என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.க்கு பணம் செலுத்தி வருகிறார்கள்.
    • தற்போது தமிழக அரசால் இடம் வழங்கப்பட்டு மத்திய அரசால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு லட்சக்கணக்கில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். உள்நாடு மற்றும் வெளிநாடு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.க்கு பணம் செலுத்தி வருகிறார்கள்.

    இ.எஸ்.ஐ. பங்களிப்பில் முதன்மை இடத்தில் திருப்பூர் உள்ளதால், இங்குள்ள தொழிலாளர்களின் வசதிக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பது தொழில்துறையினர், தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு திருப்பூர் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் பூண்டி ரிங் ரோட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 7½ ஏக்கர் பரப்பளவில் ரூ.81 கோடியே 34 லட்சம் மதிப்பில் 100 படுக்கை வசதி, 32 பணியாளர் குடியிருப்புகளுடன் மகப்பேறு சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டுமான பணி தொடங்கியது.

    இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனை தயார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி, காணொலிக்காட்சி மூலமாக இன்று மதியம் 3 மணிக்கு திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திறந்து வைத்து தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த மருத்துவமனை மூலம் மருத்துவ சேவைகள் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைக்கும். இதன் மூலமாக திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை சிங்காநல்லூர் சென்று சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இங்கேயே சிகிச்சை பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதால் பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டுவர அடித்தள மிட்டது எம்.எல்.எப்., தொழிற்சங்கம்தான் என்று ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ. திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டு வருவதற்கு அடித்தளமிட்டது எம்.எல்.எப். தொழிற்சங்கம் தான். கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி திருப்பூர் டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற எம்.எல்.எப். தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு அப்போது 3 படுக்கையுடன் கூடிய மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கியது. அதன் பிறகு இந்த மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்கான இடத்தை தமிழக அரசு தராமல் காலம் தாழ்த்தி வந்தது.

    இதையடுத்து தற்போது தமிழக அரசால் இடம் வழங்கப்பட்டு மத்திய அரசால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்திருக்க வேண்டும் அல்லது தொழில்துறை, மருத்துவ துறை மந்திரிகளில் யாராவது ஒருவர் நேரில் வந்து திறந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
    • விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதற்காக கேரளாவில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்திற்கு செல்கிறார். இதற்காக அங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சூலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

    • பிரதமர் மோடி வருகையையொட்டி பல்லடத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள், அதற்கான பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசாரை நிறுத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில் வருகிற 27-ந்தேதி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பல்லடம் பொதுக்கூட்டம் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

    இந்தநிலையில் பல்லடம் வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாதப்பூர் பகுதியில் சாலையின் இருபுறமும் கட்சி கொடி, தோரணங்கள் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளது.

    மேலும் பிரதமர் வருகையையொட்டி திருப்பூர் பா.ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிரதமர் வருகையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக திருப்பூர்-தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் "நாங்கள் பிரதமர் மோடியை நேசிக்கிறோம்" (வி லவ் பி.எம்.மோடி) என்று ஆங்கில வாசகத்தில் மாணவ-மாணவிகள் 650 பேர் அணிவகுத்து நின்று பாரத பிரதமர் வருகைக்கு தங்களது அன்பை தெரிவிக்கும் விதமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.


    பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கூறும்போது, பொதுக்கூட்டத்தில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். பொதுக்கூட்டத்திற்கு சில மாவட்டங்களில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் நடைபயணமாகவும், சைக்கிளிலும், மாட்டு வண்டி மூலமாகவும் வந்து பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்கும் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார். இதற்கிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி பல்லடத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் பிரதமரின் பாதுகாப்புக்கான மத்திய சிறப்பு படை அதிகாரிகள் குழு நேற்றிரவு திருப்பூர் வந்தனர். அவர்கள் இன்று காலை பொதுக்கூட்டம் நடைபெறும் பல்லடம் மாதப்பூருக்கு சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். மேடை அமைக்கப்படும் இடம், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மைதானத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் இன்று முதல் மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். மைதானத்தின் முக்கிய இடங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளம் ஆகிய இடங்களில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள், அதற்கான பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசாரை நிறுத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சூலூரில் இருந்து மாதப்பூர் வரையிலான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    • பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அவரை வரவேற்று திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டிருந்த பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இதையறிந்த அக்கட்சி நிர்வாகிகள் இன்று காலை புதிய பேருந்து நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேனர்களை கிழித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ. சாமிநாதன்.
    • அமைச்சரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்பூர்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா.பெருமாள் சாமி கவுண்டர் காலமானார்.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ. சாமிநாதன். இவர் திருப்பூர் மாவட்டம் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா. பெருமாள் சாமி கவுண்டர் (94). தாயார் தங்கமணி. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் தங்கமணி இறந்தார்.

