என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா தேர்தல்"

    • கர்நாடகாவில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என அமித்ஷா கூறினார்.
    • 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் கர்நாடாகாவில் ஆட்சி அமைக்கும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணி அமைக்கப் போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

    கர்நாடகாவில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கர்நாடாகாவில் ஆட்சி அமைக்கும் என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன்.

    காங்கிரஸைப் பொறுத்தவரை, அதிகாரத்தைப் பெறுவது ஊழல் செய்வதற்கான ஒரு வழியாகும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.

    சமீபத்தில் நடந்த 7 மாநில தேர்தல்களில் 5 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 6 மாநிலங்களில் காங்கிரஸ் சரிவை சந்தித்துள்ளது என குறிப்பிட்டார்.

    • பெண்களுக்கான மாநாட்டில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
    • 1.5 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூறி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். வாக்காளர்களை கவரும் வகையில் புதிய வாக்குறுதிகளை கொடுத்தவண்ணம் உள்ளனர்.

    அவ்வகையில், காங்கிரஸ் சார்பில் நான் நாயகி என்ற தலைப்பில் பெண்களுக்கான மாநாடு நடத்தப்பட்டது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு வீட்டிலுள்ள குடும்பத்தலைவிக்கும் மாதம், 2,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததார். 

    கிரக லட்சுமி என்ற இந்த திட்டத்தின்கீழ் 1.5 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூறி உள்ளது. ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் கிடைக்கும் இந்த நிதியுதவியானது, விலைவாசி உயர்வு மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றின் சுமையை சமாளிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    கர்நாடகாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது வாக்குறுதி இன்று வெளியாகி உள்ளது.

    • கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
    • இந்த தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என எடியூரப்பா தெரிவித்தார்.

    பெங்களூரு:

    முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.

    மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

    ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். காங்கிரஸ் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அதனால்தான் அவர்கள் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். பா.ஜ.க.வில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்களை கர்நாடக மக்கள் வரவேற்கிறார்கள். எனவே கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறினார்.

    • ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று மணீஷ் திவாரி கூறினார்.
    • கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான மணீஷ் திவாரி கேரளாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, ராகுல் காந்தியின் தண்டனை சட்டத்தில் மோசமானது என்றும், அவரது தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.

    'ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எனவே, மேல்முறையீடு செய்ய அவசரம் இல்லை. அவசர அவசரமாக அவரை தகுதி நீக்கம் செய்து, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை பாஜக அரசு காலி செய்யும்படி கூறியது. இதிலிருந்து அவர்களின் கெட்ட எண்ணம் தெரிகிறது' என்றும் மணீஷ் திவாரி கூறினார்.

    அப்போது கர்நாடக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திவாரி, காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

    கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் தேர்தல் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி.
    • வரும் 9ம் தேதி கர்நாடகம் முழுதும் ஜெய் பாரத் யாத்திரை தொடங்க உள்ளார்.

    புதுடெல்லி:

    மோடி சமூகம் குறித்த அவமதிப்பு வழக்கில் சூரத் கோர்ட் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது மக்களவை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தன. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி வியூகம் வகுத்திட திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரும் 9-ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

    ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இன்று இரண்டாம் கட்ட பட்டியலில் 41 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    கர்நாடகாவில் மே மாதம் 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தேர்தல் பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

    இந்நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 41 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

    • கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
    • ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆளுங்கட்சியான பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக, இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்தித்தனர். ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி எடியூரப்பாவை சந்தித்து சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எடியூரப்பாவிடம் தற்போதைய அரசியல் சூழலை எடுத்து கூறியதுடன், கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கர்நாடக பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய நிலையில், அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அணியினர் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கர்நாடகா சென்று பாஜக தலைவர்களை சந்திப்பதற்குள், ஓபிஎஸ் அணியினர் முந்திக்கொண்டனர். இதன்மூலம் அதிமுக விவகாரம் கர்நாடக தேர்தலிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

    • காங்கிரஸ் கட்சி 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளது.
    • மாநிலத்தில் அடிப்படை மற்றும் அரசியல் குறித்த தெளிவு காங்கிரசுக்கு இல்லை என பொம்மை விமர்சனம்

