என் மலர்
உலகம்

ரஷியாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு.. மரணத்தில் நீடிக்கும் மர்மம்
- உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.
- பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார்.
ரஷியாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த 22 வயதான அஜித் சிங் சவுத்ரி 2023 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க ரஷியா சென்றார்.
ரஷியாவின் உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார். அதன்பிறகு, அவர் மீண்டும் விடுதிக்கு வரவில்லை.
இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வொயிட் நதியின் அருகே உள்ள அணையில் அஜித் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அஜித்தின் உடல் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டது. அஜித் இறந்தது குறித்து இந்திய தூதரகம் எந்த அறிக்கையும் வெளியிடாத நிலையில் நேற்று அஜித்தின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தை விற்று அஜித்தை ரஷியாவுக்கு படிக்க அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அஜித்தின் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அஜித் சவுத்ரியின் மரணத்திற்குப் பின்னால் ஒரு மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதனைத்தொடர்ந்து மாணவரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.






