என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PSLV rocket"

    • சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும்.
    • கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டிலும் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. உலக அளவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதத்தைக் கொண்ட ராக்கெட் என்ற பெயரை 'பி.எஸ்.எல்.வி.' ரக ராக்கெட் பெற்றுள்ளது.

    இந்தநிலையில், ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் கடந்த ஆண்டு மே 18-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. இ.ஓ.எஸ்-09 ராடார் இமேஜிங் செயற்கைக்கோளை சுமந்து சென்ற இந்த ராக்கெட்டின், 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளிப் பயணம் தோல்வியடைந்தது.

    அதேபோல், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ்.01 என்ற முதன்மை செயற்கைக்கோளுடன், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் கடந்தமாதம் விண்ணில் ஏவப்பட்டது.

    அப்போது, ராக்கெட்டின் 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடையாமல் திட்டம் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் தோல்வியை தழுவின.

    இதுகுறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

    இஸ்ரோவின் 2 பி.எஸ்.எல்.வி. தோல்விகளைத் தவிர, கடந்த ஆண்டு இஸ்ரோ ஏவிய வழி செலுத்தல் செயற்கைக்கோள், என்.வி.எஸ்-02, விண்கலத்தின் 'திரஸ்டர் வால்வு' செயலிழப்பு காரணமாக அதுவும் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையத் தவறிவிட்டது. ஒவ்வொரு பயணத்திலும் என்ன தவறு நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்ய தனித்தனி உள் மற்றும் வெளிப்புற தோல்வி மதிப்பீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தோல்வி குறித்து குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, எல்லாவற்றையும் சரிசெய்து, நம்மை நாமே சான்றளித்த பிறகு, மிகவும் லட்சிய இலக்காகக் கொண்டு சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும். கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை.
    • பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.

    பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டை கடந்த 12-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கிய இ.ஓ.எஸ்-என்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

    மேலும், அந்த ராக்கெட்டுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சோதனை கருவி மற்றும் 16 சிறிய செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டு ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் இத்திட்டம் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் திடீர் திருப்பமாக பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஒரு சிறிய செயற்கைக்கோள் செயல்பட தொடங்கியது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆர்பிட்டல் பாராடிகம் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பி இருந்தது.

    இதற்கிடையே அந்த சிறிய செயற்கைக்கோள் தரவுகளை அனுப்பியதாக ஆர்பிட்டல் பாராடிகம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது,"எதிர்பாராத அனைத்து தடைகளையும் மீறி, எங்கள் சிறிய விண்கலம் கேப்சூல் பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.

    நாங்கள் அதன் பயணப் பாதையை மீண்டும் உருவாக்குகிறோம். முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது.

    • பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
    • ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

    அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
    • இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

    ஸ்ரீஹரிகோட்டா:-

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

    இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

    இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

    இந்நிலையில், டெலியோஸ்-2 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    டெலியோஸ்-2 செயற்கைக்கோளானது பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும். முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது.

    • பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.
    • இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு டெலியோஸ்-2 செயற்கை கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 741 கிலோ எடையுள்ள டெலியோஸ்-2 செயற்கைக் கோளுடன் சிங்கப்பூரின் மற்றொரு  செயற்கைக்கோளான 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற சிறிய செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணித்து, சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. டெலியோஸ்-2 செயற்கை கோள் மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

    இதற்கு முன்பு, பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • டி.எஸ்-இஓ செயற்கைக் கோள் அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது.
    • கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூர் மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அத்துடன், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    அவ்வகையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டு, அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

    ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு செயற்கைக் கோள்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

    இந்த ராக்கெட்டில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம்பிடிக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.

    மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது 2.8 கிலோ எடை கொண்டது. 

    ×