என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • 2024-25-ம் ஆண்டு நீர்ப்பாசன திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காவிரி-தருமபுரி உபரிநீர்த்திட்டம், அரியலூரில் சோழர் பாசனத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை (மாதிரி வேளாண் பட்ஜெட்) அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த அறிக்கையில் 60 ஆயிரம் கோடி வேளாண் துறை மூலமாகவும், ரூ.20 ஆயிரம் கோடி நீர்ப்பாசனத்துறை மூலமாகவும் செலவிடப்படும். இதில் ரூ.12,500 கோடி விவசாயிகள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

    வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்படும். பயிர் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.27,500 கோடி செலவிடப்படும் வகையில் மாதிரி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    2024-25-ம் ஆண்டு நீர்ப்பாசன திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

    சாகுபடி பரப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 15 ஆயிரம் ஏரிகளில் சாத்தியமானவை மீட்டெடுக்கப்படும். இதற்காக ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,600-ல் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, நெல் சேமிப்பு கிடங்குகள் 400 ஆக உயர்த்தப்படும். வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும். காவிரி-தருமபுரி உபரிநீர்த்திட்டம், அரியலூரில் சோழர் பாசனத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும்.

    கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறட்சியை போக்க நடைபெறும் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். ஆறுகளில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தும் ஜூலை மாதத்திற்குள் மூடப்படும்.

    சேலத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும், வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியமும் உருவாக்கப்படும்.

    பாலாறு நீர்ப்பாசனத் திட்டம், தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம், தென்பெண்ணையாறு-துரிஞ்சலாறு இணைப்பு திட்டம் போன்றவைகள் செயல்படுத்தப்படும். வேளாண் துறை 3 ஆக பிரிக்கப்பட்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை என 3 அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.

    கோயம்பேடு சந்தைபோல அனைத்து மாநகரங்களிலும் தோட்டக்கலை பொருட்களுக்கான சந்தைகள் அமைக்கப்படும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்பு சத்து குறைந்த முயல்கறியை பிரபலப்படுத்தி, ஆடு, மாடு இறைச்சிகளின் பயன்பாடு குறைக்கப்படும்.

    வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல், தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, உணவு தன்னிறைவு, ஊரக பொருளாதார மறு மலர்ச்சிக்கான மும்முனை திட்டம் போன்றவைகள் உருவாக்கி நிறைவேற்றப்படும் என்பன போன்ற 110 அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

    • செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன.
    • டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    செஞ்சி:

    செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 30 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாமென கமிட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன. தினமும் 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு நெல் மூட்டைகள் வந்தன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால் இன்றைய விற்பனைக்காக நேற்று மதியத்தில் இருந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வரத்தொடங்கினர். நேற்று இரவு வரை சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இரவு 8.00 மணிக்கு மேல் வந்த நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடம் இல்லாததால், விற்பனை கூடத்துக்கு வெளியே டிராக்டர் மற்றும் வாகனங்களில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். ஏற்கனவே ஆள்பற்றாக்குறையால் திணறும் கமிட்டி நிர்வாகம் என்ன செய்யும் என்று தெரியவில்லை. தற்காலிகமாக கூடுதலான ஆட்களை நியமித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது வந்துள்ள முப்பதாயிரம் மூட்டைகள் விற்பனையாவதற்கு 2 நாட்களுக்கு மேலாகும். இதனால் விவசாயிகள் 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை கொண்டு வரவேண்டாம் எனவும், நாளை மறுநாள் புதன்கிழமை அன்று நெல்மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தால் போதும் எனவும் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத் குமார் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது.
    • ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

    விழுப்புரம்:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், அந்த பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதனிடையே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இம்மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை எதுவும் இல்லை என்றும், ஜனவரி 24-ந் தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு மேல்முறையீடாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை இன்று (29-ந்தேதி) ஒத்திவைக்கப்பட்டது. அன்று ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

    அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • திண்டிவனம் வந்த டி.டி.வி.தினகரனுக்கு கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் இருப்பார்.

    திண்டிவனம்:

    திண்டிவனம்-சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அ.ம.மு.க. கட்சி கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    முன்னதாக திண்டிவனம் வந்த டி.டி.வி.தினகரனுக்கு கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் இருப்பார்.

    கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களை எதிர்த்தரப்பினர் கலைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் காவல்துறையினர் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி வருகின்றார்கள் என்றும் அதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. சேருவதற்கான வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
    • வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கீரைக்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கள்ளக்குறிச்சியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார். திண்டிவனத்தில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. இன்று காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.

    இது குறித்து அவர்கள் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் திண்டிவனம் விரைந்து வந்தார். வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சுதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் சரவணன் வீட்டின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 3 குழுக்களாக பிரிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். திண்டிவனம் பகுதியில் அடிக்கடி கொள்ளை மற்றும் திருட்டு நடைபெற்று வருகின்றது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விற்பனைக்கு வரும் நெல் மூட்டைகள் தரமானதாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் இங்கு கொள்முதல் செய்யப்படும்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கட்டிடமில்லாமல் திறந்த வெளியிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 வருடம் முன்பு புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதில் சுமார் 10,000 நெல் மூட்டைகள் மட்டுமே வைக்க கூடிய நிலை உள்ளது. அதிகமாக வரும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில்தான் வைக்க வேண்டும். அப்போது மழை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தற்போது சீசன் என்பதால் நெல் மூட்டைகள் வரத்து அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் 500 லாட் நெல் மூட்டைகளாக 14, 1474 நெல் மூட்டைகளும் நேற்று 700 லாட்டுகளாக சுமார் 16,000 நெல் மூட்டைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செஞ்சி கமிட்டியில் எடைப்பணி தொழிலாளர்கள் சாக்கு மற்றும் தொழிலாளர்கள் லாரி மூட்டை ஏற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் வரும்போது கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

    எனவே நெல் மூட்டைகள் நேற்று முன்தினமும் நேற்றும் கொள்முதல் செய்யப்பட்டன. அவைகள் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டனர். நேற்று வந்த நெல் மூட்டைகள் நேற்று மாலை மற்றும் இன்று கொள்முதல் செய்யப்படுகிறது. அவை சுமார் 3 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்படும்.

    இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே வேலை நாளாக இருப்பதாலும் மற்ற நான்கு நாட்கள் விடுமுறையா இருப்பதாலும் விவசாயிகள் இனி நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் திங்கட்கிழமை நடைபெறும் கொள்முதலுக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்தால் போதும் என்று கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கமிட்டியின் வெளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தை மாதமும் சீசன் டைம் என்பதால் சுமார் 15 நாட்களுக்கு இவ்வாறு அதிக அளவில் நெல்மூட்டைகள் வரும் என்றும், மற்ற நாட்களில் சாதாரணமாக இருக்கும் என்றும் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • 4 பேர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.


    இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    மேலும் நேற்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் அம்மனு மீதான உத்தரவு தெரிவிப்பதற்காக நாளை (அதாவது இன்று) இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயக்குமாரின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். மேலும் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • முதல்வர் அழைத்தால் அவரது அறைக்கு செல்ல மாணவிகள் பயந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கூட்டேரிப்பட்டில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை தனது அறைக்கு அழைத்து கை, கால்களை அழுத்த சொல்லி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் அழைத்தால் அவரது அறைக்கு செல்ல மாணவிகள் பயந்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக பெற்றோர்கள் பெரியதச்சூர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதப்படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி முதல்வர் கார்த்திகேயனை போச்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது.
    • சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்வதால், இவைகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது. அதிகாலை 3 மணி முதலே செஞ்சி விவசாயிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்தனர்.

    ஆட்டுச்சந்தையில் வெள்ளாடு ஜோடி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. இதனை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • பஸ்சில் இருந்த ஒரு சில பயணிகள் கைகளை கோர்த்து சங்கிலி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேறினர்.
    • மூதாட்டி ஒருவர் அந்தப் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இதனை தற்காலிக டிரைவர் மணி கண்டன் பஸ்சை ஓட்டி சென்றார். இந்த பஸ் திண்டிவனம் இந்திரா காந்தி பழைய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக அங்குள்ள தரைப் பாலத்தை கடந்த பொழுது ஏரியில் திறக்கப்பட்ட உபரிநீர் அதிகரித்து சாலையில் ஓடியது. இதில் பஸ் பழுதாகி வெள்ளநீரில் சிக்கிக் கொண்டது.

