என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன.
    • அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரு காட்டு யானைகள் பண்ணாரி சாலை வந்து அங்கிருந்து பவானிசாகர் பகுதிக்கு வந்தது. சிறிது நேரத்தில் பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள் யானைகள் இருப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். மீன் பண்ணை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.

    வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், ஆழமாக இல்லாததால் மண் மூடி கிடக்கிறது. வனத்தை ஒட்டி உள்ள காராச்சிக் கொரை பகுதியில் யானை தடுப்பு அகழிகள் வெட்டவில்லை. இதனால் யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து விடுகிறது. அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் பவானி சாகர் வனப்பகுதியில் இருந்து கடந்த 15-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ராஜன் நகர் அருகே காந்தி நகர் கிராமத்தில் சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ராஜன் நகரில் வெள்ளியங்கிரி என்பவர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்துக் கொன்றது. கிட்டத்தட்ட 2 நாட்களில் 7 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் முதற்கட்டமாக தானியங்கி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. கேமிரா பதிவுகளை கண்காணித்த பின் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம். அடர்ந்த வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்ன வலியுறுத்தி உள்ளனர். மேலும் சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    • பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.
    • காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    பவானி:

    பவானி அருகில் உள்ள காளிங்கராயன்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைகட்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டில் இருந்து பவானி ஆற்றின் இருந்து வெளியேறும் உபரிநீர் காலிங்கராயன் வாய்க்கால் வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    காலிங்கராயன் என்ற சிற்றரசரின் மூலம் கட்டப்பட்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் தைத்திருநாள் முடிந்த பிறகு பொதுமக்களால் கொண்டாடப்படும் கரிநாள் மற்றும் காணும் பொங்கல் அன்று பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.

    இந்த அணைக்கட்டு பகுதியில் அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள் துவக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு நலனுக்காக பொதுமக்கள் யாரும் அணைகட்டு பகுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது அனுமதி கிடைக்கும் என காத்திருந்த பொது மக்களுக்கு 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் பாதுகாப்பு நலன் கருதி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சித்தோடு போலீசார் தெரிவித்துள்ளனர். காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    • தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.
    • சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    சென்னிமலை:

    தை மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் திருவிழாவிற்கு பஞ்சம் இருக்காது. பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தைத்திருநாள் விழாவிற்கு பல பெயர்கள் இருந்தாலும் தைப் பொங்கல் என கூறி கிராமத்தில் இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு புது துணி எடுப்பதில் ஆரம்பித்து வீடுகளை வெள்ளையடிப்பது, காப்பு கட்டுவது என விழா களைகட்ட தொடங்கி விடும்.

    நூற்றாண்டுகளாக தமிழர்களின் பண்பாட்டினையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் பாறை சாட்டும் விதமாக இது நடந்து வருகிறது. இந்த தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.

    குறிப்பாக சென்னிமலை பகுதியில் தை பொங்கல் விழா பெண்கள் திருவிழாவாக தான் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு தை 2-ம் நாள் நடக்கும் பூப்பறிக்கும் விழா நூற்றாண்டுகள் கடந்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இளம் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மலைகளில் இருந்து ஆவாரம் பூ பறிக்கின்றனர். சென்னிமலை சுற்று வட்டாரத்தை பொறுத்த வரை தை 2-ம் நாள் தான் பொங்கல் விழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை முன்னிட்டு சென்னிமலை பகுதியில் நேற்று பூப்பறிக்கும் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை நகரில் உள்ள பொதுமக்கள் சென்னிமலையின் தென்புறம் உள்ள மணிமலை பகுதிக்கு சென்று பூப்பறித்து வருவார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நேற்று 50-க்கும் குறைவான பெண்கள் தான் கலந்து கொண்டனர். சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    ஆனால், கிராம பகுதிகளில் தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லைகுமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் முதலமடை பகுதியிலும், ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம், இளம் பெண்கள் அம்மன்கோயில் பகுதியிலும் தாங்கள் கொண்டு சென்ற கரும்பு மற்றும் திண்பண்ட ங்களை உண்டு மகிழ்ந்து அப்பகுதியில் பூத்துக்குழுங்கும் ஆவாரம் பூக்களை பறித்து வரும் போது இளம் பெண்கள் தைப்பொங்கலின் பெருமையை கூறும் வகையில் பாட்டு பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர்.

