என் மலர்
திருவள்ளூர்
- வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார்.
- பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.
திருத்தணி:
மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த 4-ந் தேதி இரவு திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 12 மீட்டர் நீளத்திற்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார். இதனால் பக்தர்கள் அனைவரும் சரவண பொய்கை மலை படிக் கட்டுகள் வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வருகி றார்கள். மலைப்பாதையில் வாகனங்கள் மேலே செல்லாதவாறு போலீசார் இரும்பு தடுப்பு கள் அமைத்து உள்ளனர். சேதம் அடைந்த மலைப் பாதை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் வேக மாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தீபா, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளன.
மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
பல்வேறு கடைகளில் ஓரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால் அவை அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. காக்களூரில் உள்ள மதுக் கடை அருகே பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்படாமல் மாதக்கணக்கில் குவியல், குவியலாக உள்ளன. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி ஆகி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் சேர்ந்து விடுவதால் கடும் சவாலாக மாறி உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
- எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
பொன்னேரி:
மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கழிவு பரவியது. கடலில் மிதந்து வரும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்னும் நீடித்து வருகிறது.
இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைர வன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது.
ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கடலில் மிதந்து வரும் எண்ணெய் கழிவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லிவிங்ஸ்டன் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக வந்து பழவேற்காடு கடல் பகுதி, பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ., மீஞ்சூர் ஒன்றியக் குழு சேர்மன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, பழவேற்காடு கடல்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இங்குள்ள மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் முடிவு வந்த பின்னர் மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிச்சாங் புயல் எச்சரிக்கையில் இருந்தே கடந்த 20 நாட்களுக்கு மேலாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
- பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளுர் அடுத்த கைவண்டூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். அரசு பள்ளி ஆசிரியர். நேற்று காலை வீட்டில் இருந்த அனைவரும் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மாலையில் மூத்த மகன் வினோலியன் என்பவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிய அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், 2 லேப்-டாப் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.
சென்னை, வடபழனி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆஷா. இவர்களது மகன் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
ஆஷா நேற்று விஷேச நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டார். அப்போது பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் ஆஷா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- கிராமமக்கள் கியாஸ் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
- மத்திய அரசின் மானியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் கியாஸ் நிறுவன ஏஜென்சியில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றி உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த கிராமமக்கள் கியாஸ் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கியாஸ் நிறுவனத்தினர் ஆதார் விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்காவிட்டால் கேஸ் பதிவு செய்ய முடியாது, மத்திய அரசின் மானியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆதார் விபரங்களை பதிவிட நேற்று ஒரே நேரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் குவிந்தனர். மேலும் யாருடைய பெயரில் கியாஸ் இணைப்பு உள்ளதோ அவர்கள் வரவேண்டும் என்று கூறியதால் முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் முதியோர்,பெண்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது. ஆதார் இணைப்பு குறித்து கியாஸ் நிறுவனம் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
- தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது.
தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் தற்போது புதிதாக அனல் மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையம் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் புதிய அனல் மின் நிலையம் ரூ.6,500 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் கட்டுமான பணிகள் தற்போது முடிந்து அனல் மின் நிலையம் செயல்பட தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது. இதன் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து 2019-ம் ஆண்டிலேயே மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டோம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவும் இந்த அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது கொதிகலன் நீர் அழுத்த சோதனை, துணை கொதிகலன் எரியூட்டும் சோதனை, கொதிகலன் நீர் வெளியேற்ற முடியாத பகுதியில் நீர் அழுத்த சோதனை ஆகிய முக்கிய பணிகள் முடிக்கப்பட்டது. தற்போது கட்டுமானப் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வர தயாராக உள்ளது.
இந்த அனல் மின் நிலையத்துக்கு ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி பெறப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலம் சிங்கனேரி சுரங்கத்தில் இருந்து பெறப்படும் நிலக்கரி, ரெயில் மூலம் எடுத்து வரப்படும். இந்த அனல் மின் நிலையம் அடுத்தமாதம் (ஜனவரி) திறக்கப்பட்டு மின் உற்பத்தி உடனடியாக தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.
சென்னை:
மிச்சாங் புயல் மழையின் போது எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரிலும், மழை வெள்ளத்திலும் கலந்ததால் எண்ணூர், மணலி திருவொற்றியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணெய் கழிவுகள் எண்ணூரில் இருந்து 26 கி.மீ.தொலைவில் உள்ள பறவைகள் சரணாலயமான பழவேற்காடு ஏரியிலும் பரவியுள்ளன.
இதனால் பழவேற்காடு ஏரி அருகே உள்ள பல கடற்கரை கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தார் உருண்டைகள் கரை ஒதுங்கி வருகின்றன. கடற்கரை பகுதியில் கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பழவேற்காடு அருகேயுள்ள கோரைக் குப்பம், வைரவன் குப்பம், அரங்கக் குப்பம், கூனங் குப்பம், பழைய சாத்தங்குப்பம் மற்றும் பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதிகளிலும் தார் உருண்டைகள் காணப்படுகின்றன. இந்த தார் உருண்டைகள் அதிக அளவில் உள்ளன. மேலும் பழவேற்காடு ஏரிப்பகுதியிலும் சில இடங்களில் எண்ணெய் கழிவுகள் மிதந்துள்ளன.
இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். மேலும் தார் உருண்டைகளையும் சோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் முடிவு இன்று வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படு கிறது. மேலும் அதிகாரிகளும் இந்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் பழவேற்காடு ஏரியில் உள்ள பறவைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சென்றுவிட்டன. மேலும் இந்த பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்துள்ளன.
இதுகுறித்து மீனவர் சங்கத்தினர் கூறுகையில், 'பழவேற்காடு ஏரிக்கு நீர் வருவதை கண்காணித்து எண்ணெய் பரவாமல் தடுக்க வேண்டும். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரி தூர்ந்து வருகிறது. எனவே ஏரியை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
- கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது.
- சோழவரம் ஏரியில் 1081 மி.கனஅடியில் 763 மி.கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து ஏரி வேகமாக நிரம்பியது. இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் மழை இல்லை. எனினும் ஆந்திரா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழை நீர் பூண்டி ஏரிக்கு நேற்று 700 கனஅடி வரை வந்தது.
இதனால் பூண்டி ஏரி அதன் மொத்த உயரமான 35 அடியை எட்டியது. முழுகொள்ளளவான 3231 மில்லியன் கனஅடி முழுவதும் நிரம்பியது.
இந்த நிலையில் ஆந்திரா பகுதியிலும் தற்போது பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு தண்ணீர் வரத்து 270 கன அடியாக சரிந்தது. இதையடுத்து உபரிநீர் 2 ஷட்டர்கள் மூலம் வினாடிக்கு 675 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3066 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மி.கனஅடியில் 3241 மி.கனஅடியும், சோழவரம் ஏரியில் 1081 மி.கனஅடியில் 763 மி.கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து 200 கனஅடிக்கும் கீழ் குறைந்து இருக்கிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள 1146 ஏரிகளில் 869 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. மேலும் 123 ஏரிகள் 75 சதவீதமும், 72 ஏரிகள் 50 சதவீதமும், 75 ஏரிகள் 25 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் கீழேயும் நிரம்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- விபத்தில் படுகாயம் அடைந்த அபினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபினேஷ் (வயது20). இவர் பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். மேலும், தனது குடும்ப வறுமையின் காரணமாக பகுதி நேரமாக பெயிண்டிங் மற்றும் கொத்தனார் வேலைக்கும் சென்றார்.
இந்நிலையில் அபினேஷ், மடவிளாகம் பகுதியில் வசித்து வரும் நண்பரான முரளி(21) என்பவருடன் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். கன்னிகைப்பேர்-மஞ்சங்காரணை நெடுஞ்சாலையில் கன்னிகைப்பேரில் உள்ள தனியார் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது.. இதில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் அதிவேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அபினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நண்பர் முரளி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சி கன்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன்கள் விஷ்வா (12) சூர்யா (9).
இருவரும் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றனர். அப்போது பம்பு செட்டின் அறையில் அருகில் கீழே கிடந்த இரும்பு பைப்பை இருவரும் மிதித்தனர். அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வராததால் தேடிய பெற்றோர்கள் குழந்தை வயல்வெளியில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து போலீசார் உடலை கைப்பற்றினார்.
இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பள்ளி செல்லும் சகோதர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற வருகிறார்கள்.
- தடபெரும்பாக்கம் ஊராட்சியில் 3 பேருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பொன்னேரி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற வருகிறார்கள்.
தடபெரும்பாக்கம் ஊராட்சியில் 3 பேருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீஞ்சூர் வட்டார மருத்துவமனை சார்பில் 40 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 10 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.
- 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை வழியாக அதானி துறைமுகம் மற்றும் காட்டுப் பள்ளி கப்பல் கட்டும் தளம், எண்ணூர் துறைமுகம் , நிலக்கரி சேமிப்பு கிடங்கு வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் திருவொற்றியூர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பழவேற்காடு வாகனங்கள் சென்று வருகின்றன. அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சுற்று வட்டார பகுதி மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும்.
கடந்த வாரத்தில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலில் இருந்து மணல் முழுவதும் பழவேற்காடு-காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் படர்ந்தது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சாலையே தெரியாத அளவுக்கு மணல் திட்டுக்களாக காட்சி அளிக்கிறது.
இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து கடந்த ஒரு வாரமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன. வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.
மணலால் மூடப்பட்ட சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கல் பெரும்புலம் ஊராட்சி தலைவர் ஞானவேல் தலைமையில் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சாலையை மூடிய மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது.
இதனை மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது. நாளைக்குள் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் வழக்கம்போல் வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






