என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian student"

    • கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா.
    • கலிபோர்னியாவின் பெர்க்லே பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார்.

    வாஷிங்டன்:

    கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). சென்னை ஐஐடியில் இளங்கலை படிப்பை முடித்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்லே பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஸ்ரீனிவாசய்யாவை காணவில்லை என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பார்க் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாசலில் அவரது பாஸ்போர்ட், மடிக்கணினி, அவரது பை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் மாயமானது குறித்து இந்திய துணை தூதரகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

    • மாணவர் சிவாங்க் அவஸ்தியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர்.
    • தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    டொராண்டோ:

    இந்தியாவை சேர்ந்த மாணவர் சிவாங்க் அவஸ்தி (வயது 20). கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் வளாகம் அருகே மாணவர் சிவாங்க் அவஸ்தி உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் பிணமாக கிடந்த ஹைலேண்ட் கிரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதியில் சிலரிடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதில் மாணவர் சிவாங்க் அவஸ்தியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் தொடர்பாக டொராண்டோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகம் அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த முனைவர் பட்ட மாணவர் சிவாங்க் அவஸ்தி உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த வேதனை அடைந்து உள்ளோம்.

    இந்தக் கடினமான நேரத்தில் துணைத் தூதரகம் அவரது துயரமடைந்த குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது. மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

    கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொராண்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    • சஹாஜா தங்கியிருந்த வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • இதில் சஹாஜா உள்பட சக மாணவிகள் பலர் சிக்கினர்.

    வாஷிங்டன்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியைச் சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    அவர் அல்பெனி நகரின் வெஸ்ட் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    இந்நிலையில், சஹாஜா தங்கி இருந்த வீட்டில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சஹாஜா உள்பட சக மாணவிகள் சிக்கினர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் வீட்டில் சிக்கியவர்களை போராடி மீட்டனர்.

    இந்த தீ விபத்தில் சஹாஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. சக மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சஹாஜாவுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சஹாஜா நேற்று உயிரிழந்தார். அவரது உடலை இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சி எடுத்துள்ளது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.
    • பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார்.

    ரஷியாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த 22 வயதான அஜித் சிங் சவுத்ரி 2023 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க ரஷியா சென்றார்.

    ரஷியாவின் உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் கடந்த 19ம் தேதி பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார். அதன்பிறகு, அவர் மீண்டும் விடுதிக்கு வரவில்லை.

     இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வொயிட் நதியின் அருகே உள்ள அணையில் அஜித் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    அஜித்தின் உடல் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டது. அஜித் இறந்தது குறித்து இந்திய தூதரகம் எந்த அறிக்கையும் வெளியிடாத நிலையில் நேற்று அஜித்தின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலத்தை விற்று அஜித்தை ரஷியாவுக்கு படிக்க அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    அஜித்தின் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அஜித் சவுத்ரியின் மரணத்திற்குப் பின்னால் ஒரு மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    இதனைத்தொடர்ந்து மாணவரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

    • டல்லாஸ் மாகாணத்தில் எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்தார்.
    • பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார்.

    வாஷிங்டன்:

    தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார்.

    நிரந்தர வேலை தேடி வந்த அவர், அது கிடைக்கும் வரை அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    இதற்கிடையே, பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இச்சம்பவம் தெலுங்கானாவில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு சார்பில் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி கூறினார்.

    இந்நிலையில், இந்திய மாணவர் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த ஹூஸ்டன் இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தது.

    • பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங்.
    • வாடகைக்கு வேறு வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21).

    கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்ற வன்ஷிகா ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். வாடகைக்கு வேறு  வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.

    இரவு நீண்ட நேரமாகியும் வன்ஷிகா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, மாயமான வன்ஷிகாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்களாக தேடப்பட்டு வந்த வன்ஷிகா நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    வன்ஷிகாவின் உடல் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு அருகே கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. வன்ஷிகாவை யாரேனும் கொலை செய்தனரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாணவியின் தோழி ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவர் கைது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மாணவி கொந்தம் தேஜஸ்வினி (27). இவர் மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்தார். இவர் அங்கு வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் தனது நண்பர்களுடன் பகிரப்பட்ட அறையில் தங்கி வசித்து வந்தார்.

