என் மலர்
திருவண்ணாமலை
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
- தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை ஸ்டாலின் அரசு கைது செய்கிறது.
- திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம்
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பேரணியை மேற்கொண்டுள்ளார். தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
அவ்வகையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மக்களிடம் உரையாற்றிய அவர், " தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை ஸ்டாலின் அரசு கைது செய்கிறது. அதற்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குகிறார். திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம்.
கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். அப்போது நான் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக திருமாவளவன் அறிவித்தார். பின்னர் திமுக கொடுத்த நெருக்கடியால் மது ஒழிப்பு மாநாட்டை போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு என திருமாவளவன் பெயர் மாற்றினார். பாவம் திருமாவளவன் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்" என்று தெரிவித்தார்.
- செங்கத்தில் சாலையின் குறுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்தது.
- எடப்பாடி பழனிசாமி வாகனம் சென்ற சில வினாடிகளில் சரிந்ததால் தப்பினார்.
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பேரணியை மேற்கொண்டுள்ளார். தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. சாலையில் வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்து.
செங்கத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சாலையின் குறுக்கே பேனர் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பேருந்து இந்த வரவேற்று பேனரை கடந்து சுமார் 50 அடி தூரம் சென்றிருக்காது. பலத்த காற்றால் திடீரென அந்த பேனர் சரிந்து சாலையில் விழுந்தது. பேருந்து கடந்த நிலையில் பேனர் விழுந்ததால், நூலிழையில் தப்பினார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேனர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.
- 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றார்.
செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திரளாக கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் நடுவில் நின்று பேசினார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை சென்றார். அங்குள்ள ஓட்டலில் இரவு தங்கினார். இன்று காலை தண்டராம்பட்டு பகுதியில் இருந்து மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதனை தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் வர்த்தக அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
இன்று மாலை 4 மணிக்கு செங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுகிறார். அதனைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடிகளுடன் வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அங்கிருந்த ரெயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை என கூறப்படுகிறது.
- சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
திருவண்ணாமலை:
விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக நாகர்கோவில்-காச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடாவுக்கு சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை இடையே தண்டரை கிராமத்திற்கு அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அங்கிருந்த ரெயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை என கூறப்படுகிறது.
அதனால், நடுவழியிலேயே எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்திவிட்டு, என்ஜின் டிரைவர் கீழே இறங்கி வந்தார். பின்னர், ரெயில்வே கேட் மூடாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கேட் கீப்பரின் அலட்சியத்தால் கேட் மூடாதது தெரியவந்தது.
பின்னர், அவர் ரெயில்வே கேட்டை மூடிவிட்டு சென்றார். இதனால் சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இது தொடர்பாக, எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி தெற்கு ரெயில்வே கோட்ட உயர் அலுவலர்களுக்கு புகார் அளித்தார். அதன் பேரில், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் ராமு என்பவரை தெற்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்டு செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி கேட்டை மூடாமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஏற்கனவே ரெயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது அ.தி.மு.க.
- ரும் சட்டசபை தேர்தலில் அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் தமிழக மக்கள் ஒருசேர வீழ்த்துவார்கள்.
திருவண்ணாமலையில் நடக்கும் பூத் முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
* இ.பி.எஸ். போல் அமித்ஷா வீட்டு கதவை திருட்டுத்தனமாக தட்டவில்லை. மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறது தி.மு.க.
* அமித்ஷா வீட்டு கதவையோ, கமலாலயத்தின் கதவையோ தட்டாமல் மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறது தி.மு.க.
* எடப்பாடி பழனிசாமி ஓடி ஒளிந்து பா.ஜ.க.வுடன் கள்ள கூட்டணி வைத்த நிலையில் அதில் ஒற்றுமை இல்லாத சூழல் உள்ளது.
* அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது அ.தி.மு.க.
* கோவில் பணத்தில் கல்லூரி கட்டலாமா எனக்கேட்டு முழு சங்கியாகவே எடப்பாடி பழனிசாமி மாறி விட்டார்.
* வரும் சட்டசபை தேர்தலில் அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் தமிழக மக்கள் ஒருசேர வீழ்த்துவார்கள்.
* தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு பாதை போட்டு கொடுக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
* தேர்தல் களத்தில் தி.மு.க. முந்துவதால் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதற்றம் வந்துவிட்டது.
* எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் வெள்ளை வேட்டி சட்டையில் தொடங்கி காவி நிறத்திற்கு மாறி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பூத் முகவர்கள்தான் கட்சியின் ரத்த நாளங்கள்.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கிறது.
