என் மலர்tooltip icon

    சேலம்

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி.
    • நம்முடைய உரிமைகளை பாதுகாக்க பிரிந்து விட்டோம்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் எதிரிகளை வேரோடும், கூண்டோடும் உங்களது திறமையால் அறிவு கூர்மையால் வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம் ஆகும். நான் தகவல் தொழில் நுட்ப பிரிவு கூட்டத்தில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறையாகும்.

    இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது வீண் பழி சுமத்திக்கொண்டு இருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம்முடைய ஐ.டி. விங் நிர்வாகிகள் உண்மை செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

    தி.மு.க. அரசு நம்முடைய திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்துகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மாவட்டத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லை. இங்கு என் முன் அமர்ந்து இருக்கக்கூடிய இளைஞர்கள் தான் வருங்கால இந்தியாவை ஆளக்கூடிய சிப்பாய்கள். தமிழ்நாட்டை ஆள பிறந்தவர்கள். உங்கள் உள்ளத்தில் திறமை புதைந்து கிடக்கிறது. அதை வெளிப்படுத்துங்கள். இந்த தேர்தலின் மூலமாக. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. செய்த சாதனைகள் இந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களை மக்களிடத்தில் நேரடியாக வலைதளங்கள் மூலமாக கொண்டு சேர்ப்பது உங்களின் தலையாய கடமை.

    விஞ்ஞான உலகத்தில் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்பதை வலைதளம் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 40 சதவீத இளைஞர்கள் தற்போது சமூக வலைதளத்தை பயன்படுத்துகின்றனர். எனவே வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவது முக்கியம் ஆட்சியாளர்கள் பணத்தை நம்பியுள்ளனர். ஆனால் நாம் மக்களை நம்பி கட்சி நடத்துகிறோம்.

    அ.தி.மு.க. ஜனநாயக கட்சி., தி.மு.க. ஒரு வாரிசு அரசியல். தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் ஏதோ தில்லுமுள்ளு செய்து ஆட்சிக்கு வந்துள்ளார். இதையடுத்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை விளையாட்டு துறை அமைச்சராக்கி அவரை முன்னிலை படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. கட்சிக்காக உழைத்தவர்கள் பல ஆண்டு காலமாக அந்த கட்சியில் உயர் பதவிகள் பெற்று பல ஆண்டுகாலமாக கட்சியில் இருக்கிற மூத்த அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி. பாராளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம். மக்களுடைய குரல்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவது நம்முடைய எம்.பி.க்கள்.

    இன்றைக்கு கூட்டணி என்று வந்து விட்டால் தேசிய அளவில் இருக்கின்ற கட்சிகளோடு கூட்டணி வைத்துவிட்டால் தேசிய அளவில் பார்வை சென்று விடுகிறது. நம்முடைய மாநிலத்தின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்பது கிடையாது. அதனால் பாதிக்கப்படுவது நாம். ஆகவே தான் தமிழ்நாட்டின் மக்களுடைய உரிமைகளை பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர, நிதியை பெற்று வர, புயல், வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் படுகின்ற துன்பங்களை யார் நிவர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு நாம் மத்தியில் பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.

    ஓட்டு போட்ட மக்கள் தமிழ்நாடு, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது தமிழ்நாட்டு மக்கள். ஆகவே நாட்டு மக்கள் பிரச்சனைகள் வருகிற போது அவர்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் சொன்னால் அவர்கள் காது கொடுத்து கேட்பது கிடையாது. ஆகவே தான் நாங்கள் தனியாக பிரிந்து விட்டோம். நம்முடைய உரிமைகளை பாதுகாக்க பிரிந்து விட்டோம்.

    காரில் இருந்து ஒவ்வொரு டயர் கழண்டு ஓடுவது போல் இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக பிரிந்து செல்கிறது. கடந்த முறை ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார். தற்போது இந்தியா கூட்டணி அறிவித்தார் அவர் ஒரு ராசியானவர்.

