என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம்:
சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்வகாப் (48). இவரது மனைவி சுஜிதா (45).
இவர்கள் உறவினர்கள் 3 பேருடன் காரில் காரைக்காலில் நடை பெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் சென்னை நோக்கி திரும்பி வந்து கொன்டிருந்தனர்.
நள்ளிரவு 2 மணியளவில் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் காரை ஓட்டிவந்த அப்துல்வகாப், அவரது மனைவி சுஜிதா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடன் இருந்த உறவினர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய அரசியல் சட்டத்தின் 100 விதியின்படி தன்னை பாதுகாக்க ஒருவர் மற்றொரு உயிரை எடுக்கலாம். இதை சாதாரண மனிதனும் செய்யலாம், போலீசும் செய்யலாம். தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவ மாணவி கொலை சம்பந்தமாக 4 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
போலீசார் அந்த நாலு பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று அவர்கள் போலீசாரை நோக்கி சுட்டதால் தற்காப்புக்காக பதிலுக்கு சுட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு பின்பு தான் சொல்ல முடியும்.
நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. இது நம்முடைய தோல்வி. இதற்கு காரணம் நம்மிடத்தில் சரியான பொருளாதார கொள்கை இல்லை. மக்கள் கையில் பணம் இல்லை. மக்கள் கையில் பணம் போக வேண்டுமென்றால் வருமான வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான் பொருளாதாரம் சரியாக மாறும். வெங்காய விலை ஏற்றம் பற்றி சென்னைக்கு அடிக்கடி வரும் நிர்மலா சீதாராமனிடம் கேட்க வேண்டும்.
நான் எழுதி இருக்கிற ஒரு புத்தகத்தில் இதை குறித்து எழுதி இருக்கிறேன். மேலும் பிரதம மந்திரிக்கு தனியாக 6 கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

பிரதம மந்திரிக்கு பொருளாதாரம் புரியவேண்டும், அவருக்கு பொருளாதாரம் தெரியாது. பொருளாதாரம் மாற்றம் வந்தால் தான் இது எல்லாம் சரியாகும்.
சசிகலாவை பொறுத்த வரை அ.தி.மு.க.வில் இணைவாரா என்று தெரியவில்லை. அவருக்கு திறமை உண்டு. அவர் தண்டனை முடிந்து வெளியே வரும் போது அரசியலில் ஒரு வாய்ப்பு உண்டு.

