என் மலர்tooltip icon

    சேலம்

    • முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
    • உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.

    இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.

    வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

    புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.

    • போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு.
    • சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன என தெரிவித்தார்.

    சேலம்:

    சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் திரண்டனர். ஆனால், சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன.

    நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கிய பிரதிகள் மாநாட்டு திடலில் கிடந்தன. அவை குப்பைத்தொட்டிக்கு சென்றன. இவர்களா நீட் தேர்வை ரத்து செய்வார்கள். அவர்கள் ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்நிகழ்வு நீட் தேர்வில், தி.மு.க. எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை ஸ்டாலினும், அவரது மகனும் அரங்கேற்றுகின்றனர்.

    மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. தீர்மானங்களில் எந்த தீர்மானமும் இல்லை. திட்டமிட்டு மக்களையும் ஊடகத்தையும் ஏமாற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கின்றனர்.

    வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளன. அது எப்படி சரியாக இருக்கும்? அந்தக் கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம். இன்னும் எத்தனை கட்சிகள் வெளியே செல்லும் என்பதைப் பார்ப்போம்.

    கோவில்களை கட்டி வாக்குகளைப் பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறதா? ராமர் கோவில் கட்டியதால் பா.ஜ.க. எப்படி வெற்றி பெறமுடியும்?

    பாராளுமன்ற தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும்.

    5 ஆயிரம் பஸ்கள் வாங்குவோம் என ஒவ்வொரு ஆண்டும் சொல்கின்றனர். ஆனால் ஒரு பஸ் கூட வாங்கியதாக தெரியவில்லை. போக்குவரத்து கழகம் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பணி ஆரம்பமாகி உள்ளது என தெரிவித்தார்.

    • தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
    • ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அருள் எம்.எல்.ஏ.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. அருள் மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

    அப்போது பேசிய எம்.எல்.ஏ. அருள், ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க. அரசியல் பண்ண விரும்பலை. நல்ல ஒழுங்கத்த கத்தக்கொடுக்கற இடத்தில உங்களுக்கு அவமரியாதை, அசிங்கப்படுத்திட்டாங்க. கட்சிக்காக பேசலை. மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

    • அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது.
    • ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது. ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை ஆப் செய்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர்.

    குடிநீர் குழாய் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை தொடர்ந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான ராட்சத குழாயை நீக்கி புதிய குழாய் அமைத்தால் உடைப்பு ஏற்படாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • மாநாட்டை பார்க்கும்போது 20 வயது குறைந்ததுபோல் இருக்கிறது.
    • நமது மொழி, கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுக இளைஞரணியை பார்க்குமபோது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்.

    மாநாட்டை பார்க்கும்போது 20 வயது குறைந்ததுபோல் இருக்கிறது. 1980ல் மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்டது. எனக்கு அப்போது 30 வயது. என்னை வளர்த்த, உருவாக்கிய இடம் இளைஞரணி. 1980ல் முதல் கட்சிக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது இளைஞரணி. திமுக இளைஞரணி எனது தாய் வீடு.

    மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டுபவர் அமைச்சர் நேரு. நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு.

    நமது வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். திமுக 6வது முறையாக ஆட்சியில் உள்ளது. நவீன தமிழகத்தை உருவாக்கி கொடுத்த சிற்பி கலைஞர். 

    முன்பு நாடுகள் 3 முதல் 4 நாட்கள் நடக்கும். தற்போகது, தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 75 ஆண்டுகள் ஆகியும் திமுக கம்பீரமாக நிற்க காரணம் நமது கொள்கை என்ற உரம்.

    நமது மொழி, கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

    மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது நமது முழுக்கம். எல்லா மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி தேவை.

    எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்பது இல்லை. மத்திய அரசுக்கு பணம் தரும் ஏடிஎம் இயந்திரங்களாக மாநில அரசுகளை மாற்றிவிட்டனர்.

    வெள்ள நிவாரண நிதியை பலமுறை கேட்டும் இன்னும் தரவில்லை. திருக்குறளை சொன்னால், பொங்கல் கொண்டாடினால் போதும் என நினைக்கிறார்கள்.

    தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள், இது பெரியார் மண். இங்கு அவர்களது எண்ணம் பலிக்காது.

    கட்சிகளை உடைப்பது, எம்எல்ஏக்களை இழுப்பது, ஆளுநர் மூலம் ஆட்சி செலுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி என்பது மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும்.

    3 மாதங்கள் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கு உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்காக 3 குழுக்களை ஏற்கனவே அமைத்துவிட்டோம். 5 பேர் கொண்ட குழு 40 தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து அறிவுறுத்துவர். வெற்றி பெறுபவரே பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்படுவார்.

    நாளை நமதே, நாற்பதும் நமதே என அனைவரும் புறப்படுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார்.
    • பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மாநாட்டிற்கு உழைத்த அமைச்சர் நேருக்கு நன்றி. 22 தலைப்புகளில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. திமுக இளைஞரணியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.

    திமுக இளைஞரணி மாநில மாநாடு 100 சதவீத வெற்றி பெற்றுள்ளது. இந்நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

    சேலம் மாநாடு வரும் தேர்தலுக்கான வெற்றி மாநாடு. பல அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி.

    உழைப்பின் அடிப்படையில் நிர்வாகிகளை நியமனம் செய்தோம். மாவட்ட வாரியாக சென்று இளைஞரணியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினோம். 

    இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார். பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

    நீட் மிகப் பெரிய உயிர் கொல்லி நோயாக மாறியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 85 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

    கடந்த அதிமுக ஆட்சியின் துணையுடன் தான் மத்திய அரசு நம் உரிமைகளை பறித்தது.

    நம்மிடம் அதிகம் வரியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு குறைந்த தொகையை தருகிறது. நாம் கேட்ட வெள்ள நிவாரண நிதி மத்திய அரசு வழங்கவில்லை.

    நான் பேசியதற்கு மட்டும் மத்திய நிதியமைச்சர் பாடம் எடுத்தார். மரியாதை கொடுத்து நாம் கேட்ட நிதியை அவர்கள் தரவில்லை.

    தமிழை காக்க உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளோம். தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள்.

    நாங்கள் எந்த சோதனைக்கும் பயப்பட மாட்டோம். பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல.

    திமுக, தொண்டர்களை கைவிட்ட வரலாறு கிடையாது. இந்த இயக்கத்தை நாம் பாதுகாத்தால் தான் சமூக நீதியை பாதுகாக்க முடியும்.

    இந்திய கூட்டணி கைக்காட்டுபவரே அடுத்த பிரதமர். இந்திய கூட்டணி வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

    திமுகவின் தேர்தல் வெற்றியை தமிழக வெற்றியாக மக்கள் கொண்டாடுகின்றனர். முதலமைச்சரின் கனவை நிறைவேற்றி தருவது தான் எங்கள் வேலை.

    திமுக இளைஞரணி மாநாட்டை நாடே உற்று நோக்குகிறது. இது இளைஞர் அணி அல்ல, கலைஞர் அணி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
    • வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இளைஞர் பட்டாளம் குவிந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்கத்தின் கொடியை ஏற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.

    திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

    வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த இருளை அகற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை. 

    ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது.

    இதனை தட்டிக் கேட்டால் நமக்கு ஐஸ் கொடுப்பார்கள். ஐஸ் என்பது வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை.

    விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் வந்தால் போதாது. மக்களால் தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

    தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெற்று விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
    • இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நிர்வாகிகள் செங்கோல் வழங்கினர்.

    தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.15 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.

    மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார்.

    இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டிற்கு வந்தார். அப்போது, மாநாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் திருஉருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    பிறகு, திமுக இளைஞரணி மாநாட்டு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து, மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளி செங்கோலை வழங்கினார். 

    பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் கே.என். நேரு, வாள், கேடயமும் வழங்கினார்.

    • தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
    • பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.

    சேலம்:

    சேலம் தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார்.

    1. இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு அனுமதி தந்த தி.மு.க. தலைவருக்கு நன்றி.

    2. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்.

