search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pm candidate"

    • இந்தியா கூட்டணியின் நான்காவது சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது
    • கடந்த முறை டீ, பிஸ்கட், சமோசா வழங்கினர் என்றார் பின்டு

    அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாநிலங்களின் முக்கிய கட்சிகளை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர்.

    இக்கூட்டணியின் முதல் சந்திப்பு பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு பெங்களூரூவிலும், 3-வது சந்திப்பு மும்பையிலும் நடந்தது.

    நான்காவது சந்திப்பு இரு தினங்களுக்கு முன் புது டெல்லியில் நடைபெற்றது.

    இச்சந்திப்பில், தேர்தலில் கூட்டணி கட்சிகளின் இட பங்கீடு, பேரணிகள், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிப்பதாக இருந்தது.

    பிரதமர் வேட்பாளர் பெயரில் இந்த சந்திப்பில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில், இச்சந்திப்பில் பங்கேற்ற பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள எம்.பி. சுனில் குமார் பின்டு இந்த கூட்டம் குறித்து தெரிவித்ததாவது:

    பல பெரிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் நிதி நெருக்கடியில் இருப்பதனால் மக்களிடம் நன்கொடை கேட்டது.

    கடந்த சில சந்திப்புகளில் டீ, பிஸ்கட், சமோசா அளித்து உபசரித்தனர்.

    ஆனால், இந்த முறை சமோசா இல்லை; டீ, பிஸ்கட் மட்டும்தான்.

    இடப்பங்கீடு, பிரதமர் வேட்பாளர் என எந்த விஷயத்திலும் முடிவும் எட்டப்படாமல்தான் சந்திப்பு நிறைவடைந்தது.

    இவ்வாறு பின்டு கூறினார்.

    • கர்நாடகாவில் பா.ஜனதாவை வீழ்த்தியதில் கார்கேவுக்கு முக்கிய பங்கு உண்டு.
    • இதுவரை இந்தியாவில் பிரதமர் பதவிக்கு தலித் இனத்தை சேர்ந்தவர்கள் யாரும் தேர்வு செய்யப்பட்டது இல்லை.

    பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர தொடங்கி உள்ளன. வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் ஓரணியில் போட்டியிட வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. குறிப்பாக 450 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

    இதில் ஒருமித்த கருத்து ஏற்படுமா? என்று தெரியவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளில் சில கட்சிகள் காங்கிரசை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வர முயற்சி செய்வதுதான்.

    ராகுலை பிரதமராக ஏற்க மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், சந்திர சேகரராவ் உள்பட பல தலைவர்கள் விரும்பவில்லை. இது எதிர்க்கட்சிகளை ஒற்றுமைபடுத்தும் முயற்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது.

    இதை கடந்த சில தினங்களாக ஆய்வு செய்த காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முன் நிறுத்தலாம் என்று யோசனை தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் அவரை ஏற்பதில் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

    கர்நாடகாவில் பா.ஜனதாவை வீழ்த்தியதில் கார்கேவுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் கார்கே தலித் இன தலைவர் ஆவார். இதுவரை இந்தியாவில் பிரதமர் பதவிக்கு தலித் இனத்தை சேர்ந்தவர்கள் யாரும் தேர்வு செய்யப்பட்டது இல்லை.

    அந்த வகையில் கார்கேவை முன்னிறுத்தும் போது அவருக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இதற்காக கார்கேவை உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் போட்டியிட வைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

    ஆனால் கார்கேவை எதிர்க்கட்சி தலைவர்களில் எத்தனை பேர் ஏற்பார்கள்? என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது. என்றாலும் பா.ஜனதாவை வீழ்த்த கார்கே தலைமை கை கொடுக்கும் என்று காங்கிரசில் ஒரு சாரார் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

    • நிதிஷ்குமார், 50 ஆண்டுகளாக, சமூக, அரசியல் போராளியாக இருக்கிறார்.
    • பா.ஜனதாவின் மேலாதிக்கத்தை இந்திய அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.

    புதுடெல்லி :

    பீகாரில், பா.ஜனதாவுடன் உறவை துண்டித்துக்கொண்ட முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

    இந்தநிலையில், தேஜஸ்வி யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் நிறுத்தப்படுவதாக பேசப்படுவது பற்றி கேட்டதற்கு தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-

    இதற்கு நிதிஷ்குமார்தான் பதில் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பில் நான் எதுவும் பேச முடியாது. ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், நிதிஷ்குமார் நிச்சயமாக வலிமையான வேட்பாளராக இருப்பார்.

