search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அத்திப்பட்டு அனல் மின் நிலையம் அடுத்த மாதம் செயல்படும்
    X

    அத்திப்பட்டு அனல் மின் நிலையம் அடுத்த மாதம் செயல்படும்

    • அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
    • தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது.

    தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் தற்போது புதிதாக அனல் மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையம் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் புதிய அனல் மின் நிலையம் ரூ.6,500 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் கட்டுமான பணிகள் தற்போது முடிந்து அனல் மின் நிலையம் செயல்பட தயாராக உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது. இதன் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து 2019-ம் ஆண்டிலேயே மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டோம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவும் இந்த அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது கொதிகலன் நீர் அழுத்த சோதனை, துணை கொதிகலன் எரியூட்டும் சோதனை, கொதிகலன் நீர் வெளியேற்ற முடியாத பகுதியில் நீர் அழுத்த சோதனை ஆகிய முக்கிய பணிகள் முடிக்கப்பட்டது. தற்போது கட்டுமானப் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வர தயாராக உள்ளது.

    இந்த அனல் மின் நிலையத்துக்கு ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி பெறப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலம் சிங்கனேரி சுரங்கத்தில் இருந்து பெறப்படும் நிலக்கரி, ரெயில் மூலம் எடுத்து வரப்படும். இந்த அனல் மின் நிலையம் அடுத்தமாதம் (ஜனவரி) திறக்கப்பட்டு மின் உற்பத்தி உடனடியாக தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×