search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel Appraiser"

    • ஈஸ்வரனுக்கும், அவரது தம்பியான கணேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • குடும்பத்தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுத்தறிவு வாசக சாலை தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 45).

    இவர் கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி சந்தனமாரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    இவரது தாயார் அருள் மணி ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் தனது இளைய மகன் கணேசன் (40) என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை தினங்களில் ஈஸ்வரன் தனது தாயாரை பார்ப்பதற்காக தளவாய்புரத்தில் இருந்து வந்து செல்வார்.

    இதற்கிடையே ஈஸ்வரனுக்கும், அவரது தம்பியான கணேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பலமுறை அவரது தாய் மற்றும் உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் விரோதம் தீர்ந்தபாடில்லை.

    இந்நிலையில் நேற்று ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மயூரநாத சுவாமி கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஈஸ்வரன் தனது மனைவி சந்தனமாரி மற்றும் குழந்தைகளுடன் ராஜபாளையம் வந்திருந்தார்.

    தேரோட்டத்திற்கு சென்றுவிட்டு இரவில் ஈஸ்வரன் தனது தாய் வீட்டிற்கும், அவரது மனைவி சந்தனமாரி ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் உள்ள சகோதரி கருப்பாயியின் வீட்டிற்கும் சென்று இருந்தனர். அப்போது தாயை பார்க்க சென்ற ஈஸ்வரனுக்கும், அவரது தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், தனது அண்ணன் என்றும் பாராமல் ஈஸ்வரனை தொரட்டி என்று அழைக்கப்படும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஈஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கணவர் உடலை பார்த்து அவரது மனைவி சந்தனமாரி கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து அவர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணேசனை தீவிரமாக தேடி வருகிறார். குடும்பத்தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×