என் மலர்tooltip icon

    சேலம்

    • 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம்.
    • புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    கோவை:

    தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2025-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்தில் 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய அட்டவணையின் படி கரூர்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.45 மணிக்கும், ராஜ்கோட்-கோவை ரெயில் கோவைக்கு இரவு 8.55 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு இரவு 10.50 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு காலை 9.25 மணிக்கும், திருச்சி-கரூர் ரெயில் கரூருக்கு இரவு 8 மணிக்கும், கட லூர் துறைமுகம்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.10 மணிக்கும், சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.

    சொரனூர்-கோவை ரெயில் கோவைக்கு மாலை 5.35 மணிக்கும், மங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு மாலை 6.25 மணிக்கும், சில்சார்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவைக்கு முற்பகல் 11.55 மணிக்கும், பெங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு இரவு 9.05 மணிக்கும், சேலம்-கரூர் ரெயில் கரூருக்கு காலை 7.15 மணிக்கும் வந்தடையும்.

    அதேபோல 7 ரெயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் மாலை 5.35 மணிக்கும், மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரெயில் மதியம் ஒரு மணிக்கும், கோவை-சொரனூர் ரெயில் மாலை 4.25 மணிக்கும், கோவை-ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.45 மணிக்கும், கரூர்-சேலம் ரெயில் இரவு 8.05 மணிக்கும், ஈரோடு-பாலக்காடு டவுன் ரெயில் காலை 7 மணிக்கும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரெயில் இரவு 7.45 மணிக்கும் புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது.
    • நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் சேலம் ,ஈரோடு, நாமக்கல், கரூர் ,திருச்சி ,தஞ்சை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வேலூர், சென்னை உள்பட தமிழகத்தின் பெருபாலான மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.

    மேட்டூர் அைணயில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்படும்.

    இதேபோன்று கால்வாய் பாசன தேவைக்காக ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு மாறாக ஜூலை 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதன் காரணமாக ஜூலை 30-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை 43-வது முறையாக எட்டி கடந்த ஆண்டு (2024) முதன்முறையாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி 120 அடியை எட்டி 2-வது முறையாக நிரம்பியது.

    ஒரு சில வாரங்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை குறைந்தது. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக மேட்டூர் அணை கடந்த 2022-ல் ஒரே ஆண்டு 3 முறை முழுகொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அணை வரலாற்றில் 43-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி முதல் முறையாக நிரம்பியது.

    அதன் பிறகு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து வருடத்தின் கடைசி நாளான நேற்று (31-ந்தேதி) அணை 45-வது முறையாக நிரம்பி இருக்கிறது.

    இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,875 கன அடியிலிருந்து 1,791 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

    அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை 120 அடி எட்டி உள்ளதால் மேட்டூர் காவிரி உபரி நீரேற்றும் திட்டத்தின் கீழ் திப்பம்பட்டியில் உள்ள உபரி நீரேற்றும் நிலையத்தில் இருந்து மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்கும் செயல்பாட்டினை இன்று மாலை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திப்பம்பட்டி நீரேற்றும் நிலையத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். 

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

    ஏற்காடு:

    தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏற்காடு களைகட்டியுள்ளது. புத்தாண்டையொட்டி ஏற்காட்டில் உள்ள முக்கிய நட்சத்திர தங்கும் விடுதிகளில் இன்று இரவு சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.

    இதற்காக நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பாட்டு, கும்மாளம் என அனைத்து நிகழ்ச்சிக்கும் தயாராக உள்ளன. இந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது. இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.

    ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

    ஏற்காட்டில் தற்போது மூடு பனியுடன், கடும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரையும் பொருட்படுத்தாமல் புத்தாண்டை கொண்டாட ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    • பொதுமக்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
    • உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா இருக்கூர், மாணிக்கநத்தம், கோப்பணம் பாளையம், வீரணம்பாளையம் ஆகிய 4 ஊராட்சிகளின் எல்லையில் பஞ்சபாளையம் பகுதியில் அமைந்துள்ள காலாவதியான கல்குவாரியில் மழை நீர் தேங்கியுள்ளது.

    இந்த தண்ணீர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் நீர் ஆதாரமாக உள்ளது.

    இந்நிலையில் இந்த நீர் நிலை தேக்கத்தில் பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் சாக்கடை கழிவு நீரை கொண்டு வந்து தேக்கி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அப்பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்த நீர்நிலையை சுற்றியுள்ள இருக்கூர், மாணிக்கநத்தம், வீரணம் பாளையம், கோப்பணம் பாளையம் ஆகிய 4 கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட ஊர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நீர்நிலையில் சாக்கடை கழிவுநீரை கொண்டு வந்து தேக்கினால் இப்பகுதி நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடும். மேலும் விவசாய நிலமும் பாதிக்கும்.

    எனவே சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என கூறி மாணிக்கநத்தம், இருக்கூர், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பஞ்சபாளையம் மெயின் ரோட்டில் இன்று காலை முதல் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

    • பஸ் டிரைவருக்கும், போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.
    • செந்தில், சுகவனேஸ்வரன் ஆகிய 2 போலீஸ் ஏட்டுகளும் காயம் அடைந்தனர்.

