என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சி தங்களுக்கே சொந்தம் என இருவரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து உள்ளது. டாக்டர் ராமதாஸ் தி.மு.க. பக்கம் செல்வதா அல்லது அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
அவர்களுடன் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இன்று இறுதி கட்ட ஆலோசனையில் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை ராமதாஸ் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
- பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வாகன பெருக்கம், நகரின் வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக பொள்ளாச்சியில் கூடுதலாக பஸ் நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி-கோவை ரோடு சி.டி.சி.மேட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.9 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பொள்ளாச்சியின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொள்ளாச்சி கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து காந்திசாலை-பல்லடம் ரோட்டை இணைக்கும் புதிய சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயரை சூட்டி, பெயர் பலகையையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.
- கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.
கோவை:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போது தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டல அளவில், மாநாடு நடத்தி வருகிறது.
முதல்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டமாக இளைஞரணியின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ம் தேதி நடந்தது. இதிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடானது இன்று மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் டோல்கேட் பகுதியில் நடக்க உள்ளது.
இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதற்காக அவர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
பின்னர் அவர் கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்று நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் சி.டி.சி மேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு சென்றார். அங்கு கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, மாலை 5 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் பகுதிக்கு வருகிறார்.
அங்கு நடக்கும் தி.மு.க இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் பங்கேற்கும் அவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.
துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றுகிறார்.
அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட மாநகர செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் முடிவில் இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.
முன்னதாக மாநாட்டிற்கு வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
கோவையில் நடக்கும் மேற்கு மண்டல தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்கள், 39 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை, வாக்குச்சாவடி அளவிலான இளைரணி நிர்வாகிகள் அனைவரும் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டையொட்டி கணியூர் டோல்கேட் பகுதியில் பிரமாண்டமான மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு, குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.
மாநாட்டு பந்தலில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
- அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு திசை நோக்கி நகரும்.
- , வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்த காற்றழுத்த பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடக்கத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு திசை நோக்கி நகரும்.
இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க. தங்கள் கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட் சிகளை தக்க வைக்கவும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் வேலைகளை செய்து வருகிறது. அப்படியாக கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தரப்பில் குழுக்களை அமைத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு. துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.
முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது. டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சியுடன் நாளை தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வரும் 26-ந்தேதி பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. அழைத்துள்ளது.
- தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.
- மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை.
தருமபுரி:
தருமபுரி அருகே வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருமணம் மண்டபம் கட்ட, 80 லட்சம் ரூபாயை, பா.ம.க. தலைவர் அன்புமணி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதில், ஒன்றிய பொதுநிதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நிதி உட்பட, 1.14 கோடி ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம், உணவருந்தும் கூடம், சுகாதார வளாகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. அதை, பா.ம.க. தலைவர் அன்புமணி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பது, பொங்கலுக்கு, 3,000 ரூபாய் கொடுப்பது என, மக்களை தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.
அதற்கு பணம் கொடுத்து விட்டால் தீர்வாகி விடாது. மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை. கடந்த, 2021-ல், தி.மு.க. அளித்த, 505 தேர்தல் வாக்குறுதியில், 66 மட்டும் நிறைவேற்றி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.
கடந்த, 12 நாளில், 16,000 கோடி ரூபாய்க்கு, 4,385 ஒப்பந்த பணிகள் போடப்பட்டுள்ளன.
ஆட்சியின் கடைசி காலத்தில் கொள்ளையடிக்கும் வேலையை, தி.மு.க.வினர் செய்கின்றனர்.
2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி இடையே தான் போட்டி. தமிழகத்தில் பெண்களால், அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
- தொழில்நுட்ப கோளாறால் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.
- தமிழகம் முழுவதும் ஏராளமானோர் வந்து தேர்வு எழுதி வருகின்றனர்.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வை யாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி வெளியானது.
இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது.
அதனைத்தொடர்ந்து அவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த 8-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது.
தேர்வர்களுக்கான தேர்வு மைய விவரங்கள், ஹால் டிக்கெட்டில் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனால், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மையத்திற்கு தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறால் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் மீண்டும் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஏராளமானோர் வந்து தேர்வு எழுதி வருகின்றனர்.
- திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.
- விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கழுவனை சேரியை சேர்ந்தவர்கள், காரியாபட்டியில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அருகே செட்டி குறிச்சி விளக்கு அருகே சென்று கொண்டிந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் கோயமுத்தூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.
இதில் கழுவனை சேரியை சேர்ந்த முத்து மகன் சடைய கருப்பன் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த முத்துராசு மகன் முத்துப்பாண்டி (35) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து பந்தல்குடி இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.
- கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த குழுவில் ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தி.மு.க. தரப்பில் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி நடராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

- எம்ஜிஆர், ஜெ.புகழுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவிக்கிறார்.
- பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் என்பது வருத்தம் அளிக்கிறது.
தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் நேற்று ஓபிஎஸ் முன்னிலையில் அவரது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேசியதை பார்த்தேன். ஓபிஎஸ் அவர்கள் 30 ஆண்டுகளாக அதிமுகவுடன் தொடர்பில் உள்ளவர்.
அவர் எந்த கட்சியிலும் சேர அவருக்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் இருக்கலாம். உரிமை இருக்கிறது.
சட்டமன்றத்துக்குள்ளேயே ஆதரவு எம்எல்ஏ-வை பேசவைத்து எம்ஜிஆர், ஜெ.புகழுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவிக்கிறார்.
சுயநலத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் தீய சக்திகளிடம் ஓ.பன்னீர்செல்வம் விலை போய்விட்டார்.
பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் என்பது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக குமரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.






