search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் உமா மகேஸ்வரி
    X
    கலெக்டர் உமா மகேஸ்வரி

    கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து- கலெக்டர் எச்சரிக்கை

    கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து வட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது. இம்மழையினை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி மற்றும் அரிமளம் வட்டாரங்களில் நேரடி நெல் விதைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள், தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,590 மெட்ரிக் டன் யூரியா, 3,860 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,510 மெட்ரிக் டன் பொட்டா‌‌ஷ் மற்றும் 5,330 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உர விற்பனையாளர்கள் விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்காமல் இருந்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் உரச்செலவை குறைக்கலாம். உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்வதால் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். உரம் வாங்கும் போது ரசீது தவறாமல் கேட்டு பெற வேண்டும். மேலும் உரம் குறித்த புகார்களுக்கு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04322221666 தொடர்பு கொள்ளலாம். இதுதவிர அருகில் உள்ள தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்களை வாங்கி பயன்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×