என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதை விட வெளிநாடுகளில் விளையாடுவது மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
    • முகமது சமியின் திறமைகளும் பும்ராவை போலவே அச்சுறுத்தலாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.

    அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். அத்துடன் கடந்த இந்திய சுற்றுப்பயணத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதை விட வெளிநாடுகளில் விளையாடுவது மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தியா நாங்கள் தோற்கடிக்க வேண்டிய அணி. எங்களால் அவர்களை வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு நல்ல தொடராக இருக்கும்.

    நான் பும்ராவை 5 டெஸ்ட் தொடர்களில் எதிர்கொண்டுள்ளேன். அவர் எனக்கு எதிராக என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும். அதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், அவரிடம் என்ன திறமைகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். என்னை ஆச்சரியப்படுத்தும் எதுவும் இருக்கப்போவதில்லை. அவரை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும்.

    முகமது சமியின் திறமைகளும் பும்ராவை போலவே அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால் அவர்களுடைய தொடக்க கட்ட பந்துவீச்சை என்னால் கடந்து செல்ல முடிந்தால் நிறைய ரன்கள் அடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு டக்கெட் கூறினார்.

    • 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது.
    • ஆல்ரவுண்டர்கள் அவர்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் கூடுதலாக உழைக்க வேண்டும்.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது. 2027 வரை இந்த விதி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பந்துவீச்சு அல்லது பேட்டிங்குக்கு யாராவது ஒரு வீரரை ஆட்டத்தின் ஒரு பகுதியில் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்த விதி கூறுகிறது.

    இந்த விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இது தொடர்பாக கூறியதாவது:-

    இம்பேக்ட் பிளேயர் விதி முறையால் ஆல்ரவுண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டராக இல்லையெனில் உங்களது இடத்தைப் பிடிப்பது கடினமாக இருக்கிறது. காலப்போக்கில் இது எல்லாம் மாறுமா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஆனால், நிச்சயமாக ஆல்ரவுண்டர்கள் அவர்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் கூடுதலாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

    • 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடும் முதல் 3 போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டுமே இடம்பெறுவார் என்றும் ஆர்ஆர் குறிப்பிட்டுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிசிசிஐ இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

    ராஜன்ஸ்தான் அணி விளையாடிய பயிற்சி போட்டியில் ரியான் பராக் 64 பந்தில் 144 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும்.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.

    இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • ரிஷப் பண்ட் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    • அப்போது தான் அவரால் இறுதிவரை களத்தில் இருந்து இன்னிங்ஸை முடித்துக் கொடுக்க முடியும்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக அந்த அணி வீரர்களும் தீவிரமாக தாயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் ரிஷப் பண்ட் 4-ம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆலோசனை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

    இந்த ஐபிஎல் சீசன் ரிஷப் பண்டிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரது கேப்டன்சியைப் பார்த்தால், அவர் மிகவும் மகிழ்ச்சியானவர் மற்றும் மிகவும் புதுமையானவர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு அந்த அமைதியும், சாதுர்யமான தலைமையும் இருக்கிறது. அவர் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்களது அணியைப் பார்க்கும்போது, பூரன், டேவிட் மில்லர் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோர் உள்ளனர்.

    இதன் காரணமாக அவர் இத்தொடரில் 4-வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அப்போது அவர்களின் பேட்டிங் வரிசையில் நிறைய ஆழம் இருக்கும். எனவே அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போது தான் அவரால் இறுதிவரை களத்தில் இருந்து இன்னிங்ஸை முடித்துக் கொடுக்க முடியும். ஆனால் இந்த ஐபிஎல் அவரது அதிர்ஷ்டத்தை மாற்றும் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறினார்.

    • சென்னை , மும்பை போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.
    • சென்னை, மும்பை அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் (சென்னை அணிக்காக) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் எல்.பாலாஜி. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அவர் தற்போது வர்ணனை பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் நேற்று காணொலி வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் இடத்துக்கு டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கர்ரன், பதிரானா ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் ஆர்.அஸ்வின், ஜடேஜா என்று இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (ஆப்கானிஸ்தான்) வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டி இருக்கும்.

