என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.
    • 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    * தந்தை பெரியாரை தந்த ஈரோட்டிற்கு வந்ததில் திராவிட இயக்கத்தின் முதல் தொண்டனாக பெருமைக்கொள்கிறேன்.

    * தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கங்கள் இல்லை.

    * தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.

    * ஜவுளி, மஞ்சள், கைத்தறி ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற நகரம் ஈரோடு.

    * டிசம்பர் 10-ந்தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    * ஈரோடு மண்டலத்தில் 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    * மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும்.

    * ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    * கோடிசெட்டிப்பாளையம் நகராட்சிக்கு ரூ.4.50 கோடியில் அலுவலக கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

    * புஞ்சை புளியம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டித்தரப்படும்.

    * சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்ழுடும்.

    * ஈரோடு மாவட்டத்தில் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும்.

    * தோணிமடுவுவில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

    * பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார். 

    • முதல்முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தில் இருந்தும், அதன்பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன்.
    • தொண்டர்களின் தலைவனாக இருந்தாலும், கட்சி பதவிகளில் எப்போதும் செங்கோட்டையன் ஆர்வம் காட்டியதில்லை.

    ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். இவர் அ.தி.மு.க. சார்பாக 9 முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தில் இருந்தும், அதன்பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்தபோது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வெற்றி பெற்றார். செங்கோட்டையன் வனத்துறை அமைச்சராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், விவசாயத்துறை அமைச்சராகவும், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

    ஜெயலலிதா, சத்துணவு திட்ட உயர்மட்ட குழுவில் இருந்தபோது, அவரை காங்கேயம் அழைத்து வந்து விழா நடத்தியவர் செங்கோட்டையன். அப்போது தொடங்கிய விசுவாசம், அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது.

    அ.தி.மு.க. தலைமை ஜெயலலிதாவிடம் இருந்தவரை, எந்த தேர்தல் என்றாலும், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வந்தார்.

    முதல் நாள் தேர்தல் பிரசாரம் முடிந்து ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் வரை காத்திருந்து விட்டு, அடுத்த நாள், ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் பேசலாம் என்பதில் தொடங்கி மேடை, மைக், கூட்டம் சேர்ப்பது உள்பட அனைத்தையும் நள்ளிரவுவரை சுற்றிப் பார்த்து, ஓர் ஒத்திகை நடத்தி திருப்தியான பின்பே உறங்கச் செல்வார் செங்கோட்டையன். இதனால் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை செங்கோட்டையனிடமே ஜெயலலிதா ஒப்படைத்து வந்தார்.

    தொண்டர்களின் தலைவனாக இருந்தாலும், கட்சி பதவிகளில் எப்போதும் செங்கோட்டையன் ஆர்வம் காட்டியதில்லை. அதேபோல், தனக்கென ஆதரவாளர் வட்டத்தையும் சேர்க்க அவர் விரும்பியதில்லை.

    கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் சில தனிப்பட்ட காரணங்களால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி, ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பின்பும், அதே விசுவாசத்தோடு இருந்தவர் செங்கோட்டையன்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சித் தலைமையை கைப்பற்ற ராஜதந்திரங்களை பலரும் பிரயோகிக்க, கட்சி நலன் பெரிது என்று அமைதியாய் இருந்தவர் செங்கோட்டையன். 

    • தி.மு.க.விற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.
    • மின் கட்டண உயர்வை நினைத்தாலே தி.மு.க.விற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி .வேலுமணி பங்கேற்று பேசியதாவது:-

    எஸ்.ஐ.ஆர். என்று அறிவித்ததுமே தி.மு.க.வினர் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து விட்டார்கள். அ.தி.மு.க.வை பொறுத்த அளவில் என்றைக்குமே நேர்மையாக தேர்தலை சந்திப்போம். கள்ள ஓட்டு போடுவதெல்லாம் இருக்காது. அ.தி.மு.க.வுக்கு சாதகமான வாக்குகள், பொதுமக்கள் வாக்குகள் சரியான முறையில் சேர்க்க வேண்டும்.

    தி.மு.க.விற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். தமிழ்நாடு முழுவதுமே தி.மு.க. ஆட்சி போய்விடவேண்டும். அ.தி.மு.க., ஆட்சி வரவேண்டும் என ஒட்டுமொத்த குரலாக உள்ளது.

