என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka election"
- 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நிதி மோசடி வழக்கில் சிக்கி நாட்டைவிட்டு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோர் குறித்து பேசிய ராகுல் காந்தி, எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் இருக்கிறது? என்றார்.
இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. ராகுல் காந்தி அடுத்த மாதம் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து பேசி சலசலப்பை ஏற்படுத்திய அதே கோலார் பகுதியில் அடுத்த மாதம் 5ம் தேதி ராகுல் காந்தியின் முதல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. எனவே, இந்த முறை ராகுல் காந்தி என்ன பேசப்போகிறார்? ஆளுங்கட்சிக்கு எதிரான அவரது அஸ்திரம் என்ன? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 2018ம் ஆண்டு தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் ஓராண்டில் அந்த ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கவிழ்ப்புக்கு பாஜகவே காரணம் என காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
- இந்த தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு:
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.
மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.
இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.
ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். காங்கிரஸ் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அதனால்தான் அவர்கள் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். பா.ஜ.க.வில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்களை கர்நாடக மக்கள் வரவேற்கிறார்கள். எனவே கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறினார்.
- பா.ஜ.கவின் கொள்கை- கோட்பாடுகளை ஏற்று ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் பா.ஜ.கவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
- பிரதமர் மோடியின் தலைமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கட்சி தாவல்கள் நடைபெற்று வருகின்றன. பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பா.ஜ.கவில் இணையும் நிகழ்ச்சி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பிற கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்.
இதில் நளின்குமார் கட்டீல் பேசியதாவது:-
இன்று (நேற்று) முன்னாள் எம்.எல்.ஏ. நந்திஹள்ளி ஹாலப்பா, ஒக்கலிகர் சங்க முன்னாள் தலைவர் அப்பாஜி கவுடா போன்றவர்கள் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளதால் எங்கள் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
பா.ஜ.கவின் கொள்கை- கோட்பாடுகளை ஏற்று ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் பா.ஜ.கவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் தலைமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். பா.ஜ.க தான் நம்பிக்கையான கட்சி என்று மக்கள் கருதுகிறார்கள்.
அவரவர் தகுதிக்கு ஏற்ப கட்சியில் பொறுப்பு வழங்கப்படும். அனைவரும் கட்சியின் வெற்றிக்காக தீவிரமாக உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதி.
பா.ஜ.கவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாங்கள் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.
- பா.ஜனதாவின் 100 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியானது.
- வேட்பாளர் பட்டியலை கர்நாடக பா.ஜனதா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
பெங்களூரு:
கா்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டன. ஆனால் ஆளும் பா.ஜனதா இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் உள்ளது. சில தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பா.ஜனதாவின் 100 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியானது. பா.ஜனதா பெயரில் வெளியான அந்த அறிக்கையில் 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங்கின் கையெழுத்து இடம் பெற்றிருந்தது. இந்த வேட்பாளர் பட்டியலை கர்நாடக பா.ஜனதா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
இது பா.ஜனதா பெயரில் போலி வேட்பாளர் பட்டியலை யாரோ சில விஷமிகள் வெளியிட்டு இருப்பதாகவும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. இந்த போலி வேட்பாளர் பட்டியலை தயாரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி மல்லேசுவரம் போலீசில் பா.ஜனதாவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா பொதுச்செயலாளர் அஸ்வத் நாராயண் நிருபர்களிடம் கூறுகையில், ''காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பா.ஜனதாவை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு எங்கள் கட்சியின் பெயரில் போலி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது, இன்னும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள். இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பப்படும்.'' என்றார்.
- தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி (சிஇசி) கூட்டம் நடைபெற்றது.
- கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.
கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.
மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.
இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.
ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.
ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் மற்றும் 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி கூட்டம் முடிந்ததும் கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாட்களில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி (சிஇசி) கூட்டம் நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், "கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாளில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை" கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து ஆலோசித்தோம். ஒருவேளை நாளை மீண்டும் கூட்டம் நடத்தலாம். பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும். நான் ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்றார்.
- வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதி களுக்கும், ஜனதா ளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மீதமுள்ள வேட்பாளர்களை ஓரிரு நாளில் இந்த கட்சிகள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
முதல் நாளில் பீலகி தொகுதியில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை தாக்கல் செய்தார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூர் தொகுதியிலும், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் யஷ்வந்த புரா தொகுதியிலும், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கதக் மாவட்டம் நரகுந்து தொகுதியிலும் மனுதாக்கல் செய்தனர்.
மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 221 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஆண்கள் 197 பேரும், பெண்கள் 24 பேரும் அடங்குவர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த 27 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 26 பேரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் 12 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பொதுவாக வேட்பு மனு தாக்கல் தொடங்கினாலும் முதல் நாளில் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் கர்நாடக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகளை சேர்ந்த 100 பேர் அடங்குவர்.