    கடந்த சில சீசனில் சென்னை அணியில் நிறைய ஆல்-ரவுண்டர்கள் இருந்ததால் சில சமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த சீசனில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இல்லை. எனவே சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சென்னை அணியின் முக்கியமான வீரராக இருப்பார். 'பவர்-பிளே'யிலும், இறுதிகட்டத்திலும் அவரால் சிறப்பாக பந்து வீச முடியும்.

    உள்ளூர் வீரர் என்பதால் சேப்பாக்கம் ஆடுகளம், சூழலை நன்கு அறிந்தவர். இங்கு எப்போதும் ஆடினாலும் அசத்தி இருக்கிறார். இங்கு முன்பு சென்னைக்கு எதிரான ஒரு முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சுக்காக களம் இறங்கிய போது 30 ரன் மற்றும் 2 விக்கெட் (2023-ம் ஆண்டு) எடுத்திருந்தார். எனவே அவரது பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியமாகும். அதனால் இங்குள்ள சூழலில் எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

    18-வது ஐ.பி.எல்.-ல் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எதுவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள். இந்த ஆண்டு எல்லா அணிகளுமே நன்றாக உள்ளன. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் எல்லா அணிகளுமே புதிய அணிகள். ஏனெனில் நிறைய வீரர்கள் வேறு அணிக்கு மாறியிருக்கிறார்கள். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணியில் இருந்து பஞ்சாப்புக்கு போய் இருக்கிறார். லோகேஷ் ராகுல் லக்னோவில் இருந்து டெல்லிக்கு மாறியுள்ளார்.

    ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு சென்று இருக்கிறார். இவர்கள் அங்கு முதலில் தங்களை வலுவாக நிலைநிறுத்தி, வெற்றிக்குரிய, நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். அணி உரிமையாளர்களுடன் நல்ல அணுகுமுறை இருக்க வேண்டும். வீரர்களின் ஓய்வறை சூழல் சிறப்பாக இருக்க வேண்டும். இப்படி நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டி இருப்பதால் புதிய அணிகளுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். எனவே முதல் 4-5 ஆட்டங்களுக்கு பிறகே ஒவ்வொரு அணியையும் மதிப்பிட முடியும்.

    இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் வெற்றிகரமான அணிகளாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சென்னை, மும்பை அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.

    இதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த 4 அணிகளும் தங்களுக்கே உரிய கிரிக்கெட்டை சிறப்பாக விளையாடி இருக்கின்றன. வரும் சீசனிலும் அவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    'ஹாட்ரிக்' விக்கெட் குறித்து கேட்கிறீர்கள். 'ஹாட்ரிக்' விக்கெட்டை திட்டமிட்டு எடுக்க முடியாது. அது நடப்பது அரிது. போட்டிக்குரிய நாளில் சூழல் சாதகமாக அமைந்து, அதிர்ஷ்டமும் இருந்தால் 'ஹாட்ரிக்' விக்கெட் சாதனை படைக்க முடியும்.

    இவ்வாறு பாலாஜி கூறினார்.

    • வீரர்கள் தங்களின் கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது.
    • வீரர்களுடன் குடும்பத்தினரை அனுமதிப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட தற்போதைய விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் வெளிநாட்டு தொடர்களின் போது, வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்தார். 'போட்டி முடிந்த பிறகு அறைக்கு சென்று தனியாக சோகத்தில் இருக்க விரும்பவில்லை. களத்தில் சரியாக செயல்படாத சூழலில், குடும்ப உறுப்பினர்கள் உடன் இருக்கும் போது அத்தகைய ஏமாற்றத்தில் இருந்து சீக்கிரம் வெளிவர முடியும். குடும்பத்தினருடன் இருக்கும் முக்கியத்துவத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை' என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கோலியின் ஆட்சேபனை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா பதில் அளிக்கையில் 'வீரர்களுடன் குடும்பத்தினரை அனுமதிப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட தற்போதைய விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. இது இந்திய அணிக்கும், நமது கிரிக்கெட் வாரியத்திற்கும் மிகவும் முக்கியமானது. வீரர்கள் தங்களின் கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது. அவர்களுக்கு சில மனக்கசப்புகள் அல்லது மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் இந்த விதிமுறை அணியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

    இந்த விதிமுறை ஒரே நாள் இரவில் உருவாக்கப்பட்டது அல்ல. இத்தகைய நடைமுறை பல ஆண்டுகளாகவே உள்ளது. அவற்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    இதற்கிடையே, ஐ.பி.எல். 10 அணிகளின் கேப்டன்களுடன் கிரிக்கெட் வாரியம் மும்பையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. பந்தை பளபளப்பாக்க அதன் மீது எச்சில் தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து கேப்டன்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப முடிவு செய்யப்பட உள்ளது.

