என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் அவசரம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று சரத்குமார் தெரிவித்தார். #sarathkumar #Nirmaladevi
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் கவுரவத்தலைவர் சீனிவாசன் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சி தலைவர் சரத்குமார் இன்று புதுக்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பெண் பேராசிரியை மாணவிகளிடம் நடத்திய சர்ச்சைக்குரிய உரையாடல் வழக்கில் கவர்னர் ஏன்? இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்று தெரியவில்லை.

    தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் அவசரம் காட்டுவது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசு பேராசிரியை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியுள்ளது. எல்லா வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுவது தவறான வாதம்.


    காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் மட்டுமே காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். ஆனால் கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? என்பது சந்தேகமே. அதன் பிறகும் அமையுமா? என்பதும் கேள்விக்குறியே.

    தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் காவிரி பிரச்சனையில் ஒருமித்த கருத்தோடு போராடி வருகிறது. வருகிற 25-ந்தேதி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காவிரி பிரச்சனைக்காக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் பாலியல் தொந்தரவுகளும் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி தேவையில்லை என்று கூறுவது தவறானது. அது போன்ற கல்வி இருந்தால் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை அருகே இந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சால் திராவி டர் கழகத்தினர்-இந்து அமைப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கட்டு மாவடியில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் ராவணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சாமி, கடவுள் எதுவும் கிடையாது என்று பேசினர்.

    இதையறிந்த கட்டுமாவடி, கணேசபுரம், செம்பியன் மகாதேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் அங்கு திரண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த திராவிட கழக நிர்வாகிகளிடம், நீங்கள் இந்து கடவுள்களை மட்டுமே விமர்சித்து பேசுகிறீர்கள் என்று கூறி தட்டிக்கேட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். பதிலுக்கு திராவிடர் கழகத்தினரும் நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறியவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசியும் தாக்கி கொண்டனர். திராவிட கழகத்தினருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு திரண்டு வந்தனர்.

    இதனிடையே திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இந்த மோதல் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கோட்டைப்பட்டினம் போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தினால் அங்கு பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    காஷ்மீர் சிறுமி ஆசிபாவை படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அறந்தாங்கி:

    காஷ்மீர் சிறுமி ஆசிபாவை படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டதமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க மாவட்ட செயலாளர் கிரீன்முகமது தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜெகதை செய்யது முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்ட த்தில் திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி துணைச் செயலாளர் ஹுமாயூன்கபீர் , மார்க்சிஸ்டு கம்யூ கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், இந்திய கம்யூ. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் திருமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத் காரம் செய்து, படுகொலை செய்தவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கோட்டை அபுசாலிகு, நகரச் செயலாளர் பைசல், நகர துணைச் செயலாளர் முகமது ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே தமிழக பிரச்சினைகள் தீரும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். #Cauveryissue

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பா. ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினை இவ்வளவு தூரம் விசுவரூபம் எடுத்ததற்கு தி.மு.க.தான் காரணம். செய்த தவறை மறைப்பதற்காக தான் மு. க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். மோடியை திரும்பி போக சொன்னவர்கள் கவர்னரை சந்தித்து, பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்டது ஏன்?

    வைகோவின் நடவடிக்கைகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். தேனியில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தவர், பிரதமர் வந்த போது திடீரென சென்னைக்கு வந்தது ஏன்? ஏதும் திட்டத்தோடு வைகோ சென்னைக்கு வந்தாரா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்.

    திராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே தமிழக பிரச்சினைகள் தீரும். இனி ஒரு காலத்திலும் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.

    நதிகள் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட முடியாது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு 4 மாநில பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளின் பட்டியலை மத்திய அரசிடம் அளித்தால், மத்திய அரசு தங்களுடைய பிரதிநிதிகளை சேர்த்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் வன்முறையை தூண்டி வருகின்றனர். ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Cauveryissue

    தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கந்தர்வக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கந்தர்வக்கோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்க்கு வட்டாரத் தலைவர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். செயலர் துரையரசன், துணைச் செயலர் சேகர், பொருளாளர் சண்முகம்,  மாவட்ட பொருளாளர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி மாநில பொதுக்  குழு உறுப்பினர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். 

    ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வக்கோட்டை வட்டாரக் கிளையை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
    உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் மீண்டும் தொடர் போராட்டம் நடத்த போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #Hydrocarbon #protest
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை, நெடுவாசல், வாணகன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இதனை கண்டித்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 2 கட்டங்களாக 200 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் குழாய்களை 2017 டிசம்பர் மாத இறுதிக்குள் அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தது.

    ஆனால் 1 வருடம் கடந்த நிலையில், இதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீண்டும் நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது ஏப்ரல் 12 முதல் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

    தற்போது தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருவதால் நேற்று முதல் நடைபெற இருந்த ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    கடந்த 3-ந்தேதி இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் டெண்டரில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் நாளை மறுநாள் அடுத்த கூட்டம் நெடுவாசலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்த தகவல்கள், போராட்டத்தின் மூலம் அரசின் கவனத்தை ஈர்ப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

    இது குறித்து நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும் தமிழர் நல பேரியக்கத்தின் மாநில பொதுச்செயலாளருமான நெடுவை பழ.திருமுருகன் கூறியதாவது:-

    நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிப்பு கடந்த ஏப்ரல் 3-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நகல் கிடைத்ததும் அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நாளை மறுநாள் 15-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்.

    தற்போது காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போராட்டம் நடத்தினால் எங்கள் மீது அரசின் கவனம் திரும்பாது.

    அதனால் தமிழக அரசு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம். அவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தால் எங்களுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறோம்.

    எனவே நாளை மறுநாள் நடைபெறும் கலந்தாலோசனை கூட்டத்தில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டு மீண்டும் தொடர் போராட்டம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Hydrocarbon #protest

    கீரனூர் காந்தி சிலை அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கிறிஸ்தவர்கள், விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கீரனூர்:

    கீரனூர் காந்தி சிலை அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககாலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து திருச்சி மறை மாவட்டம் மற்றும் கீரனூர் மறை மாவட்டம் கிறிஸ்தவர்கள், விவசாய சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி மறைமாவட்ட பொறுப்பாளர் ஜுலி தலைமை தாங்கினார்.  தலைவர் யூஜின், கீரனூர் பங்கு தந்தை எட்வர்டுராஜா மற்றும் 13 பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இணைசெயலாளர் ஆனந்த் மாணிக்கம், விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவி, செய லாளர் நடராஜன், நகர தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், தமிழகத்தை வஞ்சிக்காதே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இறுதியில் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கீரனூர் காவல் துறை கண்காணிப்பாளர் சார்லஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர்.
    புதுக்கோட்டை நிஜாம் பாக்கு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.3 கோடி பணம் சிக்கியது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் பிரபலமான நிஜாம் பாக்கு நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள நிஜாம் பாக்கு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நிஜாம் பாக்கு தயாரிப்பு நிறுவனம் மற்றும் அலுவலகம், உரிமையாளர் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    சோதனை முடிந்து சென்ற அதிகாரிகள் இரவு புதுக்கோட்டையிலேயே தங்கினர். இன்று 2-வது நாளாக காலை 9 மணியில் இருந்து சோதனையை தொடங்கினர். புதுக்கோட்டை ராஜகோ பாலபுரம், மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள நிஜாம்பாக்கு தயாரிப்பு நிறுவனங்கள், நிஜாம் காலனியில் உள்ள உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதே போல் சென்னை அமைந்தகரை மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள நிறுவனங்கள், உரிமையாளர்களின் வீடுகளிலும், மதுரையில் உள்ள நிறுவனம், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இன்று நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

