என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ரஷ்யா
- நவால்னியின் தாயார், தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென விரும்புகிறார்.
- உடல் சிதைந்து வருவதால், முடிவெடுக்க அதிக நேரம் இல்லை என கூறி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.
மாஸ்கோ:
ரஷிய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புதினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்சி நவால்னி ஊழல் வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த வாரம் அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நவால்னியின் மரணத்துக்கு அதிபர் புதினே காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் புதின் அரசு அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்த நிலையில் சிறையில் உயிரிழந்த தனது கணவரின் உடலை ஒப்படைக்க புதின் மறுப்பதாக நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா குற்றம்சாட்டியுள்ளார். பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நவால்னியின் தாயார், தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென விரும்புகிறார். ஆனால் அதிகாரிகள் நவால்னி உடலை ஆர்க்டிக் சிறையிலேயே அடக்கம் செய்ய ஒப்புக்கொள்ளும்படி அவரது தாயை அச்சுறுத்துகின்றனர். உடல் சிதைந்து வருவதால், முடிவெடுக்க அதிக நேரம் இல்லை என கூறி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.
என் கணவரின் உடலை எங்களிடம் கொடுங்கள். நீங்கள் அவர் உயிருடன் இருந்தபோது அவரை சித்ரவதை செய்தீர்கள். இப்போது அவர் இறந்த பிறகும் தொடர்ந்து சித்ரவதை செய்கிறீர்கள். இதன் மூலம் இறந்துபோனவரின் உடலை நீங்கள் கேலி செய்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வல்லரசு நாடுகளான சீனாவும் வட கொரியாவும் ரஷியாவை ஆதரிக்கின்றன
- ரோல்ஸ்-ராய்ஸ் காரை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது ஆரஸ்
கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.
உலகின் பல நாடுகள் ரஷியாவை எதிர்த்ததால், அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டது.
ஆனால், வல்லரசு நாடுகளான சீனாவும், வட கொரியாவும் ரஷியாவை ஆதரிக்கின்றன.
உக்ரைனுடனான போரில் ரஷியாவிற்கு தேவைப்படும் பீரங்கிகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வட கொரியா வழங்கி உதவியது.
கடந்த 2023 செப்டம்பர் மாதம் சிறப்பு விருந்தாளியாக ரஷியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை (Kim Jong-un), ரஷிய அதிபர் புதின், ரஷியாவின் கிழக்கே உள்ள வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் (Vostochny Cosmodrome) எனும் ஏவுதளத்தை பார்வையிட அழைத்து சென்றார்.
அப்போது, புதினின் ஆரஸ் செனட் (Aurus Senat) லிமோசின் ரக காரை கிம், ஆர்வமுடன் பார்வையிட்டார்.
சொகுசு கார் பிரியரான கிம் ஜான் உன், தனது வாகன நிறுத்துமிடத்தில் பல வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது நிலைப்பாட்டை ஆதரிக்கும் வட கொரிய அதிபருக்கு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு உயர்ரக சொகுசு காரை பரிசளித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆரஸ் (Aurus) எனப்படும் முழு நீள அதிநவீன சொகுசு கார், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பிரத்யேக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆரஸ், உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ்-ராய்ஸ் பேண்டம் (Rolls-Royce Phantom) எனும் மாடலை அடிப்படையாக கொண்டு ரஷியாவில் உருவாக்கப்பட்ட சொகுசு கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரோல்ஸ்-ராய்ஸை விட ஆரஸ் சற்று நீளம் அதிகமான காராகும்.
புதின் பரிசளித்திருக்கும் ஆரஸின் புகைப்படங்களோ, அந்த காரில் அவருக்காக செய்யப்பட்டுள்ள பிரத்யேக மாறுதல்கள் குறித்தோ இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.
வரவிருக்கும் மாதங்களில் ரஷிய அதிபர் புதின், வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இரு நாடுகளிலிருந்தும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சொகுசு கார்கள் உட்பட விலையுயர்ந்த பரிசுகளை வட கொரியாவிற்கு எந்த நாடும் அளிக்க கூடாது எனும் ஐ.நா.வின் உத்தரவை புதின் மீறியுள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டியது.
- ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராக திகழ்ந்தவர் அலெக்சி நவால்னி
- விஷத்தின் சுவடுகளை அழிக்க முயல்வதாக நவால்னியின் மனைவி குற்றம் சாட்டினார்
இவ்வருடம் ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
ரஷிய அரசியலில் தனக்கு போட்டியாளர்கள் உருவாகாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin).
புதினை தீவிரமாக விமர்சித்து வந்தவர், அலெக்சி நவால்னி (Alexei Navalny). ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் நவால்னி திகழ்ந்தார்.
நவால்னி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 19 வருடங்களுக்கும் அதிகமான சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், நவால்னி, சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் திடீரென உயிரிழந்தார்.
சிறை வளாகத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவசர மருத்துவ உதவியாளர்கள் விரைந்து வந்து அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு நல்ல மாற்றாக நவால்னியை கருதி வந்த அந்நாட்டு மக்களில் பலரும், உலகின் பல அரசியல் தலைவர்களும், நவால்னியின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும், அலெக்சி நவால்னியின் உடல் தற்போது வரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
ரசாயன பரிசோதனைக்காக நவால்னியின் உடல் பாதுகாக்கப்படுவதாகவும், 2 வாரங்களுக்கு பிறகுதான் உடலை வழங்க முடியும் என்றும் அவரது தாயாரிடம் ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
நவால்னியின் உடல் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ரஷிய அரசு சொல்ல மறுத்து வருகிறது.
இது குறித்து நவால்னியின் மனைவி, யூலியா நவால்னயா (Yulia Navalnaya), "எனது கணவரை ரஷிய அதிபர் புதின் கொன்று விட்டார். அலெக்சியின் உடலில் உள்ள "நோவிசாக்" எனும் நரம்பு மண்டலத்தை தாக்க கூடிய அபாயகரமான விஷத்தின் தடயம் அவரது உடலில் இருந்து முழுவதுமாக விலகும் வரை உடலை வெளியே வழங்காமல் இருக்க அரசு முயல்கிறது," என குற்றம் சாட்டினார்.
அலெக்சியின் மரண செய்தி வெளியானதும் அவரது உடலை பெற சிறைச்சாலைக்கு சென்ற அவரது தாயாரையும், வழக்கறிஞரையும், உடலை பார்க்க விடாமல் சிறை அதிகாரிகள் தடுத்து விட்டனர்.
அலெக்சி விட்டு சென்ற பணிகளை தொடர போவதாக அவரது மனைவி யூலியா நேற்று உறுதிபட தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நவால்னி உயிரிழந்தார்
- கணவரை கொன்றவர்களின் முகங்களை உலகிற்கு காட்டுவேன் என்றார் யூலியா
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சகரும், ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் கருதப்பட்ட அலெக்சி நவால்னி (Alexei Navalny) பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடகிழக்கே, சுமார் 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ப் (Kharp) நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வருடம் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறைச்சாலையில் நவால்னி உயிரிழந்தார். சிறைச்சாலை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்தவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அலெக்சி நவால்னியின் திடீர் மரணம் அவரது ஆதரவாளர்களையும், உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) இது குறித்து தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
3 தினங்களுக்கு முன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என் கணவர், அலெக்சி நவால்னியை கொன்று விட்டார்.
கிட்டத்தட்ட 3 வருடங்களாக பல்வேறு துன்புறுத்தல்களை சிறையில் அனுபவித்து வந்த அலெக்சி சிறையிலேயே உயிரிழந்தார்.
அவர் விட்டு சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்.
அலெக்சிக்காக நாம் செய்ய கூடியது மேலும் தீவிரமாகவும், மேலும் வேகத்துடனும் போராடுவதுதான்.
போர், ஊழல், அநீதி, சுதந்திரமில்லாத தேர்தல், கருத்து சுதந்திர முடக்கம், நாட்டில் நிலவும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டத்தை நாம் மேலும் வலுப்பெற செய்து போராட வேண்டும்.
எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன். அவர்களின் முகங்களையும், பெயர்களையும் உலகம் பார்க்குமாறு நாம் காட்டுவோம்.
இவ்வாறு யூலியா கூறினார்.
