என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul Collector"

    • தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்றார் போல் இல்லாத காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
    • ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாநிலம் முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தின் எதிரில் உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழக அரசு தற்போது வருவாய் துறை மூலமாக சாதாரண ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500யும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000யும் உதவித்தொகையாக வழங்கி வருகிறது.

    தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்றார் போல் இல்லாத காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    குறிப்பாக ஆந்திராவில் சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6000யும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10000யும், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15000 உதவித்தொகையாக வழங்கி வருகின்றனர்.

    இதேபோல் பாண்டிச்சேரியில் ரூ.5800யும், தெலுங்கானாவில் ரூ.4016யும், டெல்லியில் ரூ.5000யும் வழங்கி வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக ரூ.2000 மட்டுமே வழங்கி வருகின்றனர்.

    எனவே ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

    • பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
    • குடியிருப்பு பகுதிகளையும் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அளித்திட வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவைகளை முறையாக பயன்படுத்திட வேண்டும். அனைத்து மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

    பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் கொசுப்புழு, முதிரி கொசு அழிக்கும் பணிகளுக்கு வருகை தரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பற்றியும் அவற்றின் தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களையும், கொசுப்புழு தடுப்புப் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து அனைத்து மேல்நிலை மற்றும் தரைநிலை தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்திட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகள் பருவ மழைக்கு முன்னதாக அப்பகுதிகளிலுள்ள அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் மூன்று நாட்களுக்குள் முழுமையான தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் மூலம் காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், காய்ச்சல் மற்றும் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அப்பகுதிகளில் காய்ச்சல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும்.

    அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கொசுப்புழு, முதிர் கொசு பற்றியும், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அளித்திட வேண்டும்.

    பொதுமக்கள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுயமாக மருந்து உட்கொள்ளுதல் மருத்துவர்கள் ஆலோசனையின்றி மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்த வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்சுகந்தி ராஜகுமாரி, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×