    இந்நிலையில், தேஜஸ்வினி நேற்று காலை அவரது அறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், இவருடன் இவரது தோழி ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தேஜஸ்வினி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தேஜஸ்வினியின் உறவினர் விஜய் என்பவர், தேஜஸ்வினி தங்கி இருந்த பகிரப்பட்ட அறையில் ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் புதிதாக குடியேறினார் என்றும் அவர் தான் தேஜஸ்வினியை கொலை செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து, கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர 23 வயதான இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
    • இதில் இந்திய மாணவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய மாணவர் அன்ஷும் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அவருடன் விமானத்தின் பயிற்சியாளரும் உடன் இருந்துள்ளார்.

    துகுகேராவ் விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் விமானம் விபத்துக்கு உள்ளானது தெரியவந்தது.

    விபத்துக்கு உள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விமானத்தில் பயணம் செய்த அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவருமே பலியாகினர். இருவரது உடல்களையும் மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    • பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் திடீரென்று மாயமானார். இதுகுறித்து நீல் ஆச்சாரியாவின் தாய் கவுரி ஆச்சார்யா, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, எனது மகன் நீல் ஆச்சார்யா மாயமாகி உள்ளார்.

    அவரை கடைசியாக பல்கலைக்கழகத்தில் காரில் இருந்து இறக்கி விட்ட உபெர் டிரைவர் பார்த்துள்ளார். எனது மகனை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து நீல் ஆச்சார்யாவை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.

    இந்த நிலையில் மாயமான மாணவர் நீல் ஆச்சார்யா உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    • தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    சிகாகோ:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று தான் வசிக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததால், சையத் மசாஹிர் அலி தனது வீட்டுக்கு வேகமாக ஓடினார்.

    உடனே அவரை அக்கும்பல் விரட்டி சென்று பிடித்தது. பின்னர் இந்திய மாணவரை கொடூரமாக அக்கும்பல் தாக்கி அடித்து உதைத்தது. மாணவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. அவர் ரத்தம் வழிந்தபடியே வீடியோவில் பேசினார். அதில் அவர் கூறும்போது, "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக தாக்கினார்கள். எனக்கு உதவி செய்யுங்கள்" என்றார்.

    இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவில் எனது கணவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது 3 குழந்தைகளுடன் நான் அமெரிக்காவுக்கு சென்று கணவரை பார்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

    தாக்குதலுக்குள்ளான இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    • காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    • சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    சிராஜ் அந்தில் கனடா நாட்டின் வான்கூர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் வெளியில் சென்றார்.

    இந்த நிலையில் அவர் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சிராஜ் அந்தில் சகோதரர் ரோஹித் கூறும்போது எனது அண்ணனுக்கு யாருடனும் பகை கிடையாது. எல்லோரிடமும் அவர் பாசமாக தான் பழகுவார். அவருடன் நான் தினமும் செல்போனில் பேசுவேன். சம்பவத்தன்று இரவு கூட நான் பேசினேன். அதற்குள் இப்படி நடந்து விட்டது என சோகத்துடன் தெரிவித்தார்.

    • அமெரிக்காவின் கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் ஆர்யன் முதுகலை படிப்பு பயின்றுவந்தார்.
    • துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாஷிங்டன்:

    தெலுங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆர்யன் ரெட்டி குடும்பத்தினர். தற்போது உப்பல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

    ஆர்யன் ரெட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள கன்சாசில் முதுகலை பட்டப்படிப்பில் படித்து வந்தார்.

    இந்நிலையில், ஆர்யன் ரெட்டி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, சமீபத்தில் வாங்கிய துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும், ஆர்யன் அறைக்கு வந்த அவரது நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆர்யனை மீட்டு அருகிலுள்ள மருத்துவனையில் சேர்த்தனர். ஆனால் ஆர்யன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆர்யன் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிறந்த நாளன்று துப்பாக்கி குண்டு பாய்ந்த இந்திய மாணவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×