என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஏ.டி.எஸ்.பி விவேகானந்தனை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
    • துணை விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் பணி தொடர்வார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் கடந்த 1-ந் தேதி ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதி கொலை செய்யப்பட்டு 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    அதனைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த பழம் குற்றவாளி ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து வந்த பெருந்துறை டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் திடீரென மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி விவேகானந்தனை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.

    சிவகிரி தம்பதி கொலை வழக்கு விசாரணையை விரைந்து துரிதப்படுத்தி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு டிசம்பர் மாதம் இறுதிக்குள் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தர வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் துணை விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் பணி தொடர்வார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதான ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரின் நீதிமன்ற காவல் வரும் 2-ந் தேதி உடன் முடிவடைகிறது. சிவகிரி இரட்டை கொலை, திருப்பூரில் 3 பேர் கொலை மேலும் சில வழக்குகளில் இவர்கள் 3 பேருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    எனவே இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 2-ந்தேதிக்கு பிறகு மூன்று குற்றவாளிகளையும் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
    • மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாட மலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.

    மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அப்பொழுது மக்கள் ஆபத்தை உணராமல் பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாயாற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகரித்து வருகிறது. தற்போது கோவை மாவட்டம் பில்லூர் அணை தனது முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் 18 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாயாற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இருகரையும் தொட்டபடி நீர் பாய்ந்து செல்கிறது.

    இந்நிலையில் இன்று காலை ஆபத்தை உணராமல் தெங்குமரகஹாட கிராம மக்கள் பரிசலில் பயணம் மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

    திடீர் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட்டு சில சமயம் ஊருக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். வயிற்று பிழைப்புக்காக ஆபத்தான முறையில் பரிசலில் கடந்து செல்கிறோம். இதற்கு நிரந்தர தீர்வாக மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.

    கோரிக்கை விடுத்தும் வருகிறோம். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியாத நிலையில் ஓரமாக ஒதுங்கினர்.
    • மலைப்பகுதியில் நல்ல தரத்துடன் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சில தினங்களாக தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி, கோடிபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    மலைக்கிராமங்களில் மக்கள் அன்றாட தேவைகளுக்கு அரசு பஸ்சை நம்பியுள்ளனர். இந்த அரசு பஸ் கிராமங்களில் இருந்து தாளவாடிக்கும், வெளியூருக்கும் சென்று வருகிறது. இந்நிலையில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிளை ஏற்றி கொண்டு அரசு பஸ் நேற்று மாலை 5.30 மணியளவில் சத்தியமங்கலம் புறப்பட்டது.

    மாலை 6 மணியளவில் பஸ் ஆசனூர் அருகே சென்ற போது பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் பஸ்சின் மேற்கூரையில் ஆங்காங்கே உள்ள துவாரத்தின் வழியாக மழை நீர் அருவியாக கொட்டியது. இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியாத நிலையில் ஓரமாக ஒதுங்கினர்.

    ஆனால் ஆங்காங்கே மழை நீர் துவாரம் வழியாக கொட்டியதால் பயணிகள் நனைந்தபடி பயணித்தனர். பஸ்சில் மழைநீர் அனைத்து பகுதியில் கொட்டியதால் பெரும் சிரமத்துக்குள்ளாகிய பயணிகள் நிம்மதியிழந்து பயணித்தனர். இதை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து அதை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மலைப்பகுதியில் ஓட்டை ஓடசல் பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதாகுவதும், மழைநீர் கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே மலைப்பகுதியில் நல்ல தரத்துடன் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டம் பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சடையப்பன் மனைவி பாப்பாள் (70). ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்.

    பாப்பாள் வங்கி கணக்கில் அவருக்கு வரும் ஓய்வூதிய பணம் ரூ.1.76 லட்சம் சேமித்து வைத்திருந்தார். இதனை அவருக்குத் தெரிந்த அரச்சலூர் ஜே.ஜே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபால் (38) என்பவரிடம் அந்தப் பணத்தை எடுத்து தர சொல்லி உள்ளார்.

    கோபாலும் மூதாட்டி ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவது போல் உதவி செய்து நடித்து பாப்பாள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொண்டார். இதை அடுத்து பாப்பாளை ஏமாற்றி அவரது ஏ.டி.எம் கார்டினை எடுத்துக்கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாப்பாள் இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • புதுமஞ்சள் வரத்து இல்லாததால் விலை குறைந்துள்ளது.
    • மஞ்சள் வணிகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் விராலி மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மருத்துவ குணம் மிகுந்து காணப்படுவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இங்கு சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மார்க்கெட்டில் கடந்த 16-ந்தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 40-க்கு ஏலம் போனது. பின்னர் படிப்படியாக குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 200 வரை விற்பனையாகி வந்தது.