    இந்த முறை திருப்பூரில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சர்வே வைத்துள்ளேன். தி.மு.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    மின் கட்டண உயர்வை நினைத்தாலே தி.மு.க.விற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தி.மு.க.விற்கு எப்பவும் ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் கூட இந்த ஆட்சி வேண்டாம் என கூறுகிறார்கள். எனவே அ.தி.மு.க. அரசு அமைவது உறுதி. இதுவரையிலும் தி.மு.க. ஆட்சிக்கு இவ்வளவு கெட்ட பெயர் வந்ததில்லை. அவ்வளவு கெட்ட பெயருடன் தி.மு.க. ஆட்சி உள்ளது.

    ஒரு முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மறுமுறை நிச்சயம் மிக படுதோல்வி அடையும் என்பதுதான் சரித்திரம் என்றார்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 15ந்தேதிக்குள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என தெரிவித்துள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.

    • தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக உருவாகியது.

    இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆய்வு மைய அதிகாரி செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-

    நேற்று மலேசியா ஜலசந்திர் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த மண்டலம் நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அதன் பின்னர் இன்று காலையில் அது புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் இந்தோனேசியா பகுதிகளை கடந்து அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

    மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

    இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தீவிரமடையும் என்பதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தென் மாவட்டத்திலும், டெல்டா மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8 செ.மீ. ராமேஸ்வரம் 6 செ.மீ. மண்டபம் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கோவில், சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் சேர்ந்தார்.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் கோலோச்சி வந்த செங்கோட்டையன் இந்த முடிவு எடுத்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்தார்.

    இது அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் உடனடியாக பறிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து ஆதரவாளர்களை திரட்டி தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்த செங்கோட்டையன் அ.தி.மு.க. இணைப்புக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறி வந்தார். ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய செங்கோட்டையன், சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தனது கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்காத நிலையில் செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கைகோர்க்க உள்ளார்.

    இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் ஏற்கனவே செங்கோட்டையனை சந்தித்து பேசி அவர் த.வெ.க.வில் சேருவதை உறுதி செய்துள்ளனர். இதற்காக சென்னை வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார்.

    கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நாளை செங்கோட்டையன் இணையும் விழா நடைபெறுகிறது.

    அந்த கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொள்கிறார். அவருடன் ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது. புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


    இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தலைமை செயலகத்துக்கு சென்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் சேர்ந்தார்.

    இதையடுத்து தனது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். அதே போன்றுதான் செங்கோட்டையனும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் கோலோச்சி வந்த செங்கோட்டையன் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை.
    • என்னுடைய சார்பில் அருந்ததியினர் மசோதாவை அறிமுகப்படுத்த கலைஞர் கேட்டுக் கொண்டார்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்ததில் பெருமையும் வீரமும் அடைகிறேன்.

    * சொன்னால் சொன்னதை செய்பவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

    * சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை.

    * தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருந்தவர் மாவீரன் பொல்லான்.

    * அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு சட்டம், மக்களுக்கு ஒளிவிளக்காக திகழ்கிறது.

    * அருந்ததியினரில் 3,944 மாணவர்கள் பொறியியலும், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கிறார்கள்.

    * என்னுடைய சார்பில் அருந்ததியினர் மசோதாவை அறிமுகப்படுத்த கலைஞர் கேட்டுக் கொண்டார்.

    * ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பில் என்னுடைய பங்கு இருந்ததை எண்ணி பெருமையடைகிறேன்.

    * அருந்ததியினர் மக்களுக்கு தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    * கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூரில் அருந்ததியின மாணவர்களுக்கு 26 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

    * தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியை பெறுவது தான் வரலாறு என பாராட்டு கிடைத்துள்ளது.

    * அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் உண்மையான வளர்ச்சி.

    * எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும்.

    இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த ஏரி மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 756 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வீராணம் ஏரிக்கு செங்கால், கருவாட்டு ஓடைகள் வழியாக வினாடிக்கு 1,365 கன அடி நீர் வருகிறது.

