என் மலர்
ஈரோடு
- நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.06 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து உள்ளது. நேற்று காலை அணைக்கு 4, 966 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 15 ஆயிரத்து 199 கன அடியாக அதிகரித்து வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 450 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 1,355 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.50 அடியாக உள்ளது. இதே போல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 22.47 அடியாக சரிந்து உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.35 அடியாக சரிந்து உள்ளது.
- சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
- சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி-சத்தி மெயின் ரோட்டில் பெரியார் திடலில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாலையிலேயே வந்து தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து போலீசாருக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து சாலையோரம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரமாக தேங்காய் வியாபாரி ஒருவர் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் கடையில் இருந்த பொருட்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வியாபாரி கோபி ஈரோடு-சத்தி ரோட்டில் தேங்காயை போட்டு உடைத்து போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்த வியாபாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிறுவியது. தொடர்ந்து சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.
- சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.
- சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.
சென்னிமலை:
சேவல் சண்டை விளையாட்டு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கர்நாடக, அந்திரா, தெலுக்கான, மஹாராட்ரா, உள்ளிட்ட மாநிலங்களில் கிராம புறங்களில் பண்டிகை காலங்களில் சிறப்பாக நடக்கிறது. தமிழகத்தில் சேவல் சண்டை சூதாட்டமாக மாறி விட்ட நிலையில் அரசு அதற்கு தடை விதித்துள்ளது.
ஆனால், மற்ற மாநிலங்களில் நடந்து வருகிறது. அதுவும், தமிழ்நாட்டு சேவலுக்கு மற்ற மாநிலங்களில் அதிக மவுசும், விற்பனை வாய்ப்பு, நல்ல விலையும் கிராக்கியும் உள்ளதால் தற்போது இந்த சண்டை கோழி வளர்ப்பு தொழில் சூடு பிடித்துள்ளது. சென்னிமலை சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சிறிதும், பெரிதுமாக 50க்கும் மேற்பட்ட சண்டை சேவல் பண்ணைகள் உருவாகி உள்ளது. அதிக படியான வாலிபர்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.
சண்டை சேவல் குஞ்சு தேர்வில் இருந்து தொடங்கி அதை வளர்பதற்கு பெரும் முக்கியதுவம் கொடுத்து சண்டைகோழி வளர்ப்பில் வாலிபர்கள் ஆர்வமுடன் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில், காகம், வல்லூறு, ஆந்தை, கீரி, மயில், செங்கருப்பு, கோழிக்கறிப்பு, ஜல்லிக்கருப்பு என பல்வேறு ரகங்கள் உள்ளது. கேராள மாநில மக்கள் அழகுக்காக வீடுகளில் சேவல் வளர்க்க வாங்குகின்றனர் அதில், கிளி மூக்கு, கட்ட மூக்கு, விசிறி வால், மீட்டர் வால் என்ற ரகங்கள் அங்கு விற்பனை ஆகிறது அதுவும் ஒரு சேவல் ரூ.10 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை விலை போகிறது.
அதே போல் சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, கத்தி கால் சண்டை என ஒவ்வொறு மாநிலத்திலும் வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன.

சண்டை சேவல் வளர்ப்பு சாவல் மிகுந்த வேலை தான் என்கிறார் சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவில் சண்டை சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சீனிவாசன், (46), இது குறித்து அவர் கூறும் போது:
பொதுவாகவே, சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். அதனால் அவற்றைச் சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சி யோடு, நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி என சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவல்களுக்கு கொடுக்கப்படுகிறது.
சண்டை கோழிவளர்ப்பில் உணவு முக்கியம் வழக்கமான உணவை விட உடலை வலிமைப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி, அத்தி பழம் போன்றவை கொடுக்கப்படும். சண்டைக்குத் நன்கு தயாராகிய சேவல்களைப் சண்டை ஒத்திகை பார்த்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஒரு கோழி குறைந்தது ரூ.5 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை சண்டை திறனை பொறுத்து விலை போகிறது. மேலும், சண்டை கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.1,200 வரை விலை போகிறது. சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டுக்கு தடைவிதித்த போது தமிழகத்தில் வாலிபர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி போன்று சூதாட்டம் இல்லாத சேவல் சண்டை வேண்டும் என்கிற கோரிக்கை வாலிபர்கள் மத்தியில் வலுவாகி கொண்டே வருகிறது. சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.