    பின்பு மாலை வீடு திரும்பி வாசலில் கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று காலை தாங்கள் பறித்து வந்த பூக்களை ஆறு, கிணறுகளில் போடுவார்கள். பல நூற்றாண்டு பழமையான விழா ஆனாலும் இன்று கிராம பகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் படித்து பல்வேறு துறைகளில் வேறு ஊர்களில் பணியாற்றினாலும் இந்த பெண்கள் இன்றும் இந்த பூப்பறிக்கும் விழாவினை பழமை மாறாமல் சிறப்பாக கொண்டாடினர்.

    ஆனால் சென்னிமலை நகர பகுதியில் பூப்பறிக்கும் விழா இந்த ஆண்டு உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    • கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அண்ணா மடுவு கண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் அந்த பகுதியில் மின் சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அருகே உள்ள ஒரு வீட்டுக்கு மின்சாதன பொருட்களை பழுது பார்ப்பதற்காக துரைசாமி கடையை திறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் கடையில் பழுது பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட பழைய மின் சாதன பொருட்களிலும் தீ பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை உற்றி தீயை அணைத்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் கடையில் இருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.

    பின்னர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.
    • யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, கடம்பூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    விழாவில் கலந்து கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கடம்பூர் செல்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.

    கேர்மாளம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது அந்த வாகனங்களை வழிமறித்து சாலையின் நடுவே 3 யானைகள் கூட்டம் நின்று கொண்டிருந்தன.

    மேலும் வாகனங்களை பார்த்து யானை சத்தமாகப் பிளிரியது. யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது. பிறகு வனத்துறையினர் ஜீப் மூலம் அதிக சத்தம் கொண்ட ஒலிகளை எழுப்பினர்.

    அதனைத்தொடர்ந்து அந்த யானைக்கூட்டம் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் ஆ.ராசா எம்.பி. வாகனம் வனப்பகுதியை கடந்து சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது.
    • பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் கோவில் பகுதியில் குறவர் நடனம், புலியாட்டம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி எழுந்தருளினார். பின்னர் ஒசூர் பகுதியில் சுவாமி சப்பர வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமிக்கு தோங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.

    முக்கிய வீதி வழியாக சப்பர வீதி உலா வந்தது. பின்னர் காலை 7.30 மணியளவில் கோவிலை சென்றடைந்தது. கோவில் முன்பு 30 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யபட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து காலை 8 மணியளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அதை தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கினர்.

    திருவிழாவில் தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.

    • சலங்கை ஆட்டத்தை கற்று கொள்வதில் ஆர்வ குறைவு ஏற்பட்டு நாளடைவில் இந்த மரபு கலை அழிவின் விழிம்புக்கே சென்றுவிட்டது.
    • மற்ற ஆட்டங்களுக்கு உள்ளது போல் சலங்கை ஆட்டத்தையும் நாட்டுபுற கலை என அங்கீகாரம் வேண்டி அரசுக்கு மனு கொடுத்துள்ளோம்.

    சென்னிமலை:

    பெரும் சலங்கை ஆட்டம் என்பது சிறு தெய்வ வழிபாட்டில் மிக முக்கிய ஆட்டமாக சிறந்து விளங்கி வந்தது. தப்பாட்ட பறை, குண்டு மேளம், பம்பை, உருமி போன்ற தோல் இசை கருவிகள் இசைக்க தாளம் தப்பாமல் காலில் பெரும் சலங்கை கட்டி ஆடும் சலங்கை ஆட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் மிக சிறப்பாக இருந்தது.

    ஊருக்கு 10 ஆட்டகாரர்கள் இருப்பார்கள். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கிராம சிறு தெய்வ பொங்கல் விழாவில் மிக சிறப்பாக தனது ஆட்டத்தை திருவிழாவில் காட்டி பொது மக்களின் பாராட்டை பெறுவர். வருடத்தில் ஒரு முறை மட்டுமே அதுவும் 7 முதல் 10 நாட்கள் வரை தான் வாய்ப்புகள் கிடைப்பதால் இந்த சலங்கை ஆட்டத்தை கற்று கொள்வதில் ஆர்வ குறைவு ஏற்பட்டு நாளடைவில் இந்த மரபு கலை அழிவின் விழிம்புக்கே சென்றுவிட்டது.

