என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர்.
    • கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்மநாதன் (வயது 33), சிவநேசசெல்வம் (25), காலாத்திநாதன் (22). 3 பேரும் சகோதர்கள். இவர்கள் நேற்றிரவு பைபர் படகில் நாகை துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி, பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகில் அங்கு மீன் பிடிக்க வந்தனர். பின்னர் ஆத்மநாதன் மீன் பிடிப்பதற்காக கடலில் விரித்து வைத்திருந்த வலையை அறுத்து விட்டு சென்றனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கோஷ்டி மோதலாக உருவெடுத்தது.

    இதில் ஆத்திரமடைந்த பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர். இதனால் பைபர் படகு நடுகடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலாத்திநாதன் ஆகிய 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடலில் விழுந்தவர்கள் கவிழ்ந்த பைபர் படகை பிடித்து கொண்டு நீந்தினர். இதைத் தொடர்ந்து பாலகுமார் உள்ளிட்ட 8 பேரும், கடலில் தத்தளித்த 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இந்நிலையில் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களை மீட்க வந்தனர். இதற்குள் கடலில் விழுந்த காலாத்திநாதன் மாயமானார். இதைத் தொடர்ந்து ஆத்மநாதன், சிவநேசசெல்வம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவநேசசெல்வம் இறந்தார். ஆத்மநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். பாலகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க 2 கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதலில் மீனவர் ஒருவர் இறந்தது, கடலில் விழுந்து மீனவர் மாயம் ஆகிய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார்.

    தவறி விழுந்து மீனவர் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரத்தினசாமி (36) ஆவார்.

    கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கஞ்சா பொட்டலங்கள் குறித்து மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பம்ப் ஹவுஸ் அருகில் இன்று காலை 13 பொட்டலங்கள் கரை ஒதுங்கியது. அவ்வழியாக வந்த மீனவர்கள் அந்த பொட்டலங்கள் என்னவென்று தெரியாமல் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அது கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரியவந்தது.

    உடனடியாக மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது 13 பொட்டலங்களிலும் தலா 2 கிலோ வீதம் 26 கிலோ கஞ்சா இருந்ததும், இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்பதும் தெரியவந்தது.

    இலங்கைக்கு கடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தோப்புத்துறை அருகே மீன் பிடித்த, நாகை செருதூரை சேர்ந்த மீனவர்களின் வலைகளை காரைக்கால் மீனவர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டி உள்ளனர்.
    • 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    நாகை:

    தமிழக மீனவர்களின் வலைகளை புதுச்சேரி மீனவர்கள் சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தோப்புத்துறை அருகே மீன் பிடித்த, நாகை செருதூரை சேர்ந்த மீனவர்களின் வலைகளை காரைக்கால் மீனவர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டி உள்ளனர்.

    30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள், நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

    • 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலம்.
    • தேரோட்டம் நாளை 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் கிராமத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற இக்கோவில், 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு பெருமாள் ஓலை சப்பரத்துடன் கூடிய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    இந்த கருட சேவை நிகழ்ச்சியில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 24-ந் தேதி (சனிக்கிழமை) சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாளுடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .

    தற்போது வடக்கிழக்கு பருவமழை ஓய்ந்து நன்றாக வெயில் அடிப்பதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.

    இதற்காக உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டது.

    5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கம்போல் குறிப்பிட்ட காலத்தில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டதால் இந்த ஆண்டு 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை அடைய முடியும் என உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • கோடியக்கரை 7 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் 5 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • கொடூர தாக்குதலில் மீனவர் ராமன் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுறையில் இருந்து மீனவர்கள் ராமன் (வயது 51), ரமேஷ் (28), சிவக்குமார்(41) ஆகியோர் ஒரு பைபர் படகிலும், பொன்னுத்துரை (51), ஜெயசந்திரன் (40) ஆகியோர் மற்றொரு பைபர் படகு என 2 படகுகளில் நேற்று மாலை மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை கோடியக்கரை 7 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் 5 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி மீனவர்களின் 2 படகுகளிலும் ஏறினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனவர்களை கத்தியால் குத்தி ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன், நண்டு, ஜி.பி.எஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பினர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர் ராமன் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து வேக வேகமாக கரைக்கு திரும்பிய அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுபுள்ளி வைத்து கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 9 பேரும் கடந்த மாதம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கனை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்கு அங்குள்ள இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி நிபந்தனையுடன் அவர்கள் 10 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

    இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம்.
    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழ் சேவா சங்கம் சார்பில் தமிழர் திருவிழா, கிராமப்புற பொருளாதார மேம்பாடு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடு வழங்குதல் மற்றும் மீனவர் மேம்பாட்டு திட்டம் வழங்கும் விழா நாகை பொரவாச்சேரியில் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு முதல்கட்டமாக 25 பேருக்கு வீட்டிற்கான சாவி, 250 பேருக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.

