search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞரணி மாநாடு: கவர்னர் பதவியை நிரந்தரமாக அகற்ற வேண்டும் உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    X

    தி.மு.க. இளைஞரணி மாநாடு: கவர்னர் பதவியை நிரந்தரமாக அகற்ற வேண்டும் உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    • தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
    • பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.

    சேலம்:

    சேலம் தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார்.

    1. இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு அனுமதி தந்த தி.மு.க. தலைவருக்கு நன்றி.

    2. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்.

    3. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. பெண்களுக்கு இலவச பயண திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் சேமிப்பை உயர்த்தி இருப்பதற்கு மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

    4. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதந்தோறும் 15 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் தலா 1000 ரூபாய் பெறுகிறார்கள். குடும்ப பெண்களின் உரிமைக்கான மதிப்பை மேம்படுத்திய முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    5. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி 18 லட்சத்து 54 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். மாணவர்களின் உடல் நலனை காத்து ஊக்கம் அளிக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    6. நான் முதல்வன் திட்டங்கள் மூலம் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவிகள் மாதம் தலா ரூ.1000 பெறுகிறார்கள். இப்படி நாளைய தலைமுறையை வளர்த்து எடுக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    7. மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பலன் பெற்றுள்ளனர். 2 லட்சம் உயிர்களை காப்பாற்றி இருக்கும் முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    8. நிதி நெருக்கடியான நேரத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட 2 கோடியே 19 லட் சத்து 71 ஆயிரம் 113 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சரை மாநாடு பாராட்டுகிறது.

    9. வரலாறு காணாத மழையிலும் மக்கள் துயர் துடைக்க பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வழங்கியதற்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    10. முத்தமிழ் அறிஞர் கலைஞரை போற்றும் வகையில் திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என கலைஞர் புகழ் போற்றும் அமைப்புகள் மூலம் அவர் வழிநடப்போம்.

    11. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுக்கான ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் தமிழகத்தில் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்த முதலமைச்சருக்கு மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    12. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை மாற்ற இளைஞர் அணி தொடர்ந்து முன்னெடுக்கும்.

    13. தமிழகத்தில் உயிர்பலி வாங்கிய நீட் நுழைவு தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது.

    14. தமிழகத்தின் கல்வி கட்டமைப்பு சிறந்து விளங்குகிறது. அதை சிதைக்கும் வகையில் இந்தி, சமஸ்கிருதம் திணித்து குல கல்வி முறையை கொண்டு வர நடக்கும் முயற்சியை இளைஞர் அணி எதிர்க்கிறது. தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தும் போக்கை இளைஞர் அணி எதிர்த்து போராட்டம் நடத்தும்.

    15. நீட் தேர்வு, முதுநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி ஆதிக்கம் செய்யப்படுகிறது. எனவே மாநில பட்டியலுக்கு கல்வி, மருத்துவத்தை மாற்ற வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.

    16. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார் என்ற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிக்கிறது.

    17. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை நியமன பதவியான கவர்னர் பதவியை கொண்டு செயல்பட விடாமல் மத்திய அரசு தடுக்க முயற்சி செய்கிறது. கவர்னர்களை கொண்டு போட்டி அரசாங்கம் நடத்த திட்டமிடும் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை இந்த மாநாடு கண்டிக்கிறது.

    மேலும் கவர்னர் பதவி என்ற தொங்கு சதையை நிரந்தரமாக அகற்றுவதே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தீர்வு என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

    18. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.

    19. மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதற்கு மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.

    20. கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க மாநாடு கேட்டுக் கொள்கிறது.

    21. அமலாக்கத்துறை உள்பட பல்வேறு அமைப்புகளை கைப்பாவையாக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.

    22. பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து ஜனநாயக குரல் வலையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழிக்க மாநாடு உறுதி ஏற்கிறது.

    23. பாரதிய ஜனதா அளித்த வாக்குறுதியான ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இதை மறைத்து ராமர் கோவிலை காட்டி இந்துக்கள் ஓட்டுகளை வாங்கலாம் என்று நினைக்கும் பாரதிய ஜனதாதான் இந்துக்களின் உண்மையான எதிரி என்பதை இந்த மாநாடு மூலம் அம்பலப்படுத்துவோம்.

    24. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.

    25. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி காட்டும் என இளைஞர் அணி சூளுரைக்கிறது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×