யூலியா நவல்னயா, பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அலெக்சி நவால்னியின் தாயிடமோ, வழக்கறிஞரிடமோ அவரது உடலை வழங்க ரஷிய அரசு மறுத்து விட்டது.
- பொருளாதாரம் நலிவடைவதால் ரஷிய மக்கள் போர்நிறுத்தம் கோரி வருகின்றனர்
- அலெக்சி நாவல்னிக்கு 19-வருட-கால சிறை தண்டனை அளிக்கப்பட்டது
கடந்த 2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2-வது வருடத்தை எட்ட உள்ள நிலையில், ஐ.நா. அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் போரை நிறுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டது.
இரு நாடுகளிலும் பொருளாதாரம் பெரிதும் நலிவடைந்துள்ளதால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முன்னெடுத்த சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு அந்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இது ஒரு முக்கிய அம்சமாக பொதுமக்கள் கருதலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் அதிபராக விரும்பும் புதின், தன்னை எதிர்க்கும் தலைவர்களை தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இப்பின்னணியில், ரஷிய அதிபரை விமர்சித்து வந்த அந்நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவரான அலெக்சி நாவல்னி (Alexei Navalny), அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 19-வருட கால சிறை தண்டனை அளிக்கப்பட்டு, ரஷிய சிறைச்சாலைகளிலேயே மிகவும் மோசமானதாக கருதப்படும் ஆர்க்டிக் பீனல் காலனி (Arctic penal colony) சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், யமலோ-நெனெட்ஸ் மாவட்ட (Yamalo-Nenets) சிறைத்துறை, தற்போது 47 வயதாகும் அலெக்சி நாவல்னி, சிறையில் மயக்கமடைந்ததாகவும், அவசர மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற போராடியும், சிகிச்சை பலனின்றி அலெக்சி உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
அலெக்சி நாவல்னியின் உயிரிழப்புக்கான காரணம் தற்போது வரை சரிவர தெரியவில்லை.
நாவல்னியின் வழக்கறிஞர் லியோனிட் சோலோவ்யோவ் இத்தகவல் குறித்து விளக்கமளிக்க மறுத்து விட்டார்.
- டிரம்பின் நடவடிக்கைகளை யூகிக்க முடியாது என்றார் புதின்
- நேட்டோ குறித்த டிரம்பின் பார்வையில் நியாயம் உள்ளது என்றார் புதின்
உலகிலேயே பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், இவ்வருட நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இம்முறை, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
அயல்நாடுகளுடன் உள்ள அமெரிக்காவின் உறவு நிலை குறித்து அதிபர் பைடனும், டிரம்பும் நேரெதிர் சித்தாந்தங்களை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மற்றொரு வல்லரசு நாடான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு புதின் பதிலளித்ததாவது:
இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷியா விரும்பும்.
பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல; அவர் நடவடிக்கைகள் எளிதில் யூகிக்க கூடியவை. அவர் அந்த காலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் கொண்டவர்.
ஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல; டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.
இருப்பினும், அமெரிக்காவில் யார் அதிபராக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷியா இணைந்து பணியாற்ற முடியும்.
நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. ஆனால், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு.
பைடனின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவிக்க நான் டாக்டர் அல்ல. அவரது உடலாரோக்கியம் குறித்து நான் பேசுவது முறையாக இருக்காது.
2021ல் சுவிட்சர்லாந்து நாட்டில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்.
இவ்வாறு புதின் கூறினார்.
- அரசு, தனியார் நிறுவனங்கள் கேன்சர் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன
- விரைவில் தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு வரும் என்றார் புதின்
உலகெங்கும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்று நோய் எனப்படும் "கேன்சர்" (cancer).
உலகம் முழுவதும் அரசு-சார்ந்த மற்றும் அரசு-சாரா பல அமைப்புகள் கேன்சருக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல கோடிகளை செலவழித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த வருடம், இங்கிலாந்து அரசு, ஜெர்மனி நாட்டை அடிப்படையாக கொண்ட பயோஎன்டெக் (BioNTech) எனும் நிறுவனத்துடன், 2030க்குள் 10 ஆயிரம் நோயாளிகள் பயன்படும் வகையில் கேன்சர் மருத்துவ ஆராய்ச்சி செய்து கொள்ள ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உரையாற்றினார். அதில் ரஷிய ஆராய்ச்சியாளர்கள் கேன்சருக்கான மருந்து கண்டுபிடிப்பில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து பேசினார்.