    கொங்கு நாட்டுபுற மரபு கலை விழா என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் சென்னிமலையை சேர்ந்த கதிர்வேல் கூறியபோது:- பெரும் சலங்கை ஆட்டம் மட்டும் அல்ல ஒயிலாட்டம், கும்மியாட்டம், தேவர் ஆட்டம், காவடி ஆட்டம், கரக ஆட்டம் என அனைத்து ஆட்ட கலைகளும் மக்களை விட்டு விலகி சென்று விட்டது என்னவோ உண்மை தான். இந்த பெரும் சலங்கை ஆட்டம் என்பது முழுக்க முழுக்க கொங்கு வட்டார மரபு சார்ந்த கலையாக தான் மக்கள் பார்கிறார்கள். மற்ற ஆட்டங்களுக்கு உள்ளது போல் சலங்கை ஆட்டத்தையும் நாட்டுபுற கலை என அங்கீகாரம் வேண்டி அரசுக்கு மனு கொடுத்துள்ளோம்.

    முதல் முறையாக கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் மேடை நிகழ்ச்சியாக நடத்தி பெரும் வரவேற்பை பெற்றது. இது எங்களுக்கு புது தெம்பை கொடுத்து ள்ளது. தற்போது இந்த சலங்கை ஆட்டகுழு சென்னி மலையில் மட்டும் 2 குழுக்கள் இளைஞர்களால் மிகவும் திறன்பட செயல்பட்டு வருகிறது. தற்போது கோவில் விழா மட்டும் அல்ல பொது நிகழ்ச்சி மற்றும் கல்லூரி விழாவில் கூட இந்த சலங்கை ஆட்டம் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது மீண்டும் சலங்கை ஆட்ட கலையை புத்துணர்வு பெற செய்து வருகிறது.

    இந்த கொங்கு வட்டாரத்தில் மிக முக்கிய மரபு கலையாக கருதப்படும் பெரும் சலங்கை ஆட்டம் மூத்தோர்களால் இளைய தலைமுறையினருக்கு இந்த ஆட்ட நுணுக்கங்களை சொல்லி கொடுக்காமல் விட்டதும் ஒரு பெரும் சரிவு தான் என்றார்.

    தற்போது இந்த சலங்கை ஆட்டம் கிராம புறங்களில் மட்டும் அல்ல நகர்புற மக்களையும் கவர்ந்து வருகிறது. இதனால் இந்த பெரும் சலங்கை ஆட்டம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. இனி இது கொங்கு வட்டாரத்தில் நல்ல மரபு கலையை வளர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

    சென்னிமலையில் சலங்கை ஆட்ட குழுவில் சலங்கை ஆட்டம் ஆடி வருபவர்களிடம் சலங்கை ஆட்டம் பற்றி கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- தற்போது சலங்கை ஆட்டம் நன்மதிப்பை பெற்று வருகிறது. சலங்கைகள் (மணிகள்) வாங்க திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் தான் சிறந்தது. இதை வாங்கிய உடன் பயன்படுத்த முடியாது.

    இந்த சலங்கைகளை 3 நாட்கள் புது பானையில் இளநீரில் ஊரவைத்து அதை உலர்த்தி அதன் பின்பு பெருந்துறையில் தோல் கொண்டு சரமாக தெய்ந்து காலில் அணிந்து ஆட வேண்டும். சலங்கை எடை ஒரு காலுக்கு 4 கிலோ வரும். நல்ல வலுவுள்ள இளைஞர்கள் மட்டுமே காலில் கட்டி தாளம் தப்பாமல் ஆடி முடியும் என்கின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.
    • வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தனியார் அமைப்பின் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த போதிலும் பெண்களுக்கான இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதில் கலந்து கொண்டுள்ளேன். பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.