    நிதிஷ்குமார், 50 ஆண்டுகளாக, சமூக, அரசியல் போராளியாக இருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கம் மற்றும் இடஒதுக்கீடு இயக்கங்களில் பங்கேற்றுள்ளார். 37 ஆண்டுகள் பரந்த பாராளுமன்ற, நிர்வாக அனுபவம் பெற்றவர். சக அரசியல் தலைவர்களிடையே நன்மதிப்பை பெற்றிருப்பவர்.

    பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டிருப்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முன்னறிவிப்பு ஆகும்.

    பெரும்பாலான எதிர்க்கட்சிகள், நாட்டின் முன்னால் உள்ள பெரும் சவாலை உணர்ந்து கொண்டுள்ளன. பா.ஜனதாவின் மேலாதிக்கத்தை இந்திய அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்.

    மேலும், மாநில கட்சிகளும், இதர முற்போக்கு அரசியல் கட்சிகளும் குறுகிய லாப, நஷ்டங்களுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டை காப்பாற்ற வேண்டும். முளையிலேயே கிள்ளாவிட்டால், பிறகு கடினமாகி விடும்.

    மத்திய அரசு, ஒத்துழைப்பான கூட்டாட்சி பற்றி பேசுகிறது. ஆனால், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை கண்டுகொள்ள மறுக்கிறது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தேவை. ஆனால் அதற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

    நிதிஷ்குமார் மீது நானும், எனது கட்சியும் விமர்சனங்களை வைத்தது உண்மைதான். அவையெல்லாம் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக ஆற்றிய கடமை. மக்களின் கவலைகளை அரசு கேட்க வேண்டும் என்பதற்காக பேசினோம்.

    நடைமுறையில் நான்தான் முதல்-மந்திரி என்று பா.ஜனதா கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பீகாரில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று நான் முன்பு கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நானும் பிரதமர் வேட்பாளர்தான் என்று மாயாவதி அறிவித்துள்ளார். #mayawati #parliamentelection

    லக்னோ:

    இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் இங்கு 80 தொகுதிகள் உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிரும், புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை.

    பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், சமாஜ்வாடி 37 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள அஜீத்சிங் கட்சிக்கு 3 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, சோனியாவுக்காக அமேதி, ரேபரலி தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வில்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து இருந்தார். இதனால் அவரது கட்சி தொண்டர்கள் விரக்தி அடைந்தனர்.

    இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடா விட்டாலும் தான் பிரதமர் வேட்பாளர்தான் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதாவை வீழ்த்த நான் பிரசாரம் செய்ய இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் எனக்கு பிரதமர் கனவு இருக்கிறது.

    1995-ல் நான் உ.பி. முதல் மந்திரியாக முதல் முறையாக பதவியேற்றேன். அப்போது நான் எம்.எல்.ஏ. வாகவும், எம்.எல்.சி.யாகவும் இல்லை.

    அதே சூழ்நிலைதான் தற்போதும் நிலவுகிறது. எம்.பி.யாக இல்லாத ஒருவர் மந்திரியாகவோ அல்லது பிரதமராகவோ தேர்வு செய்யப்பட்டால் அவர் 6 மாதங்களில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

    நானும் உயர் பதவிக்கு (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்டால் உ.பி.யில் காலியாக இருக்கும் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.

    இதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்காக தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்.

    இவ்வாறு மாயாவதி கூறினார். #mayawati #parliamentelection

    கொல்கத்தாவில் நேற்று 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அந்த உதிரி கூட்டணியால் அறிவிக்க முடியவில்லை என்று தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். #tamilisai #pmcandidate

    அவனியாபுரம்:

    மதுரையில் வருகிற 27-ந்தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும் மதுரை மண்டேலா நகர் வாஜ்பாய் திடலில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    பொதுக்கூட்ட பந்தலுக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தி.மு.க.வினர்தான் ஜாமீன் கொடுத்து இருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் சதி இருப்பது தெரிகிறது.

    மதுரையில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இதில் 10 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பிப்ரவரி 10, 19 தேதிகளிலும் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

    கொல்கத்தாவில் நேற்று 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்துள்ளது. இது மக்களுக்கு எதிரான கூட்டணி ஆகும். அந்த மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் பிரதமராக தகுதி உடையவர்கள் என மம்தா கூறுகிறார்.பிரதமர் வேட்பாளர் யார் என்று அந்த உதிரி கூட்டணியால் அறிவிக்க முடியவில்லை.

    ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறிய மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதை ஏன் கூறவில்லை?. மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவில் வங்க மொழியில் பேசியது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி.


    பெரியாரை பற்றி பேசும் அவர் வங்கத்தில் விவேகானந்தரை பற்றி பேசி உள்ளார். இதுவும் பிரதமருக்கு கிடைத்த வெற்றிதான்.

