என் மலர்
சேலம்
- கணவன்-மனைவி இருவரும் செய்வதறியாது தவித்தனர்.
- நேற்றும் வங்கியை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு வந்து கடன் தொகை கேட்டு சத்தம் போட்டனர்.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் முத்தையால் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 46). வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி ரேகா (40). இந்த தம்பதியின் மகள் ஜனனி (17). ஒரே மகள் ஆவார். இவர் சேலம் அழகாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பால்ராஜ் தான் வசித்து வந்த இடத்தில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி புதியதாக 2 தளங்களை கொண்ட அடுக்குமாடி வீடு கட்டினார். மேலும் மனைவியும் தனியாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வீட்டில் வெள்ளிப்பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். இதில் கிடைத்த வருமானத்தை கொண்டு குடும்ப செலவுக்கும், கடன் தொகைக்கும் செலவழித்து வந்தார்.
இதனிடையே அவருக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடன் தொகையை மாதந்தோறும் செலுத்த முடியாமல் தாமதமானது. கடன் தொகையை குறிப்பிட்ட நாளில் சரியாக கட்டாததால் கடன் தொகை, அபராத வட்டியுடன் சேர்த்து பல மடங்கு அதிகமானது.
இதனால் கணவன்-மனைவி இருவரும் செய்வதறியாது தவித்தனர். இதனிடையே கடன் தொகையை திரும்பி கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டது. தினமும் குடும்பத்தினர் மன வேதனையில் தவித்தனர்.
நேற்றும் வங்கியை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு வந்து கடன் தொகை கேட்டு சத்தம் போட்டனர். அப்போது நாளை (இன்று) கடனை கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளனர்.
இந்த நிலையில் வங்கியில் கடன் செலுத்த பணம் இல்லாததால் மன வேதனை அடைந்த பால்ராஜ் இரவு உயிரை விட முடிவு எடுத்தார். நேற்று இரவு பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகிய 3 பேரும் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் உறவினர் சந்தேகம் அடைந்தார். உறவினரின் மகள் வழக்கம்போல் பள்ளிக்கு ஜனனியுடன் செல்வார்.
இதனால் ஜனனியை பள்ளிக்கு கூப்பிட வேண்டி உறவினர் மகள் அவருடைய வீட்டுக்கு சென்றார். அங்கு கதவு திறந்து கிடந்தது. வீட்டின் அறையில் பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகிய 3 பேரும் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் வீட்டின் முன்பு திரண்டு கதறி அழுதனர்.
இது பற்றி தகவல் அறிந்த சேலம் மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனர் கீதா மற்றும் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி, மகள் ஆகிய 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அறையில் கடிதம் இருக்கிறாதா? என சோதனை நடத்தினர். இதில் ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது. பால்ராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் உள்ள தகவலை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். அதில் கடன் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடன் தொல்லையால் கணவன்-மனைவி, மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
- வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஒரு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.
இந்த வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அடகு நகைகளை சோதனை செய்வது வழக்கம், அதன்படி கடந்த 24-ந் தேதி வழக்கம் போல அடமான நகைகளை மற்றொரு வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் சோதனை செய்தனர்.
அப்போது 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கெங்கவல்லியை அடுத்த கூடமலை, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 41 லட்சம் பெற்றிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வங்கியின் மேலாளார் மித்ரா தேவி வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தரிடம் விசாரித்தார். அதில் அவர் 84 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகையை 2 பேரின் பெயரில் வைத்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது. மேலும் அதில் பாதி பணத்தை திரும்ப செலுத்தி உள்ளார்.
இதுகுறித்து வங்கி மேலாளர் கெங்கவல்லி போலீசில் பாலச்சந்தர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாலச்சந்தரை கைது செய்தனர்.
மேலும் வங்கி மேலாளர் மித்ரா தேவி, உதவி மேலாளர் ஜெகன், வங்கி கேசியர் வேலுசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தர் ஏற்கனவே நடுவலூர் வங்கி கிளையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கெங்கவல்லி கிளைக்கு மாற்றப்பட்டார். அங்கு 11 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் பாலச்சந்தர் ரூ.1 கோடி மதிப்பிலான வீடு கட்டியுள்ள நிலையில் மற்றொரு சொத்து வாங்குவதற்காக போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணை மூலம் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறப்பது வழக்கம்.
