என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 1,600 ரன்களுக்கு மேல் அடித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் சாதனைப் படைத்துள்ளார்.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்று வரும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 89 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் இந்த வருடத்தில் மட்டும் 1,600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

    இதன்மூலம் ஒரே வருடத்தில் 1,600 ரன்களை கடந்து சச்சின் தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், கவாஸ்கர் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், ஒரே வருடத்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

    ஜோ ரூட்டை விட பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் 2006-ல் 1788 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 1976-ல் 1710 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 2008-ல் 1656 ரன்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். தற்போது ஜோ ரூட் 4-வது இடத்தில் உள்ளார். அவர்  தற்போது 1606 ரன்கள் அடித்துள்ளார்.

    மைக்கேல் கிளார்ச் 1595 ரன்களும், சச்சின் தெண்டுல்கர் 1562 ரன்களும், கவாஸ்கர் 1555 ரன்களும், பாண்டிங் 1503 ரன்களும் அடித்துள்ளனர்.

    ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் டேவிட் மலான் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
    துபாய்:
     
    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், டி20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வரலாறு காணாத அளவு சரிவைக் கண்டுள்ளார்.

    டாப்-10 இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி இம்முறை டாப் 10-ல்  இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
     
    பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்ரம் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி கேப்டன்  பாபர் அசாம் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 4-வது இடத்திலும், இந்தியாவின் கே.எல்.ராகுல் 5-வது இடத்திலும் உள்ளனர்.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி 657 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 11-வது இடத்திற்கு சரிவடைந்துள்ளார். ரோகித் சர்மா 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர் ஒருவரும் இடம்பெறவில்லை.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி அணி இதுவரை 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஒடிசா அணியும் மோதின.

    இதில் சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. சென்னை சார்பில் ஜெர்மன்பிரீத் சிங் 23-வது நிமிடத்திலும் மிர்லன் முர்செவ் 63-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா சார்பில் ஜாவி ஹெர்னான்டஸ் 90+6 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 11 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    வெல்வா:

    26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சக நாட்டவரான 19-ம் நிலை வீரர் லக்‌ஷயா சென்னுடன் மோதினார். 

    முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இரண்டு, மூன்றாவது செட்களைக் கைப்பற்றினார். 

    இதில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த் இந்த வெற்றியைப் பெற ஒரு மணி நேரம் ஒன்பது நிமிடங்கள் தேவைப்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் டேவிட் மலான், ஜோ ரூட் ஜோடி 138 ரன்கள் சேர்த்தது.
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல்- இரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வார்னர் 95 ரன்னில் அவுட்டானார். லாபஸ்சேன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 93 ரன்னில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹமீத் 6 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 4 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.  டேவிட் மலானும், ஜோ ரூட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். மலான் 80 ரன்னிலும், ரூட் 62 ரன்னிலும் அவுட்டாகினர். பென் ஸ்டோக்ஸ் 34 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயான் 3 விக்கெட்டும், கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 237 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் 13 ரன்னில் வெளியேறினார்.

    மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 21 ரன்னுடனும், நீசர் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், துணை கேப்டன் ரோகித் சா்மா காயம் காரணமாக விலகினாா்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் விராட் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டிருந்தனர்.

    இதற்கிடையே, டெஸ்ட் தொடரில் இருந்து துணை கேப்டன் ரோகித் சா்மா காயம் காரணமாக விலகினாா். அவருக்குப் பதிலாக இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் பிரியங்க் பாஞ்சல் பிரதான அணியில் இணைந்தார். ஆனால், ரோகித்துக்கு பதிலாக துணை கேப்டனாக யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

    இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வரும் கே.எல்.ராகுல் இதுவரை 40 டெஸ்ட்  போட்டிகளில் விளையாடி 6 சதம் உள்பட 2321 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 35.16 வைத்துள்ளார்.  
    ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியானது. வரும் ஞாயிறு அன்று ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
    டாக்கா:

    வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் கொரியா அணியை எதிர்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் ட்ரா செய்தது. 

    அதற்கு அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதிய இந்திய அணி 9-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

    இந்திய-பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் மோதிய காட்சி

    அதை தொடர்ந்து நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

    இதையடுத்து  நாளை (19.12.2021) நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி, ஜப்பானுடன் மோதுகிறது. இறுதியாக இந்த இரு அணிகளும் நடந்து முடிந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் கால் இறுதி போட்டியில் மோதின. அந்த போட்டியில் இந்திய அணி 5-3 என்ற கோல்கள் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் மோதவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    சி.எஸ்.கே. அணிக்கு தாம் திரும்புவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்து தான் இருக்கிறது என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2008 முதல் 2015-ம் ஆண்டு வரை சி.எஸ்.கே. அணிக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் பூனே ரைசிங் ஜெயன்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளில் ஆடினார். 

