search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞரணி மாநாடு பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஏற்பாடாக அமையும்: அமைச்சர் கே.என்.நேரு
    X

    தி.மு.க. இளைஞரணி மாநாடு பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஏற்பாடாக அமையும்: அமைச்சர் கே.என்.நேரு

    • பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
    • மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு தொடர்பாக இன்று மாநாட்டு திடலில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை மாலை 5 மணி அளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமானத்தில் சேலம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வந்து விடுகிறார். மாலை 6 மணி அளவில் மாநாட்டு சுடர் திடலை வந்தடைகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாடு திடலுக்கு வருகிறார்கள்.

    1500 பேர் பங்கேற்றுள்ள மோட்டார்சைக்கிள் பேரணி மாநாடு திடலை வந்தடைகிறது. 1000 டிரோன்கள் பங்கேற்கும் டிரோன் ஷோ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமார் 1 மணி நேரம் நடைபெறுகிறது.

    மறுநாள் காலையில் (21-ந்தேதி) 9 மணி அளவில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாநாடு திறப்பு விழா மற்றும் புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு காலை 10 மணி அளவில் மாநாடு தொடங்கியவுடன் தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன.

    இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலையில் சுமார் 1 மணி நேரம் அமர்ந்து முதலமைச்சர் மாநாடு நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தி.மு.க. முன்னணி தலைவர்கள் மாநாட்டில் பேசுகிறார்கள். 7 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேரூரை நிகழ்த்துகிறார்.

    இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1200 பஸ்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருகை தர உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஏற்பாட்டின் தொடக்கமாக அமையும் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும். வெற்றி மாநாடாக அமையும். வாகனம் நிறுத்துவதற்கு 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஊரில் இருந்தும் வாகனம் வரும்போது அவர்களுக்கு ஜி.பி.எஸ். நவீன வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தார்.

    Next Story
    ×