என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
    • இன்று முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் முருகன் கோவில் மலைமேல் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் நடப்பு ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 2-ந்தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. முருக பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் நாள்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் முருகபெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 6 டன் மலர்கள் அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

    மாலை 4.45 மணிக்கு முருகபெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    கந்த சஷ்டி 6-வது நாளில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.

    அதனால் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உற்சவர் முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    • சாலையோரம் நீண்ட தூரத்திற்கு அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • சுற்றுலா வேன், பஸ்கள் கடந்த ஒரு மாதமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வந்து சென்றன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று, அனுமதி சான்று, சாலை வரி உள்ளிட்டவையை வழங்கப்படுகிறது. தற்போது ஏராளமான பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்ல சுற்றுலா வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெற தொடர்ந்து சுற்றுலா வேன், பஸ்கள் கடந்த ஒரு மாதமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வந்து சென்றன.

    அப்போது விதிகளை மீறி அகலம், வண்ணம் உயரம் ஒலிபெருக்கி மின்விளக்கு பல்வேறு காரணங்களுக்காக மோட்டர் வாகன ஆய்வாளர் நிராகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விடுப்பில் சென்றுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலத்தில் குவிந்தன. இதனால் அதிகாரிகள் திணறினர். சாலையோரம் நீண்ட தூரத்திற்கு அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொறுப்பு மோட்டார் வாகன ஆய்வாளர் அந்த வாகனங்களுக்கு தகுதிச் சான்று அளிக்காமல் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

    • சிறுவர்களையும், மாணவ-மாணவிகளையும் நாய்கள் கடிக்க பாய்ந்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
    • நாய்கள் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தெருநாய்கள் அதிகரித்து உள்ளது. தெருக்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிவதால் நடந்து செல்லவே அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    சிறுவர்களையும், மாணவ-மாணவிகளையும் நாய்கள் கடிக்க பாய்ந்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலம் வாகனங்களில் செல்லும்போது திடீரென நாய்கள் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கால்வாயில் மண் எடுப்பதால் ஆழம் அதிகரித்து உயிர் பலி ஏற்படும்.
    • பொன்னேரி இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைவெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கால்வாயில் மண் எடுத்து ஆரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணிகளை நீர்வளத் துறை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    கிராமமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கால்வாயில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, கால்வாயில் மண் எடுப்பதால் ஆழம் அதிகரித்து உயிர் பலி ஏற்படும். மேலும் கால்வாயின் கரையை பலப்படுத்த வேண்டும் என்றனர். அவர்களிடம் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். பொன்னேரி இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பொன்னேரி அடுத்த கும்முணிமங்கலம் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.
    • 108 ஆம்புலன்சு ஒன்று நீண்ட நேரம் மழை வெள்ளத்தில் தத்தளித்து மெதுவாக சென்றது.

    பொன்னேரி:

    பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் கனமழை நீடித்தது. இதனால் தெருக்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பொன்னேரி-திருவொற்றியூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் வாகன ஓட்டிகள் தடுமாறி சென்றனர். முத்து மாரியம்மன் கோவில் அருகில் சாலையில் குண்டும் குழியுமான பெரிய பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து சென்றனர். இதேபோல் பொன்னேரி அடுத்த கும்முணிமங்கலம் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.


    பொன்னேரி அடுத்த திருவாயர்பாடியில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் குறைய வில்லை. இதனால் அவ்வழியே சென்றவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை தள்ளியபடி சென்றனர். ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் சிக்கியது. இன்று காலை 108 ஆம்புலன்சு ஒன்று நீண்ட நேரம் மழை வெள்ளத்தில் தத்தளித்து மெதுவாக சென்றது.