எந்த கட்சியையும் சாராத 45 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் வேட்பாளர்கள் முதல் நாளிலேயே மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். வரும் நாட்களில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கர்நா டகத்தில் அரசு விடுமுறை ஆகும். அதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) வழக்கம் போல் மனு தாக்கல் நடைபெறும்.
20-ந் தேதி மதியம் 3 மணிக்கு மனுதாக்கல் நிறைவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் அன்றைய தினம் மதியம் 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
மே மாதம் 10-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 13-ந் தேதி நடக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
- வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
- பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பட்டீல் (வயது 68) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பசவனகவுடா துர்விகால் களமிறங்கியுள்ளார். மேலும் இதே தொகுதியில் ஈஷப்பா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
அவர் தனது பெயரையும் ஈஷப்பா கவுடா பட்டீல் என மாற்றியுள்ளார். இவர் பிரதாப் கவுடா பட்டீல் போல் தோற்றத்தில் நெற்றியில் திருநீரு பூசி இருப்பதுடன் அவரை போல் மீசையும் வைத்துள்ளார்.
பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரே தோற்றம் கொண்ட 2 வேட்பாளர்களால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
- கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
- விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.
இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.
உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.
ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.
மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.
கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும்.
மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.
காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- கார்கே தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசியது குறித்து பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார்.
- கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர்களும் பதில் கருத்துக்களை கூறி பிரசாரம் செய்கின்றனர். இதேபோல் கருத்து மோதல், வார்த்தை போருக்கும் பஞ்சம் இல்லை.
அவ்வகையில், காங்கிரஸ் கட்சியினர் தன் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது குறித்தும், தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு கார்கே பேசியது குறித்தும் பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார். காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு முறை இரு முறையல்ல 91 முறை அவமதித்துள்ளது என்றார். பிரதமரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
தும்கூரு மாவட்டம் துருவகெரே நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
நீங்கள் (மோடி) கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தீர்கள். ஆனால் கர்நாடகத்தைப் பற்றி பேசாமல், உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறீர்கள், இளைஞர்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழலுக்கு எதிராக என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதைப் பற்றியும் நீங்கள் பிரசார கூட்டங்களில் பேச வேண்டும்.
இந்த தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல, இது கர்நாடக மக்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பற்றியது. காங்கிரஸ் உங்களை 91 முறை அவமதித்தது என்று சொல்கிறீர்கள், ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பேசவே இல்லை. உங்கள் அடுத்த பிரசாரத்தின்போது, நீங்கள் என்ன செய்தீர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வீர்கள் என்பதைப் பற்றி பேசவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
- பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.
பெங்களூரு:
கர்நாடக தேர்தலில் விஜயாப்புரா நகர தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால், காங்கிரஸ் சார்பில் அபிதுல் ஹமீது முஷ்ரிப், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் பத்தேனவாஸ் மகாபரி போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் பத்தேனவாஸ் மகாபரி திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், விஜயாப்புரா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு அமைப்பு, நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லை. நான் பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.
நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் முழுக்க முழுக்க எனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.
- கர்நாடக காங்கிரஸ் தலைவரின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தியது.
- சோதனையின் போது வீட்டின் மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் அசோக் குமார் ராயின் சகோதரர் சுப்ரமணிய ராயின் மைசூரு இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் சுப்ரமணிய ராயின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தேர்தல் நடத்தல் விதிகள் அமலில் உள்ளதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இதுவரை ரூ. 110 கோடியை அதிகாரிகள் ரொக்கமாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்து 346 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 13 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
- ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.
- வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாட்டிலேயே முதல் முறையாக 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதியில் இருந்து முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீடு தேடி வந்து வாக்கு சேகரிக்கும் தேர்தல் அதிகாரிகள் கொண்டு வரும் வாக்குப்பெட்டிகளில் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வாக்களித்து வருகிறார்கள்.
வருகிற 6-ந் தேதி வரை வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 99 ஆயிரத்து 529 பேர் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து வாக்குகளை பெறும் பணிக்காக 250 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வாக்கு பெற்றனர். நேற்று ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலகாவி மாவட்டம் சிக்கோடியை சேர்ந்த 103 வயது முதியவரான மகாதேவ மகாலிங்க மாலி என்பவர் வீட்டில் இருந்து வாக்களித்திருந்தார். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றி அந்த முதியவருக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது 103 வயதிலும் வீட்டில் இருந்து ஓட்டளித்த அவரை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பாராட்டியதுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அதுபோல் முதியவர் மகாதேவ மகாலிங்க மாலி, தன்னை போன்ற முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க அனுமதி வழங்கிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டையும், நன்றியையும் ராஜீவ்குமாரிடம் பகிர்ந்துகொண்டார். அத்துடன் இந்த நடைமுறை வருவதற்கு முன்பு தான் வீட்டில் இருந்து சிரமத்துடன் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தது பற்றியும், வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.