    3. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. பெண்களுக்கு இலவச பயண திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் சேமிப்பை உயர்த்தி இருப்பதற்கு மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

    4. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதந்தோறும் 15 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் தலா 1000 ரூபாய் பெறுகிறார்கள். குடும்ப பெண்களின் உரிமைக்கான மதிப்பை மேம்படுத்திய முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    5. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி 18 லட்சத்து 54 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். மாணவர்களின் உடல் நலனை காத்து ஊக்கம் அளிக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    6. நான் முதல்வன் திட்டங்கள் மூலம் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவிகள் மாதம் தலா ரூ.1000 பெறுகிறார்கள். இப்படி நாளைய தலைமுறையை வளர்த்து எடுக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    7. மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பலன் பெற்றுள்ளனர். 2 லட்சம் உயிர்களை காப்பாற்றி இருக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    8. நிதி நெருக்கடியான நேரத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட 2 கோடியே 19 லட் சத்து 71 ஆயிரம் 113 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சரை மாநாடு பாராட்டுகிறது.

    9. வரலாறு காணாத மழையிலும் மக்கள் துயர் துடைக்க பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வழங்கியதற்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    10. முத்தமிழ் அறிஞர் கலைஞரை போற்றும் வகையில் திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என கலைஞர் புகழ் போற்றும் அமைப்புகள் மூலம் அவர் வழிநடப்போம்.

    11. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுக்கான ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் தமிழகத்தில் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்த முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    12. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை மாற்ற இளைஞர் அணி தொடர்ந்து முன்னெடுக்கும்.

    13. தமிழகத்தில் உயிர்பலி வாங்கிய நீட் நுழைவு தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது.

    14. தமிழகத்தின் கல்வி கட்டமைப்பு சிறந்து விளங்குகிறது. அதை சிதைக்கும் வகையில் இந்தி, சமஸ்கிருதம் திணித்து குல கல்வி முறையை கொண்டு வர நடக்கும் முயற்சியை இளைஞர் அணி எதிர்க்கிறது. தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தும் போக்கை இளைஞர் அணி எதிர்த்து போராட்டம் நடத்தும்.

    15. நீட் தேர்வு, முதுநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி ஆதிக்கம் செய்யப்படுகிறது. எனவே மாநில பட்டியலுக்கு கல்வி, மருத்துவத்தை மாற்ற வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.

    16. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார் என்ற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிக்கிறது.

    17. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை நியமன பதவியான கவர்னர் பதவியை கொண்டு செயல்பட விடாமல் மத்திய அரசு தடுக்க முயற்சி செய்கிறது. கவர்னர்களை கொண்டு போட்டி அரசாங்கம் நடத்த திட்டமிடும் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை இந்த மாநாடு கண்டிக்கிறது.

    மேலும் கவர்னர் பதவி என்ற தொங்கு சதையை நிரந்தரமாக அகற்றுவதே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தீர்வு என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

    18. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.

    19. மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதற்கு மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.

    20. கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க மாநாடு கேட்டுக் கொள்கிறது.

    21. அமலாக்கத்துறை உள்பட பல்வேறு அமைப்புகளை கைப்பாவையாக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.

    22. பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து ஜனநாயக குரல் வலையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழிக்க மாநாடு உறுதி ஏற்கிறது.

    23. பாரதிய ஜனதா அளித்த வாக்குறுதியான ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இதை மறைத்து ராமர் கோவிலை காட்டி இந்துக்கள் ஓட்டுகளை வாங்கலாம் என்று நினைக்கும் பாரதிய ஜனதாதான் இந்துக்களின் உண்மையான எதிரி என்பதை இந்த மாநாடு மூலம் அம்பலப்படுத்துவோம்.

    24. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.

    25. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி காட்டும் என இளைஞர் அணி சூளுரைக்கிறது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
    • சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 9.15 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலுக்கு வந்தனர். உதயநிதி ஸ்டாலின் திறந்த ஜீப்பில் வெள்ளை நிற இளைஞர் அணியின் டி-சர்ட் அணிந்தபடி வருகை தந்தார். அவரை பார்த்ததும் கூடி இருந்த தி.மு.க. தொண்டர்கள், இளம் தலைவர் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள். அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் மாநாடு திடலுக்கு வருகை தந்தார். அவரை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பட்டன. திராவிட நாயகன், கழக தலைவர், அண்ணன் தளபதி என்ற கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், இளைஞர் அணியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் தலைமையில் அனைத்து துணை செயலாளர்களும் பங்கேற்றனர்.