திருவண்ணாமலையில் நடக்கும் பூத் முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
* சில கட்சிகளில் இன்னும் பூத் ஏஜெண்டே போட முடியாத நிலை உள்ளது.
* பூத் முகவர்கள் பயிற்சி கூட்டத்தையே மாநாடு போல நடத்தி உள்ளோம்.
* பூத் முகவர்கள்தான் கட்சியின் ரத்த நாளங்கள்.
* பா.ஜ.க. ஆட்சி என்பது பாசிச ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி என்பது அடிமை மாடல் ஆட்சி.
* அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.
* பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் புதுமைப்பெண் திட்டம்.
* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
- அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனி மாதத்திற்கான குரு பவுர்ணமி இன்று அதிகாலை சுமார் 2.33 மணியளவில் தொடங்கியது. நாளை அதிகாலை 3.08 மணியளவில் நிறைவு பெறுகிறது.
இன்று காலையில் பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கிரிவல பாதையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
கிரிவலம் தொடங்கும் முன்பு பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் ஆனி மாதம் பவுர்ணமி வருகிற 10-ந் தேதி அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி 11-ந் தேதி அதிகாலை 3.08 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளதால் நண்பகல் நேரத்தில் கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்த்து அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கிரிவலம் வரலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
- கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
- விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்தனர்.
சந்தவாசல்:
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 65), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி.
இவர் கண்ணமங்கலம் அருகே உள்ள மங்களாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு விஜயன் ஆளானார்.
இந்த நிலையில் மே 2-ந் தேதி படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய விஜயன் வந்தார். தரிசனம் முடிந்து கையில் வைத்திருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நில பத்திரத்தை உண்டியலில் போட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.
இன்று காலை ரேணுகாம்பாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற இருந்தது. இதனை அறிந்த விஜயன் கோவிலுக்கு வந்தார். கோவில் ஊழியர்களிடம் உண்டியலில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரம் உள்ளது.
அதனை முறையாக கோவிலுக்கு மாற்றி எழுதி தருவதாகவும் கூறினார். இதனை கேட்டு கோவில் ஊழியர்கள், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் ஊழியர்களிடம் சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் கேட்டு கதறி அழுதனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் கல்லேரிபட்டு கிராமத்தை வசீகரன் என்ற மாணவனும் பஸ்சில் வந்து இறங்கினார்.
- காயமடைந்த மாணவன் சதீஷ்குமாரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆரணி அருகே உள்ள சுந்தரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளி மேகநாதன் மகன் சதீஷ்குமார் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம் போல் சதீஷ்குமார் அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். இதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் கல்லேரிபட்டு கிராமத்தை வசீகரன் என்ற மாணவனும் பஸ்சில் வந்து இறங்கினார்.
இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பஸ்சில் இருந்து இறங்கிய சதீஷ்குமார் பள்ளியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ஆரணி சார் பதிவாளர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் வசீகரனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வசீகரன் கத்தியால் சதீஷ்குமாரின் பின்பக்க கழுத்தில் பக்கவாட்டில் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது .அதனை தடுக்க முயன்றபோது சதீஷ்குமாரின் கைவிரல்களிலும் கத்தி வெட்டு விழுந்தது.
இதனை கண்ட சக மாணவர்கள் அலறி அடித்தபடி ஓடினர். அங்கிருந்த பொதுமக்கள் மாணவர்களை விலக்கி விட்டனர்.
காயமடைந்த மாணவன் சதீஷ்குமாரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த மோதலில் மாணவர் வசீகரனுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரும் அதே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
நடுரோட்டில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஆரணி நகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில்:-
மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்களும் இந்த ஆண்டுதான் பள்ளியில் சேர்ந்தனர். அவர்களுக்கு இடையே என்ன தகராறு என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
- கலசப்பாக்கம் போலீசில் கடந்த ஆண்டு காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமராஜ் பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60), வக்கீலான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பொது குழாயில் தண்ணீர் எடுப்பது குறித்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தகராறு குறித்து கலசப்பாக்கம் போலீசில் கடந்த ஆண்டு காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை காமராஜ் மற்றும் அவரது நண்பர் ராஜா இருவரும் நாயுடுமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கும்பல் காமராஜ் மற்றும் ராஜா இருவரையும் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலசபாக்கம் போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக காமராஜ் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து காமராஜின் சகோதரர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கருணாநிதி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக விசிக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சொரகொளத்தூர் மற்றும் நாயுடு மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