    சேலம்:

    தமிழக-கர்நாடக எல்லையான மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காடு பகுதியில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிலர் சொகுசு பஸ் ஒன்றில் தென் மாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா வந்தனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு ஆன்மிக தலங்களை பார்த்து விட்டு கர்நாடக மாநிலத்திற்கு செல்வதற்காக காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

    அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த மதுவிலக்கு போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரன், தமிழரசன் ஆகியோர் இந்த சொகுசு பஸ்சின் பெர்மிட் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பஸ் டிரைவருக்கும், போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் வண்டியில் இருந்த இரும்புகம்பியை எடுத்து போலீஸ் ஏட்டுகளை தாக்கினார். அவருக்கு ஆதரவாக பஸ்சில் இருந்த பயணிகளும் அங்கு வந்து சோதனை சாவடி போலீசாரை தாக்கினர். இதில் செந்தில், சுகவனேஸ்வரன் ஆகிய 2 போலீஸ் ஏட்டுகளும் காயம் அடைந்தனர்.

    அதே நேரத்தில் அவர்களும் தங்களை தற்காத்து கொள்ள சுற்றுலா பயணிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்கு வந்த அந்த பகுதி மக்கள் சுற்றுலா பயணிகளில் சிலரை சோதனை சாவடியில் பிடித்து வைத்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலரை கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுற்றுலா பஸ் டிரைவரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த சிவநாராயணன் (52), கீளினர் அஜய் (20) ஆகியோர் மீது கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து டிரைவர் மற்றும் கீளீனர் ஆகியோர் ஜாமினீல் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த பேருந்து மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த நிலையில் இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை சாவடியில் பணியாற்றிய போலீசார் செந்தில், சுகவனேஸ்வரன், தமிழரசன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து சேலம் மாவட்ட சூப்பிரண்டு கவுதம் கோயல் உத்திரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாளை மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி.
    • சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாளை (திங்கட்கிழமை) மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். மற்றும் ஆங்கில புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ளதால் சேலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது. பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்படுவது வழக்கம் ஆகும். இதனால் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகளிடம் இருந்து பூக்கள் வரத்து குறைந்து விட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து அமாவாசை, ஆங்கில புத்தாண்டு ஆகிய விசேஷ நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பூக்கள் வரத்தும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது.
    • அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்து இருந்தது.

    சேலம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பாண்டில் அணை 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. மேலும் டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக தண்ணீர் தேவை குறைந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விடகுறைந்த அளவிலேயே தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரதொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2516 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்து இருந்தது. எனவே அணை நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.15 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2701 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • தற்போது அணையில் 93.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2701 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 93.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
    • முக்கிய இடங்களில் கூடி இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். மேலும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    சேலம்:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்தது.

    இதனால் ஏற்காடு மலை பாதையில் பல்வேறு பகுதிகளிலும் நீர் வீழ்ச்சி ஏற்பட்டு தண்ணீர் அருவியாக தற்போது வரை கொட்டி வருகிறது. ஏற்காடு உள்பட மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காட்சி அளிப்பதுடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் ஏழை மக்களின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்தது. இரவில் பனி பொழிவும் அதிக அளவில் இருந்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர்ச்சி நிலவி வருகிறது. ஏற்காட்டில் நேற்று சாரல் மழையில் நனைந்த படி படகு குழாமில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் இன்றும் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    மேலும் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலை கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் குவிந்துள்ளனர்.

    இன்றும் காலை முதலே இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு அதிக அளவில் சென்று வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள முக்கிய இடங்களில் கூடி இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். மேலும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் இன்று காலையில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவியதால் ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன. மேலும் ஏற்காடு மலையின் மேல் பகுதியில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் முத்து போல காட்சி அளிக்கிறது.

    2 வாரங்களுக்கு பிறகு ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
    • அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2886 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.63 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • தீபாவளி பண்டிகைக்கு போதுமான ஆர்டர்கள் வராததால் வெள்ளி தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றியும், வேலை இல்லாமலும் தவித்தனர்.
    • பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செய்யப்படும் கலை நயமிக்க வெள்ளி கொலுசுகளுக்கு பெரும் மவுசு உண்டு. இதனால் இங்கு தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதையொட்டி சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வெள்ளி பொருட்கள் உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பண்டிகை காலங்களில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்பட வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவியும். ஆனால் கடந்த தீபாவளி பண்டிகைக்கு போதுமான ஆர்டர்கள் வராததால் வெள்ளி தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றியும், வேலை இல்லாமலும் தவித்தனர்.

    தொடர்ந்து தமிழகத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்பட வெள்ளி விற்பனை அதிகரிக்கும் என்பதால் அப்போது ஆர்டர்கள் வரும் என வெள்ளி தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர்.

    அதன் தொடர்ச்சியாக பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி உள்பட வெள்ளி பொருட்களுக்கான ஆர்டர்கள் தற்போது வர தொடங்கி உள்ளன. இதனால் அதனை தயாரிக்கும் பணியில் வெள்ளி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது-

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது. இந்த ஆர்டர்களை தயாரிக்க தொடங்கி உள்ளோம். முன்பு பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே 75 சதவீத ஆர்டர்கள் கிடைத்து விடும். ஆனால் தற்போது 25 சதவீத ஆர்டர்கள் மட்டும் கிடைத்துள்ளன.

    அதாவது ஒரு லட்சம் வெள்ளி கொலுசுகளுக்கு ஆர்டர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது 25 ஆயிரம் வெள்ளி கொலுசுகளுக்கு மட்டுமே ஆர்டர் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஆர்டர்கள் குறைந்துள்ளது. மீதி ஆர்டர் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    வெள்ளி விலை ஒரு கிராம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 110 ரூபாய் வரை சென்ற நிலையில் தற்போது விலை குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வெள்ளி பொருட்களை பொது மக்கள் வாங்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீர்வரத்து இன்று 2 ஆயிரத்து 331 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
    • தற்போது அணையில் 92.72 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும், பாசனத்துக்கும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டில் அணை 2 முறை நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறைந்தது.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.53 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1960 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2 ஆயிரத்து 331 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.72 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×