என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nomination Paper"

    • வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதி களுக்கும், ஜனதா ளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மீதமுள்ள வேட்பாளர்களை ஓரிரு நாளில் இந்த கட்சிகள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

    முதல் நாளில் பீலகி தொகுதியில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை தாக்கல் செய்தார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூர் தொகுதியிலும், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் யஷ்வந்த புரா தொகுதியிலும், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கதக் மாவட்டம் நரகுந்து தொகுதியிலும் மனுதாக்கல் செய்தனர்.

    மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 221 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஆண்கள் 197 பேரும், பெண்கள் 24 பேரும் அடங்குவர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த 27 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 26 பேரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் 12 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பொதுவாக வேட்பு மனு தாக்கல் தொடங்கினாலும் முதல் நாளில் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் கர்நாடக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகளை சேர்ந்த 100 பேர் அடங்குவர்.

    எந்த கட்சியையும் சாராத 45 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் வேட்பாளர்கள் முதல் நாளிலேயே மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். வரும் நாட்களில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கர்நா டகத்தில் அரசு விடுமுறை ஆகும். அதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) வழக்கம் போல் மனு தாக்கல் நடைபெறும்.

    20-ந் தேதி மதியம் 3 மணிக்கு மனுதாக்கல் நிறைவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் அன்றைய தினம் மதியம் 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

    மே மாதம் 10-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 13-ந் தேதி நடக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • 8 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர்.
    • நள்ளிரவு 1.30 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என்று கடந்த 7-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 17-ந் தேதி வரை நடந்தது.

    பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்தன. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சுயேட்சைகள் என 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இதில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனுக்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காத 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

    நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 8 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர்.

    எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உடன் 47 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. அப்போது தி.மு.க வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சினமும் ஒதுக்கப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்களிடம் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்பவருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் பத்மாவதி கர்நாடகா மாநிலம் பெங்களூரு, உதயா நகர், மஞ்சு நாத்சுவாமி நிலையம் பகுதியை சேர்ந்தவர்.

    இவரது ஓட்டு கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடலாம் என்று வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பத்மாவதிக்கு மட்டும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    வேட்பாளர் பத்மாவதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தகுதியானவரா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் முழுவதுமாக வெளியிடுவது நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் அறையில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    இந்த குழப்பம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நள்ளிரவு வரை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக ஈரோடு தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் கூறும்போது,

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி லோக்சபா, ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் எந்த மாநிலத்துக்கும் வேட்பா ளராக போட்டியிடலாம்.

    ஆனால் சட்டசபை தொகுதிக்கு அம்மாநிலத்தில் வாக்காளராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடகா மாநில பெண் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதனையடுத்து நீண்ட இழுப்பறிக்க பிறகு நள்ளிரவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 பேர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் 46 பேரின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளது.

    ×