    மத்திய-மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதால் தான் மதுரையில் நேற்று ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட திட்டங்கள் 18 மாதங்களில் முடிவடையும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். மத்திய -மாநில அரசுகள் இணக்கமாக இருந்து மாநில வளர்ச்சிக்கு திட்டப்பணிகள் மேற்கொள்கின்றன.

    தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றி விட்டதா? என்று கேட்கிறார்கள். இன்றுதான் பந்தக்கால் நாட்டி இருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். மற்ற கட்சிகளை பார்த்து இதுபோன்று கேள்விகளை கேட்பதில்லை. நாங்கள் வளர்ந்து வருவதால்தான் எங்களை பார்த்து கேட்கிறார்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #tamilisai #pmcandidate #mamata #mkstalin

    ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க.வுக்கு உதவி செய்வது போல் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் மீது தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #dinakaran #mkstalin #rahulgandhi #bjp

    திருச்சி:

    திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா நீக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினரின் அரசியல் அடாவடி ஊருக்கே தெரியும். ஓ.பி. எஸ். அ.தி.மு.க.வை ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்போம் என்று கூறிவிட்டு அவரது குடும்பம்தான் அடாவடிகளில் ஈடுபட்டுள்ளது.

    ஓ.பி.எஸ். தம்பி மட்டு மல்ல அவரது மகன், சொந்தக்காரர்கள் அனைவருமே இது போன்று ஈடுபடுகிறார்கள். விரைவில் அது அனைவருக்கும் புரியும்.

    அ.ம.மு.க. அ.தி.மு.க.வுடன் இணையும் என்று வதந்தி பரப்புகிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. அ.ம.மு.க.வில்தான் அ.தி.மு.க. வின் 90 சதவீத தொண்டர்கள் உள்ளனர். இன்னும் அங்கிருக்கும் 10 சதவீதம் பேரும் விரைவில் அ.ம.மு.க. வுக்கு வருவார்கள். அவர்களை சேர்த்து கொள்வோம்.

    ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 12 பேரை சேர்த்து கொள்ளமாட்டோம். நாங்கள் ஒருபோதும் துரோகிகளுடன் சேரமாட்டோம். ஆட்சி போன பிறகு அ.தி.மு.க. கட்சியே இருக்காது. அனைவரும் இங்கு வந்து விடுவார்கள். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம்.

    சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். அவர் ராகுல்காந்தியே வருக, நிலையான ஆட்சி தருக என்று அறிவித்ததை கூட்டணி கட்சிகளில் உள்ள யாரும் விரும்பவில்லை.


    மு.க.ஸ்டாலின் ஏதோ மைக் கிடைத்ததும் எதை வேண்டுமானாலும் பேசி விடலாம் என்று பேசி விட்டார். 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர். இப்படி பேசியது ஆச்சரியம் அளிக்கிறது. அவரது பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.

    ராகுல் காந்தியே தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. மு.க.ஸ்டாலினின் இந்த செயல்பாடு பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி உருவாகி விடக்கூடாது என்பதற்காக பா.ஜ.க.வுக்கு உதவி செய்வது போல் உள்ளது. ராகுல் காந்திக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.

    தி.மு.க. 1996-ல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. பின்னர் 1999-ல் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தனர். பிறகு 2004-ல் பா.ஜனதாவை கழற்றி விட்டு காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தனர். 2009-ல் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து மந்திரி சபையில் அங்கம் பெற்றார்கள்.

    அதன்பிறகு 2014-ல் காங்கிரசை கழற்றி விட்டார்கள். மு.க.ஸ்டாலினின் செயல்பாடு இப்போதும் அப்படித்தான் உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை தேர்தல் வரை திறக்கமாட்டார்கள். தேர்தல் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல மக்களுக்கு எதிரான ஆலைகள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் என அனைத்தையும் கொண்டு வந்து விடுவார்கள்.

    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சரியாக செயல்படவில்லை. நாங்கள் 12 நாட்கள் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த போது இதை பார்த்தோம். இப்போது நடப்பது பேய்கள் ஆட்சி. பேய்கள் ஆட்சியில் இப்படித்தான் இருக்கும். இந்த நிலை விரைவில் மாறும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: 

    அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான ஒப்பந்தம் விரைவில் முடிவு செய்யப்படும். விதிகளை மீறியதால்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம். கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகே யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியும்.

    நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி அறிவிக்கும் சூழல் உருவாகும். அப்போது தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami 
    பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. #ParliamentElection #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கான அட்டவணை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 7 மாதங்களே இருப்பதால் தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் இப்போதே தொடங்கி விட்டன.