அப்போது அவர் அறிவித்ததாவது:
எங்கள் ஆராய்ச்சியாளர்கள் கேன்சருக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி விட்டார்கள். தனிப்பட்ட வகையில் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் அவை பொதுபயன்பாட்டுக்கு விரைவில் வரும் என நம்புகிறேன்.
இவ்வாறு புதின் தெரிவித்தார்.
எந்த வகை புற்று நோயை தடுக்க இந்த தடுப்பூசி செயல்படும் என்பதையும், எவ்வாறு நோயாளிகளின் உடலில் செயல்படும் எனும் விவரங்களையும் புதின் தெரிவிக்கவில்லை.
ஹ்யூமன் பேபிலோமா வைரஸ் (Human Papilloma Virus) எனப்படும் வைரஸ் தாக்குதல் மூலம் பலவகையான கேன்சர் நோய் உருவாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த ஹெச்.பி.வி. தாக்குதலுக்கு எதிராக தற்போது 6 உரிமம் பெற்ற தடுப்பூசிகள் உள்ளன.
கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக ரஷியா "ஸ்புட்னிக்" (Sputnik) எனும் தடுப்பூசியை கண்டுபிடித்து அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
- கற்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷியாவில் உயர்நிலை பள்ளி வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அணு ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
"தாய்நாட்டை பாதுகாக்கும் அடிப்படைகள்" எனும் பாடத்தின் கீழ் போரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பான பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அந்நாட்டு கல்வித்துறை சார்ந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த பயிற்சியின் கீழ், உக்ரைனுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் திடீரென அணு ஆயுத போராக மாறும் பட்சத்தில் மாணவர்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்வர். மாணவர்கள் பேரழிவு ஆயுதங்களின் திறன் மற்றும் அவற்றின் சேதப்படுத்தும் விளைவுகள், அதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் கற்றுக் கொள்வர்.
இதோடு இயற்கை, மனிதர்களால் உருவாக்கப்படும் மற்றும் உயிரியல் சமூக இயற்கை பேரிடர்கள் மற்றும் ராணுவ பேராபத்து உள்ளிட்ட அவசர கால நிலைகளில் மாணவர்கள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வர். இத்துடன் அடிப்படை ராணுவ பயிற்சி, கலாஷ்நிகோவ் ரைஃபிள், கையெறி குண்டுகளை எப்படி கையாள வேண்டும் என்பதும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட இருக்கிறது.
- கரினா என்ற பெண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பம் அவருக்கு சரியான பொருத்தமாக அடையாளம் காட்டியதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
- சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க சுமார் 1 வருடம் ஆனதாக அவர் கூறினார்.
ரஷியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆன்லைன் டேட்டிங்கிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார்.
ரஷியாவை சேர்ந்த சாப்ட்வர் டெவலப்பரான அலெக்சாண்டர் ஜாதன் என்பவர் டிண்டர் செயலியில் தனக்கு பொருத்தமான பெண்களை கண்டறிய சாட்ஜிபிடி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் இதர பாட்களை பயன்படுத்தி உள்ளார்.
இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பெண்களுடன் சாட் செய்த பிறகு கரினா என்ற பெண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பம் அவருக்கு சரியான பொருத்தமாக அடையாளம் காட்டியதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார். அவருக்கான சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க சுமார் 1 வருடம் ஆனதாக அவர் கூறினார்.
- இரண்டு ஆண்டுகளை தொட இருக்கும் நிலையிலும் ரஷியா- உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது.
- கடந்த வாரம் போர்க்கைதிகளுடன் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இன்று பரிமாற்றம் நடந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. என்றபோதிலும் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை.
போர் நிறுத்தம் என்பது ரஷியாவுக்கு சாதகமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் ரஷியாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா குற்றம்சாட்டியது. விமானத்தில் 77 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
அதில் ஆறு விமான ஊழியர்கள் மற்றும் மூன்று ரஷிய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் 195 போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றம் நடைபெற இருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
- உலகின் பொருளாதார வளர்ச்சியில் மிக உயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- அதற்கு பிரதமர் மோடியின் தலைமையே காரணம் என ரஷிய அதிபர் புதின் கூறினார்.