    மாநாட்டுக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் அருகில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகள், மற்ற தொண்டர்கள் தூரத்தில் நின்றபடி கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    மாநாட்டு கொடியேற்ற நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டு வெல்லட்டும் வெல்லட்டும் தி.மு.க. வெல்லட்டும், வாழ்க வாழ்கவே தளபதி வாழ்கவே என வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். வாழ்த்து கோஷங்கள் விண்ணை பிளந்தது.

    இதையடுத்து தி.மு.க. கொடி கம்பம் அருகில் முன்னாள் நிறுவப்பட்டிருந்த தலைவர்கள் தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

    மாநாட்டையொட்டி திடல் முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் நிரம்பி வழிந்தனர். மாநாட்டில் கடைகள் போடப்பட்டு இருந்தது. இந்த கடைகளில் தலைவர்களின் புகைப்படங்கள் விற்பனையானது. சேலம் மாநகரில் இருந்து மாநாட்டு திடல் வரையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து பேனர்கள் வைத்திருந்தனர். வாழ்த்து பேனரில் தளபதி, சின்னவர், மாமன்னன், இளம் தலைவர் வருக... வருக... என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

    மாநாட்டில் பெத்தநாயக்கன்பாளையம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாட்டுக்கு செல்லும் வழிநெடுகிலும் வாழை மரக்கன்றுகள் நடப்பட்டு, கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன.

    • இளைஞரணி மாநாட்டையொட்டி நிகழ்ச்சிகள் இன்றே தொடங்கின.
    • டிரோன் கேமரா கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி (நாளை) மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் கடந்த 18ம் தேதி அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே காலை 7 மணியளவில் சுடர் தொடர் ஓட்டத்தை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டு சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று மாலை ஒப்படைத்தனர்.

    பிறகு, மாநாட்டு சுடரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார்.

    மேலும், இளைஞரணி மாநாட்டையொட்டி நிகழ்ச்சிகள் இன்றே தொடங்கின.

    இதில், டிரோன் கேமரா கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    ட்ரோன் வாயிலாக வானில் பெரியார், அண்ணா, கருணாநிதி, உதயசூரியன், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் ஒளிர்ந்தன. 

    • பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
    • மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு தொடர்பாக இன்று மாநாட்டு திடலில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை மாலை 5 மணி அளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமானத்தில் சேலம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வந்து விடுகிறார். மாலை 6 மணி அளவில் மாநாட்டு சுடர் திடலை வந்தடைகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாடு திடலுக்கு வருகிறார்கள்.

    1500 பேர் பங்கேற்றுள்ள மோட்டார்சைக்கிள் பேரணி மாநாடு திடலை வந்தடைகிறது. 1000 டிரோன்கள் பங்கேற்கும் டிரோன் ஷோ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமார் 1 மணி நேரம் நடைபெறுகிறது.

    மறுநாள் காலையில் (21-ந்தேதி) 9 மணி அளவில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாநாடு திறப்பு விழா மற்றும் புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு காலை 10 மணி அளவில் மாநாடு தொடங்கியவுடன் தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன.

    இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலையில் சுமார் 1 மணி நேரம் அமர்ந்து முதலமைச்சர் மாநாடு நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தி.மு.க. முன்னணி தலைவர்கள் மாநாட்டில் பேசுகிறார்கள். 7 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேரூரை நிகழ்த்துகிறார்.

    இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1200 பஸ்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருகை தர உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஏற்பாட்டின் தொடக்கமாக அமையும் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும். வெற்றி மாநாடாக அமையும். வாகனம் நிறுத்துவதற்கு 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஊரில் இருந்தும் வாகனம் வரும்போது அவர்களுக்கு ஜி.பி.எஸ். நவீன வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தார்.

    ×