என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருமாவளவன் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார் - எடப்பாடி பழனிச்சாமி
- போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை ஸ்டாலின் அரசு கைது செய்கிறது.
- திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம்
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பேரணியை மேற்கொண்டுள்ளார். தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
அவ்வகையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மக்களிடம் உரையாற்றிய அவர், " தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை ஸ்டாலின் அரசு கைது செய்கிறது. அதற்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குகிறார். திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம்.
கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். அப்போது நான் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக திருமாவளவன் அறிவித்தார். பின்னர் திமுக கொடுத்த நெருக்கடியால் மது ஒழிப்பு மாநாட்டை போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு என திருமாவளவன் பெயர் மாற்றினார். பாவம் திருமாவளவன் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்" என்று தெரிவித்தார்.






