என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம்.
    • உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.

    இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்!

    விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.

    கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.

    • எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வருகிறது.
    • 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களை மாநில அரசு எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.

    சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எஸ்ஐஆர் மூலம் நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாராகும். உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற் வேண்டும் என்பதற்காகவே எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்றால் உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும். மாநிலம் முழுவதும் நடைபெறும் எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வருகிறது.

    தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் சுணக்கமாக நடைபெற்று வருகிறது. எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடைபெற கூடாது என அதிகாரிகள் சிலர் செயல்படுவதாக புகார் எழுகிறது.

    எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி செய்ய அப்பணிகளில் ஈடுபடும் மாநில அரசு அலுவலர்களுக்கு மாநில அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களை மாநில அரசு எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான இறந்த, போலி வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. போலி வாக்காளர்களை வைத்து கள்ளஓட்டு போட்டு திமுக வெற்றி பெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.
    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.

    சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை வெற்றி பெற்றுள்ளது.

    பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.

    பீகார் தேர்தல் வெற்றி பாஜக கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.

    பாஜக கூட்டணி பீகார் மாநிலத்தின் முன்னேற்றத்தையும், பொது நலனையும் துரிதப்படுத்தும் என நம்புகிறேன்.

    பல்வேறு விமர்சனங்கள், எஸ்ஐஆர் முறைகேடுகள் என கூறப்பட்ட பொய்களையும் தாண்டி பீகாரில் சிரத்திர வெற்றிப் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும்பாலான மூச்சுக்குழாய் தொற்று நோய் பள்ளி பருவக்குழந்தைகளில் இருந்து வீட்டுக்கு பரவுகிறது.
    • இருமல், தும்மல் வரும்போது முகத்தை மூட வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் மூச்சு கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் மூச்சுக்குழாய் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    லேசான மூச்சுக்குழாய் அறிகுறிகள், தும்மல், நீர்க் கோழை, வறண்ட இருமல், காய்ச்சல், தலைவலி ஆகியவற்றுடன் மீண்டு வருகிறார்கள். ஆனால் இணை நோய்கள் உள்ள முதியவர்கள் அதி தீவிர அறிகுறிகளுடன் நிமோனியா, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் மூச்சுக்குழாய் பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தேசிய முகமை ஆய்வு நிறுவனத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு மூச்சுக்குழாய் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்கோளாறு கொண்ட நோயாளிகள் அதிகரித்து வருவதாக அதன் இயக்குனர் டாக்டர் தீபா தெரிவித்தார்.

    ஆகஸ்ட் மாதத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூச்சுக் குழாய் நோய், நோயாளிகள் 62 பேர் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களில் இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலை தொடர்கிறது.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    பெரும்பாலான மூச்சுக்குழாய் தொற்று நோய் பள்ளி பருவக்குழந்தைகளில் இருந்து வீட்டுக்கு பரவுகிறது. 70, 80 வயதுடையவர்களை இந்த நோய் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இணை நோய் போன்ற காரணிகளால் வயதானவர்களுக்கு அதிக இடர்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்த நோய் மிகவும் தொற்றக்கூடிய வைரஸ். இது லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொடுத்தாலும் நிமோனியா, பிராங்கைடிஸ் போன்ற தீவிரமான நோய்களை உருவாக்கக்கூடியது. தும்மல், இருமல் மூலம் எளிதாக மற்றவர்களுக்கு பரவக்கூடியது. மூச்சுக்குழாய் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3 முதல் 8 நாட்கள் வரை வைரசை பரப்பலாம். சிலருக்கு 2 வாரங்கள் வரை கூட நீடிக்கலாம். காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், உதடு-சருமம் நீலநிறம், உணவு சாப்பிடும் ஆர்வம் குறைதல், கோபமடைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த நோய் பாதிப்பில் இருந்து தவிர்க்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

    இருமல், தும்மல் வரும்போது முகத்தை மூட வேண்டும். நோயாளிகளுடன் நெருக்கத்தை தவிர்க்க வேண்டும். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை.

    சென்னையில் காய்ச்சல் காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலானவர்கள் முதலில் இன்ப்புளூயன்சா என நினைக்கிறார்கள். ஆனால் தற்போது மூச்சுக்குழாய் நோய் பாதிப்பு அதிகம் கண்டறியப்படுகிறது.

    இவ்வாறு டாக்டர்கள் கூறினார். 

    • மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது.
    • தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது.

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளை நிரப்புகிறது. பின்னர் அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு ஒகேனக்கல் வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. பின்னர் அங்கிருந்து பயணிக்கும் காவிரி ஆறு மேட்டூர் அணையை வந்தடைகிறது.

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் இருப்பை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறும். இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடலில் கலக்கிறது.