    பஸ்சில் இருந்த ஒரு சில பயணிகள் கைகளை கோர்த்து சங்கிலி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேறினர். மூதாட்டி ஒருவர் அந்தப் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

    கிடங்கல் ஏரியில் நீர் அதிகரித்ததால் போலீசார் அப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் வேன் டிரைவர்கள் வாகனத்தை கழுவுவதற்காக தடுப்புகளை அகற்றியதாக கூறப்படுகிறது.

    இதனை அறியாத பஸ் டிரைவர் தரைப்பாலத்தின் வழியே வந்ததாலும், நீர்வரத்து அதிகரிப்பாலும், பஸ் பழுதாகி நீரில் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.
    • வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர், தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் என்றும், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

    இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார்மங்கலம் மற்றும் வானூர் அடுத்த கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாக சி.வி.சண்முகம் மீது ஏற்கனவே 3 அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செஞ்சிக் கோட்டை முழுமையான சுற்றுலா தலமாக மாற்றி அமைக்கப்படும்.
    • மோடிக்கு, நீங்கள் 39-க்கு 39 எம்.பி.க்களை தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டும்.

    செஞ்சி:

    பா.ஜ.க.வின் என் மண், என் மக்கள் நடை பயணம் செஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு செஞ்சி பேரூராட்சியில் இருந்து திருவண்ணாமலை சாலையில் உள்ள இந்தியன் வங்கி வரை நடைபயணம் மேற்கொண்டார்.

    அவருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். செஞ்சி கூட்ரோட்டில் அண்ணாமலைக்கு கிரேன் மூலம் ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து திருவண்ணாமலை சாலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது;-

    தமிழகத்தில் இருக்கக்கூடிய அம்மன் தலங்களில் எல்லாம் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி குடிகொண்டுள்ள ஊருக்கு நாங்கள் வந்திருக்கிறோம். 122-வது தொகுதியாக செஞ்சிக்கு வந்திருக்கிறோம். மற்ற இடங்களில் பார்த்த அதே எழுச்சி செஞ்சியில் இருப்பதை உணர்கிறோம்.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மறுபடியும் மூன்றாவது முறையாகவும், தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க.வும் முதன் முறையாக வரவேண்டும் என்று நினைக்கக்கூடிய உங்களுடைய உத்வேகம் புரிகிறது. பிரசித்தி பெற்ற செஞ்சிக்கோட்டை 830 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இன்றும் சிறிய சேதம் கூட இல்லாமல் முழுமையாக இருக்கக்கூடிய கோட்டையாகும்.

    ராஜா தேசிங்குவின் படைத்தளபதியாக இருந்த மகமத்கான், அண்ணன் தம்பிகளாக வாழ்ந்த இந்த ஊர், இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்ததாகும். ஆனால் இன்றைக்கு மனிதர்களை மதத்தால் பிளவு படுத்தி அதை வைத்து அரசியல் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க. என்றால் குறுநில மன்னர் ஆட்சி என்பதை விட ஒரு படி மேலே போய் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கட்டாயமாக டாஸ்மாக் கடை மூடப்படும். அதற்கு பதில் கள்ளுக்கடை திறக்கப்படும். பனை மரத்தையும், தென்னை மரத்தையும் அதில் வரக்கூடிய பொருட்களை முழுமையாக பயன்படுத்தினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருமானம் வரும்.

    இந்த தொகுதியில் 2021-ல் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? செஞ்சி கோட்டை சுற்றுலா மையமாக அறிவிக்கப்படும். அனந்தபுரத்தில் அரசு பணிமனை அமைக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். மேல் களவாய் தரைப்பாலம், மேம்பாலமாக மாற்றி அமைக்கப்படும். வேளாண் கல்லூரி அமைக்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செஞ்சிக் கோட்டை முழுமையான சுற்றுலா தலமாக மாற்றி அமைக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக செயல்படுத்தி கொடுக்கப்படும்.

    எனவே வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் 400 இடங்களில் வெற்றி பெற போகும் மோடிக்கு, நீங்கள் 39-க்கு 39 எம்.பி.க்களை தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    ×