

திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு ஏதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையம் செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இப்படி வரி செலுத்த ஏதுவாக மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வரி செலுத்தாத கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது. இதனை கட்டுமாறு மாநகராட்சி சார்பில் அந்த கட்டிட உரிமையாளருக்கு 2 முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் வரி பாக்கி செலுத்தவில்லை. இதனால் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் பிரபல ஓட்டல் இயங்கும் கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.