என் மலர்
திருவண்ணாமலை
- திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள் , வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமி வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
ஆந்திர மாநிலம், குண்டூர் பெண் குறையாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சசிதருர் (வயது 39). இவரது மனைவி கல்யாணி (33). இவர்களுக்கு பின்கா ராமச்சந்திரன் (11) என்ற மகனும், ஸ்ரீ ரித்திஷா என்ற மகளும் உள்ளனர்.
இவரது உறவினர்கள் பெங்களுருவை சேர்ந்த ரவி (24), ஈஸ்வரி (62).
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை குண்டூரில் இருந்து இவர்கள் 6 பேரும் காரில் புறப்பட்டனர்.
காரை சசிதருர் ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலை அருகே வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுக்கியது.
காரில் பயணம் செய்த கல்யாணி, ரவி, சிறுமி ஸ்ரீ ரித்திஷா ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
மனைவி, மகள் தனது கண்முன்பே இறந்ததால் சசிதருர் கதறி அழுதார். இதனை பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வர வழைத்தது. ஈஸ்வரி, பின்கா ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போளூர் போலீசார் கல்யாணி, ரவி, ஸ்ரீ ரித்திஷா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
- 239 கிராம் அளவிலான டிஎம்டி, சைலோ, சைபின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல்.
- திருவண்ணாமலையில் நடக்கும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பயன்படுத்த முயற்சி.
திருவண்ணாமலையில் போதை பொருள் விவகாரத்தில் ரஷியாவை சேர்ந்த இருவரை கைது செய்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
239 கிராம் அளவிலான டிஎம்டி, சைலோ, சைபின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அமனிடா மஸ்காரியா, அயாஹூஸ்கா, கம்போ (தவளை விஷம்) ஆகியவற்றை திருவண்ணாமலையில் நடக்கும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பயன்படுத்த முயன்றது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலையில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கும் கூட்டம் ஒன்றில் இந்த போதைப் பொருளை பயன்படுத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் ரிஷிகேஷ், மணாலி உள்ளிட்ட பகுதிகளிலும் இது போன்ற அயாஹூஸ்கா செர்மனி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்.
- சஸ்பெண்டு செய்யப்படுவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.
- பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று பொறுப்பேற்க வேண்டும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை வந்தார். அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு வழிபட்டார்.
சாமி தரிசனம் செய்த அண்ணாமலைக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று பொறுப்பேற்க வேண்டும் என அருணாசலேஸ்வரரை வேண்டி வணங்கினேன்.
போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.
இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு கூட்டணியில் உள்ள கட்சிகளின் 2-ம் கட்ட தலைவர்கள் தான் செல்கின்றனர்.
தேர்தலில் தோல்வி அடைவோம் என்று அவர்களுக்கே தெரிந்ததால் தான் இன்றைய கூட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 2-ம் கட்ட தலைவர்களை அனுப்பு கிறார்கள்.
பிரதமர் கன்னியா குமரிக்கு வந்துள்ளது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. அதனால் தான் பா.ஜ.க.வின் ஒரு தொண்டர்கள் கூட அங்கு செல்லவில்லை.
விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு அரசின் அனுமதியோ அல்லது தேர்தல் ஆணையத்தின் அனுமதியோ தேவையில்லை. விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்தாலும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் மக்கள் தடுக்கப்படவில்லை.
எதில் எல்லாம் அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் தியானம் குறித்து விஷமத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாமி தரிசனம் செய்ய காத்திருந்த அண்ணாமலையுடன் வரிசையில் நின்ற பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அப்போது ஒரு சிறுமி இன்று எனது பிறந்த நாள் என்னை ஆசீர்வதியுங்கள் என கேட்டார். அந்த சிறுமியை வாழ்த்திய அண்ணாமலை சிறுமியுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.09 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. பவுர்ணமி இரவில் தொடங்கியதால் பகலில் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர்.

தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாலும், நேற்று வைகாசி விசாகம் என்பதாலும் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். இதில் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர், குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது.
பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்றாலும் மாலைக்கு பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (வியாழக்கிழமை) இரவு 7.44 மணி அளவில் நிறைவடைகின்றது. அதனால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
- அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபட்டார்.
- ஆண்டுதோறும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன்.
திருவண்ணாமலை:
ஆந்திர மாநில மந்திரியும் நடிகையுமான ரோஜா நகரி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டார். அங்கு கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் ரோஜா சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று இரவு ரோஜா திருவண்ணாமலை வந்தார்.
அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்த அவர் அங்கிருந்து கிரிவலம் தொடங்கினார். 14 கிலோமீட்டர் கிரிவல பாதையில் நடந்து சென்றார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை ரோஜா அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபட்டார். வைகுண்ட வாசல் வழியாக அண்ணாமலையை நோக்கி மனமுருக வழிபாடு செய்தார்.
ஆண்டுதோறும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன். அண்ணாமலையார் ஆசியோடு மக்களுக்கு சேவைப் பணிகளை செய்து வருகிறேன்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்க வேண்டும் என அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனிடம் வேண்டிக் கொண்டேன்.
அண்ணாமலையார் அருளால் மீண்டும் அமைச்சராகி மக்கள் பணியாற்றுவேன் என்றார்.
கோவில் நிர்வாகம் சார்பில் ரோஜாவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- 23-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது.
- பவுர்ணமியன்று கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேங்கிகால்:
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேரம் வருகிற 22-ந் தேதி புதன்கிழமை இரவு 7.16 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 23-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.
சமீபகாலமாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதோடு, தற்போது கோடை விடுமுறை என்பதால், வரும் பவுர்ணமியன்று கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருக்கிறது.
- 9-வது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார்
- நித்யா, காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் இருந்துகொண்டே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தில் தாயும் மகனும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
9-வது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார். தற்போது கல்வி கற்கும் ஆசை வரவே, கோவிலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் அவரது மகன் சந்தோஷ் உடன் இணைந்து தனியார் பயிற்சி மையத்தில் படித்து தனித்தேர்வராக 10ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
நித்யா, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் இருந்துகொண்டே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
அமலா பால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு என்ற திரைப்படத்தில் அம்மாவும் மகளும் சேர்ந்து 10 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்த திரைப்படத்தில் நடந்தது போலவே தற்போது திருவண்ணாமலையில் தாயும் மகனும் 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
- செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.
இந்த மலையின் உச்சியில் சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இந்த மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், பல வகையான உயிரினங்கள் உள்ளன. தினந்தோறும் மூலிகைகளை பறித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் மலை மீது தீ வைத்தனர். இதனால் மலையை சுற்றி காட்டுத்தீ மளமளவென எரிய தொடங்கியது. மலையில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் தீயில் எரிந்து நாசமானது. சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டு இருந்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.
இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 12,724 மாணவர்கள், 13,827 மாணவிகள் என 26,551 பேர் தேர்வு எழுதினர்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12,724 மாணவர்கள், 13,827 மாணவிகள் என 26,551 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 11,037 மாணவர்கள் 12,984 மாணவிகள் என மொத்தம் 24,021 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் இந்த ஆண்டு கடைசி இடத்தை பிடித்தது.
- நிர்வாக காரணங்களுக்காக இந்த ரெயில் சேவை நீட்டிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
- ரெயில் சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
திருவண்ணாமலை:
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.
வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும். அதன்பின், அங்கிருந்து பெண்ணத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12 மணி 5 நிமிடங்களுக்குச் செல்லும்.
திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேதாரம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரெயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும்.
அதனைத்தொடர்ந்து வேலூர் ரெயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரெயில் நிலையங்கள் வழியாக 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நீட்டிப்பு ரெயில் சேவை மே 2-ந்தேதி முதல் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக இந்த ரெயில் சேவை நீட்டிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை நீட்டிப்பு சேவை இன்று காலை தொடங்கியது. திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு ரெயில் சேவை தொடங்கியது. ரெயில் சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
- வசந்த உற்சவம் நிறைவாக மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மகிழ மரத்தை வலம் வந்த உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் இரவு மண்டக படி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலுக்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து அருணாசலேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் சென்றுவிட்டார். தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாசலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
20 அடி உயர பொம்மை
சிவபெருமான் ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் போது உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நின்று இருள் சூழ்ந்து விடுவதால் அந்த தியானத்தை கலைப்பதற்காக தேவர்கள் மன்மதனை சாமி மீது அம்பு விட அனுப்பி வைக்கின்றனர்.
மன்மதன் அருணாசலேஸ்வரர் மீது பானம் தொடுத்த நேரத்தில் அருணாசலேஸ்வரரின் தியானம் கலைந்து எதிரே இருந்த மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழித்தார். இந்த நிகழ்வையே மன்மத தகனம் என்று கூறப்படுகிறது.
இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மதன் பொம்மை கையில் வில்லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாசலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேரியது.
அருணாசலேஸ்வரர் முன்பிருந்து சீறி பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து சென்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டும் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும்.






