என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இதற்காக 13 மையங்கள் தயார் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

    முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

    முதல் நாளான நேற்று முன்தினம் 36 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில் இதுவரை சுகாதார பணியாளர்கள் 9 ஆயிரத்து 668 பேர், முன்கள பணியாளர்கள் 293 பேர், பொதுமக்கள் 36 பேர் என 10 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,485 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 29 பேருக்கு தொற்று உறுதியானது. 32 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 39 ஆயிரத்து 763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 79 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 95 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் உயிரிழப்பு 1.68 சதவீதமாகவும், குணமடைவது 97.88 சதவீதமாகவும் உள்ளது.
    மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது50). இவர் நகர கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்துரு (21). பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சந்துரு தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சந்துரு இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இந்த விபத்து குறித்து வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வில்லியனூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி மாயமானார். அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரியூர் மகாலட்சுமி நகர் அனந்தபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜாபர்சேட் (வயது50). இவர் புதிதாக வீடு கட்டி வருவதால் கடன் சுமை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இதுதொடர்பாக இவருக்கும் இவரது மகன் மீரானுக்கும் (26) வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தடுமாறி விழுந்த ஜாபர்சேட் தலையில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி ஜாபர்சேட் டீ குடித்து விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் ஆஸ்பத்திரிக்கு திரும்பவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை.

    உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஜாபர்சேட் இல்லை. இதையடுத்து அவரது மனைவி ஆமீனா பேகம் தனது கணவர் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ஜாபர்சேட்டை தேடி வருகிறார்கள்.

    புதுவையில் ஆட்சி கவிழ்ப்புக்கு பா.ஜனதா தான் காரணம் என காங்கிரசார் நினைத்தனர். ஆனால், ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில் என்.ஆர்.காங்கிரசும் இருப்பது ஆட்சியை இழந்த பிறகே காங்கிரசாருக்கு தெரிய வந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்ததால் கவிழ்ந்தது.

    காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் கட்சியை விட்டு விலகினர். ஆனால், அப்போது காங்கிரஸ் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

    ஆனால் அடுத்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், அவரை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், லட்சுமிநாராயணன், தி.மு.க எம்.எல்.ஏ. வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் தான் மெஜாரிட்டி இழந்தது.

    இதில், ஜான்குமார், வெங்கடேசன் பா.ஜனதாவில் ஐக்கியமாகி விட்டனர். ஆனால், முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் என்.ஆர்.காங்கிரசில் இணைய உள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கிரண்பேடியை எதிர்ப்பதில் பிரதானமாக செயல்பட்டார். தனது தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தாலும், அங்கு தனது ஆதரவாளரை காங்கிரஸ் சார்பில் நிறுத்துவார் என எதிர்பார்த்தனர்.

    முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி கூட ஏனாமில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    ஆனால், அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்திருந்த மல்லாடி திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இது காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் காங்கிரசில் தொடர்வார் என அவர்கள் நம்பினர்.

    இதனால் ராகுல் வருகையின் போது அமைக்கப்பட்ட விளம்பர பேனர்களில் அவரின் படம் இடம் பெற்றிருந்தது. அவர் திடீரென அந்தர் பல்டி அடித்து என்.ஆர்.காங்கிரஸ் பக்கம் செல்ல இருப்பது காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் லட்சுமி நாராயணனும் நாளை என்.ஆர்.காங்கிரசில் இணைவது உள்ளது உறுதியாகி உள்ளது. இவர் நாராயணசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இருப்பினும் அவர் காங்கிரசில் தொடர்வார் என எதிர்பார்த்தனர்.

    ராகுல் பங்கேற்ற மீனவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரை தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் வரவேற்றார். ரோடியர் மில் திடலில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் மேடைக்கு செல்லாவிட்டாலும் கீழே கட்சி நிர்வாகிகளின் வரிசையில் அமர்ந்திருந்தார்.

    அவரும்கூட என்.ஆர்.காங்கிரசுக்கு செல்வது காங்கிரசை உருக்குலைத்துள்ளது. இதுவரை ஆட்சி கவிழ்ப்புக்கு பா.ஜனதா தான் காரணம் என காங்கிரசார் நினைத்தனர். ஆனால், ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில் என்.ஆர்.காங்கிரசும் இருப்பது ஆட்சியை இழந்த பிறகே காங்கிரசாருக்கு தெரிய வந்துள்ளது.
    ரங்கசாமியை ஏனாம் தொகுதி வேட்பாளர் என மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவித்திருப்பது என்.ஆர்.காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    காங்கிரசிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர் தனது சொந்த தொகுதியான ஏனாமில் போட்டியிட மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஏனாமில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய மல்லாடிகிருஷ்ணாராவ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரங்கசாமியை அறிவித்துள்ளார்.

    அவர் வரும் காலத்தில் முதல்-அமைச்சராக வாய்ப்புள்ளதால் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ரங்கசாமியை ஏனாம் தொகுதி வேட்பாளர் என மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்திருப்பது என்.ஆர்.காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏனாமில் போட்டியிட வரும்படி அழைப்பு விடுக்கலாம். ஆனால், ரங்கசாமி போட்டியிடுவார் என மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்திருப்பது எவ்விதத்தில் நியாயம்? என கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். கட்சியின் தலைவர்தான் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவார்.

    ஆனால், காங்கிரசில் இருந்து விலகி முறைப்படி என்.ஆர்.காங்கிரசில் சேராத மல்லாடிகிருஷ்ணாராவ் இந்த அறிவிப்பை வெளியிடலாமா? என குமுறி வருகின்றனர்.

