என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை- பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
    X

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை- பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

    • நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.06 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து உள்ளது. நேற்று காலை அணைக்கு 4, 966 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 15 ஆயிரத்து 199 கன அடியாக அதிகரித்து வருகிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 450 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 1,355 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.50 அடியாக உள்ளது. இதே போல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 22.47 அடியாக சரிந்து உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.35 அடியாக சரிந்து உள்ளது.

    Next Story
    ×