'சேவல் சண்டையை போட்டியாகப் பார்க்காமல், இதை ஒரு பாரம்பரிய விளையாட்டாகப் பார்க்க வேண்டும். இந்த வீர விளையாட்டு ராஜாக்கள் காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது''எப்படி ஜல்லிகட்டு விளையாட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதோ அதே போல் சேவல் சண்டை அழியாமல் தடுக்க போராட்டம் நடத்தி அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையை மீட்டெடுக்க வேண்டும்' என்கிறார்.
- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்.
- தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ஊது குழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
ம.தி.மு.க. 31-வது பொதுக்குழு இன்று காலை 10 மணி அளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் 28 நிறைவேற்றப்பட்டன.
* 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்.
* 2026 சட்டப்பேரவை தேர்தலில் கழகம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும். இந்த ஆண்டு அறிஞர் அண்ணா 117-வது பிறந்த நாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்துவது.
* பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்.
* கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். வக்ப் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறுவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும்.
* தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ஊது குழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்புகளை மேம்படுத்தி ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் கல்வி நலனை பேணி பாதுகாக்க வேண்டும்.
* மருத்துவ காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். முழு மதுவிலக்கு என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.
* பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் மாத இறுதி வரையாவது நீக்க வேண்டும். பருத்தி விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறை ஏற்புடையதல்ல. அவற்றை நீக்கினால் செயற்கை இழை ஜவுளித்தொழில் மிக சிறப்பான வளர்ச்சி பெறும்.
* ரசாயன கழிவு நீரை காகித ஆலைகள் பவானி நதியில் கலப்பதால் பவானி ஆற்றில் வரும் நீர் ரசாயன கழிவுநீராக மாறி உள்ளது. இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோய் மற்றும் இதர தோல் நோய்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
* இதனை ம.தி.மு.க.வும், இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் செய்தி ஊடகங்களும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் எடுத்துச்சென்று உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதனைக் கருத்தில் கொண்டு பவானி நதியைக் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையின் கழிவு நீரால் சேதமடைந்துள்ள நிலத்தடி நீர்வளத்தை சீர்செய்திட அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தைப் போல ஒரு சிறப்பு திட்டத்தை பெருந்துறை வட்டத்தில் செயல்படுத்திட வேண்டும்.
* ஈரோட்டின் மாசு கட்டுப்பாட்டை உறுதி செய்து இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும். பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி, கொங்கு மண்டலத்தின் நீராதாரத்தை மேம்படுத்தி வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்திட வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தின் பழமையான காளிங்கராயன் கால்வாய் உட்பட மாசடைந்துள்ள கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றை மாசின்றி தூய்மையாகப் பராமரிக்க சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
- 3.30 மணியளவில் வைகோ செய்தியாளர்களை சந்திக்கிறார்.
ஈரோடு:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகள் இப்போதே வியூகம் வகுத்து வருகின்றன. அதன்படி ம.தி.மு.க.வும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ம.தி.மு.க.வின் 31-வது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது. அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என தமிழக முழுவதும் இருந்து 1,700 பேர் பங்கேற்கிறார்கள். காலை 11:30 மணிக்கு பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மதியம் வைகோவும், அதைத்தொடர்ந்து துரை வைகோ பேசுகின்றனர்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதே போல் சில முக்கிய தீர்மானங்கள், அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதியம் 3.30 மணியளவில் வைகோ செய்தியாளர்களை சந்திக்கிறார்.