    இந்நிலையில் நேற்று கோபி சொசைட்டியில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.13 ஆயிரத்து 169-க்கு விலை குறைந்து விற்பனையானது. ரூ.1,300 வரை விலை குறைந்து விற்பனையானது. மஞ்சள் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த ஏலத்துக்கு ஈரோடு மற்றும் அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைவித்த மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,149 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் 982 மூட்டைகள் விற்பனையானது. விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 519 முதல் ரூ.13 ஆயிரத்து 859 வரை விற்பனையானது. இதே போல் ஈரோடு வெளி மார்க்கெட்டில் 1,807 மூட்டைகள் வரத்தாகின.

    இதில் 940 மூட்டைகள் விற்பனையாகின. இதில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 169 முதல் ரூ.13 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது. இதை போல் ஈரோடு சொசைட்டி யில் 905 மூட்டைகள் வரத்தாகின. இதில் 838 மூட்டைகள் விற்பனையானது. இந்த சந்தையில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 819 முதல் ரூ.13 ஆயிரத்து 339 வரை விற்பனையானது.

    கோபி சொசைட்டியில் 157 மூட்டைகள் வரத்தாகின. 90 மூட்டைகள் விற்பனையாகின. இந்த சந்தையில் விராலி மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 319 முதல் 13 ஆயிரத்து 169 வரை விற்பனையானது. மஞ்சள் விலை தொடர்ந்து சரிந்து வருவது குறித்து ஈரோடு வியாபாரிகள் கூறியதாவது:- புதுமஞ்சள் வரத்து இல்லாததால் விலை குறைந்துள்ளது.

    பழைய மஞ்சள் இருப்பு வைத்துள்ளவர்கள் விலை சரியாக இல்லாததால் விற்பனைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள் குவிண்டால் ரூ.2 ஆயிரம் வரை குறைந்துள்ளது. வரும் நாட்களில் தரமான புதிய மஞ்சள் விற்பனைக்கு வரும்போது மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் மஞ்சள் வணிகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    சில மாநிலங்களில் விளைச்சல் அளவீட்டிற்கு ஏற்ப ஈரோடு மஞ்சள் விலையும் மாறுதலுக்கு உள்ளாகிறது. ஆனாலும் ஈரோடு மஞ்சள் விலை தற்போது சற்று குறைந்திருந்தாலும் மீண்டும் அதிகரிக்கவே செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெருந்துறையில் 2013-இல் ஹேமலதா மற்றும் பாலாஜி கடத்தல் வழக்கில் யுவராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 2013-இல் ஹேமலதா மற்றும் பாலாஜி கடத்தல் வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் எதிரான சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறியதால் யுவராஜ் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து ஈரோடு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விடுதலை குறித்து எக்ஸ் தளத்தில், யுவராஜின் ஆதரவாளர்கள் கொண்டாட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    இருப்பினும், இந்த வழக்கு கோகுல்ராஜ் கொலை வழக்குடன் தொடர்புடையதல்ல. இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் ஆகும். இதனால் கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் கோவை மத்திய சிறைக்கு யுவராஜ் அழைத்துச் செல்லப்பட்டார். 

    • கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.
    • பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி பூக்கள் பயிரிடப்படுகின்றன. நாள்தோறும் 5 டன் பூக்களுக்கு மேல் விளைகிறது. அவைகளை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள்.

    சத்தியமங்கலம் , பவானிசாகர், புளியம்பட்டி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக சம்பங்கி பூக்கள் விளைச்சல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. திருமண சீசன் போது கிலோ ரூ.500-க்கு விற்பனையான சம்பங்கி பூக்கள் கடந்த சில வாரங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாயாக சரிந்தது. இதற்கிடையே கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.

    இதனால் கடும் வேதனை அடைந்த விவசாயிகள் விரக்தி காரணமாக சம்பங்கி பூக்களை பறித்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டு நீரோடைகளில் டன் கணக்கில் கொட்டி வருகிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சம்பங்கி பூக்கள் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதை பயிரிட ஆயிரம் கணக்கில் செலவு செய்தோம். தற்போது சம்பங்கி பூ விலை கிலோ ரூ.10-க்கு சரிந்துள்ளதால் நாங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது. தற்போது 10 டன் சம்மங்கி பூக்களை பறித்து ஓடைகளில் கொட்டி அழித்து வருகிறோம் என்று வேதனையுடன் கூறினர். மேலும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விசாரணையில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் பணம் எதுவும் எடுக்கவில்லை. 82 கிராம் தங்க நகை மட்டுமே மீட்டு உள்ளோம்.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் இன்று ஐ.ஜி செந்தில்குமார் சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் ராமசாமி-பாக்கியம்மாள் கொலை செய்து நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து விசாரிக்க 12 தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.

    பழங்குற்றவாளிகள், சி.சி.டி.வி போன்றவை கொண்டு விசாரணை நடத்தி வந்தோம். கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. கொலையுண்ட தம்பதியின் செல்போன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள், மரக்கட்டை, கையுறை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

    ராமசாமி செல்போன் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலை சம்பவம் நடந்த இடம், வருகை பதிவான கால் தடங்கலும், இவர்களின் கால் தடங்கலும் ஒத்துப் போய் உள்ளது. இவர்கள் கொள்ளையடித்த நகையை அரச்சலூர் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரிடம் கொடுத்துள்ளார்.