மாஸ்கோ:
ரஷிய மாணவர் தினத்தை முன்னிட்டு அதிபர் விளாடிமிர் புதின் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா. அதற்கு காரணம் தற்போதைய பிரதமரின் தலைமைப் பண்புகளே ஆகும். அவரது தலைமையில் தான் இந்தியா இத்தகைய வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது.
சர்வதேச அரங்கில் தங்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதால் இந்தியா மற்றும் அதன் தலைமையை ரஷியா நம்பியிருக்க முடியும். இந்தியாவை நம்பகத்தன்மை கூட்டாளியாக ரஷியா கருதுகிறது.
இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. இன்றைய உலகில் இது எளிதான விஷயம் அல்ல. 150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இதனை செய்வதற்கு உரிமை உள்ளது.
பிரதமர் தலைமையில் இந்தியாவின் உரிமை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது வெறும் அறிக்கை மட்டும் அல்ல. கூட்டுப்பணியை ஒழுங்கமைப்பதில் இருந்து முக்கியமானது.
மேற்கு உலக நாடுகளின் அரசியல் விளையாட்டு இந்தியாவிடம் எடுபடாது. ஒரு நாட்டையும், அதன் தலைமையையும் நம்பி ஒத்துழைக்க முடியுமா அல்லது அதன் தேசிய நலனுக்காக அந்த நாடு சில முடிவுகளை எதிராக எடுக்குமா போன்ற அரசியல் விளையாட்டுகள் இந்தியாவிடம் இருக்காது என குறிப்பிட்டார்.
- ரஷியாவால் பிடிக்கப்பட்ட 65 போர் கைதிகளுடன் பறந்து கொண்டிருந்தது
- இவ்விமானம், ராணுவ சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது
ரஷிய-உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ளது, பெல்கொரோட் (Belgorod) பகுதி.
கடந்த 2022 பிப்ரவரி தொடங்கிய ரஷிய-உக்ரைன் போரில் இந்நகரம் பல முறை தாக்குதலுக்கு உள்ளானது.
ரஷியாவின் இல்யுஷின்-76 ரக போக்குவரத்து விமானம் ஒன்று, உக்ரைனிலிருந்து ரஷியாவால் பிடிக்கப்பட்ட 65 போர் கைதிகளுடன் தென் பெல்கொரோட் பகுதியில் பறந்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 65 உக்ரைன் வீரர்களும் உயிரிழந்தனர்.
இத்தகவலை வெளியிட்ட பெல்கொரோட் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் க்ளாட்கோவ் (Vyacheslav Gladkov), "புலனாய்வு படையும், அவசர கால சேவை பணியாளர் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எனது பயண திட்டங்களை மாற்றி நானும் அங்கு செல்கிறேன்" என தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம், விமான பணியாளர்களின் நிலை உள்ளிட்ட வேறு எந்த விவரங்களும் தற்போது வரை தெரியவில்லை.
அவ்விமானம், பெல்கொரோட் பிராந்தியத்திற்கு தென்கிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் யப்லோனோவோ (Yablonovo) கிராமத்தில் விழுவது குறித்த ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
???UPDATE-;--Russian military plane crashes in Belgorod region.
— EUROPE CENTRAL (@europecentrral) January 24, 2024
Russian government says plane which crashed near Belgorod was carrying 74 people, including 65 Ukrainian prisoners#Russia #Planecrash #Belgorod #Russianmilitaryplane #BREAKING_NEWS #RussianPlane pic.twitter.com/jC7BRVLLRV
இந்த விமானம், ராணுவ போக்குவரத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. ராணுவ சரக்குகள், தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்ல இது பயன்படுத்தப்படும்.
வழக்கமாக 5 பேர் வரை பயணம் செய்யும் இந்த விமானத்தில் அதிகபட்சமாக 90 பேர் வரை பயணிக்கலாம்.
ரஷிய அரசாங்கம் நிலைமையை ஆராய்வதாக தெரிவித்தது. உக்ரைன் அரசும் தகவல்களை அறிய முயற்சித்து வருவதாக தெரிவித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்