    பெண்கள் தனக்காக கவலைப்படுவதில்லை. தங்கள் குடும்பத்திற்காக தான் கவலைப்படுகின்றனர். ஒரு ஆண் எத்தனை வயது ஆனாலும் ஆணாகவே இருக்கின்றார். உங்கள் வெளி தோற்றத்தை வைத்து பல விமர்சனங்கள் இருந்தாலும் நம் உள்ளே இருக்கும் இரும்பு மனதில் இந்த நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களை இரும்பு பெண்மணியாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    வன்முறை என்பது எந்த சமுதாயத்தில் இருந்தாலும் அது தவறு. 10 நபர்களுக்கு கடனுதவி வழங்கினால் அதில் 3 பேர் பெண்களாக இருக்க வேண்டும். அதில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    பெண்களின் தேவையை அறிந்து அரசு அவர்களுக்கு முன் உரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இணையதளங்களில் பெண்கள் செய்யும் வணிகம் அதிக அளவில் இடம்பெறுகின்றது. கொரோனா காலகட்டத்தில் ஆண்கள் குடும்பத்தை காப்பாற்றினார்ளோ இல்லையோ பெண்கள் இணையதளம் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்து குடும்பங்களை காப்பாற்றினர்.

    பெண்கள் தற்பொழுது தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியாக இருக்கும். இதில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரவேண்டும். சிறிய அளவில் தொடங்கி பெரிய தொழில் முனைவோராக மாற வேண்டும். பெண்களின் கையில் பொருளாதாரம் இருந்தால் வாழ்வாதாரம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 1-வது மண்டலத்தில் உள்ள 6-வது வார்டில் ஞானபுரம், பச்சைபாளிமேடு பகுதி உள்ளது. இங்குள்ள நூற்றுக்கணக்கான பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அதுவும் தண்ணீர் மிகக்குறைந்த நேர அளவிலேயே திறந்து விடப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து 3 வாரத்திற்கு மேல் இதேநிலை நீடித்ததால் பகுதி சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென கனிராவுத்தர் பகுதியில் உள்ள ஈரோடு-சக்தி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் போட்டனர். இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வாகனங்கள், அதேபோல் சத்தியமங்கலம், கோபியில் இருந்து ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார், தாசில்தார் ஜெயக்குமார், வார்டு கவுன்சிலர் தமிழ்பிரியன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் கடந்த 3 வாரமாக சீரான குடிநீர் வராததால் பல்வேறு வகையில் அவதி அடைந்து வருகிறோம். எனவே சீரான முறையில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அப்போது குடிநீர் விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பதாகவும், தற்போது தான் அது குறித்து தெரிய வந்துள்ளதாகவும், உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதைஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கள் விற்பனை குறித்து மிகப்பெரிய ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பணிகள்.
    • சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும் போது மற்றவர்களுக்கும் வேதனை அடைவார்கள்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களுடன் முதல்வர் திட்டம் அரசியல் நோக்கமோ அல்லது விளம்பரம் நோக்கத்திற்காகவோ செய்யவில்லை. மக்கள் தங்கள் கோரிக்கை மனு மீதான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொது இடங்களில் மது அருந்தும் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில இடங்களில் மது அருந்துவதால் நிகழும் குற்ற சம்பவங்கள் குறித்து அரசு மீது சொல்லும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.

    தனிப்பட்ட முறையில் நிகழும் குற்ற சம்பவத்தில் போலீசார் விசாரணையில் தான் தெரியும் வரும். மது அருந்த வருபவர்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை. தவறான வழியில் சென்று தவறு நிகழக்கூடாது என்பதை சரி பார்ப்பதற்கான முயற்சியாக தான் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    மது விற்பனை அதிகப்படுத்தும் நோக்கம் இல்லை. அதிலிருந்து மது அருந்துபவர்கள் விடுபட வேண்டும் என்ற நோக்கில் அரசின் சார்பில் போதுமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. கள் விற்பனை குறித்து மிகப்பெரிய ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பணிகள். ஒரே நாளில் கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது.

    அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து தெளிவான புகார் வந்தால் பணியாளர்கள் கைது மற்றும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க அரசு தயாராக உள்ளது.

    25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள நிலையில் சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும் போது மற்றவர்களுக்கும் வேதனை அடைவார்கள். 99 சதவீதம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இரவு 11.15 மணியளவில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கல்லூரியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    மாணவர் சிகிச்சை முடிந்து மீண்டும் ஆம்புலன்சில் ஏற முயன்றார். அப்போது ஆம்புலன்சில் இருந்து கரும்புகை வெளிவருவதை கண்டு மாணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மாணவருடன் வந்தவர் வேகமாக கீழே இறங்கிவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருக்கைகள் எரிந்து நாசமானது. நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

    ×