என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கியது.
இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி, உறைகிணறு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் போதகுரு நிலத்தில் ஏற்கனவே வட்டவடிவிலான ஒரு செங்கல்வரிசை சுவர் கண்டறியப்பட்டது. மீண்டும் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் போல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுவர் நீண்டு கொண்டே செல்வதால் இதன் தொடர்ச்சி அடுத்துள்ள நிலத்திலும் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளையப்பன். இவரது மகன் ராஜசேகர் (வயது 38). இவர் மீது சிவகங்கை, மதுரை போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, மிரட்டுதல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த 6-ந்தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக அஜரானார். பின்னர் அவர் ஊர் திரும்பியபோது அவரை சுற்றிவளைத்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. அப்துல் காதர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் ராஜசேகர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மேலூர், காளையார்கோவில் அருகே உள்ள பையூர் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மேலூர், பையூர் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி 4 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் திருப்புவனம் அருகே உள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்த ஜெய்சிங் மகன் விக்கி (27), முருகன் மகன் மணி அருள்நாதன் (27), காளையார்கோவில் பகுதி யைச்சேர்ந்த சண்முகம் மகன் சரவணன் (35), பாலுச்சாமி மகன் தென்னரசு (24) ஆவார்கள்.
இவர்கள் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் போட்டி காரணமாக ராஜசேகர் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரை ரெயில்வே கோட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா வரையும் தினமும் ரெயில்கள் சென்று திரும்புகின்றன. இதில் மிக முக்கிய புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேசுவரம் ரெயில் நிலையம், பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் கொண்டு வந்த விருதுநகர்-மானாமதுரை ரெயில்பாதை என அனைத்தும் மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. தற்போது காரைக்குடி-திருவாரூர் ரெயில் பாதையிலும் எவ்வித ரெயில்களும் விடப்படாமல் பணிகள் முடிந்தும் பயனின்றி உள்ளது.
தற்போது ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்ல நள்ளிரவு ஆகி விடுகிறது. இதில் வரும் பயணிகளுக்கு உணவு கிடைக்க கேட்டரிங் வசதி இல்லாததால் உணவு கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இதேபால் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாகவும், மானாமதுரை வழியாகவும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில்களில் கேட்டரிங் இல்லாததால் முதியோர்கள், நோயாளிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
ரெயில் நிலைய பிளாட்பார கடைகளில் சென்று வாங்க வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நிமிடம் அல்லது 5 நிமிடம் மட்டும் நிற்கிறது. உணவு வாங்க இறங்கிய பலர் ரெயில்களில் மீண்டும் ஏற முடியாமல் நடுவழியில் பயணத்தை தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கேட்டரிங் விரும்பிய உணவு ஆர்டர் எடுப்பவர்கள் விருதுநகர், மதுரை, மானாமதுரை ரெயில் நிலையங்களில் ரெயிலில் சப்ளை செய்ய முடியும். தற்போது அந்த வசதி இல்லாததால் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ரெயில்களில் விரும்பிய உணவு கிடைக்க மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் குமரேசன் (வயது 35). இவர் கடைகளுக்கு பலசரக்கு ஏற்றி செல்லும் லாரிகளில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
குமரேசனும், சக தொழிலாளி ஒருவரும் நேற்று மாலை வேலை முடிந்ததும் ஓரிடத்தில் அமர்ந்து கூலிப்பணத்தை பிரித்து கொண்டிருந்தனர். அப்போது குமரேசனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் வேலுவின் மகன் சூர்யா (20) அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரை பார்த்த குமரேசன் இந்த வழியாக நீ ஏன் செல்கிறாய்? என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த குமரேசன், சூர்யாவை கையால் அடித்துள்ளார்.
நீ என்னையே அடித்து விட்டாயா? எனக் கேட்டு கடும் கோபமடைந்த சூர்யா நேராக வீட்டுக்கு ஓடிச்சென்று ஒரு கத்தியை எடுத்து வந்து குமரேசனை சரமாரியாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த குமரேசனை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக குமரேசனின் மனைவி ஷீலா திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பியோடிய வாலிபர் சூரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குமரேசனின் உறவினர்கள் சேலம்- திருவண்ணாமலை கூட்ரோட்டில் மறியல் செய்தனர்.
கொலையாளி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் கொலையாளியை கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பெரும்பாலான கடைகள் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மார்க்கெட்டில் உள்ள நாகராஜன் என்பவரின் காய்கறி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கீற்று கொட்டகை என்பதால் தீ மளமளவென அருகில் உள்ள மற்ற கடைகளிலும் பரவியது.
அப்போது அந்த வழியாக தேவகோட்டை டவுன் போலீசார் ரோந்து வந்தனர். மார்க்கெட்டில் தீ எரிவதை பார்த்த அவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மார்க்கெட்டில் இருந்த காய்கறி, பேன்சி, இறைச்சி கடைகள் என 11 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானது.
தீ விபத்து சம்பவம் தொடர்பாக தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் யாரேனும் தீவைத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 2019 ஆகஸ்டு 1 முதல் 31 வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற ரீதியில் தூய்மை கிராமம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில் டில்லியில் இருந்து குழுவினருடன் சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட சிவபுரிப்பட்டியில் முத்துலெட்சுமி, எருமைப்பட்டியில் நல்லம்மாள், எஸ்.எஸ்.கோட்டையில் ராஜாத்தி மற்றும் அணைக்கரைப்பட்டியில் சாந்தி ஆகியோர் தலைமையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், மருத்துவமனைகள், தபால் நிலையங்கள் மற்றும் கோவில்களில் உள்ள கழிப்பறை வசதிகளை பார்வையிட்டனர். மேலும் சுற்றுப்புற சுகாதாரம், கழிவுகளை அப்புறபடுத்துதல் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பழத்தோன், வட்டார ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே உள்ள மருதவயலைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 43). இவர் திருப்பத்தூர் சாலையில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆரோக்கியராஜ் ஏராளமான பட்டாசுகளை கொள்முதல் செய்துள்ளார். இவை கடையில் அடுக்கி வைக்கப்பட்டன.
மேலும் பட்டாசு பாக்சுகள் வாங்கிய அவர், எம்.எம்.நகர் 2-வது வீதியில் ஒரு வீட்டில் அடுக்கி வைத்துள்ளார். குடியிருப்பு பகுதியில் பட்டாசு வைக்க கூடாது என வீதிகள் இருந்தும் அதனை மீறி ஆரோக்கியராஜ் வைத்துள்ளார்.
நேற்று இரவு அவர் வெடி பொருட்கள் பதுக்கிய வீட்டிற்கு வந்தார். அப்போது அந்தப்பகுதி பெண்கள் திரண்டு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு பட்டாசுகள் வைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்ததாக ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டார். இவரது கடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உரிமம் இன்றி நாட்டு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தற்போது உரிமம் பெற்ற நிலையில் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகள் பதுக்கியதாக ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஆசிகாபர்வீன் (வயது 20). இருவரும் கடந்த 1 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஆனந்துக்கு பிறந்தநாள்.
எனவே சாமியார் தோட்டத்தில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு கணவனும், மனைவியும் சென்றனர். அப்போது ஆனந்த் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆசிகாபர்வீன் அவரை கண்டித்தார். இதைத் தொடர்ந்து கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த ஆசிகாபர்வீன் ஆலங்குடியார் வீதியில் உள்ள வீட்டுக்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆசிகாபர்வீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
ஆசிகாபர்வீனுக்கு திருமணமாகி 1 மாதமே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.