    புதுவை மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு அவர் கேபினட் அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், மத்திய உள்துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் சந்திரமவுலி, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்டங்கள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பொது விநியோக திட்டத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் பணத்தின் பலன் சரியாக கிடைக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.

    பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அது இன்று (நேற்று) முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நேற்று மட்டும் 2,400 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். இதேபோல் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் நாளை (அதாவது இன்று) முதல் செயல்படுத்தப்படும்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா தலைமையில் தென்மாநில கூட்டம் திருப்பதியில் வருகிற 4-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்துள்ளேன். அதை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவேன். ஏற்கனவே சாலைவசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைத்துள்ளோம்.

    புதுவையில் ஜனாதிபதி ஆட்சி என்றாலும் மக்களுக்கான திட்டங்களை நிர்வாகம் செய்யும் இடம் சட்டசபை வளாகம். எனவே தான் நாங்கள் இங்கு ஆலோசனை கூட்டம் நடத்தினோம். எங்கு நடந்தது என்பது பெரிதல்ல. மத்திய உள்துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்களுக்கு சட்டசபையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் நடைமுறையில் 1 சதவீதம் கூட சட்ட விதிமீறல் இருக்காது. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பஸ் இயக்குவது குறித்து தலைமை செயலாளரிடம் பேசியுள்ளோம். விரைவில் செயல்படுத்தப்படும். விமான நிலைய விரிவாக்கம் தேவையான ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் புதுவையில் என்ன நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று கேட்டபோது, ‘தமிழகத்தில் தேர்வு ரத்து செய்தது தமிழக அரசின் கொள்கை முடிவு. புதுவை மாநிலத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். எனவே அவர்களுக்கு தேர்வு நடத்தலாம்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தற்போது எதுவும் அறிவிக்க முடியாது. ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும். 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும். அப்போது மாணவர்கள், பெற்றோரிடம் கருத்துகேட்டு அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
    புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கிற்கு பின்னர், புதுவை மாநிலத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் செயல்பட தொடங்கின. இந்த நாட்களில் மாணவர்களின் சந்தேகம் மட்டும் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ள ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி 2 பிரிவுகளாக பிரித்து வாரத்தில் 6 நாட்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மாணவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பள்ளிகளில் முழுநேரமும் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் நாளை (புதன்கிழமை) முதல் முழு நேரமும் செயல்படும். வழக்கமான கால அட்டவணையை பின்பற்றி வாரத்தில் 6 நாட்களும் (திங்கள் முதல் சனிக்கிழமை) முழு நேர வகுப்புகள் நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    காலாப்பட்டில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    காலாப்பட்டு:

    பெரியகாலாப்பட்டு எத்தாசிவில் வீதியை சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி அஞ்சலாட்சி (வயது 50). இவர் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மகன் பாலமுருகன், பெரியகாலாப்பட்டில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அஞ்சலாட்சி காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அஞ்சலாட்சி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அஞ்சலாட்சி வரும் வழியிலேயே பறிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துப்புரவு ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
    திருபுவனை:

    திருபுவனை அருகே உள்ள சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 47). இவர் பி.எஸ்.பாளையம் பள்ளியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு பள்ளிக்கு வந்த மாணவி ஒருவருக்கு பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தந்தை திருபுவனை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் 2018-ம் ஆண்டு பரமசிவம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் துப்புரவு பணியாளர் பரமசிவம் மீது குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அபராத தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு புதுவை அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    புதுவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி நைனியப்பா பிள்ளை வீதியை சேர்ந்தவர் மன்சூர் அகமது (வயது 40). இவரது மனைவி மரியம்பீபி. குவைத்தில் வேலை செய்து வந்த மன்சூர் அகமது, கடந்த ஆண்டு புதுவை திரும்பினார். இங்குள்ள டெய்லர் கடையில் வேலை செய்து வந்தார். மன்சூர் அகமது அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்ட மரியம்பீபி, தனது குழந்தைகளுடன் பாகூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த மன்சூர் அகமது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காங்கிரஸ் ஆட்சியை கலைத்ததால் புதுவை மக்கள் கோபத்துடன் உள்ளனர் என்று வைத்திலிங்கம் எம்பி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. நிலையான ஆட்சியை நாங்கள் கொடுத்துள்ளோம்.

    புதுவையின் சுதந்திரத்தை காக்கும் கட்சி காங்கிரஸ். மக்கள் விரும்பும் அரசாக காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும்.

    வாக்களித்த மக்களுக்கு எதிராக ஜனநாயக படுகொலை செய்துள்ளதை ஏற்க முடியாது. தாங்கள் வாக்களித்து தேர்வு செய்த எம்.எல்.ஏ.க்கள் தான் செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

    நியமன எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சியை கலைத்ததால் மக்கள் கோபத்துடன் உள்ளனர். சட்டப்பேரவை வாக்கெடுப்பின் போது தவறான தீர்ப்பு வழங்கிய சபாநாயகரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

    புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எதையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்காலில் இன்று பாஜக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

    * காங்கிரஸில் குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்.

    * ஊழலை மட்டுமே வளர்த்தது நாராயணசாமி தலைமையிலான அரசு. புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எதையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை.

    * புதுச்சேரியில் அடுத்து பா.ஜ.க. அணியின் ஆட்சி அமையும்.

    * உலகின் உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என வருத்தப்படுகிறேன்.

    * பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு பேச ஆசைப்படுகிறார்; நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×