    இதற்கிடையே தமிழக-கர்நாடகா இடையே நீர்பங்கீடு பிரச்சனை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் உபரிநீரை காவிரியில் திறந்து விட்டு தமிழகத்துக்கான பங்கீட்டை அளவுக்கு அதிகமாக வழங்கி விட்டதாக ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசு கூறி வருகிறது.

    இந்த நிலையில் பெங்களூரு மாநகரின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணையை கட்ட 2018-ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 500 கோடியாகும். மேலும் இந்த அணைக்காக 4,716 ஹெக்டேர் காடுகளும், 280 ஹெக்டேர் வருவாய் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர மேகதாது அணையில் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கவும், இதன் மூலம் பாசனம் மற்றும் குடிநீர், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

    கர்நாடகாவின் மேதாது திட்டத்துக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நீதி பதி தீர்ப்பு வழங்கினார்.

    அதில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கலாம், எனவே கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு சமர்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மனுக்கள் உரிய நேரத்துக்கு முன்பே தாக்கல் செய்துள்ளதை கருத்தில் கொண்டு மனுக்கள் முடித்து வைத்து தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வரவேற்று உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் கூறும்போது, மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை பயக்கும். கடினமான காலங்களில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட இந்த திட்டம் உதவும். எனவே இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

     

    இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    1924-ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாநில அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கர்நாடகம் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியது.

    அதேபோன்று 400, 500 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேட்டூரில் தமிழக அரசும், கிருஷ்ணராஜ சாகரில் கர்நாடக அரசும் அணைகளை கட்டிக் கொண்டது.

    அதன்படி 50 ஆண்டுகள் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கிடைத்தது. அதன் பின்னர் 1974 முதல் 78 வரை தமிழக அரசியல்வாதிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் கர்நாடகம் கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் ஆகிய 5 அணைகளை கட்டி இன்றைக்கு 28 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்கிறது.

    நமது சாகுபடி பரப்பளவு சுருங்கியது. பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளும், தமிழக அரசும் விழித்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் 2007-ல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

    அதன் பின்னர் 2018 உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் தண்ணீர் அவர்கள் முறையாக திறப்பதில்லை.

    தற்போது மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். அதன் மூலம் பெட்ரோல், டீசல், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை இங்கு செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு வசதியாக இருக்கும்.

    மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதி கர்நாடகத்திலும் இன்னொரு பகுதி தமிழகத்திலும் உள்ளது. அதன் நீர் வழித்தடம் கர்நாடகாவில் உள்ளது.

    தற்போது தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் போது அந்த நீர் நமக்கு வராது.

    அதுமட்டுமல்லாமல் காவிரியில் நமக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதே அளவாக உள்ளது. தற்போது மேகதாது அணை அந்த வழித்தடத்தில் கட்டப்படுவதால் நமக்கு வரும் தண்ணீரின் அளவும் தெரியாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் உடையது. இதற்கு முன்பு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் காவிரிநீர் தொடர்பான பிரச்சனை வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து காவிரி நடுவர் மன்றத்தில் முறையிடுங்கள் என கூறியது வரலாறு. அப்படி இருக்கையில் தற்போது மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கைக்கு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்தது அரசியல் சட்ட சாசனத்தை மீறும் செயலாகும்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக உள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகி விடும். டெல்டா விவசாயிகள் அகதிகளாக வெளியேறும் சூழ்நிலை உருவாகும்.

    எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி மேகதாது விவகாரம் தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போகிறதா? சட்டப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் ? என்பதை உடனே தெளிவுப்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் கர்நாடக அரசை மேகதாதுவில் அணை கட்ட விடக்கூடாது. அதனை தடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜவுளி வணிக வளாகத்தில் உள்ள 240 கடைகளை அடைத்து வியாபாரிகள் வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் ஈரோடு கனி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சார்பில் 240 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    வணிக வளாகத்தில் முகப்பு வாயிலை அவலப்படுத்தி தரவேண்டும். 2022-23 ஆம் ஆண்டில் கட்டிட பயன்பாட்டிற்கு முன்பே வசூலித்த பிப்ரவரி, மார்ச் மாத வாடகை தொகையை கழித்து தொடர்ந்து வாடகை செலுத்த வகை செய்ய வேண்டும்.

    ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் வாடகையை குறைத்து தர வேண்டும். வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் வளாகத்தின் மேல் பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது.

    வணிக வளாக பகுதியை சுற்றி வியாபாரிகளை பாதிக்கும் வகையில் எந்தவித சாலையோர தற்காலிக கடைகளை நடத்த அனுமதிக்க கூடாது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    வணிக வளாக உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் போதுமான மின் விளக்குகள் அமைத்தும், கழிவறைகளை சரியான முறையில் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    இது தொடர்பாக பலமுறை அதிகாரிகள் சந்தித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஜவுளி வணிக வளாகத்தில் உள்ள 240 கடைகளை அடைத்து வியாபாரிகள் வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க மாநகர செயலாளர் சுப்ரமணியம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜவுளி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது உங்களது 7 கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது வியாபாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் 7 கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    • இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதமோ எடப்பாடி பழனிசாமி தனது 6-வது கட்ட பிரசாரத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளார்.
    • குமரி மாவட்டம் மற்றும் மீதமுள்ள மற்ற இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார்.