    பாரதிய ஜனதா கட்சி 29 மாநிலங்களில் தனது முதல் கட்ட ஆய்வை முடித்து பிரசாரத்தை தொடங்கி விட்டது. அடுத்த மாதம் முதல் மோடியும், அமித்ஷாவும் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் மாநிலம் வாரியாக சுற்றுப்பயணத்தை அதிகப்படுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்புடன் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான பணிகளை இன்னமும் தொடங்காமல் உள்ளனர். காங்கிரசை பொறுத்த வரை மாநில கட்சிகளுடன் கூட்டணியை முடிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதால் காங்கிரசின் பிரசாரம் இன்னமும் தொடங்கப்படவில்லை.


    இதற்கிடையே கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடந்த மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி மிக ஆவேசமாக பேசினார். மோடி மீதும், மோடி அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சரமாரியாக பட்டாசு வெடிப்பது போல் வெடித்து தீர்த்தார்.

    ராகுலின் அந்த ஆவேச பேச்சு அவர் மீதான இமேஜை நாடு முழுவதும் கணிசமான அளவுக்கு உயர்த்தி உள்ளது. மோடிக்கு நிகரான போட்டியாளராக ராகுல் தன்னை உயர்த்திக் கொண்டு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டினார்கள். இதையடுத்து மறுநாளே நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுலை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

    அதோடு மட்டுமின்றி கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்களிலும் முடிவை எடுக்கும் அதிகாரம் ராகுலுக்கு கொடுத்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காங்கிரசுடன் நட்பாக உள்ள தோழமை கட்சிகளும் ராகுலின் தலைமையை ஏற்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்பதற்கு மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகள் தயங்குவதாக தெரிய வந்துள்ளது.

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வலுவான ஆதரவு கட்சிகளாக உள்ளன. ஆனால் இந்த கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்ட முடியாத நிலை நீடிக்கிறது.


    திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி தனி அணியை தனது தலைமையில் தொடங்கி உள்ளார். இந்த அணி சார்பில் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் பிரமாண்டமான பேரணி நடைபெற உள்ளது. அதில் அவர் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் மம்தா பானர்ஜி காங்கிரசுடன் ஒத்து வருவாரா? என்ற சந்தேகம் நிலவுகிறது.

    பகுஜன்சமாஜ் கட்சி தலைவரான மாயாவதியும் ராகுலை தலைவராக ஏற்க தயங்குகிறார். மேலும் காங்கிரசை விட அதிக இடங்களில் தனது கட்சி போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கை கோர்த்துள்ள மாயாவதி காங்கிரசுக்கு 8 இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதுபோல சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் ராகுலை கூட்டணி தலைவராக ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு இதுவரை நேரடி பதிலை அளிக்கவில்லை. அவரும் காங்கிரசுக்கு அதிக இடங்களை கொடுக்க விரும்பவில்லை. இதனால் 80 எம்.பி. தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்தில் போட்டியிட வேண்டிய துரதிருஷ்டம் ஏற்படுமோ? என்ற நிலை நிலவுகிறது.

    உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை வைத்துள்ள பீகாரிலும் காங்கிரஸ் தலைமையை ஏற்க லாலு பிரசாத் மகன்கள் தயங்குகிறார்கள். தங்களது தலைமையை காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சரத்பவார் தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதுபோல தேவேகவுடாவும் ராகுலை ஆதரிக்கும் முடிவில் ஊசலாட்டமான மனநிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக் கொண்டுள்ள தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகள் காங்கிரசை ஆதரிக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அதுபோல தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பிஜு ஜனதா தளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள சிறு கட்சிகளும் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.

    இத்தகைய சூழ்நிலையில் மாநில கட்சிகள் உதவி இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது என்ற நிர்ப்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ராகுலை முன் நிறுத்தும் முடிவை காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டுள்ளது.

    அதன்படி மாநில கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக மாநில கட்சியின் பெண் தலைவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரசில் ஒருமித்த கருத்து உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ். பின்னணி இல்லாதவர் பிரதமர் வேட்பாளராக இருந்தால் அதை நாங்கள் ஏற்போம். இதற்காக நாங்கள் மெகா கூட்டணியை அமைக்க தயாராக இருக்கிறோம்” என்றனர்.

    பிரதமர் பதவியையே விட்டுக் கொடுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன் வந்திருப்பது மாநில கட்சி தலைவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பிரதமர் வேட்பாளர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

    அநேகமாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அல்லது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகிய இருவரில் ஒருவரை காங்கிரஸ் முன்னிறுத்தி மெகா கூட்டணியை அமைக்கும் என்று கூறப்படுகிறது.

    மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு சிவசேனா, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பிஜு ஜனதாதளம் மற்றும் வடகிழக்கு மாநில கட்சிகளின் ஒட்டு மொத்த ஆதரவை பெற முடியும் என்றும் அதன் மூலம் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    ஆனால் இந்த திட்டம் முழு வடிவம் பெறுமா? என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. #ParliamentElection #Congress #RahulGandhi
    ×