ப.சிதம்பரம் ஒரு குற்றவாளி. 100 நாட்களுக்கு மேலே ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர். அவர் பேச்சை கவனிக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி 106 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். அப்போது மழை பெய்ததால் குடைபிடித்தபடி ப.சிதம்பரம் பேசியதாவது:-பா.ஜனதாவின் நோக்கமே ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குவதுதான்.
பா.ஜனதா கட்சி கங்கை ஆறு என்றும், அதில் மூழ்கி குளித்தால் அனைத்து பாவங்களும் நீங்கிவிடும் என்றும் அக்கட்சி கருதுகிறது. நான் ஒருபோதும் கங்கையில் (பா.ஜனதா) குளிக்கமாட்டேன்.
டெல்லியில் வெங்காயம் விலை ரூ.200-ஐ தொட்டுவிட்டது. கார் கம்பெனியில்கூட ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் வரியை மேலும் கூட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
நான் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். சிறையில் இருப்பது பெரிய விஷயம் அல்ல. காமராஜர், வ.உ.சி. போன்றவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். அதனால் சிறையில் இருந்தது மகிழ்ச்சிதான். சிறை கட்டிலில் படுத்ததால் என் கழுத்து எலும்பு சரியாகி உள்ளது. காங்கிரஸ் இயக்கம் இருக்கும் வரை, தொண்டர்கள் இருக்கும் வரை என்னை வீழ்த்த முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
தாம்பரம்:
தாம்பரம் கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் முருகன் (36). சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு குடும்பத்துடன் சென்றார். பக்கத்தில் உள்ள வீட்டுக்காரரிடம் தகவல் சொல்லிவிட்டு வீட்டை பூட்டி சென்றார்.
இந்த நிலையில் அவரது வீட்டின், பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் தகவல் தெரிவித்தார். உடனே முருகன் அவசரமாக வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
வெள்ளி பொருட்கள், லேப்டாப் போன்றவையும் கொள்ளை போயிருந்தன. இதுபற்றி முருகன் தாம்பரம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் இல்லை கைரேகைகளை பதிவு செய்து கொள்ளை கும்பலை பிடிக்க விரைந்துள்ளனர். முருகன் குடும்பத்தோடு வெளியூர் செல்வதை அந்த பகுதியில் உள்ள யாரோ பார்த்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிறைந்த பகுதியாகும்.இங்கு வடமாநிலத்தவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர்.இங்கு கல்லுரிகளும் உள்ளன.
இப்பகுதியில் போதை பொருள் கஞ்சாவை சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் கீவளூர் ஊராட்சியில் சோதனை செய்தனர்.சோதனையில் கீவளூர் பஜனை கோவில் தெருவில் சீனிவாசன் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டை வைத்து சிறு பொட்டலத்தில் பேக் செய்து வட மாநிலத்தவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சீனிவாசனை கைது செய்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
கிண்டி அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி சுபாஷினி (42). ரெயில்வே ஊழியர்.
மாம்பலம் ரெயில் நிலையத்தில் எழுத்தராக வேலை பார்க்கும் சுபாஷினி, இன்று காலை ரெயிலுக்காக கிண்டி ரெயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஒரு பெண் அங்கு வந்து தன்னை பெண் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டார். உடன் வந்த 2 ஆண்களும் போலீஸ் என்று கூறினர். அந்த பெண் முகத்தை துணியால் மறைத்து இருந்தார்.
அவர் சுபாஷினியிடம், “உங்கள் மீது ஒரு புகார் இருக்கிறது. பெரம்பூர் போலீசார் உங்களிடம் விசாரிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமியும் மற்ற போலீசாரும் காரில் இருக்கிறார்கள். எங்களுடன் வாருங்கள் என்றார். அவர் போக மறுக்கவே அந்த பெண் கையை பிடித்து இழுத்தார். இதனால் சுபாஷினி கத்தினார்.
சத்தம் கேட்டு ரெயில்வே போலீசார் அங்கு வந்தனர். இதற்குள் அந்த பெண் தப்பி ஓடினார். உடன் வந்த ஆண், போலீசார் சிக்கிக் கொண்டனர். விசாரணையில் அவருடன் காரில் வந்தவர்கள் நின்ற இடத்தை அறிந்து அவர்களை போலீசார் மடக்கினார்கள்.
சுபாஷினியிடம் பேசியவர் பெண் வதனி என்பதும். உடன் வந்த ஆண்கள் வியாசர்பாடி ஜீவானந்தம், பாலகுரு என்பதும் விசாரணையில் தெரியவந்தது. காரில் முத்துலட்சுமி, வதனி, தமிழ்ச்செல்வி ஆகியோர் இருந்தனர்.
விசாரணையில், ரெயில்வே பெண்ஊழியர் சுபாஷினியை கடத்தி பணம் பறிக்க திட்ட மிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் போல் நடித்து ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயன்ற வதனி, முத்து லட்சுமி, தமிழ்செல்வி, ஜீவானந்தம், பாலகுரு ஆகிய 5 பேரை கிண்டி போலீசார் கைது செய்தனர்.
சுபாஷினியை போலீசார் போல் நடித்து கடத்த முயன்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
செங்கல்பட்டு:
திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் கார்த்திகேயன். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றில் மணல் திருட்டு சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று போலீஸ் நிலையம் அருகே கிரிவல பாதையில் நிறுத்தப்பட்டு இருந்தது.
சம்பவத்தன்று இரவு சாதாரண உடையில் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் ஆகியோர் அந்த லாரியில் பேட்டரி, டீசல் திருடுவது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ காட்சி வைரலாக சமுகவலை தளங்களில் பரவி வருகிறது. இது 2.39 நிமிடம் ஓடுகிறது. அந்த வீடியோவில் சப்- இன்ஸ்பெக்டர் டார்ச் லைட்டுடன் லாரி அருகே வருகிறார்.
பின்னர் அவர் அக்கம் பக்கம் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டு சுற்றி பார்க்கிறார். பின்னர் அவருடன் வந்த வாலிபர் லாரியில் உள்ள பேட்டரியை திருடி அவர்கள் கொண்டு வந்த காரில் வைக்கிறார்கள்.
இதேபோல் ஒரு கேனில் டீசலையும் திருடி வைக்கின்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயனை செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த தேனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். மணிகண்டனும் செங்கல் பட்டு பகுதியைச் சேர்ந்த பிரியாவும் (25) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
பிரியா கர்ப்பமாக இருந்தார். இன்று அவருக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து இருந்தனர். இதற்கிடையே நேற்று காலை அவர் திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இறப்பதற்கு முந்தைய நாள் இரவு கணவர் மணிகண்டன், மாமியார் எல்லம்மாள் ஆகியோருடன் பிரியா தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பிரியாவின் நகைகள் அனைத்தும் அடகு வைக்கப்பட்டிருந்ததாகவும், வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் அவற்றை மீட்டு தர பிரியா கேட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்த தகராறில் மனம் உடைந்த பிரியா தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் மணிகண்டன், மாமியார் எல்லம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலையில் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தெலுங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகளை சுட்டு கொன்றது நல்ல விஷயம்.
இதேபோல் தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.

வெங்காய விலையை பொறுத்தவரை பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 909 ஏரிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன.
இதில் நேற்றைய கணக்கெடுப்பின்படி, 909 ஏரிகளில் 550 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 133 ஏரிகள் 75 சதவீதமும், 120 ஏரிகள் 50 சதவீதமும், 5 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் என சொல்லப்படும் 16 பெரிய ஏரிகளான தையூர், மானாமதி, தென்னேரி, காயார் மணிமங்கலம் ஆகிய ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை வராது என விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆலந்தூர்:
கார்த்தி சிதம்பரம் எம்.பி. நள்ளிரவு 12 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2007-ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்காக 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து 2019-ம் ஆண்டு விசாரணைக்காக தேவையில்லாமல் 106 நாட்கள் என் தந்தையை சிறையில் அடைத்து இருந்தது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்.
106 நாட்கள் கழித்து அவர் சிறையில் இருந்து வந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நேற்று அவர் பாராளுமன்றம் சென்றதால் எப்போதும் போல பா.ஜனதாக அரசுக்கு எதிரான கருத்துக்களை வைத்ததும் மகிழ்ச்சியை தருகிறது.

நாளை (சனிக்கிழமை) ப.சிதம்பரம் சென்னை வருகிறார். சென்னையில் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 8-ந் தேதி சொந்த தொகுதியான சிவகங்கை சென்று மக்களை சந்திக்க உள்ளார்.
வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. வெங்காயத்தை சாப்பிடாத பா.ஜ.க.வினருக்கு வெங்காய விலையைப் பற்றியும் கவலை இல்லை. மக்களை பற்றியும் கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (23). இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவருக்கு நாளை வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரியா திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