    இதற்கிடையே சா.பெருமாள் சாமி கவுண்டர் வயது மூப்பு காரணமாக கடந்த 3 நாட்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.50 மணி அளவில் இறந்தார். அமைச்சரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    • தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • விவசாயிகள் போராட்டம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    திருப்பூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் மீது தாக்குதலை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூரில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் மறியலில் ஈடுபட வந்த விவசாயிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கூறுகையில்,

    மத்திய பாஜக., அரசால் சமீபத்தில் பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிக்கபட்ட எம்.எஸ். சுவாமி நாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் அறிவித்தனர். இது ஏதோ வட இந்திய விவசாயிகளின் போராட்டம் போல இங்கு சித்தரிக்கபடுகிறது.

    ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான அடிப்படை உரிமை போராட்டம் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் கோரிக்கைகளின் நியாயத்தை திசை திருப்பி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்துவருகிறார்கள். ஜனநாயக வழியில் போராட வந்த விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் வந்து விடாதபடி சாலைகளில் பெரும் ஆணிகள் பதித்து, கான்கிரீட் தடுப்பரண்கள் அமைத்து, வண்டி வாகனம் செல்லமுடியாதபடி பள்ளங்களை உருவாக்கி உள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசாரையும் துணை ராணுவ படையினரையும் டெல்லி எல்லை பகுதிகள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுத்தி உள்ளனர். மேலும் விவசாயிகள் மீது ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசி உள்ளனர். இது மிகவும் கண்டிக்க த்தக்கது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விவசாயிகள் போராட்டம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

    பல்லடம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரை இந்த மாதம் நிறைவடைய உள்ளது. என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவை பாராளுமன்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டமாக நடத்த பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரே 1000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு வருகிற 27-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பா.ஜனதா மாநில துணை பொதுச்செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கூறியதாவது:-

    பல்லடத்தில் 27-ந்தேதி நடைபெறும் என் மண், என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொள்ள உள்ள மாநாட்டிற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் சுமார் 10 லட்சம் பேர், பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேர் என 13 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். 400 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானமும், வாகனங்கள் நிறுத்த சுமார் 600 ஏக்கர் என ஆயிரம் ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மதிய உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், நோட்டீஸ் வழங்கியும் கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.வினர். 

    பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், நோட்டீஸ் வழங்கியும் கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.வினர். 

    பல்லடத்தில் பிரதமர் 25-ந் தேதி கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் பிரதமருக்கு மிகவும் பிடித்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச வேண்டி இருந்ததால் தேதி மாற்றப்பட்டு உள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியை குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கேட்டு வருகிறார்கள்.

    பா.ஜனதா ஆளும் மாநிலங்களை பின்னுக்குத்தள்ளி தமிழகம் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதில் மூன்றாவது இடத்தில் இடம் பிடித்துள்ளது. பல்லடத்தில் நடைபெறுகின்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்ற போது வெறும் அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிறகு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும்.

    இந்தியா கூட்டணி தற்போது ஒவ்வொரு எழுத்துக்களாக இழந்து வருகிறது. கடைசியாக ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை இல்லாததால் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். தமிழகம் மட்டுமே இந்தியா கூட்டணியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மூழ்கக் கூடிய கப்பலாக, எப்போது கரை தட்டி நிற்கும் என தெரியாமல் உள்ளது.பிரதமர் மோடியுடன் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ளும் யார் வேண்டுமானாலும் பா.ஜனதா கூட்டணிக்கு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்து திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் ராட்சத பலூன்களை திருப்பூரில் பறக்கவிட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் 19 மண்டலங்களில் வாகன பிரசாரம் மூலம் நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர். திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி பொதுக்கூட்டம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர். 