    இந்த சுரங்கப்பாதையானது மெதூர், பழவேற்காடு, சின்ன காவனம், பெரிய காவனம், திருப்பாலைவனம் என 100க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கக்கூடிய பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் 2 ராட்சத மோட்டார்கள் மூலம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும்.
    • ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இப்பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பழவேற்காடு பகுதியை சேர்ந்த எண்ணூர் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம், மற்றும் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் பழவேற்காடு- காட்டுப்பள்ளி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    தாங்கல்பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட கருங்காலி பகுதியில் உள்ள இந்த சாலை கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது.

    இதனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போதும், மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும். இதனால் சாலை மணலால் மூடப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை முழுவதும் கடல் நீர் புகுந்து மணலால் மூடியதால் வாகன போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதானி துறைமுகம் சார்பில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கருங்காலி பகுதியில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை சுமார் 1/2 கி.மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வடிந்து மணலாக நிரம்பி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் மணல் உள்ள பகுதியில் இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். பெரிய வாகனங்கள் வஞ்சிவாக்கம், காட்டூர், வாயலூர் வழியாக மாற்றுபாதையில் சுற்றி செல்கின்றன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது கடல் அலை சீற்றத்தின் போது ஒவ்வொரு முறையும் சாலை மணலால் மூடப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

    • காவல் துறையினர் இரவு பகல் பாராமல் 24 மணிநேரம் பணியாற்றுகிறார்கள்.
    • காவலர்களை அவமதிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவள்ளூரில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை ஆபாசமாக திட்டி சண்டை போட்ட ஜோடி பிடிபட்டுள்ளனர். தற்போது போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

    காவல் துறையில் ஆளும் கட்சி அதிகம் தலையிடுவது இல்லை. ஆனால் தற்போது காவல் துறையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக உள்ளது.

    இதுபோன்ற நிலையில் சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மத்தியில், காவல் துறையை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.

    சம்பவம் நடந்த உடனே வீடியோ வெளி வந்துவிட்டது. காவல் துறையின் செயல்பாடுகளை மோசமான வார்த்தைகளால் பேசி உள்ளார். காவல் துறையினர் இரவு பகல் பாராமல் 24 மணிநேரம் பணியாற்றுகிறார்கள். தகாத வார்த்தைகளால் காவலரை பேசி உள்ளார்.

    இத்தகைய சூழ்நிலையில் அவரை ஏன் உடனே கைது செய்யவில்லை. உதயநிதி பெயரை பயன்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

    போலீசாரிடம் தான் தகராறு செய்துள்ளார். அவரை உடனே கைது செய்து இருக்க வேண்டும். அவரை ஓட விட்டுவிட்டு பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து பிடித்துள்ளார்கள்.

    இப்போது எல்லாரும் எனக்கு எம்எல்ஏ தெரியும், எம்பி தெரியும், உதயநிதி தெரியும், கனிமொழி தெரியும் என்று சொல்கிறார்கள்.

    ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் உடனடியாக களத்தில் இறங்கி காவலர்களை அவமதிக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    ஒரு நாள் கழித்து இவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து அதன்பிறகு பொறுமையாக சட்டத்தின் முன் நிறுத்துவதும், பல பேர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதும் காவல்துறைக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பிரச்சனையே உருவாக்கும் என்று கூறினார்.

    • கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு பகுதியில் கோலடி ஏரி உள்ளது. இங்கு பல்வேறு இடங்களில் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    வருவாய்த்துறை அதிகாரி கள் நடத்திய ஆய்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் 25-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருவதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜே.சி.பி.எந்திரத்துடன் இடித்து அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களை அதிரடியாக இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசாரும், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கோலடி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • ஆரணி மற்றும் பெரியபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரியபாளையம்:

    வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் ஆந்திரா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் கலக்கும்.

    இந்த நிலையில் ஆந்திரா பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்ய பலத்த மழையால் பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பாளையம் செல்ல ஆரணி ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் மற்றும் ஆரணி சமுதாய கூடத்தில் இருந்து மங்களம் கிராமம் செல்லும் தரைப்பாலம் ஆகிய 2 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    தரைப்பாலங்களுக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து செல்வதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

    தரைப்பாலங்களின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து ஆரணி மற்றும் பெரியபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மங்களம், புதுப்பாளையம், காரணி, ஆத்துமேடு, நெல்வாய், எருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மாற்று பாதையில் பெரியபாளையம் வழியாக வந்து செல்கிறார்கள். இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களும்,வேலைக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர்.

    அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ரெயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    • விபத்தின்போது பணியில் இருந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    சென்னை:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த 11-ந்தேதி இரவு 8.30 மணியளவில் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்தன. அதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள தண்டவாளத்தில் நட்டுகள் கழன்று கிடந்தன. ரெயில் தண்டவாளங்களை இணைக்கும் 'டி' வடிவ கம்பி இணைப்பு தளர்வாகவும், சில இடங்களில் இணைப்பு இடம் மாறி இருந்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நட்டுகளில் சுத்தியலால் அடித்த தடங்கள் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். மேலும், ரெயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 3 தனிப்படைகளை அமைத்தும் விசாரணை நடத்தினார்கள். விபத்தின்போது பணியில் இருந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கவரப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரெயில் லூப் பாதையில் சென்று விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில், விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ரெயில் விபத்து குறித்து, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரெயில் பாதுகாவலர், பயணச்சீட்டு பரிசோதகர், ஏ.சி. பெட்டி பணியாளர்கள், அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளை சேர்ந்த 30 ரெயில்வே அலுவலர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.


    சென்ட்ரலில் உள்ள சென்னை ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் 15 பேரிடமும், 2-ம் கட்டமாக நேற்று மீதமுள்ள 15 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர்களிடம் ரெயில் விபத்துக்கான காரணம், ரெயிலின் இயக்கம், சிக்னல், இன்டர்லாக்கிங் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் தண்டவாள பராமரிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணையில் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி பாலமுரளி உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

    விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் எழுத்து பூர்வமாக பதிவு செய்யப்பட்டன. இந்த 2 நாள் விசாரணை நேற்று இரவு நிறைவடைந்தது. விசாரணை அறிக்கை 15 நாட்களில் தயார் செய்யப்பட்டு, இந்திய ரெயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பேரில், ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ரெயில்வே ஊழியர்கள் 30 பேரிடம் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துஉள்ளன.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பிரதான பாதையை விட்டு லூப் பாதைக்கு மாறும் வகையில் நட்டுகள் கழற்றப்பட்டிருப்பதால் இது நாசவேலை என்கிற தகவல் விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த ஒருவர் இந்த 6 நட்டுகளையும் கழற்ற 30 நிமிடங்கள் ஆகும். அதற்குரிய சாதனத்தை பயன்படுத்தி கழற்றினால் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். விபத்து நடந்த அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தண்டவாள பராமரிப்பாளர் பணியில் இருந்தார். அந்த நேரத்தில் இதுபோன்ற சதிச்செயல் ஏதும் நடைபெறவில்லை. அதன்பிறகு தண்டவாளத்தை கண்காணிக்க வேறு யாரும் பணியில் இல்லை.

    எனவே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.26 மணிக்கு அந்த பகுதியை கடந்து செல்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பு பிரதான பாதையில் இருந்து லூப் பாதைக்கு ரெயில் தடம் மாறும் வகையில் தண்டவாள நட்டுகளை கழற்றி மர்ம நபர்கள் இந்த நாசவேலையில் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 12 நிமிடங்கள் தாமதமாக பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.

    பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கிய லோகோ பைலட் பச்சை சிக்னலை பார்த்து விட்டு தான் ரெயிலை ஓட்டி சென்றுஉள்ளார். ஆனாலும் ரெயில் எப்படி லூப் பாதைக்கு மாறியது என்பது அவருக்கு தெரியவில்லை. கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபுவும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிரதான பாதையில் செல்வதற்கே பச்சை நிற சிக்னல் போட்டதாக தெரிவித்துஉள்ளார்.