    • முதலில் ஆடிய கனடா 15 ஓவரில் 145 ரன்கள் எடுத்தது.
    • நமீபியா சார்பில் ட்ரெம்பிள்மென் 4 விக்கெட்டும், ஸ்மிட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கனடா அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மழை காரணமாக

    முதல் டி20 போட்டி டாஸ் கூட சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. மழை பெய்ததால் ஆட்டம் 15 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நமீபியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கனடா 15 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. யுவராஜ் சாம்ரா 37 ரன்னும், கன்வர்பால் 30 ரன்னும் எடுத்தனர்.

    நமீபியா சார்பில் ட்ரெம்பிள்மென் 4 விக்கெட்டும், ஸ்மிட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஜான் நிகோல் 36 ரன்னும், ஸ்மிட் 33 ரன்னும், நிகோலஸ் டெவின் 32 ரன்னும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், நமீபியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது.
    • கலை நிகழ்ச்சியில் திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடக்கவுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்வார்கள்

    17-வது சீசனின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது, இதில் டைகர் ஷெராஃப், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் ஸ்டேடியத்தில் கலக்கினர்.

    அந்த வகையில் இந்த சீசனில் பாலிவுட் பிரபலங்கள் கலக்க இருக்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங், திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, வருகிற 22-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் தொடக்க விழா கொண்டாட்டத்தில் இந்தி நடிகை திஷா படானி மற்றும் பாடகி ஷ்ரேயா கோஷால் பங்கேற்க உள்ளனர். மற்ற இடங்களில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

    • என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.
    • நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளது. இதன் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த சீசனில் ஒரே போட்டியில் 300 ரன்களை அடிப்போம் என்று குஜராத் அணியின் கேப்டன் கில் தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டன் பொறுப்பையும் பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.

    பேட்டராக ஆக வேண்டும் என நான் எடுத்த முடிவு சிறந்ததென நினைக்கிறேன். பீல்டிங், அல்லது களத்துக்கு வெளியே இருக்கும்போது கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதிகமான பேட்டிங் செய்வது எனக்கு நல்லதாக இருக்கிறது.

    கேப்டனாக இருப்பதின் சுவாரசியமான, சவாலான விஷயம் என்னவென்றால் தினமும் நீங்கள் ஒரு வீரரைப் பற்றி அல்லது உங்களைப் பற்றி புதியதாகக் கற்றுக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.

    நெக்ராவிடம் இருந்து எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் மிகவும் பொக்கிஷமானது. எங்களது சொந்த மைதானம் மிகவும் உதவியாகவே இருக்கிறது. வெளி இடங்களில் நன்றாக விளையாட வேண்டியுள்ளது.

    கடைசி சீசன் திட்டமிட்டபடி செல்லவில்லை. ஆனால், அதற்காக வித்தியாசமாக எதுவும் செய்ய தோன்றவில்லை. கடைசி 3 ஆண்டுகளில் எங்களுக்குதான் அதிகமான வெற்றி விகிதம் இருக்கின்றன. அதையே கடைப்பிடித்தால் போதுமானது. இந்த சீசனும் நன்றாகவே செல்லும்.

    சூழ்நிலை சரியாக இருந்தால் 240, 250 அல்லது 260 ரன்கள் அடிக்கலாம். அதற்கு மேல் அடிப்போமா தெரியாது. ஆனால், சில விக்கெட்டுகளில் 150 அல்லது 160 போதுமானதாக இருக்கலாம். சூழ்நிலைக்கு தகவமைப்பதுதான் சிறந்த அணிக்கான தகுதி.

    என்று கில் கூறினார்.

    • சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் காலி ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியானது.
    • டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதாக சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சென்னை:

    ஐபிஎல் தொடர் வருகிற 22-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    23-ந் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 :15 மணிக்கு தொடங்கியது.