    அ.தி.மு.க.வை பொறுத்த வரைக்கும் பொறுத்து இருந்து பாருங்கள் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
    • அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் அரசியல் கட்சி தலைவரின் பாடலுக்கு அவரது கட்சியினர் ஆட்டம் போடுவது போல திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டு வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

    அதில் மற்றொரு தரப்பினர் ஜாதி பெயரை குறிப்பிட்டு அவதூறான கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். அதற்குக் கீழ் கல்பகனூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு சமுதாயம் குறித்து அவதூறு வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார்.

    தலையில் காயம் அடைந்த ஏட்டு முருகவேல்

    தலையில் காயம் அடைந்த ஏட்டு முருகவேல்

    மேலும் அதனை தனது வாட்ஸ்-அப் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு சமுதாயத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து தலைமையில் ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்னர்.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் 3 போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் செங்கற்களை மாறி மாறி வீசினர்.


    இதனால் அப்பகுதியில் உள்ள இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் மற்றும் அந்த பகுதியில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்து சேதப்படுத்தினர். அப்போது அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சில் பாதுகாப்பு பணிக்காக வந்த வீரகனூர் போலீஸ் ஏட்டு முருகவேல் என்பவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் கல்பகனூரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்திய போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர்.

    இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் ஆகியோரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் வெளியூர் நபர்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,
    • பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ம.க. தயாராக உள்ளதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். மேலும் தமிழகத்தில் குறுவை சம்பா பாதிப்பு காரணமாக அரிசி விலை இன்னும் ஏற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத தி.மு.க.விற்கு சமூகநீதி குறித்து பேச தகுதியில்லை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் முதலமைச்சருக்குதான் மனசு இல்லை.

    நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அன்புமணி, டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் பா.ம.க. போல சாதனைகளை செய்ய வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் ஈகோ பிரச்சனையால் பொதுமக்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தான் பாதிப்பு என்ற அவர் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு குறித்து அரசு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திட்டமிட்டு திறந்திருக்க வேண்டும். கோயம்பேடு பஸ் நிலையத்தை அவசரம் அவசரமாக அப்புறப்படுத்த பார்க்கிறார்கள். இங்கு பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்

    பேட்டியின்போது எம்.எல்.ஏக்கள் அருள், சதாசிவம், வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, துணை தலைவர் தேவதாஸ் மாவட்ட செயலாளர்கள் ராஜசேகர், நாராயணன் மற்றும், கதிர் ராசரத்தினம், சத்திரிய சேகர் விஜயராசா, உள்பட பலர் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    சேலம்:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    * தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரி படுகையில் எதுவும் கட்ட முடியாது.

    * இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை.

    * அண்ணா நினைவு நாளில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வருமா என ஏங்கி கொண்டிருக்கிறோம்.

    * தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறினார்.

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    காக்காப்பாளையம்:

    இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மயானம் அமைத்தனர்.

    இந்நிலையில் மயானத்தின் எதிர்ப்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று 4 ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு நிலத்தை சமன் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பணிகள் முடக்கப்பட்டது.

    இந்த பகுதியில் ஏற்கனவே மின் மயானம், குப்பை கிடங்கு ஆகியன உள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அருள் ஆகிய 2 பேரும் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தால் மேலும் பாதிப்படையும் எனவே மாவட்ட கலெக்டர் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக கூறி கோபாலகிருஷ்ணன் மற்றும் அருள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

    இதையடுத்து அப்பகுதி மக்களிடம் இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் மற்றும் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினர்.
    • சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் திருமுருகவேளை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 10 வயது மகள் தலைவாசல் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த டிசம்பர் மாதம் 22-ந் தேதி வகுப்பறையில் இருந்தபோது தலைமை ஆசிரியர் திருமுருகவேள் (57), பாடம் தொடர்பாக கேள்வி கேட்டு, அவர் வைத்திருந்த மூங்கில் குச்சியை மாணவியை நோக்கி வீசினார்.

    அப்போது அருகில் இருந்த மற்றொரு மாணவியின் இடது கண் மீது அந்த குச்சி விழுந்தது. இதில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் பார்வை கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழும் வழங்கினர்.

    இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 24-ந் தேதி தலைவாசல் போலீசார் திருமுருகவேள் மீது வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் திருமுருகவேளை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவியின் மருத்துவ அறிக்கை பெறப்பட்டு, அரசு சார்பில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும், அரசின் அறிவிப்புபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    • ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.
    • தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான மக்கள் பழனி பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். நிர்வாக வசதிக்காக பல்வேறு குழுக்களாக இவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    நாச்சியூர் காவடிக்குழு, ஆலச்சம்பாளையம் காவடி குழு, மேட்டுத்தெரு காவடி குழு, சித்தூர் அனைத்து சமூக காவடி குழு, புளியம்பட்டி காவடி குழு உள்ளிட்ட பல்வேறு காவடி குழுவினர் பெரும் திரளாக பழனி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், 8-வது காவடி குழுவான புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவடி குழுவினர் நேற்று மாலை எடப்பாடியில் இருந்து பழனி பாதயாத்திரை தொடங்கினர். முன்னதாக அவர்கள் ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி பாதயாத்திரை தொடங்கினர். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி பாதயாத்திரை மேற்கொண்ட நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் பெரும்பாலான குடும்பத்தினர் பழனி பாதயாத்திரை சென்றதால் எடப்பாடி நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப வசதியாக எடப்பாடியிலிருந்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    • உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
    • கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பல்லடம், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.

    கடந்த 1-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5-ந் தேதி 92 ரூபாய், 10-ந் தேதி 82 ரூபாய், 15-ந் தேதி 98 ரூபாய், 20-ந் தேதி 82 ரூபாய், 25-ந் தேதி 88 ரூபாய் என படிப்படியாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.

    கடந்த 27-ந் தேதி 98 ரூபாய், நேற்று 107 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த 20-ந் தேதி 82 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 107 ரூபாயாக உயர்ந்ததால் 10 நாட்களில் கொள்முதல் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

    பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால் தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. ஒரு கோழி 3 கிலோ, 2.7 கிலோ, 2.5 கிலோ என்ற நிலையில் இருந்தது. தற்போது 2 கிலோ, 2.2 கிலோவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக, 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழிகள், 41 நாட்கள் கழித்து பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் போது விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு 5 வாரத்துக்கு முன்பே, 4 வாரம் கோழிக்குஞ்சு விடுவதை நிறுத்திவிட்டனர்.

    அதனால் வரும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். தற்போது வாரம் 4.50 கோடி கிலோ விற்பனையாகும் நிலையில், 50 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி சரிந்துள்ளது. அதன் காரணமாக கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.
    • இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆானலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபாஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள். சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை இன்னும் 350 ருபாயாக நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.
    • பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து சாலை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). இவர் அங்குள்ள பழைய பஸ் நிலையத்தில் பிரியாணி கடை திறந்தார். இதற்கான திறப்பு விழா துண்டு பிரசுரத்தில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும். இது காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து காலை 11 மணிக்கு கடையை திறந்தபோது பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பிரியாணி வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த ஆத்தூர் டவுன் போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் அதிகமாகவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.

    இதனை தொடர்ந்து உரிமையாளர், 10 ரூபாய் பிரியாணி தீர்ந்துவிட்டது என அறிவிப்பு பலகை வைத்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    • சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று விழுப்புரத்தில் ஆலோசனை நடத்திய அவர் இரவில் சேலத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து சேலம் மாநகர், சேலம் கிழக்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் செயல்வீரர்கள், வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.

    இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், அதற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.கே. செல்வம், மாதேஸ்வரன், சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

    • தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
    • தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை.

    சேலம்:

    சேலம் மல்லமூப்பம்பட்டியில் தி.மு.க., பா.ம.க., கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. 30 ஆண்டுகால ஆட்சியின் காரணமாக இந்தியாவில் உயர்கல்வி படிப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கல்வி புரட்சியில் அ.தி.மு.க. 30 ஆண்டு கால ஆட்சியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.


    கருணாநிதி அவருக்கு பின்பு மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி, நடந்து முடிந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியும் கலந்து கொண்டார். மன்னராட்சி முறையை கொண்டுவர தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. அதிகார மையம் தி.மு.க.வில் அதிகரித்து விட்டது. தி.மு.க.வில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×