    புதுக்கோட்டையில் உள்ள நிறுவனத்திற்கு சென்ற அதிகாரிகள் உட்புறமாக அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் கதவுகளை பூட்டிக் கொண்டு சோதனை நடத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஒரு ஆண்டிற்குள் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    அறந்தாங்கி அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் 4 வீடுகளில் ஓடுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அழியாநிலையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாம் 1990-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தற்போது இந்த முகாமில் 233 வீடுகளில் 1700 அகதிகள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள வீடுகளில் கடந்த 2008-ஆம் ஆண்டு 58 ஓட்டு வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் வீடுகள் பழுது பார்க்கப்படாததால், வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. 

    இந்த வீடுகளில் நடராஜன், ஜனார்த்தனன், சுப்பிரமணியன், இந்திராணி ஆகிய 4 பேரின் வீடுகளில் உள்ள ஓடுகள் நேற்று திடீரென்று பெயர்ந்து விழுந்தன. ஓடுகள் பெயர்ந்து விழுந்ததில் நடராஜன், இந்தி ராணி ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற வீடுகளில் ஓடுகள் பெயர்ந்து விழுந்த போது யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. 

    அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் 4 வீடு களில் ஓடுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் 9 ந்தேதி நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடுப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல இந்த ஆண்டும் பங்குனி திருவிழாவையொட்டி கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 1-ந் தேதி இரவு முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ந் தேதி பால்குட ஊர்வலமும், பொங்கல் வைத்து வழிபாடும் நடைபெற உள்ளது.
     விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது.

    தேரோட்டத்தையொட்டி 9-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை ஆகும், அதற்கு பதிலாக 21-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது. 

    இந்த உள்ளூர் விடுமுறையன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதால், கல்லூரி மாணவி திடீர் மணப்பெண் ஆனார். தக்க நேரத்தில் கைகொடுத்த அவருக்கு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கறம்பக்குடி தாலுகா தீத்தானிப்பட்டி சண்முகநாதன் மகன் நதீஷ் என்பவருக்கும், 4-ந் தேதி (நேற்று முன்தினம்) திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்த வேளையில், 3-ந் தேதி மணப்பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து ஆலங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென மாயமானது குறித்து தகவல் அறிந்த மாப்பிள்ளை வீட்டார், நிச்சயிக்கப்பட்ட அதே நாளில், வேறு பெண்ணை பார்த்து திருமணம் நடத்தியே தீருவது என்று முடிவு செய்தனர்.

    அப்போது பாச்சிக்கோட்டையிலிருந்து வந்து, ஆலங்குடி படேல் நகரில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை மாப்பிள்ளை வீட்டார் அணுகி அவரது மகள் தேவதர்ஷினியை (20) பெண் கேட்டனர். அதற்கு அவர், தனது மகள் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார். படிப்பு முடிந்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிக்க முடியும் என்று கூறினர்.

    அதற்கு மாப்பிள்ளை வீட்டார், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்கட்டும். மேலும் வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கூறினர். மாப்பிள்ளை வீட்டாரின் வற்புறுத்தலை தட்ட முடியாத கார்த்திக்கும், அவரது குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். அதன்பிறகு 3-ந் தேதி இரவே நிச்சயம் செய்து, பெண்ணை அழைத்துக்கொண்டு குமரமலை முருகன் சன்னதியில் வைத்து நதீசுக்கும், தேவதர்ஷினிக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். நிச்சயிக்கப்பட்ட பெண் காணாமல் போனாலும், தக்க சமயத்தில் கைகொடுத்த கல்லூரி மாணவி தேவதர்ஷினியை மாப்பிள்ளை வீட்டார் மற்றும் நண்பர்கள் வாழ்த்தினார்கள். 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில்வே தண்டவாளத்தில் நின்று போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.

    பின்னர் அவர்கள் ரெயில் நிலையம் முன்பு நின்று கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், கருணாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் நின்று கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 105 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அதே பகுதியில் ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 
    ×