search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிக்கி பாண்டிங்"

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.

    17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஐபிஎல் சீசனில் உறுதியாக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறினார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா? அணியை வழிநடந்துவரா என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    • அதை நான் நீண்டகாலமாக கூறிவருகிறேன்.

    புதுடெல்லி:

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றிபெற்றது. இதில், இந்திய வீரர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை விளாசி சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

    இந்நிலையில், சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில்:-

    உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை நான் நீண்டகாலமாக கூறிவருகிறேன். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அந்த சாதனையை முறியடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. விராட் கோலியின் ஒட்டுமொத்த பேட்டிங் சாதனையை பார்க்கும்போது அது நம்பமுடியாத அளவில் உள்ளது

    விராட் கோலி 49வது சதம் விளாசிவிட்டார். சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை கோலி சமன் செய்துவிட்டார் என்பதை நினைத்துப்பார்க்கும்போது நம்பமுடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை.
    • 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை.

    ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அந்த நிலையில் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அதைத்தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 395 ரன்கள் எடுத்தது. இதனால் 384 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 60, வார்னர் 72, ஸ்மித் 72 என முக்கிய வீரர்கள் நல்ல துவக்கத்தை கொடுத்தும் இதர வீரர்கள் சொதப்பினர். 

    அதனால் 334 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2 - 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் புதிய பந்தை நடுவர்கள் பயன்படுத்தியது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கோரிக்கை வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    எனக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவெனில் வடிவமற்ற போன பந்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பந்தின் நிலையில் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது. உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை. ஏனெனில் அந்த 2 பந்துகளும் எந்த வகையிலும் ஒப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியாது.

    பொதுவாக பந்தை மாற்றும் போது அதற்கான பெட்டியில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பந்தை எடுத்து நடுவர்கள் அணியிடம் கொடுப்பார்கள். ஆனால் அதை செய்யாத அந்த 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை தருணமாக அமைந்ததால் அதைப் பற்றி விசாரணை நடத்த நான் விரும்புகிறேன்.

    இவ்வாறு பாண்டிங் கூறினார்.

    • டோனி டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் செய்யும் விதத்தைப் போல டெஸ்ட் போட்டிகளில் கடைசி நேரத்தில் பென் செயல்படுகிறார்.
    • வரலாற்றில் அழுத்தமான கடைசி நேரத்தில் அதிலும் கேப்டனாக நின்று வெற்றி பெற வைக்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் இருந்ததில்லை.

    ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலிரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.

    2-வது போட்டியில் 371 ரன்களை துரத்தும் போது ஜோ ரூட் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் கைவிட்டதால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இங்கிலாந்தை பென் டூக்கெட் உடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் போராடினார். அதில் பென் டூக்கெட் 82 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜானி பேரஸ்டோவும் சர்ச்சைகுரிய வகையில் அவுட் ஆகி வெளியேறியதால் இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது.

    இருப்பினும் மறுபுறம் மனம் தளராமல் போராடிய பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களில் இருந்த போது ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி சதமடித்து வெற்றிக்கு போராடினார். அதன் காரணமாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2019-ல் ஹெண்டிங்க்லே மைதானத்தில் தனி ஒருவனாக 135* ரன்கள் குவித்து வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி காப்பாற்றியதை போல் இங்கிலாந்தை வெற்றி பெற வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது. இருப்பினும் முடிந்தளவுக்கு போராடிய அவர் 9 பவுண்டரி 9 சிக்க்சருடன் 155 ரன்களில் அவுட்டானதால் இங்கிலாந்து எதிர்பார்த்தது போல் தோற்றது. இருப்பினும் கேப்டனுக்கு அடையாளமாக மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய அவர் அனைவரது பாராட்டுகளைப் பெற்றார்.

    இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி அழுத்தமான சமயங்களில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுப்பது போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஃபினிஷராக செயல்படும் திறமையைக் கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் களத்திற்கு செல்லும் போது அழுத்தத்துடனேயே விளையாடுவார்கள். ஆனால் மிடில் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் மற்றவர்களை காட்டிலும் பென் ஸ்டோக்ஸ் தம்மால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்புகளை தேடுகிறார். அது போன்ற சூழ்நிலைகளில் அசத்தும் வீரர்களை நினைத்தால் எனக்கு டோனி தான் முதலில் நினைவுக்கு வருவார். குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் செய்யும் விதத்தைப் போல டெஸ்ட் போட்டிகளில் கடைசி நேரத்தில் பென் செயல்படுகிறார்.

    அந்த வகையில் வரலாற்றில் அழுத்தமான கடைசி நேரத்தில் அதிலும் கேப்டனாக நின்று வெற்றி பெற வைக்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் இருந்ததில்லை. சொல்லப்போனால் அந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் எனக்கு 2019 ஹெண்டிங்க்லே போட்டியை நினைவுப்படுத்தியது. முதலில் ஸ்டீவ் ஸ்மித் கேட்ச் தவறை விட்டதைப்போல 116 ரன்களில் இருக்கும் போது மார்க்கஸ் ஹரிஷ் தவற விட்டார். அதனால் அதே போல இப்போட்டியிலும் அவர் வெற்றியை பறித்து விடுவாரோ என்ற பயம் எங்களது மனதிற்குள் இருந்தது.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.

    • சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை.
    • நான் கிரிக்கெட்டில் அதிக காலம் பயணம் செய்து விட்டேன்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தன்னை அணுகியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரொபர்ட் கியிடம் இருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தது. ஆனால் சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை. நான் கிரிக்கெட்டில் அதிக பயணம் செய்து விட்டேன். இப்போது என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க தொடங்கி இருக்கிறேன். இந்த நேரத்தில் இதிலிருந்து விலகி இருக்க விரும்பவில்லை.

    மெக்கல்லத்துக்கும் குடும்பம் இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்து கொண்ட இது போன்ற பணிகளை செய்வது எனக்கு சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்றது.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி துருப்பு சீட்டாக விராட் கோலி மற்றும் புஜாரா இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்தியா அணியின் முக்கிய வீரர்கள்.

    கடந்த காலங்களில் புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார். இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஆடுகளமும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போல இருக்கலாம். அதனால் புஜாராவை விரைவாக அவுட் செய்வது அவர்களது இலக்காக இருக்கும்.

    கடந்த சில வாரங்களாக விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது டி20 கிரிக்கெட் என்றாலும் அவரது ஃபார்ம், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும். தான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவரே என்னிடம் தெரிவித்தார்.

    என பாண்டிங் கூறினார்.

    • ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார்.
    • இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய டெல்லி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய டெல்லி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றில் இருந்து இந்த அணி வெளியேறியது. 

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தனது நிறுவனத்தின் தயாரிப்பான பாண்டிங் ஒயின்சை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் உள்ள டியூட்டி ப்ரீ என்ற வரியில்லா விற்பனை நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

    • வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆடிய வீரர்களை ஒப்பிடமுடியாது என்று பாண்டிங் கூறினார்.
    • சச்சின் டெண்டுல்கர் தான் எனது காலக்கட்டத்தில் நான் பார்த்த டெக்னிக்கலாக சிறந்த வீரர்.

    கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 50-வது பிறந்தநாள். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் விளையாடி, 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி என மொத்தம் 667 சர்வதேச போட்டிகளில் ஆடி 100 சதங்களுடன் 34357 ரன்களை குவித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 75 சதங்களை விளாசியுள்ள நிலையில், அவர் 100 சதங்கள் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா என்பதுதான் பெரும் விவாதமாக இருந்துவருகிறது. மேலும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலி ஒப்பிடப்படுகிறார்.

    இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசியதாவது:-

    நான் எப்போதுமே சொல்லிவருகிறேன். சச்சின் டெண்டுல்கர் தான் எனது காலகட்டத்தில் நான் பார்த்த டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேன். ஒரு பவுலிங் அணியாக நாம் எந்தவிதமான திட்டங்களுடன் சென்றாலும், அவையனைத்தையும் முறியடித்துவிடுவார் சச்சின். அது இந்தியாவாக இருக்கட்டும் அல்லது ஆஸ்திரேலியாவாக இருக்கட்டும். எந்த இடமாக இருந்தாலும் சச்சின் தெறிக்கவிடுவார்.

    வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது. நான் பார்த்ததில் தலைசிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்பதால் தான் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். விராட் கோலியும் நன்றாக ஆடுகிறார். விராட் கோலி மிகச்சிறந்த வீரர் தான். சச்சின் 100 சதங்கள் அடித்திருக்கிறார். விராட் கோலியை இப்போது சச்சினுடன் ஒப்பிட முடியாது. கோலியின் கெரியர் முடியட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

    என்று பாண்டிங் கூறினார்.

    • ஐபிஎல் சீசனில் ஒரு அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்துவது பெரிய விஷயம்.
    • ஏலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    டெல்லி:

    ராஜஸ்தான் ராயல்ஸ் வலுவான அணியாக இருப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இன்று 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்தது. அணிக்கு வலு சேர்க்கும் வகையில் ஜோ ரூட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரை இந்த சீசனுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான்.

    இந்நிலையில், அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவும். ராஜஸ்தான் அணி வலுவாக இருப்பதாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார்.


    ஐபிஎல் சீசனில் ஒரு அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்துவது பெரிய விஷயம். அதனால் யார் வெல்வார்கள் என சொல்வதும் கடினம். கடந்த ஆண்டு புதிய அணியான குஜராத் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த முறை இறுதிப் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி இந்த முறை வலுவான அணியை அதனை அடிப்படையாக வைத்தே கட்டமைத்துள்ளது. ஏலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ராஜஸ்தான் வலுவாக உள்ளது.

    என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள யாஷ் துல் மற்றும் அமன் கான் ஆகியோருக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையும் என பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    • நான் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைதான் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
    • பேட்ஸ்மேன் ஆக நீங்கள் தடுமாறும் போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை மீட்டு விட்டார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக சதம் அடித்தார். அதன் பிறகு மூன்றரை ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை.அதுபோக கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்சில் ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை.

    நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி மொத்தமே 111 ரன்கள் தான் அடித்துள்ளார்.

    இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியவதாவது:-

    ஆடுகளம் பேட்ஸ்மேன்களை மிகவும் சோதிக்கிறது. எனினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோற்று விட்டு மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற விதம் பாராட்டத்தக்கது. பந்து நன்றாக திரும்புகிறது. பந்தின் பவுன்சும் கணிக்க முடியாத அளவுக்கு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் ஆடுகளத்தில் நம்பிக்கையை இழந்து விடுவீர்கள். இப்படிப்பட்ட தருணத்தில் உங்களால் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும்.

    இப்படிப்பட்ட சூழல் தொடர்ந்து உங்களுக்கு நடந்து கொண்டே இருந்தால் உங்களால் பேட்டிங் செய்ய முடியாது. நான் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைதான் சொல்லிக் கொண்டு வருகிறேன். சாம்பியன் வீரர்கள் எப்படியும் தங்களுக்கான பாதையை கண்டுபிடித்து விடுவார்கள். தற்போது விராட் கோலிக்கு ரன் வறட்சி ஏற்பட்டு இருக்கலாம்.

    ஆனால் பேட்ஸ்மேன் ஆக நீங்கள் தடுமாறும் போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும். அதனால் நான் விராட் கோலி ஃபார்ம் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் மீண்டும் ரன் குவிப்பார் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

    ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி தொடங்கிறது.

    • தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும்.
    • பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க திணறினார். முதல் டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 ரன்னே எடுத்தார். 2-வது டெஸ்டில் முதல் இன்னிங் சில் 15 ரன் எடுத்த அவர் காயம் காரணமாக 3-வது டெஸ்டில் விலகினார்.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தால் அவர் தனது 100-வது போட்டியை மெல்போர்னில் விளையாடி இரட்டை சதம் அடித்த பிறகு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெறும் சிறந்த தருணத்தை அவர் தவற விட்டு விட்டார். அனைத்து வீரர்களும் இதைதான் விரும்புவார்கள். ஆனால் இந்த வாய்ப்பு வார்னருக்கு வராமல் கூட போகலாம். ஏனென்றால் அதற்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கிறது.

    தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆஷஸ் தொடருக்கு முன்பாக நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் வார்னரை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும் என்று கருதுகிறேன்.

    அதே போல் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி வரை அவர் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும். இதுபோன்ற நிலைமை என்னை போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு வார்னர் இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் மெல்போர்னில் தனது 100-வது போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தார். சொந்த ஊரான சிட்னியில் தனது 101-வது போட்டியில் சிறப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    36 வயதான டேவிட் வார்னர் 103 டெஸ்டில் 8,158 ரன்கள் எடுத்துள்ளார். 25 சதம், 34 அரை சதம் அடித்துள்ளார்.

    • உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிடுகிறார்.
    • 2022-ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய 1,164 ரன்களை விளாசி ஐசிசி-யின் சிறந்த டி20 வீரர் என்ற விருதை பெற்றார்.

    மும்பை:

    இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருபவர் சூர்யகுமார் யாதவ். இவர் 2022-ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய 1,164 ரன்களை விளாசி ஐசிசி-யின் சிறந்த டி20 வீரர் என்ற விருதை பெற்றார்.

    டி20 கிரிக்கெட்டில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் அடுத்ததாக 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களிலும் தடம் பதித்து வருகிறார். நியூசிலாந்து தொடரில் முழுமையாக வாய்ப்பை பெற்ற சூர்யகுமார் யாதவ், அடுத்த மாதம் வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை பார்த்ததே கிடையாது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    ஆட்டத்தின் சிந்தனைகள், திறமைகளை வைத்து பார்த்தால் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிட்டு, அடுத்த சவால்களுக்கு சென்றுவிடுகிறார்.

    இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் செய்வதை போலவே நிறைய வீரர்கள் செய்ய முயற்சிப்பார்கள் என நான் கேள்விப்பட்டு வருகிறேன். இது கேட்பதற்கே எவ்வளவு நன்றாக உள்ளது. 360 டிகிரியிலும் அடிக்கிறார் என நாம் பேசி வருகிறோம். ஆனால் விக்கெட் கீப்பருக்கு பின்னால் அவர் அடிக்கும் சிக்ஸர்கள், ஃபைன் லெக் திசையில் அடிக்கும் ஷாட்கள் அவரின் பெயரை கூறும் அளவிற்கு உள்ளது. 

    சூர்யகுமார் 5 - 6 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இந்திய அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், போன்று சூர்யகுமாரும் தரமான ஃபிட்னஸுடன் இருக்கிறார். இப்படியே இருந்தால் நிச்சயம் ஒரு அசைக்க முடியாத வீரராக உருவெடுப்பார் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.

    ×