    இந்த விசாரணையின் போது விபத்து தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக விபத்தை நேரில் பார்த்த பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது வெளியாட்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரெயிலை கவிழ்ப்பதற்கான இதுபோன்ற நாசவேலை இதற்கு முன்பு பொன்னேரி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி நடைபெற்றது. அப்போது தண்டவாள பராமரிப்பாளர் அங்கு வழக்கமான ஆய்வில் ஈடுபட்டபோது தண்டவாள நட்டுகள் கழற்றப்பட்டு கிடந்தன.

    எனவே சதி நடந்திருப்பதை கண்டறிந்து அவர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனால் அப்போது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. ஆனால் இப்போது தண்டவாள பராமரிப்பாளர் பணி முடிந்து சென்ற பிறகு சதித்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இது நாசவேலை என்பது உறுதியாகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜரான ரெயில்வே அதிகாரிகள், தண்டவாள பராமரிப்பாளர், லோகோ பைலட் மற்றும் கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரி ஆகியோர் ரெயில் விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் இல்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் விபத்து நடந்த பகுதியில் நட்டுகள் கழற்றப்பட்டு இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். ஆனாலும், அந்த அறிக்கையானது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையே கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக ரெயில்வே பணியாளர்கள் 11 பேருக்கு கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து ரெயில்வே டி.எஸ்.பி. கர்ணன் விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் ரெயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேலும் ரெயில்வே பணியாளர்கள் 10 பேருக்கு கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்களிடமும் டி.எஸ்.பி. கர்ணன் விசாரணை நடத்த உள்ளார்.

    இதற்கிடையே கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை மோத வைத்து விபத்தை ஏற்படுத்தி நாசவேலையில் ஈடுபட்டது பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துஉள்ளது. இதையடுத்து அந்த கோணத்திலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    • ஆரணி ஆற்றில் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
    • பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பாளையம் செல்ல ஆரணி ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் மற்றும் ஆரணி சமுதாய கூடத்தில் இருந்து மங்களம் கிராமம் செல்லும் தரைப்பாலம் ஆகிய இரண்டும் தண்ணீரில் மூழ்கியது.


    இப்பகுதியில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    எனவே, ஆற்றின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து ஆரணி மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மங்களம், புதுப்பாளையம், காரணி, ஆத்துமேடு, நெல்வாய், எருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மாற்று பாதையில் பெரியபாளையம் வழியாக வந்து செல்கின்றனர்.

    மேலும், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களும், தனியார்-அரசு துறையில் பணியாற்றும் பணியாளர்களும், விவசாயிகளும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

    எனவே, அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் கட்டி முடித்து போக்குவரத்து பாதிப்பை தீர்க்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 14-ந்தேதி நிலவரப்படி புழல் ஏரியில் 14.97 அடியாக இருந்தது.
    • சோழவரம் ஏரிக்கு 498 கனஅடி தண்ணீர் வருகிறது.

    பூந்தமல்லி:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. சோழவரத்தில் 30 செ.மீட்டரும், செங்குன்றத்தில் 28 செ.மீட்டர் மழையும் பதிவானது. பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    புழல் ஏரியில் மட்டும் கடந்த 3 நாட்களில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. கடந்த 14-ந்தேதி நிலவரப்படி புழல் ஏரியில் 14.97 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 16.90 அடியாக பதிவானது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி ஆகும். ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கனஅடியில் 2,388 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 72 சதவீதம் ஆகும். ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 936 கனஅடியாக குறைந்து உள்ளது.

    பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகபட்சமாக 1380 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்தது. இன்று காலை ஏரிக்கு 493 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 13.79 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில்1317 மி.கன அடி நீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 134 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை நின்றாலும் ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வரும் நாட்களில் அதிக அளவில் மழை பொழிந்து, செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே, ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சோழவரம் ஏரிக்கு 498 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 198 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் மற்றும் மழைநீர் சேர்ந்து 750 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் 3231 மி.கனஅடியில் 450 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு வெறும் 10 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்தம் உள்ள 500 மி.கனஅடியில் 309 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    ×