    டிஸ்ட்ரிக்ட் ஆப் மற்றும் இணையதளம் மூலமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணையதளம் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து காலை முதல் டிக்கெட்டுகளை பெறுவதற்காக சிஎஸ்கே அணி ரசிகர்கள் மொபைல் லேப்டாப் என அனைத்து சாதனங்களையும் வைத்து காத்துக் கொண்டிருந்தனர்.

    டிக்கெட் விலை 1700 ரூபாய் ,2500 ரூபாய்,ரூ. 3500,ரூ. 4000 ரூபாய்,ரூ.7500 என்ற அளவு டிக்கெட் விற்பனை இருந்தது. இதில் ஏதேனும் ஒரு டிக்கெட்டையாவது பெற்றுவிடலாம் என சிஎஸ்கே ரசிகர்கள் போட்டி போட்டனர். ஆனால் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஏமாற்றுமே மிஞ்சியது.

    வழக்கம் போல் உங்களுக்கு முன்பு பெரிய வரிசை காத்திருப்பதாக அந்த புக்கிங் தளத்தில் காட்டப்பட்டிருந்தது. இதில் சுமார் லட்சம் ரசிகர்கள் வரை தங்களது டிக்கெட் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சில மணி நேரத்திலேயே மீண்டும் டிக்கெட் அனைத்தும் காலி ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

    இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்க நேர்ந்தாலும், இதேபோல் ஒரு சூழல்தான் உருவாவதாகவும் 40 ஆயிரம் பேர் பார்க்கும் மைதானத்தில் பலருக்கும் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்றும் ரசிகர்கள் சாடி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் டிக்கெட்டுகள் குறைந்த அளவே விற்கப்படுவதாகவும் எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதாகவும் சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். சிஎஸ்கே அணி நிர்வாகம் டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ஓமர்சாய் என பலமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
    • வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் உள்பட 9 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஷ்ரேயாஸ் அய்யரை மெகா ஏலத்தில் எடுத்து கேப்டனாக்கி, இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளது.

    பேட்ஸ்மேன்கள்

    ஷ்ரேயாஸ் அய்யர், நேஹால் வதேரா, விஷ்னு வினோத், ஜோஷ் இங்கிலிஸ், ஹர்னூர் பன்னு, பைலா அவினாஷ், பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங்

    ஆல்-ரவுண்டர்கள்

    மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், பிரியன்ஷ் ஆர்யா, ஆரோன் ஹர்டி, முஷீர் கான், சூர்யான்ஸ் ஷெட்ஜ்

    பந்து வீச்சாளர்கள்

    அர்ஷ்தீப் சிங், சாஹல், வைஷாக் விஜய் குமார், யாஷ் தாகூர், லூக்கி பெர்குஷன், குல்தீப் சென், சேவியர் பார்ட்லெட், பிரவின் துபே

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    ஜோஷ் இங்கிலிஸ், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. அல்லது புதுமுகங்களை பரிசோதனை முயற்சியில் களம் இறக்கி பார்க்கலாம்.

    மிடில் ஆர்டர் வரிசை

    மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகிய நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது. முஷீர் கான் முதல்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர். தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்ய வாய்ப்புள்ளது.

    சுழற்பந்து வீச்சு

    சுழற்பந்து வீச்சில் சாஹல், ஹர்ப்ரீத் பிரார் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுக்கு துணையாக பிரவீன் துபே, மேக்ஸ்வெல் உள்ளனர்.

    வேகப்பந்து வீச்சு

    வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகிப்பார். இவருடன் வைஷாக் விஜய் குமார், யாஷ் தாகூர், லூக்கி பெர்குஷன், குல்தீப் சென், சேவியர் பார்ட்லெட், ஸ்டோய்னிஸ், யான்சன், ஆரோன் ஹர்டி என மிகப்பெரிய பட்டாளமே உள்ளது.

    வெளிநாட்டு வீரர்கள்

    ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட் ஆகியோர் உள்ளனர். இதில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆடும் லெவனில் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஜோஷ் இங்கிலிஸ் மற்றும யான்சனை இம்பேக்ட் பிளேயர் முறையில் களம் இறக்க வாய்ப்புள்ளது.

    பஞ்சாப் கிங்ஸை ஷ்ரேயாஸ் அய்யர் எப்படி என சமநிலை அணியாக கொண்டு வருகிறார் என்பதுதான் முக்கியமானது.

    ×