    • மொரட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
    • தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரம், பஞ்சுகள், துணி ரகங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ளது மொரட்டுப்பாளையம். இங்குள்ள கே.எஸ்.ஆர். நகர் பகுதியில் வேஸ்ட் துணிகளை பஞ்சாக மாற்றும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் திடீரென தீ மளமளவென கொளுந்து விட்டு பற்றி எரிந்தது.

    இதனால் மொரட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து உடனடியாக ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதனால் திருப்பூரில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து 10 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டது.

    சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரம், பஞ்சுகள், துணி ரகங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது.
    • மாநகராட்சி சார்பில் கட்டிட உரிமையாளருக்கு 2 முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு ஏதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையம் செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இப்படி வரி செலுத்த ஏதுவாக மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வரி செலுத்தாத கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது. இதனை கட்டுமாறு மாநகராட்சி சார்பில் அந்த கட்டிட உரிமையாளருக்கு 2 முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் வரி பாக்கி செலுத்தவில்லை. இதனால் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

    • மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆத்துப்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மகள், குழந்தைகளை பார்த்து விட்டு இன்று வீடு திரும்பினார். லட்சுமியை மருமகன் தனசேகர், தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    இவர்கள் செல்லாண்டி அம்மன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்ற போது சாலையில் இருந்த மண்ணில் இருசக்கர வாகனத்தின் சக்கரம் சரிந்து சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டி மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி லட்சுமி சாலையின் நடுவே விழுந்தார். அப்போது மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
    • மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    தொழிலாளர்களுக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் , வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், ரெயில்வே, பாதுகாப்பு , மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

    ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி அமைப்பினர் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்துகோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூர் குமரன் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.
    • போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 3 வயது குழந்தையின் படத்தை மார்பிங் செய்து அனுப்பிய லோன் செயலி மூலம் மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போன் மூலம் வரும் லோன் செயலி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோன் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த வாலிபர் குறிப்பிட்ட தேதிக்குள் பெற்ற பணத்தை திரும்ப கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த செயலியை சேர்ந்த நபர் வேறு நாட்டின் செல்போன் எண் கொண்ட ஒரு எண்ணில் அந்த வாலிபரை தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்ட நபர் செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.

    அந்த வாலிபர் பணத்தை கட்ட தாமதமாகிவிட்டது. அதனால் கும்பலை சேர்ந்த நபர், லோன் பெற்ற வாலிபருடைய, நண்பரின் 3 வயது குழந்தையை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வனிதா வழிகாட்டுதலின் படி, இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி மேற்பார்வையில் சைபர் கிரைம் எஸ்.ஐ சையது ரபீக் சிக்கந்தர் தலைமையில் போலீசார் நவீன்கிருஷ்ணன், கருணாசாகர், ஆறுமுகம், விஸ்வா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர்.

    போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தனிப்படை போலீசார் பீகார் விரைந்தனர். பீகார் மாநிலம், மதுபானி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்தார். அங்கு சென்று அந்த வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த வாலிபர் அரியானாவை சேர்ந்த ராம் சேவாக் கமட் என்பவரின் மகன் ரோசன்குமார் கமட் (22) என்பதும், அவர் லோன் செயலி மூலம் கடன் கொடுத்து விட்டு பலரின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மேல் பலர் குழுக்களாக இருப்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து திருப்பூரை சேர்ந்த 3 வயது குழந்தையின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியதும் ஒப்புக்கொண்டார். இதே போல் திருப்பூரில் செல்போன் செயலின் மூலம் கடன் பெற்ற பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அனுப்பி பணம் பறித்து மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் ரோசன்குமார் கமட்டை திருப்பூர் அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பீகார் சென்று கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு பாராட்டினார்.

    ×