என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
    காஞ்சிபுரம்:

    எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. கிளை கழகங்களிலும் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், அமைப்புச் செயலாளர்கள் வி.சோம சுந்தரம், மைதிலி, நிர்வாகிகள் காஞ்சி. பன்னீர் செல்வம், கே.யூ.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, தும்பவனம் ஜீவானந்தம், பாலாஜி, ஜெயராஜ், கரூர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    சென்னை விமான நிலையத்தில் 3½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த 6 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், நேற்று இலங்கையில் இருந்து சென்னை வந்த அனைத்து விமானங்களையும் சோதனையிட்டனர். பயணிகளையும், அவர்களது உடமைகளையும் பரிசோதித்தனர்.

    இந்த நிலையில், நேற்று கொழும்பில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கா ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகளிடம் சோதனை நடந்தது. அப்போது அதில் இருந்த 6 பயணிகள் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த முகமது விஷான், அல்தாப், முகமது ரிமாஸ், முகமது ரப்பி, முகமது லாகி, பெண் பயணி சம்சுலா மவுலானா ஆகிய 6 பேரை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உடலில் மறைத்துகொண்டு வந்த 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய். தங்கம் கடத்தி வந்த 6 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    தூய்மை பசுமை விழாவிற்காக பீர்க்கன்கரணை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
    தாம்பரம்:

    பீரக்கன்காரணை பேரூராட்சியில் “தூய்மை பசுமை விழா” வருகின்ற ஐனவரி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் பிளாஸ்டிக் மாற்று பொருள் கண்காட்சியை செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ் தொடங்கி வைக்கிறார்.

    பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சிகள் சார்பில் நடைபெறும் இந்த பிளாஸ்டிக் மாற்று பொருள்காட்சிக்கு பீர்க்கன்காரணை பேரூராட்சியில் அலுவலகத்தில் மேற்கூரை பந்தல், சிறிய கடைகள் மற்றும் ஸ்டால்கள் அமைப்பதற்காகவும் 40 வருடங்களுக்கு மேலாக வளர்ந்து இருந்த 30-க்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளது.

    வெட்டி சாய்த்த மரங்களை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மரங்களை வளர்க்க பல விதமான முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் “தூய்மை பசுமை விழா” என்று கூறி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த 15 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமூண்டீஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 42 பேர் கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து காஞ்சிபுரம் டி.எஸ்.பி. கலைச்செல்வன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது.

    மேலும் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சில குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஒரகடம் அடுத்த பண்ருட்டி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ரகமத் அப்துல்லா (20), பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த எமிலோசனி(20), அடையாறு பகுதியை சேர்ந்த அர்ஷிதா(20) ஆகியோர் டிப்ளமோ மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் நேற்று கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரகடம் மேம்பாலம் அருகே செல்லும்போது பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    இதில் ரகமத் அப்துல்லா, எமிலோசனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அர்ஷிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    காஞ்சீபுரம் காந்தி நகர் மற்றும் நரசிங்கராயர் தெருவில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 635 ரேஷன் கடைகள் மூலம் 3,37,990 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ. 1000-த்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 13-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கு கூட்டுறவு துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம் காந்தி நகர் மற்றும் நரசிங்கராயர் தெருவில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்கள் வரிசையில் நின்று பொங்கல் பரிசு வாங்குவதை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதல்நிலை மண்டல மேலாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் இயங்கி வரும் 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் இறைச்சிக் கழிவுகளை கடைக்காரர்கள், சந்தவேலூர் பகுதியில் சுங்குவார்சத்திரம்-வாலாஜாபாத் சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் எதிரே பல மாதங்களாக கொட்டி வருகின்றனர்.

    இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், வாலாஜாபாத்-சுங்குவார்சத்திரம் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சந்தவேலூர் பகுதியில் சாலையோரம் கொட்டி வருவதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுதொடர்பாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்ககோரி சுங்குவார் சத்திரம் பஜார் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
    போலி விசாவில் வெளிநாடு அனுப்பட்ட திருவண்ணாமலை சேர்ந்த வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 28) எலக்ட்ரீசியன்.

    இவரும், இவரது நண்பரான டோமினிக் ராஜ் என்பவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் டோமினிக் ராஜ் ரஷியா நாட்டில் உள்ள அர்மேனியாவில் அதிக சம்பளத்தில் எலக்ட்ரீசியன் வேலை உள்ளது. ரூ.5 லட்சம் தந்தால் அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என மூர்த்தியிடம் கூறினார்.

    இதை நம்பிய மூர்த்தி வட்டிக்கு ரூ. 5 லட்சம் கடன் வாங்கி டோமினிக்ராஜிடம் கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர் கடந்த ஆண்டு விசா கொடுத்து மூர்த்தியை ரஷியாவுக்கு அனுப்பினார்.

    அங்குள்ள விமான நிலையத்தில் மூர்த்தியின் விசா, பணி நியமன ஆணை உள்ளிட்ட ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அவை போலியானவை என தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தூதரகம் மூலம் மூர்த்தி சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் டோமினிக்ராஜியிடம் பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர் மூர்த்தியை மிரட்டினார்.

    இதுகுறித்து மூர்த்தி விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டோமினிக்ராஜை கைது செய்தனர்.

    காஞ்சிபுரத்தில் ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்கிற ஏட்டு பிரபு (24). இவர் மீது காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி பரிந்துரை செய்தார். அதன் பேரில் பிரபுவை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஏலகிரிமலையில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜோலார்பேட்டை,

    காஞ்சீபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 33), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்றுமுன்தினம் மனைவி பொன்னி மற்றும் மகள் ருத்ரா (வயது 10), மகன் ரோஷன் (6) ஆகியோருடன் ஏலகிரிமலைக்கு சென்றார். இங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு இரவு தனியார் விடுதியில் தங்கினர்.

    அதைத் தொடர்ந்து நேற்றும் ஏலகிரிமலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு மாலை 4 மணி அளவில் அத்தனாவூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ‘கேம்’ சென்டருக்கு வந்தனர். அங்கு நீச்சல் குளத்தில் சிறுவன் ரோஷன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.

    இதைக்கண்டு ஜானகிராமனும், பொன்னியும் மகனை மீட்க முடியாமல் நீச்சல் குளத்தை சுற்றி சுற்றி ஓடி வந்து, குழந்தையை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் நீச்சல் குளத்தில் இருந்து சிறுவனை மீட்டனர். அப்போது சிறுவன் மயங்கிய நிலையில் இருந்ததால் சிகிச்சைக்காக அத்தனாவூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் ‘கேம்’ சென்டர் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆதம்பாக்கத்தில் மாவா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தேவி (33). இவர் ‘மாவா’ போதை பொருள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன், அந்த பெண்ணை கைது செய்தார். கைதான தேவியிடம் இருந்து ஒரு கிலோ எடையுள்ள 100‘மாவா’ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடக்கிறது.

    லஞ்ச புகார் எதிரொலியாக ஆலந்தூர் மண்டல உதவி வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


    ஆலந்தூர்:

    சென்னை பெருநகர மாநகராட்சியின் 12-வது மண்டலமாக ஆலந்தூர் உள்ளது.

    இங்கு உதவி வருவாய் அதிகாரியாக பணிபுரிபவர் பாலசுப்பிரமணியன். இவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டிடங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரியை குறைத்து விட்டதாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கடந்த வாரம் பாலசுப்பிரமணியத்திடம் விசாரணை செய்தனர். புகார்கள் குறித்து விளக்கம் கேட்டனர்.

    இதையடுத்து, விசாரணை அறிக்கையை, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆலந்தூர் மண்டல உதவி வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.

    ×