    இதனால் ஏரியின் நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி 45.50 அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி இதற்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதாலும், மழைக்காலம் என்பதாலும் ஏரியில் இருந்து உபரி நீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக வினாடிக்கு 1,570 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

    சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர்.
    • வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழையபேட்டை காந்தி நகரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வரும் ஜேம்ஸ் பால் (வயது 57) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பீட்டா. இவர்களது மகள் மதுரையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கு தங்கியுள்ளார். இதனால் ஜேம்ஸ் பால் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் மதுரை புறப்பட்டார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது அது இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், நேற்று காலை பார்த்தபோது கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் பால், தனது பக்கத்து வீட்டாருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    உடனடியாக மதுரையில் இருந்து நெல்லைக்கு விரைந்து வந்த ஜேம்ஸ் பால், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது வீட்டின் அறையில் திருடன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், "உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதற்கு இத்தனை கேமராவா? அடுத்த முறை என்னை மாதிரி யாராவது திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசாவது வை. மன்னித்துக்கொள்ளவும். இப்படிக்கு திருடன்" என்று எழுதப்பட்டிருந்தது.

    அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அந்தப் பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வருகிற 29-ந் தேதி 141 அடியும், 30-ந் தேதிக்கு பிறகு 142 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது விதி.
    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் எனவும் துணை அணையான பேபி அணையை பலப்படுத்திய பிறகு முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசும் சில தன்னார்வலர்கள் என்ற பெயரில் உலா வரும் நபர்கள் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்துக்கும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என ரூல் கர்வ் விதிமுறையை செயல்படுத்த கோரிக்கை விடுத்தது. அதன்படி மத்திய நீர் வள ஆணையம் ரூல் கர்வ் விதிப்படி நீர்மட்டத்தை நிர்ணயித்து வருகிறது.

    இதனால் கடந்த மாதம் கன மழை பெய்தபோது 138 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாமல் உபரி நீராக 13 மதகுகள் வழியாக கேரள மாநிலத்துக்கு 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வீணாக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழைப்பொழிவு குறைந்ததால் 138 அடிக்கும் கீழ் சென்றது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உயர்ந்துள்ளது.

    வருகிற 29-ந் தேதி 141 அடியும், 30-ந் தேதிக்கு பிறகு 142 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது விதி. இதனால் இந்த ஆண்டு மீண்டும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    136 அடியை எட்டியதும் கேரளாவுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 138 அடியை கடந்ததும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 140 அடி உயர்ந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலத்துக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அணைக்கு நீர்வரத்து 1927 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 7153 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது. 1486 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3995 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 66 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 52.51 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது.
    • சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை அமைந்தகரையில் 'ஆருத்ரா கோல்டு' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைந்தகரை, வில்லிவாக்கம், அண்ணாநகர், வேலூர், திருவண்ணாமலை உள்பட 26 இடங்களில் கடந்த 2022-ம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஆவணங்கள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1 லட்சம் பணம் செலுத்தினால் வட்டியாக ரூ.36 ஆயிரம் தருவோம் என ஆசை காட்டப்பட்டது தெரிய வந்தது. இப்படி ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து ஆருத்ரா நிறுவனம் சட்ட விரோத பணபரிமாற்ற விவகாரத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 15 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை, வேலூர், காஞ்சிபுரம் உள்பட 15 இடங்களில் நடைபெறும் இந்த சோதனையின் போது சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் முடிவிலேயே முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கட்சி தொடங்கிய பின்னர் முதன் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார்.
    • த.வெ.க.வினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

    கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தி.மு.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனிடையே, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், அடுத்த மாதம் 5-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புதுச்சேரி மாநிலத்திற்கு செல்கிறார். கட்சி தொடங்கிய பின்னர் முதன் முறையாக புதுச்சேரிக்கு செல்லும் விஜய், மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் புதுச்சேரியில் ரோடு ஷோ செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதால் காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், காலப்பட்டு, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம் வழியாக சென்று மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் என்று கூறப்படுள்ளது. இதற்காக த.வெ.க.வினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

    இதனிடையே, த.வெ.க.வினர் அளித்த கடிதத்திற்கு காவல்துறையிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
    • நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.

    இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்திய குடிமக்கள் சாதி, மதம், இனம், பாலினம் போன்ற எந்தவித பாகுபாடுகளுக்கும் இடமில்லாமல் 'அனைவரும் சமம்' என்று பிரகடனம் செய்த ஆவணம் அரசியலமைப்பு சட்டம். 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.

    இந்திய ஜனநாயகத்தின் ஆவணமாகவும், இந்தியர்களுடைய மதச்சார்பின்மையின் அடையாளமாகவும் உள்ள அரசியலமைப்பு சட்டத்தைக் காப்போம் என்று 'அரசியலமைப்பு தினமான' இன்று உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×