இதுபற்றி, கொங்கு மண்டல ம.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.,வின் பொதுக்குழுவை பிரமாண்டமாக நடத்துவதுடன், கட்சி நிர்வாகம், கூட்டணி, தேசிய அரசியலில் முக்கிய முடிவுகளை அங்கு அறிவிப்பு செய்வார்கள். கட்சியின் நிர்வாகிகள் மாற்றம், பதவி அறிவிப்பு கூட அப்போது நடக்கும். கடந்த, 30-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில், 2024 ஆகஸ்ட் 4-ல் நடந்தது. அக்கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, 'நீட்' தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடன் நடத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் மத்திய அரசை முன்வைத்து நிறைவேற்றினர். அதை மையமாக கொண்டு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் திட்டமிடப்பட்டது.
இச்சூழலில், ஈரோட்டில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் எத்தனை தொகுதிகளை பெறுவது, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், வி.சி.க., போன்ற கட்சிகள் 'கூடுதல் இடம் கேட்போம்' என குரல் கொடுக்கும் நிலையில், ம.தி.மு.க.,வின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பார்கள்.
ஈரோடு உட்பட கொங்கு மண்டலத்தில் மறைந்த எம்.பி., கணேசமூர்த்திக்கு பின், வலுவான ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதால், வரும், 2026 சட்டசபை தேர்தலில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ம.தி.மு.க.வுக்கு 'சில தொகுதிகளை வழங்கி' முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே கணேசமூர்த்தி எம்.பி., எம்.எல்.ஏ.,வாக இப்பகுதியில் இருந்ததால், தங்களுக்கான அங்கீகாரத்தை பெற வலியுறுத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் காரணமாக நாளை நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், கரடி காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார்.
சிறிது தூரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது,
தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் சக்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வரும் சிறுத்தை வந்து செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.
- அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் 33 குட் கிராமங்கள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள்வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகிறது. இதே போல் மலைலப்பகுதி வழியாக வரும் வாகனங்களை வழி மறித்து கரும்பு உள்ளிட்ட உணவுகள் உள்ளதா எனவும் யானைகள் தேடி வருகிறது. ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.
மேலும் பலாப்பழங்களை யானைகள் அதிகளவில் உண்டு வருகிறது. வனப்பகுதிகளில் வாகனங்களில் பலாப்பழங்கள் எடுத்து சென்றால் அவைகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம், கூட்டமாக குவிய தொடங்கி விடுகிறது. இதே போல் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளில் பலா பழங்கள் உள்ளன. கிராம பகுதிகளில் யானைகள் புகுந்து அவற்றை தின்று வருகிறது.
தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இந்த சீசன் ஆனி மாதம் கடைசி வரை இருக்கும். இந்த நிலையில்ஆனி மாதம் தொடங்கி உள்ள நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன. பலாப்பழம் வாசனைக்காக வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்களை ருசிப்பதற்காக யானைகள் வந்து பலாபழத்தை ருசித்து செல்கிறது.
இந்த நிலையில் பர்கூரை அடுத்த துருசன்னம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பலா மரத்தில் பலாப்பழங்கள் பழுத்து தொங்கிக்கொண்டு இருந்தன. இதனை ருசிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. இதை தொடர்ந்து யானைகள் பலாப்பழத்தை அங்கேயே பறித்து உண்டு ருசித்துச் சென்றது.
அப்போது யானை மிகுந்த சத்தத்தோடு பிளிரிய படி சென்றது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்கள் குடியிருப்புக்குள் யானை வந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு இருந்து வருகிறார்கள்.
- யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
- கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஆசனூர் அருகே யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
இந்நிலையில் பழைய ஆசனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜ கண்ணா என்பவரது விவசாய தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை முட்டி தள்ளிவிட்டு சென்றது. மேலும் அங்கிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் தண்ணீர் குடித்து சென்றது. பின்னர் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனபகுதிக்குள் விரட்டினர் இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. யானை நடமாட்டாம் காரணமாக ஆசனூர் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியாவது:-
கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது. திடீரென விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்கள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டி வருகிறோம். இருந்தாலும் பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
- விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் தான் கேள்வி கேட்போம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
டெல்டா பாசனத்ததுக்கான தண்ணீரை நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து நான் வைப்பதற்கு முன், இன்று மேற்கு மண்டல வேளாண் குடி மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிரமாண்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டபோது என் மகனதில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகியது. அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியும் தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள்
தமிழ்நாட்டின் வேளாண் துறை மக்கள் எல்லோரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இந்த ஈரோட்டில் ஈர மனதுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கண்காட்சி, கருத்தரங்கை நடத்துவற்கு ஈரோடு மாவட்டத்தை ஏன் தேர்ந்து எடுத்தார்கள் என்றால் ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சிப்பெற்ற பல முன்னோடி விவசாயிகளை கொண்ட மாவட்டம்.
குறிப்பாக சொல்ல வேண்டும் வேளாண் உற்பத்தியில் மாநிலத்தில் 8-வது இடம்.
வேளாண் துறைக்கு என நிதி நிலை ஒதுக்கீடு செய்துள்ளோம். அதன் பயன்களை எடுத்து சொல்ல வேண்டும் என்றால் 4 நான்கு ஆண்டுகளில் 488 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து சாதனைப்படைத்து உள்ளோம்.
கூட்டுறவு துறையின் மூலம் 81 லட்சம் விவசாயிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் வேளாண் மின் இணைப்பு கொடுக்கு இலக்கு நிர்ணியக்கப்பட்டு 1 லட்சத்து 84 ஆயிரம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இலவச மின்சாரத்துக்கு 26 ஆயிரத்து 223 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் சிலர்தோளில் துண்டுப்போட்டு கொண்டு ஏமாற்றுகிறார்கள். விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் தான் கேள்வி கேட்போம்.
விவசாயிகளுக்கு அவர்கள் துரோகம் செய்தனர். 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதனால் தேர்லில் அவர்கள் தோற்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.
- 3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அ.தி.மு.க.வினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* விவசாயிகள் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
* 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.
* இலவச மின்சாரத்திற்காக ரூ.26,223 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்தது.
* 3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அ.தி.மு.க.வினர்.
* தோளில் பச்சை துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல.
* பயிர்களுக்கு இடையே வளரும் களைகளைப்போன்று தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி இருந்தது.
* எல்லா வகையிலும் விவசாயத்திற்கு துரோகம் செய்த ஆட்சிதான் கடந்த கால ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-ம் இடம் வகிக்கிறது.
- உழவு என்பது தொழில் மட்டுமல்ல, நம் பண்பாடு.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.15.70 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.159.53 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4,524 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பெருந்துறையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் 2 நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* சிறுதானிய உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம்.
* கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-ம் இடம் வகிக்கிறது.
* டெல்டா பாசனத்திற்கான நீரை திறக்கும் முன் வேளாண் கண்காட்சியை தொடங்கியதில் மகிழ்ச்சி.
* பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
* ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு மேலும் திட்டங்கள் தருவோம்.
* உழவு என்பது தொழில் மட்டுமல்ல, நம் பண்பாடு.
* வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற முன்னோடிகளை கொண்டது ஈரோடு மாவட்டம்.
* டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன்.
* முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தி.மு.க. அரசு தாக்கல் செய்தது.
* கூட்டுறவுத்துறை மூலம் 81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.62,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
* மண்ணுயிர் காத்து இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 22 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
குறிப்பாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழி மறித்து நிற்பதும், கிராமத்துக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.
திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் யானை சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வபோது சாலை அருகே வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து நின்றது. நீண்ட நேரமாக அங்கு நின்ற ஒற்றை யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இதனால் வாகன ஓட்டிகள் மேற்கொண்டு அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாததால் வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரம் திம்பம் மலைப்பாதை வளைவில் நின்ற ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர். இதன் பிறகே அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,
திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. யானைகள் உணவு தண்ணீரை தேடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