அணையின் நீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறிப்பிட்ட நாளில் அல்லது பின்னர் திறக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிக அளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பான உத்தரவு வந்ததும் அதிகாரிகள் தண்ணீர் நிறுத்தம் செய்வார்கள்.
- பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
- கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்தது. பின்னர் தை மாதம் பிறந்ததும் பனிப்பொழிவு சற்று குறைந்ததால் குளிரின் தாக்கம் சற்று குறைந்தது.
குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடாமாடுகின்றனர்.
இந்த குளிர் காலை 11 மணி வரை நீடிப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் தவித்து வருகிறார்கள்.
இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் காலை நேரங்களில் செல்பவர்கள் குளிரில் நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் குளிர்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
சேலம் மாநகரில் கடந்த வாரம் குளிரின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பனிப்பொழிவு அதிகரிப்பால் நேற்று குளிரின் தாக்கம் சற்று அதிகரித்தது. இன்று மேலும் பனிப்பொழிவு அதிகரிப்பால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து வாட்டி வதைக்கிறது.
இதனால் பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகளை நிறுத்தி விட்டு போர்வைகளை போர்த்திய படியே பொது மக்கள் தூங்கும் நிலை ஏற்பட்டது. இன்று அதிகாலை முதல் 9 மணி வரை குளிரின் தாக்கம் இருந்ததால் இரு சக்கர வாகனங்களில் வெளியில் சென்றவர்கள் கடும் குளிரால் நடுங்கும் நிலையே நீடித்தது.
- தமிழக அணி 2-வது இன்னிங்சில் 305 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- சண்டிகர் 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சேலம்:
90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இதில் டி பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் சண்டிகர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சண்டிகர் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து 106 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சண்டிகர் முதல் இன்னிங்சில் 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷிவம் பாம்ப்ரி 108 ரன்கள் எடுத்தார்.
97 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழகம் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 150 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 403 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சண்டிகர் அணி களமிறங்கியது. அந்த அணி 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மனன் வோரா சதம் வீணானது.
தமிழகம் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.
- 2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் சேலம் மேற்கில் போட்டியிட்ட நாகம்மாள் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
- நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்ட பொருளாளர் சதீஷ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். 2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் சேலம் மேற்கில் போட்டியிட்ட நாகம்மாள் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ள நிர்வாகிகள், அதற்கான காரணம் ஏதும் கூறவில்லை.
- தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
- போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தனுஷ் கண்டன் (25). இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி கிராமம் தோழுரை சேர்ந்த குமாரசெல்வம் என்பவரது மகள் ரோஷினி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் நட்பு காதலாகி அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பிறகு காதல் ஜோடி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருமண வயதினை எட்டியிருந்ததால், இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரோஷினியை அவரது காதல் கணவர் தனுஷ்கண்டனுடன் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் எடப்பாடி அடுத்த சின்னதாண்டவனூர் பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை தனுஷ்கண்டன் வீட்டிற்கு சொகுசு காரில் வந்த இறங்கிய கும்பல் கையில் பட்டா கத்தியுடன் அதிரடியாக தனுஷ் கண்டன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக கதற கதற காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றனர். மேலும் அதனை தடுக்க வந்த அப்பகுதி மக்கள் மற்றும் தனுஷ்கண்டன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோஷினியை காரில் கடத்தி சென்றது.
இதுகுறித்து தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் ரோஷினியை கடத்திச் சென்ற கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள டி.எஸ். பாளையத்தில் பதுங்கி இருந்த கும்பலை நேற்று நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அப்பகுதியில் வெங்கடாஜலம் என்பவர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரோஷினியை மீட்டனர்.
மேலும் இந்த கடத்தல் தொடர்பாக ரோஷினியின் தந்தை குமாரசெல்வம், தாய் சித்தரா மற்றும் அவரது சகோதரி சவுமியா, உறவினர் லட்சுமணன், ஜோதிடர் கருப்பண்ணன், வெங்கடாசலம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தல் வழக்கில் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தப்பட்ட ரோஷினி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை எடப்பாடி போலீஸ் நிலைய பெண் போலீசார் செய்து வருகின்றனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.
- அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
- 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ரூ.10-க்கு உணவு வழங்கி ரூ. 100 கோடி வரை வசூலித்த மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நூதன முறையில் அரங்கேறிய மோசடி சம்பவத்தில் மக்கள் ஏமாற இருந்தனர். எனினும், காவல் துறையினர் மோசடி கும்பலை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்த மோசடி கும்பல் மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.10-க்கு உணவு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கவும் பணம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளது.
விளம்பரத்தை நம்பி பலரும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்துள்ளனர். நேற்று, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ரூ.2 லட்சம் கிடைக்கும் என இந்த மோசடி கும்பல் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால், போலீசார் அங்கு வந்து விசாரிக்க அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநகர போலீசார் குவிக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதில் எந்த ரசீதும் கொடுக்காமல் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. திருமண மண்டபத்தில் இருந்து ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- மேட்டூர் அணையில் தற்போது 81.16 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதே நேரம் அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 111.92 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 81.16 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் ஆண்டுதோறும் ஏன் அதிக கடன் வாங்க வேண்டும்.
- டெல்டா பகுதிகளில் அதிக மழை பெய்து ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
ஓமலூர்:
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் ஆண்டுதோறும் ஏன் அதிக கடன் வாங்க வேண்டும். தி.மு.க. ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்து தி.மு.க. அரசு சாதனை படைக்க உள்ளது.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும், சேகர் பாபுவும் என்னை 'அமைதிப்படை அமாவாசை' என்று விமர்சனம் செய்கிறார்கள். இருவரும் அரசியல் வியாபாரிகள். இவர்கள் அ.தி.மு.க.வில் இருந்த போது சட்டசபையில் கருணாநிதி மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்களை எப்படி எல்லாம் விமர்சனம் செய்தார்கள் என்று அவைக்குறிப்பில் உள்ளது என்பதை அவர்கள் அறிய வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு 'அமைதிப்படை அமாவாசை' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். தனக்குத்தானே அந்த பெயரை தேர்வு செய்து கொண்டார். அமைச்சர்கள் சேகர்பாபுவும், செந்தில் பாலாஜியும் அரசியலில் வேடந்தாங்கல் பறவைகள் போன்றவர்கள்.
சில காலம் ஒரு இடத்தில் இருப்பார்கள். சில காலம் வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள். இதுவே அவர்களுடைய நிலைப்பாடு. கட்சியின் மீது விசுவாசம் இருப்பவர்கள் என்னை போன்று ஓரிடத்தில் நின்று பொறுமை காப்பார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு கட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா பகுதிகளில் அதிக மழை பெய்து ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதேபோன்று அரசு கொள்முதல் நிலையங்களில் 17-ல் இருந்து 21 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அங்கு குடிநீர் கூட கிடைப்பதில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு திருப்பதியில் 2, 3 நாட்கள் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்யவில்லையா? என்று கூறுகிறார். திருப்பதியில் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அது போன்று இங்கு என்ன வசதிகள் உள்ளது? பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதை விட்டு விட்டு அவர்களை விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, அமைப்பு செயலாளர் செம்மலை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- அணைக்கு வினாடிக்கு 321 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
- பாசனப்பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணை கடந்த ஆண்டு 3-வது முறை நிரம்பியது. குறிப்பாக ஆண்டின் கடைசிநாளில் அணை 3-வது முறையாக நிரம்பியதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது கடந்த 1-ந் தேதி முதல் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசனப்பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.
இதை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 112.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 321 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.
- சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஏற்காடு:
தமிழகத்தில் கடந்த 13-ந் தேதி முதல் பொங்கல் தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர். குறிப்பாக ஏற்காடு வந்துள்ள இவர்கள் படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர். ஏற்காட்டில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.

குளிர் அதிகமாக இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் படகு பயணம் செய்தனர். கிளியூர் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் சாலையோரங்களில் உள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டி உள்ளது. சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.