    அவர் அதனை உருக்கி 82 கிராம் வைத்திருந்தார். அந்த நகையும் பறிமுதல் செய்துள்ளோம். இதையடுத்து ஞானசேகரையும் 4-வது நபராக கைது செய்துள்ளோம். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம், சேமலை கவுண்டன் பாளையத்தில் வசித்து வந்த தெய்வ சிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவரது மகன் செந்தில்குமார் (44) ஆகியோரை இதே பாணியில் கொலை செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் நகையை கொள்ளையடித்ததையும் ஒத்துக்கொண்டனர்.

    மேலும் கொலையுண்டவர்களின் செல்போன் வைத்திருந்தனர். அதையும் பறிமுதல் செய்துள்ளோம். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் உள்ளது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அது குறித்த ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.

    விசாரணை முடிவில் முழுமையான தகவல் வெளிவரும். இவர்கள் 2015ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதாகி 9 மாதங்கள் சிறையிலிருந்தது தெரியவந்துள்ளது. ஆச்சியப்பன் தேங்காய் உரிப்பது போன்று தோட்ட வீடுகளை நோட்டமிட்டு அதில் தனியாக வசிக்கும் தம்பதிகளை தேர்ந்தெடுத்து கூட்டாளிகளுடன் சதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் பணம் எதுவும் எடுக்கவில்லை. 82 கிராம் தங்க நகை மட்டுமே மீட்டு உள்ளோம். கடந்த 28ம் தேதி இரவு 12 மணி அளவில் இவர்கள் மூவரும் ராமசாமி, பாக்கியம் ஆகியோரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துள்ளனர். கைதானவர்கள் மீது ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    தற்போது 4 பேரும் கைது செய்யப்பட்டு எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடை க்கப்பட்டுள்ளனர். வரும் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களிடம் மேலும் பல வழக்கு தொடர்பாக விசாரிக்க உள்ளதால் நீதிமன்ற அனுமதியுடன் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்மந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர்.

    கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வந்தது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய அரச்சலூரை சேர்ந்த பழங்குற்றவாளி ஆச்சியப்பன் (வயது 48) என்பவர் கொலை நடந்த அன்று அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து ஆச்சியப்பனை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை தனியாக விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிவகிரி தம்பதி கொலையில் ஆச்சியப்பன் உள்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆச்சியப்பன் கொடுத்த தகவலின் பெயரில் அரச்சலூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஐ.ஜி. செந்தில்குமார், டி.ஐ.ஜி. சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தனிப்படை போலீசார் நேற்று ஒரு நாள் முழுவதும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளான இவர்கள் மூவர் மீதும் சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலூர், கொடுமுடி உட்பட போலீஸ் நிலையங்களில் 19-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் தோட்டத்து வீட்டில் தனியாக இருக்கும் வயதான தம்பதிகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று முதலில் தேங்காய் பறிப்பது போல் நோட்டமிட்டு அவர்களிடம் பேசி வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு தங்களது திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இதேபோன்று தான் சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி-பாக்கியம்மாள் ஆகியோரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

    மேலும் சிறு கத்திகளை கொண்டு காது, கைகளை வெட்டி நகைகளை திருடி சென்றுள்ளனர். மேகரையான் தோட்டத்தில் மண்வெட்டி கத்திகளை வீசி சென்றதாக அவர்கள் தெரிவித்த தகவலின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 4-வது நபராக நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர் கொள்ளையடிக்கும் நகைகளை ஞானசேகரன் கடையில் விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனை அடுத்து நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 4 பேர் இன்று காலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • சிவகிரி தம்பதி கொலை வழக்கில் போலீசார் இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.

    மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர். கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வரும் 20ம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் பா.ஜ.க. சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், அதில் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளில் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 3 நபர்களை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சில பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிவகிரி தம்பதி கொலை வழக்கில் போலீசார் இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில் 3 நபர் களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் முழு தகவலும் தெரிய வரும் என்றனர்.

    மேலும் பிடிபட்ட 3 பேரிடம் பல்லடத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளையிலும் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் இந்த கொலை வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    • டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
    • சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக புறநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உள்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

    மேலும், அவர்களை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, அந்தியூர் காலனியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, 100 -க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறியதாவது:- அந்தியூர் காலனியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், அந்தியூர் காலனி பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் இருப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

    அப்பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, மருந்து தெளிக்கப்பட் டுள்ளது. அங்கு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
    • காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரைப்பள்ளம் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திடீரென வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் கடந்து சென்றது. திடீரென யானை கூட்டம் வந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டனர்.

    சாலையை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலமாகும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது.

    கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஹாரன்களை அடித்தால் யானைகள் கோபமடையும். தற்போது ஆசனூர் வனப்பகுதியில் காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×