    கோவையில் தொடங்கிய இந்த பிரசாரம் தஞ்சையில் ஜூலை 27-ந் தேதி முடிவடைந்தது. இதன் பின்னர் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி 5 கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டார். இதுவரை 174 தொகுதியில் அவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

    மீதம் உள்ள 60 தொகுதிகளிலும் அடுத்த கட்டமாக பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் இந்த மாத இறுதியிலோ, அல்லது அடுத்த மாதமோ எடப்பாடி பழனிசாமி தனது 6-வது கட்ட பிரசாரத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த மாதமும் அடுத்த மாதமும் சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற இடங்களிலும் மழை பொழிவு எப்படி இருக்கும்? என்பதை அலசி ஆராய்ந்த பிறகே எடப்பாடி பழனிசாமியின் 6-வது கட்ட பிரசாரத்தை திட்டமிடுவதற்கு அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை காலம் ஓய்ந்த பிறகு பிரசாரம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    இதனால் ஜனவரி முதல் வாரத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறினார்.

    அதே நேரத்தில் குமரி மாவட்டம் மற்றும் மீதமுள்ள மற்ற இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கு ஏற்ப பிரசார திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    • மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    • மோப்பநாய் ரூபியையும் அழைத்துச் சென்று மெட்டல்டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில் மீண்டும் இன்று கலெக்டர் அலுவலக மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அந்த மெயிலில் மதியம் ஒரு மணிக்கு குண்டு வெடித்து சிதறும் என கூறப்பட்டுள்ளது. இதனை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் மோப்பநாய் ரூபியையும் அழைத்துச் சென்று மெட்டல்டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

    ஆனாலும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே 3 முறை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த நிலையில் மீண்டும் தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் மிரட்டல் விடுப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது கலெக்டர் அலுவலக ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பிரதமரின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சி மீது பீகார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளது.
    • தேர்தல் முடிவு சந்தர்ப்பவாத அரசியலை விட நல்லாட்சி, முன்னேற்றம், தேசிய நலன் மேலோங்கி உள்ளதை காட்டுகிறது.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பீகார் மக்கள் அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர்.

    பிரதமரின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சி மீது பீகார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளது.

    இந்த வெற்றி, பீகாரின் ஒவ்வொரு சகோதர சகோதரியும் வளர்ச்சி சார்ந்த எதிர்காலத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரமளித்தல், செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அர்ப்பணிப்பு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் எதிரொலித்துள்ளது. தவறாக வழிநடத்தவும் பிளவுபடுத்தவும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துள்ளது.

    தேர்தல் முடிவு சந்தர்ப்பவாத அரசியலை விட நல்லாட்சி, முன்னேற்றம், தேசிய நலன் மேலோங்கி உள்ளதை காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பீகார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
    • மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள்.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்!

    காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரசாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ஞானம் பெற்ற பீகார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.

    கடந்த ஆட்சிக் காலத்தில் "டபுள் இன்ஜின் சர்காராக" நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசும் வாரி வழங்கிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு மகிழ்ந்த பீகார் மக்கள் இந்தத் தேர்தலின் போதும் மாபெரும் வெற்றியை நமக்குப் பரிசளித்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நேர்மைக்குக் கிடைத்த வெற்றி! அதிலும் மத்திய அமைச்சர் சிராங் பஸ்வான் முக்கியப் பங்களிப்பு பீகார் கோட்டையில் நமது NDA-வின் வெற்றிக்கொடியை வலுப்படுத்தியுள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடுவதும், தேர்தலில் தோல்வியடையும் பொழுது அதே தேர்தல் ஆணையத்தைச் சாடுவதும்தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், எவ்வித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் மக்கள் சேவையில் மட்டுமே தங்களை முன்னிறுத்தி மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே!

    ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள். தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்து கொண்டு அதே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகக் கற்களை வீசும் ஆட்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • இதுவரை மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

    கரூர்:

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகி யோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருக்கும் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 7 பேர் இன்று வந்தனர். அவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.

    அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது நடந்தது என்ன? என்பது குறித்த பல்வேறு கேள்விகளை அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர்.

    அதற்கு ஆஜர் ஆனவர்கள் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது.
    • 3-வது நாளாக இன்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மண்டபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வழக்கத்தை விட கடல் காற்று அதிகமாக வீசி வருகிறது.

    சூறாவளி காற்றால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றொடொன்று மோதி பலத்த சேதமடைந்தன. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர். கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக அக்னீ தீர்த்த கடலில் கடற்புற்கள் கரை ஒதுங்கியது. இதனால் பக்தர்கள் புனித நீராடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    3-வது நாளாக இன்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ×