என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம்"

    • இன்று மகாபலிபுரம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்க கடலில் ஏற்பட்ட டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலை பகுதியாக மாறியுள்ளது.

    டிட்வா புயலால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டலாம் என்ற நிலையில் இருந்தது. அதேநேரத்தில் நேற்று முன்தினம் மழையே இல்லை. ஆனால் குளிர்ந்த காற்று, இருண்ட சூழலும் தொடர்ந்தது.

    இந்த நிலையில் நேற்றைய தினம் காலையிலிருந்து லேசான மழை பெய்தது. டிட்வா புயல் எச்சரிக்கையால் சனி மற்றும் திங்கட்கிழமை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    நேற்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. புதுச்சேரியில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று மகாபலிபுரம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வலு குறைந்திருந்தாலும், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.

    இன்று அதிகாலை முதல் மழை நீடிக்கிறது. வானம் சூழ்ந்து இருண்டு காணப்படுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரிகள் வழக்கம்போல இயங்குகிறது.

    • உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.
    • இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது.

    இந்நிலையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது.

    இதற்கிடையே இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளன.

    இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.  

    • வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதன்படி மாட்டுக்குளம், ரத்தினபுரி, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, பை-பாஸ் சாலை, காட்டு தைக்கா தெரு உள்ளிட்ட இடங்களில் சுமார் 500-க்கும் மேலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    சிவன் கோவில் வடக்கு அக்பர்ஷா நகர் பெரு வெள்ளத்தால் தத்தளிக்கிறது. அங்குள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், தீவு தெரு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது.

    மழை வெள்ளத்தை வடிய வைப்பதற்காக நகராட்சி சார்பில் வாய்க்கால் வெட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இருந்த போதிலும் இந்த நடவடிக்கை மழை வெள்ளம் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு தருமா? என்கிற கேள்வியே எழுந்துள்ளது.

    • மழை காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர்.
    • பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நீர்ப்பிடிப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராஜபாளையம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் அய்யனார்கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    கடந்த ஆண்டு மழை அளவைவிட இந்த ஆண்டு அதிகபட்சமான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக மாவரிசி அம்மன் கோவில் ஆறு, முள்ளிக்கடவு ஆறு, மலட்டாறுகளின் வழியாக அய்யனார் கோவில் ஆற்றில் சங்கமித்து ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு தடுப்பணைகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    மீதி உள்ள தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி புதுக்குளம், பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டைநேரி கண்மாய், கருங்குளம், செங்குளம், வாகைக்குளம், கீழராஜகுலராமன் கண்மாய் உள்பட பல்வேறு குளங்களை பெருக்கி தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    108 கண்மாய்கள் அமையப் பெற்ற ராஜபாளையம் வட்டாரத்தில் விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் என பெயர் பெற்ற ஜமீன் கொல்லங்கொண்டான் கண்மாய் உட்பட அனைத்து கண்மாய்களும் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக தேவதானம் சாஸ்தா கோவில் அணை, ராஜபாளையம் ஆறாவது மைல் கோடைகால குடிநீர் தேக்க ஏரி உட்பட அனைத்து கண்மாய்களும், நீர் நிலைகளும் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நிரம்பி வழிகிறது.



    இந்த மழை காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர். உரம், பூச்சி மருந்து போன்றவைகள் தட்டுப்பாடு இருந்தாலும் அவைகளை முறையாக பெற்று வயல்களில் விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டு பெய்த மழையால் தரிசு நிலங்களை உழுது விவசாய நிலங்களாக மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முழுமையான அளவு இரு போகம் விளையும் என எதிர்பார்த்த நிலையில், பல இடங்களில் முப்போக விளைச்சலை எதிர்பார்த்து விவசாய பணிகள் தொடங்கி உள்ளனர்.

    ஏற்கனவே நெல் நாற்று பரவி உள்ள வயல்களில் தக்கை பூண்டு போன்ற கொளுஞ்சி விதைத்திருந்ததால், அதனை அடி உரமாக போட்டு உழுது தற்போது நல்ல நிலையில் நெல் வயல்களை வைத்து பாசனம் செய்து வருகின்றனர். ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கீழராஜகுலராமன், ஆலங்குளம், தொம்பக்குளம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேல் பஞ்சலிங்க அருவி உள்ளது.

    இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்ததுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

    அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து அருவி மற்றும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள்- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்.
    • பாதாள சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிக சிரமத்துடன் சாலையில் நடந்து சென்றனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை திடீரென திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான ராமசாமிபுரம், நாலு மூலைக்கிணறு, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், காயாமொழி, தளவாய்புரம், வீரபாண்டிய பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கனமழை பெய்தது.

    திருச்செந்தூரில் பெய்த கனமழையால் சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    பரமன்குறிச்சியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இன்று அதிகாலையில் இருந்தே லேசான மழை பெய்து வந்தது. திடீரென காலை 8.30 மணிக்கு மேல் சுமார் 1மணி நேரமாக கனமழை பெய்தது. 9 மணியளவில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர். சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்.

    திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்ததால் திருச்செந்தூர் நகரம் முழுவதும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஒடியது. இதனால் பாதாள சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிக சிரமத்துடன் சாலையில் நடந்து சென்றனர்.

    திருச்செந்தூர் காய்-கனி மார்க்கெட் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் குளம் போல் காணப்பட்டது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. 

    • இந்த பகுதி கிராம பஞ்சாயத்து பகுதியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
    • கடந்த 2021-ம் ஆண்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 கோடி தான்.

    சென்னையில் அதுவும் குறிப்பாக பெரும்பாக்கத்தில் வாழ்றதுன்னா ரொம்ப பெரிய கஷ்டந்தாங்க என்பது தான் அந்த பகுதி வாசிகள் சாதாரணமாக சொல்வது.

    ஒரு காலத்தில் நீர் நிலைகள், வயல்வெளிகள், முள்காடுகளாக இருந்த பெரும்பாக்கம் இப்போது பெரும் நகரமாக வளர்ச்சி கண்டுள்ளது என்பதை மறுப்பதிற்கில்லை. அதே நேரம் மக்கள் சிரமமில்லாமல் வாழத் தகுதியான இடமாக அந்த பகுதி மாறவில்லை என்பது தான் எல்லோரது ஆதங்கமும்.

    சென்னையில் பெருமழை கொட்டினால் பெரும்பாக்கத்தில் வீடுகளில் முதல் தளம் வரை மழை வெள்ளம் சூழ்ந்து விடுவது வழக்கமாயிற்று. அந்த 3 மாத காலமும் பெரும்பாக்கம் வாசிகள் பெரும் துயரை சந்தித்து தான் ஆக வேண்டும். கார்கள், டூவீலர்களை பள்ளிக்கரணை மேம்பாலத்தில் கொண்டு நிறுத்தி பாதுகாத்த சம்பவங்களும் நடந்துள்ளது.

    பெரும்பாக்கத்தின் இந்த அவல நிலை இன்னும் மாறாமல் இருக்க காரணம் சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு இடையே சிக்கி உள்ள இந்த பகுதி கிராம பஞ்சாயத்து பகுதியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

    பஞ்சாயத்து பகுதியாக இருப்பதால் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகள் எதுவும் இல்லை. குடிநீருக்கு தனியார் லாரிகளையே பெரும்பாலும் நம்பி இருக்கிறார்கள். இதனால் மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவு ஆவதாக கூறுகிறார்கள்.

    மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்புகள், பெரிய ஆஸ்பத்திரிகள் இருந்தும் பஞ்சாயத்து என்ற அடையாளத்தால் போதுமான நிதி கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 கோடி தான்.

    அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாகி பரிதாபமாக காட்சி அளிக்கின்றன. 10 வார்டுகளை கொண்ட சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைக்க ரூ.750 கோடி ஒதுக்கியது. 10 வார்டுகளை கொண்ட இந்த மண்டலத்தில் இருந்து ஆண்டு வருவாய் ரூ.82 கோடி கிடைக்கிறது. ஆனால் ஒரு வார்டு அளவு பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் இருந்து ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் வளர்ச்சி பணிகளுக்கு அதைவிட குறைவாகவே ஒதுக்கப்படுகிறது.

    பெரும்பாக்கம் பஞ்சாயத்து பகுதியில் 485 சாலைகள் உள்ளன. இதில் 319 சாலைகள் படுமோசமாக உள்ளன. இந்த சாலைகளை ரூ.34 கோடி செலவில் சீரமைக்க திட்டமிட்டு உள்ளார்கள். மழைக்காலத்துக்கு பிறகு இந்த பணிகள் தொடங்குமாம்.

    ஆனால் சீரமைக்கும் சாலைகள் எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும் என்பதே இந்த பகுதி மக்கள் எழுப்பும் கேள்வி.

    2015 மற்றும் 2023-ல் பெருவெள்ளத்தின் போது முதல் தளம் வரை தண்ணீர் சென்றது. ஆனால் அதன் பிறகு நீர்வளத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த பகுதி மக்களின் மனக்குறையாக உள்ளது.

    3.34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரும்பாக்கம் பஞ்சாயத்தின் மக்கள் தொகை சுமார் 30 ஆயிரம். 146 தெரு விளக்குகள் உள்ளன. அதிலும் பல விளக்குகள் எரியவில்லை. காந்தி நகர், மூகாம்பிகை நகர், கைலாஷ்நகரில் கடந்த 2015 முதல் ஒவ்வொரு பெருமழையிலும் முதல் தளம் வரை மழை வெள்ளம் புகுந்தது. ஆனால் அதை தடுப்பதற்கான எந்த முன்னேற்பாடும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

    • வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன.
    • பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதனால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 40 பேர் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியட்நாம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

    • சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.
    • இதனால் நியூயார்க் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தன. சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. இதனால் நியூயார்க்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் சூழ்ந்து சேதத்தை சந்தித்தன. பேருந்து படிக்கட்டு வாயிலாக உள்ளே தண்ணீர் புகுந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்தவர்களிடமும் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தேவைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில் பெய்த கனமழை காரணமாகவும், முல்லை ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிக தண்ணீர் காரணமாகவும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    கம்பம் பகுதியில் நெல் வயல்களில் மழைநீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வாங்கி வைத்திருந்த ஆடுகள், பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    திராட்சை செடிகளும் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதால் வாழை பயிரிட்டிருந்த வயல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    நேற்று மழை சற்று குறைந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

    பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 11வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தடை நீடிக்கிறது. இதேபோல் மேகமலை மற்றும் சுருளி அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் விடுமுறை நாளில் குடும்பத்தினருடன் ஏராளமானோர் வைகை அணைக்கு குவிந்தனர். அங்கு 7 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் அதனை கண்டு ரசித்தனர்.

    மழை வெள்ளத்தால் பயிர்கள், ஆடு, கோழிகள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில் இதுகுறித்து பார்வையிட்டு கணக்கீடு செய்யும் பணியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்புகளால் சேதமடைந்த மக்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    உப்புக்கோட்டை பகுதியில் பட்டாளத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டுள்ளார். அங்குள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்தவர்களிடமும் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தேவைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அவருடன் முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத் உள்பட கட்சி நிர்வாகிகள் சென்றனர். 

    • பாதிக்கப்பட்ட இடங்களை தங்கதமிழ்செல்வன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கூடலூரில் விடிய விடிய பெய்த மழை காரணமாக தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

    கம்பம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது முதல் பலத்த மழையாக பெய்யத் தொடங்கியது.

    மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    கம்பம்-சுருளிபட்டி சாலையில் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையை பொதுமக்கள் கடந்து செல்லாதவாறு போலீசார் இருபுறமும் தடுப்புகள் அமைத்துள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடி முடிவடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் இந்த மழையால் சேதம் அடைந்துள்ளன. 18-ம் கால்வாய், ஏகலூத்து ஓடைப்பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கம்பம் மெட்டு காலனியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடத்தில் தங்க வைத்தனர்.

    சுருளிபட்டி, முல்லைப்பெரியாற்றின் கரையையொட்டியுள்ள பகுதியில் ஆட்டு கிடை அமைத்திருந்த லட்சுமணன் என்பவர் தீபாவளி பண்டிகைக்காக 60க்கும் மேற்பட்ட ஆடுகள் அடைத்து வைத்திருந்தார். இந்த ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். உத்தமபாளையம் ஞானாம்பிகை கோவில் அருகே தேங்காய் குடோன் அமைத்திருந்த விவசாயியின் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேவாரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும், தீபாவளி வியாபாரத்திற்காக வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட ஆடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களை தங்கதமிழ்செல்வன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கூடலூரில் விடிய விடிய பெய்த மழை காரணமாக தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கூடலூர் கள்ளர் வடக்கு தெருவில் கனமழையின்போது சாலையின் ஒரு பகுதி அரித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இங்குள்ள சிறுபுனல் மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் கொண்டு 3 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் சுற்றுச்சுவர் உடைந்து தண்ணீர் உள்ளே புகுந்தது. இதனால் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இங்கு குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர்கள், ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    தேனி மாவட்டத்தில் கடந்த 1992-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தீபாவளி பண்டிகைக்காக வியாபாரிகள், விவசாயிகள் வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட ஆடுகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகி உள்ளன. மேலும் தீபாவளி பண்டிகைக்காக வியாபாரிகள் வைத்திருந்த பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    • களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. 2 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, ராதாபுரம், களக்காடு, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் சாலைகள், வயல்வெளிகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அம்பை, சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது.

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் சுற்று வட்டாரத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நான்குவழிச்சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அங்குள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் பகுதியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதுவே மாவட்டத்தின் அதிகபட்ச மழை அளவாகும்.

    நெல்லையில் மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து இடங்களிலும் பெய்து வரும் தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அணை பகுதிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படாத சூழ்நிலையிலும், காட்டாற்று வெள்ளம் வந்து ஆற்றில் சேருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் 37 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராதாபுரத்தில் அதிகபட்சமாக 47 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. அணைகளுக்கு வினாடிக்கு 1614 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 88 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 94 அடியை எட்டியுள்ளது.

    அதேநேரம் கொடுமுடியாறு அணை நீர் இருப்பு நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்திருந்த நிலையில் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 35½ அடியை எட்டியுள்ளது. அணைகள் நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் தீபாவளி விற்பனை சற்று பாதிக்கப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் டவுன் ரதவீதிகளில் சாலையோர வியாபாரிகள் அதிக அளவு கடை அமைத்திருந்தனர். ஆனால் மழை பெய்வதும், ஓய்வதுமாக இருந்ததால் கடும் அவதி அடைந்தனர். மாநகரில் பாளையில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து, மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் நீடித்து வருகிறது.

    ×