இதில் பேசிய எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா, ஆண்களுக்கு 2 மதுபாட்டில் கொடுக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபையில் சமீபத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. இதில் கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா பேசியதாவது:
கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை 3 முறை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் வரியை மீண்டும் உயர்த்தினால் எப்படி ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எட்ட முடியும்?
மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினரை தடுக்கவே முடியாது.
மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் நம் வரிப்பணம்.
அதுபோல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில்களை வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை வேறு எப்படி கொடுக்க முடியும்? என தெரிவித்தார்.
கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது.
+2
- மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
- ஜீ மேட்ரைஸ் மற்றும் பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது.
பெங்களூரு:
கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறற்து. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி உள்ளது. மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது வரும் 13ம் தேதி தெரிந்துவிடும். மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.
இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கின. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.
பாஜக 94 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 91 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 14 முதல் 24 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோல் மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ்-86, மதச்சார்பற்ற ஜனதா தளம்-21 இடங்கள் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் பாஜக 85 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஜீ மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் 108 தொகுதிகள், பாஜக 86 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 108 இடங்கள் வரை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 24 முதல் 32 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிகிறது. ஆட்சியமைப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?
- பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது
பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ''பீகாரில் சட்டம்- ஒழுங்கு பாகிஸ்தானை விட மோசமாகியுள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில் ''பா.ஜனதா தலைவர் பீகாரின் சட்டம்- ஒழுங்கு சூழ்நிலையை எப்படி பாகிஸ்தான் போன்ற நாட்டுடன் ஒப்பிட முடியும்?. பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?. அவர்கள் பாகிஸ்தானின் ஏஜென்டா?. பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது என்று நான் சொல்லுவேன்.
ஜனநாயக பூமியான பீகாரை, ஜனநாயகம் இல்லாத பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, அவமதித்து விட்டார்கள். இந்தியாவின் வளர்ச்சி குறித்து இந்திய தரவரிசை அமைப்புகள் பாராட்டியதை பிரதமர் மோடி சுதந்திர தின விழாவின் போது சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், பா.ஜனதா தலைவர்களுக்கு நான் கண்ணாடியை காட்டுகிறேன்.
பத்திரிகை சுதந்திரம், உலக மகிழ்ச்சி குறியீடு, உலகளாவிய பசி குறியீடு, உலகளாவிய போட்டித்திறன் குறியீடு போன்றவற்றில் பாகிஸ்தானை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளது. மேலும், நீங்கள் சட்டம்- ஒழுங்கு குறித்து பேசுகிறீர்கள். 2021 கால்அப் (Gallup) குறியீட்டின்படி, பாகிஸ்தானை விட இந்தியாவின் நிலை மோசமாக இருந்தது'' என்றார்.
- இந்தியா கூட்டணியின் நான்காவது சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது
- கடந்த முறை டீ, பிஸ்கட், சமோசா வழங்கினர் என்றார் பின்டு
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாநிலங்களின் முக்கிய கட்சிகளை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர்.
இக்கூட்டணியின் முதல் சந்திப்பு பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு பெங்களூரூவிலும், 3-வது சந்திப்பு மும்பையிலும் நடந்தது.
நான்காவது சந்திப்பு இரு தினங்களுக்கு முன் புது டெல்லியில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், தேர்தலில் கூட்டணி கட்சிகளின் இட பங்கீடு, பேரணிகள், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிப்பதாக இருந்தது.
பிரதமர் வேட்பாளர் பெயரில் இந்த சந்திப்பில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இச்சந்திப்பில் பங்கேற்ற பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள எம்.பி. சுனில் குமார் பின்டு இந்த கூட்டம் குறித்து தெரிவித்ததாவது:
பல பெரிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் நிதி நெருக்கடியில் இருப்பதனால் மக்களிடம் நன்கொடை கேட்டது.
கடந்த சில சந்திப்புகளில் டீ, பிஸ்கட், சமோசா அளித்து உபசரித்தனர்.
ஆனால், இந்த முறை சமோசா இல்லை; டீ, பிஸ்கட் மட்டும்தான்.
இடப்பங்கீடு, பிரதமர் வேட்பாளர் என எந்த விஷயத்திலும் முடிவும் எட்டப்படாமல்தான் சந்திப்பு நிறைவடைந்தது.
இவ்வாறு பின்டு கூறினார்.
- ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
- இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.
லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.
- இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் நிதிஷ் குமார்.
- நிதிஷ் குமார் பீகார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
புதுடெல்லி:
ஐக்கிய ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவராக இருந்த ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை இன்று ஏற்றுக் கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
- குடும்ப அரசியல் குறித்து நிதிஷ் குமார் பேசியதால் லாலு மகள் கடும் விமர்சனம் செய்திருந்தார்.
- இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்காததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்.
பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் இணையப் போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.
இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, லாலு யாதவ் மகளின் காட்டமான சமூக வலைத்தள பதிவுகள், ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்கள் அவர் பா.ஜனதா கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 9-வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், பா.ஜனதா சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாகத்தான் அவர் 22 ஐ.ஏ.எஸ்., 79 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் சட்டமன்றம் கலைக்கப்படாது. பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறாது எனவும் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதால் எந்த கட்சிகளும் பெரும்பாலும் அவசரம் காட்டாது எனத் தெரிகிறது.

நேற்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை தேனீர் விருந்து நிகழ்ச்சியின்போது பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் சந்தித்து சலசலப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதேவேளையில், நிதிஷ் குமார் அவரின் நிலை என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும். அவர் இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது வெளியேறுகிறாரா? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என லாலு கட்சியை சேர்ந்த மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவரான ஷிவானந்த் திவாரி, நிதிஷ் குமார் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பின் வாங்க வேண்டும். நேற்று நிதிஷ் குமாரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அவர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதே தவறை மீண்டும் நிதிஷ் செய்வார் என்று நாங்கள் நம்பவில்லை" என்றார்.






