என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 45), விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காந்தீஸ்வரன் (32), பேச்சிமுத்து (40) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் தங்கராசுவிடம், நாங்கள் சோப்பு வியாபாரம் செய்கிறோம். எங்களிடம் சோப்பு வாங்கினால் அதில் ஒரு கூப்பன் இருக்கும். அந்த கூப்பனில் எந்த பொருள் உள்ளதோ, அதனை பரிசாக வழங்குவோம் என்றனர்.
இதையடுத்து தங்கராசு, சோப்பு ஒன்றை வாங்கி, அதில் இருந்த கூப்பனை பிரித்து பார்த்தபோது அதில் ஸ்டவ் அடுப்பு இருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த தங்கராசுவுக்கு, காந்தீஸ்வரனும், பேச்சிமுத்துவும் ஸ்டவ் அடுப்பை பரிசாக வழங்கினர். மேலும் அவரிடம், இந்த பரிசுக்கு மற்றொரு பரிசு உண்டு என்று தெரிவித்ததுடன், அதில் உங்களுக்கு மோட்டார் சைக்கிள் விழுந்துள்ளது என்றனர்.
ஸ்டவ் அடுப்பை பரிசாக தந்ததால் மோட்டார் சைக்கிளையும் தந்து விடுவார்கள் என்று எண்ணிய தங்கராசுவிடம், 2 பேரும் மோட்டார் சைக்கிள் பெற வேண்டுமென்றால் அதற்கு வரியாக ரூ.10 ஆயிரம் நீங்கள் கட்ட வேண்டும். அதற்கான பணத்தை தந்தால் நாங்கள் நாளையே உங்களுக்கு மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து தருவோம் என்றனர்.
அப்போது தங்கராசுவிடம், உங்களுக்கு மோட்டார் சைக்கிளை விட கார் பரிசாக தருகிறோம். ஏனென்றால் ஒருவருக்கு கார் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அவர் அதற்கான வரி ரூ.45 ஆயிரத்தை கட்ட முடியாது என்று கூறிவிட்டதால், அந்த காரை நாங்கள் உங்களுக்கு பரிசாக தருகிறோம். அதற்கு நீங்கள் வரியாக ரூ.45 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தங்க ராசு, ரூ.45 ஆயிரத்தை 2 பேரிடமும் கொடுத்தார்.
அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும் , நாளை உங்களுக்கு காரை பரிசாக தருகிறோம் என்று தெரிவித்து சென்றுவிட்டனர்.
மறுநாள் தங்கராசுவை தொடர்பு கொண்டு பேசிய காந்தீஸ்வரன், பேச்சிமுத்து, நாங்கள் உங்களுக்கு பரிசாக தர காரில் வந்து கொண்டிருந்தோம். ஆனால் வழியில் சோதனை நடத்திய போலீசார், காருக்கான ஆவணங்களை கேட்டனர். புதிய கார் என்பதால் எங்களிடம் ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த அவர், இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் நேரில் சென்று புகார் செய்தார். உடனே போலீசார் தங்கராசுவிடம் நீங்கள் ரூ.20 ஆயிரத்தை கையில் எடுத்து சென்று கொடுங்கள். நாங்கள் பின்னால் வந்து மடக்கி பிடிக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
அதன்படி தங்கராசு ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, காந்தீஸ்வரன், பேச்சிமுத்து ஆகியோர் நின்ற பகுதிக்கு சென்று பணத்தை கொடுக்க இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சதுரங்கவேட்டை சினிமா படத்தில் பரிசு பொருள் வழங்குவதாக கூறி, ஒருவரின் ஆசையை தூண்டி பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும். அதுபோல் அறந்தாங்கி விவசாயியிடம் சோப்பு வாங்கினால் கார், மோட்டார் சைக்கிள் வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தீஸ்வரன், பேச்சிமுத்து மட்டுமின்றி இன்னும் சிலர் நெட்வொர்க் அமைத்து தமிழகம் முழுவதும் பரிசு பொருட்கள் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையை யொட்டி பணப்புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பல்வேறு அறிவுரைகள் கூறியும் பொதுமக்கள் பலர் மோசடி நபர்களிடம் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி சொக்கம்பட்டி அருகே உள்ள அயன் பொருவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 39). இவரது மனைவி தமிழரசி (30). இவர்கள் கோயமுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வந்துள்ளது. இதனால் தமிழரசி கோபித்துக்கொண்டு பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த 24ம்தேதி தமிழரசியை அழைத்து செல்ல கொன்னையம்பட்டிக்கு முருகேசன் வந்து கூப்பிட்டுள்ளார். ஆனால் தமிழரசி வரவில்லை. மீண்டும் கடந்த 25ம்தேதி தமிழரசியை அழைத்தபோது அவர் வராததால் மனமுடைந்த முருகேசன் தான்கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முருகேசனின் தாய் சிவபாக்கியம், காரையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி நீர் ஆதாரங்களை சீரமைத்து அதன் மூலம் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் விவசாய பாசனதாரர்களின் பங்களிப்புடன் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றையதினம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம், கோவில் வீரக்குடி கிராமத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குமரமுத்தான்குளம் கண்மாய் பாசன வாய்க்கால் கட்டுமானப் பணியையும் மற்றும் தூர்வாரும் பணியையும், வத்தனாக்குறிச்சி கிராமத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வத்தனாக் குறிச்சி பெரியகுளம் பாசன வாய்க்கால் கட்டுமானப் பணியையும் மற்றும் தூர்வாரும் பணியையும் என மொத்தம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது பாசன வாய்க்கால் கட்டுமான பணிகளை தரமாக மேற் கொண்டு விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தர விடப்பட்டுள் ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து வட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது. இம்மழையினை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி மற்றும் அரிமளம் வட்டாரங்களில் நேரடி நெல் விதைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள், தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,590 மெட்ரிக் டன் யூரியா, 3,860 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,510 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 5,330 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உர விற்பனையாளர்கள் விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்காமல் இருந்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் உரச்செலவை குறைக்கலாம். உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்வதால் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். உரம் வாங்கும் போது ரசீது தவறாமல் கேட்டு பெற வேண்டும். மேலும் உரம் குறித்த புகார்களுக்கு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04322221666 தொடர்பு கொள்ளலாம். இதுதவிர அருகில் உள்ள தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்களை வாங்கி பயன்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள முத்துடையான்பட்டியில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான கல் உடைக்கும் கிரஷர் உள்ளது. இங்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு வரும் ஒரு பகுதியில் மண் குவிந்து இருந்தது. நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
கட்டுமான பணிகளை, பழனிவேல் மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்து, அங்கு நின்று கொண்டிருந்த கிரஷர் உரிமையாளர் பழனிவேல் (வயது 60), காவேரிநகரை சேர்ந்த ராசு மனைவி செல்வி (50), மேலமுத்துக்காடு மூக்கையா மனைவி மாரிக்கண்ணு (37) புதுக்கோட்டை அடப்பன்வயல் ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (32) ஆகியோர் மீது விழுந்தது.
இதில் கிரஷர் உரிமையாளர் பழனிவேல் மண்ணுக்குள் புதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மண்ணுக்குள் சிக்கிய செல்வி, மாரிக்கண்ணு, மணிகண்டன் ஆகியோரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து மாரிக்கண்ணு மற்றும் மணிகண்டன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