    பின்னர் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-


    தமிழ் சேவா சங்கம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், மகளிருக்கு தையல் எந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த பணிகள் தொடர வேண்டும்.

    நான் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு சென்றேன். பூர்வகுடி மக்களையும், மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களுடைய ஏழ்மை நிலை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலைமாற வேண்டும்.

    நமது நாடு உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம். தமிழ்நாடும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதும் இங்கு இருக்கக்கூடிய ஏழ்மை நிலையை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது. கீழவெண்மணி கிராமத்திற்கு சென்று அங்கு தியாகி பழனிவேலை சந்தித்து உரையாடினேன்.


    நமது நாடு உலக அளவில் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. புதிய கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரையும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பயணிக்கின்றோம்.

    எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் அதன் நோக்கம். மத்தியில் உள்ள தலைமை இதை நோக்கிய வீரநடை போட்டு வருகிறது. இந்த புதிய பாரத அவதாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர்.

    புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இங்குள்ள பூர்வகுடி மக்களின் பங்களிப்பும், மீனவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவமாக உள்ளது. அப்படிப்பட்ட பங்களிப்புடன், இருந்தால் நமது நாட்டை 25 ஆண்டுகளில் நாம் முன்னேறிய நாடாக மாற்றிவிடலாம்.


    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களை நம் நாட்டின் முன்னேற்றத்தின் சிற்பிகளாக உருவாக்கும் பணியை ஸ்ரீதர் வேம்பு திறமையாக செய்து வருகிறார். அரசியலால் நாம் பிரச்சினைகளையும், பிரிவைவும் மட்டுமே செய்ய முடியும்.

    ஆனால் சேவை செய்யக்கூடிய நல்ல உள்ளங்கள், அமைப்புகள் மூலம் தான் நமது நாட்டை முன்னேற்ற முடியும். அந்த சேவையை தமிழ் சேவா சங்கம் திறமையாக செய்து வருகிறது. இளைஞர்களின் புதிய கனவுகளுடன் புதிய தமிழ்நாட்டை படைப்போம்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.

    • அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும்.

    வேதாரண்யம்:

    பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று (19-ந்தேதி) தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையோர பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், ஆற்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.

    இந்த ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும் என கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

    • புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலம்.
    • சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கமான சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

    முன்னதாக 2023-ம் ஆண்டிற்கு நன்றி செலுத்தி வழியனுப்பும் வகையில் இரவு 10.45 முதல் 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரை நடந்தது.

    பின், 2024-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், பேராலய பங்கு தந்தை டேவிட் தனராஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. இரவு சரியாக 12 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் குத்து விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்றார்.

    அதனைத் தொடர்ந்து, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், 2023-ம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.

    தொடர்ந்து, புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பேராலயம் சார்பிலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. புத்தாண்டை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகணக்காணோர் திரண்டதால் நகரமே களைகட்டியது.

    நாகப்பட்டினம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழக முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி அவர் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நடை பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் வாங்கினார்.பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:-

    2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 67 சதவீதமாக இருந்த வீட்டு எரிவாயு குழாய் இணைப்பு 99.99 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. ஏழைகள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு எந்தவித ஊதிய இழப்பும் இல்லாமல் நேரடியாக அவா்களது ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.


    2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 56 லட்சம் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

    சட்டப்பேரவை, பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி 2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தாா். அதன்படி, வரும் 2024-ஆம் ஆண்டு தோ்தலுக்கு பிறகு 3 எம்.எல்.ஏ.க்களில் ஒருவா் பெண்ணாக இருப்பாா்.

    2024 நாடாளுமன்ற தோ்தலுக்கு பிறகு 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராவது உறுதி. பா.ஜனதா 400 முதல் 450 தொகுதிகளில் வென்று மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைவது உறுதி.

    நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டின் வளா்ச்சி விகிதம் 7 சதவீதத்திற்கும் மேல் உயா்ந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    வரும் மக்களவைத் தோ்தலில் நாகை தொகுதியில் பா.ஜனதா வென்று சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×