    பின்னர் 2020-ம் ஆண்டு முதல் டெல்லி அணியில் விளையாடி வந்த அவர், தற்போது அடுத்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் சென்னை அணிக்கு திரும்ப விருப்பப்படுவதாக ரசிகர்களின் கேள்வி ஒன்றுக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து அஸ்வின் கூறியதாவது:

    சி.எஸ்.கே. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான அணி. சி.எஸ்.கே.வில் விளையாடியது பள்ளிக்கூடத்தில் படித்தது போன்ற அனுபவம்.  சி.எஸ்.கே அணியில் விளையாடிய பின் பிற அணிகளுக்காக விளையாட சென்று விட்டேன். எங்கே சென்றாலும் இறுதியில் வீட்டிற்கு திரும்ப தான் அனைவரும் விரும்புவர். நானும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப விரும்புகிறேன். ஆனால் இவை அனைத்தும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்து தான் இருக்கிறது.

    2022ம் ஆண்டுக்கான ஐ.பி.எல்.போட்டி தொடர்

    அடுத்த ஆண்டு ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கப் போகிறது. ஒவ்வொரு வீரரும் எந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவர் என இப்போதே சொல்லிவிட முடியாது. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக எந்த அணி என்னை நம்புகிறதோ அந்த அணிக்காக நான் முழு அர்ப்பணிப்புடன் விளையாடுவேன். அந்த அணியை கைவிட மாட்டேன்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.
    ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான், ஜோ ரூட் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்துள்ளனர்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி பகல்- இரவாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. லபுசேன் 103 ரன்னும், வார்னர் 95 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் சுமித் 93 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்களான ராய் பர்னஸ் 4 ரன்னிலும், ஹசீப்அமீது 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. மலானும், கேப்டன் ஜோரூட்டும் தொடர்ந்து விளையாடினார்கள். அவர்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது. மலான், ஜோ ரூட் அபாரமாக ஆடி அரை சதம் அடித்துள்ளனர். 

    தற்போது வரை இங்கிலாந்து அணி 39 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஜோ ரூட் 91 பந்துகளில் 52 ரன்னிலும் மலான் 116 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

    கங்குலி கூறும்போது, 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டாம் என கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்திருந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி பணியாற்றினார்.

    33 வயதான அவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும் விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டது.

    20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். கோலி டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக நீடிப்பார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே மோதல் இருப்பதாகவும், இதனால் அணியில் பிளவு இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் விராட் கோலியின் பேட்டியைத் தொடர்ந்து அவருக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலிக்கும் இடையேதான் மோதல் இருப்பது தெரியவந்தது.

    கங்குலி கூறும்போது, 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டாம் என கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கு விராட் கோலி பதில் அளிக்கும்போது, எனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு யாரும் கூறவில்லை என்றார்.

    இருவரும் மாறுபட்ட கருத்தை சொன்னதால் குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலியின் கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன்லால் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் சர்ச்சையல்ல. அது ஒரு கருத்தாகும். இந்த சூழ்நிலையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    விராட் கோலியிடம் கங்குலி என்ன சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் அதைப்பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி இருப்பதால் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

    அப்போதுதான் முழு பிரச்சினைக்கும் முடிவு ஏற்படும். தென் ஆப்பிரிக்க தொடர் முக்கியமானது. நாம் அதில் இப்போதே கவனம் செலுத்த வேண்டும்.

    நிர்வாகத்துடனான அனைத்து சிக்கலையும் விராட் கோலி தீர்க்க வேண்டும் என்று கவாஸ்வர் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது சரிதான். கோலி தனது எல்லா பிரச்சினைகளையும் நிர்வாகத்திடம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இது பெரிய வி‌ஷயமல்ல.

    தேர்வுக் குழுவினர் நிலைமையை சரியாக கையாண்டிருக்க வேண்டும். இந்த சர்ச்சைகளை தடுத்து நிறுத்துவது தேர்வாளர்களின் கடமையாகும். தேர்வுக் குழுவினர் முடிவு எடுப்பதற்கு முன்பு கோலியிடம் பேசினார்களா? என்பது எனக்குத் தெரிய வில்லை.

    இவ்வாறு மதன்லால் கூறியுள்ளார்.

    70 வயதான முன்னாள் ஆல்ரவுண்டரான இவர் 1983-ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சீன வீரர் பெங் ஜாவோவை 21-15, 15-21, 22-20 என்ற கணக்கில் போராடி வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
    வெல்வா:

    26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் வெல்வா நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்துவும், சீன் தைபேயின் தை யு இங்கும் மோதினர்.

    இதில் பி.வி.சிந்து 17-21 என முதல் செட்டையும், 13-21 என இரண்டாவது செட்டையும் இழந்தார். இறுதியில், சீன தைபே வீராங்கனை 21-17, 21-13 என்ற கணக்கில் சிந்துவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-8, 21-7 என்ற கணக்கில் நெதர்லாந்து வீரரை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் லாபஸ்சேன் சதமடித்து அசத்தினார்.
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல்- இரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    டேவிட் வார்னர், லாபஸ்சேன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி172 ரன்கள் சேர்த்தது. வார்னர் 95 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் லாபஸ்சேனுடன் ஜோடி சேர்ந்தார். லாபஸ்சேன் சதம் அடித்தார். அவர் 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மித் 93 ரன்னில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் மைக்கேல் நீசர் அதிரடியாக ஆடி 35 ரன்கள் சேர்த்தார்.

    ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 479 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹமீத் 6 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 4 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
    ×