    சிவமோகா:

    கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சிவமோகாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் நியமித்துள்ள வேட்பாளர்களில் 60 வேட்பாளர்கள் பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை. எனவே, எங்கள் கட்சியில் இருந்து தலைவர்களை இழுக்க முயற்சிக்கின்றனர். நான் ஏற்கனவே கூறியபடி, டிகே சிவக்குமார் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும்போது எங்கள் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு, சீட் கொடுப்பதாக கூறி கட்சியில் இணையும்படி கேட்டிருக்கிறார். மாநிலத்தில் அடிப்படை மற்றும் அரசியல் குறித்த தெளிவும் காங்கிரசுக்கு இல்லை. எனவே, கடந்த தேர்தலை விட இந்த முறை அவர்கள் (காங்கிரஸ்) மோசமான தோல்வியை சந்திப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாஜக எம்எல்ஏக்களுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்ததாகவும், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத தொகுதிகளில் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் பசவராஜ் பொம்மை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் 2019ல் பாஜக தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை இழுத்ததாக டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி (சிஇசி) கூட்டம் நடைபெற்றது.
    • கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.

    கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.

    மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

    ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

    ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் மற்றும் 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி கூட்டம் முடிந்ததும் கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாட்களில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி (சிஇசி) கூட்டம் நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், "கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாளில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை" கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து ஆலோசித்தோம். ஒருவேளை நாளை மீண்டும் கூட்டம் நடத்தலாம். பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும். நான் ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்றார்.

    • பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என ஈஸ்வரப்பா சூசகமாக தெரிவித்திருந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் வியாழக்கிழமை முடிவடைய உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதாகவும், பாஜக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜக ஆட்சியமைக்க உதவி செய்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா (வயது 74) தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என கடந்த மாதம் அவர் சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதுதொடர்பாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

    • ஹூப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை 6 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
    • தேர்தலில் இருந்து ஒதுங்கும் பேச்சுக்கே இடமில்லை என ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டமாக கூறினார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பாஜக எம்எல்ஏவும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர், கட்சிக்கு எதிராக தேர்தலில் குதிக்க உள்ளார். மற்றவர்களுக்கு வழிவிடும்படி கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் வருத்தம் அடைந்ததாகவும், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்றும் ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.

    தற்போதைய ஹூப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை 6 தேர்தல்களில் வெற்றிவாகை சூடி உள்ளார். 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் நல்வாட் என்பவரைவிட 21000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    தனது முடிவு குறித்து செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், 'கடந்த 6 தேர்தல்களில் நான் 21,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய மைனஸ் பாயின்ட் என்ன? கட்சியின் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நான் ஏற்கனவே எனது தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டேன். அதை மேலும் தீவிரப்படுத்துவேன். தேர்தலில் இருந்து ஒதுங்கும் பேச்சுக்கே இடமில்லை' என திட்டவட்டமாக கூறினார்.

    • முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பாரம்பரிய தொகுதியான ஷிகான் தொகுதியில் களமிறங்குகிறார்.
    • கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து அமைச்சர் அசோகா போட்டியிடுகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

    கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுகங்களை களமிறக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்ததால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் பாஜக தேர்தல் குழு சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்தது.

    இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 52 பேர் புதுமுகங்கள், 8 பேர் பெண்கள். பல எம்எல்ஏக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. 32 வேட்பாளர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பட்டியல் சமூகத்தையும், 16 பேர் பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.

    அமைச்சர் அசோகா தனது சொந்த தொகுதியான பத்மநாபநகர் மற்றும் கனகபுரா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பாரம்பரிய தொகுதியான ஷிகான் தொகுதியில் களமிறங்குகிறார். கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, தந்தையின் பாரம்பரிய தொகுதியான சிகாரிபுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தனது பாரம்பரிய தொகுதியான சிக்மகளூர் தொகுதியிலும், மாநில அமைச்சர் சோமண்ணா, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து வருணா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

    கர்நாடக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.

    ×