என் மலர்
கடலூர்
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வீட்டு வசதி வாரிய பகுதியையொட்டி ரெயில்வே தண்டவாளம் உள்ளது. அதன் அருகே புதரில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று புதரில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர்.
அந்த வாலிபர் பேண்டும், சட்டையும் அணிந்திருந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. போலீசார் அந்த வாலிபரின் சட்டை பையில் இருந்த டிரைவிங் லைசென்சை கைப்பற்றினர். அதில், தியாகு, வல்லம்படுகை என்று இருந்தது.
யாரோ மர்ம மனிதர்கள் அவரை கடத்தி சென்று அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை தண்டவாளம் அருகே வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிறார்கள். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டி, கடலூர் ரோட்டில் திருவதிகை ஆயில் மில் பஸ் ஸ்டாப் அருகில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு இன்று காலை இந்த வழியாக ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயில் மோதியதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை, கை, கால் துண்டிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து கடலூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் என்ற பகுதியில் வாகன சோதனையில் இன்று அதிகாலை ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த போல் இருந்தது. இதனால் மதுவிலக்கு போலீசார் தூங்கிய நபரை எழுப்புவதற்கு காரின் அருகே சென்றனர்.
ஆனால் இருக்கையில் எந்த நபரும் தூங்கவில்லை. அதற்கு மாறாக தலையணையை அடுக்கி வைத்து, ஒருவர் தூங்குவது போல் தோற்றம் ஏற்படுத்தி இருந்தது தெரிந்தது. இதனால் உஷாரான போலீசார் அதனை அகற்றி பார்த்தபோது அட்டைப் பெட்டி முழுவதும் மதுபாட்டில்கள் இருந்தது.
இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் டிரைவரை மது விலக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் டிரைவர் மதுரை பழங்காநத்தம் சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் 160 மதுபாட்டில்களை மதுரைக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கடலூர் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் மணிகண்டனை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
கடலூர் ராஜகோபால சாமி கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கடலூர் புதுநகர் போலீசில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு கொடுத்தார்.
அதில், பெண்களை இழிவுபடுத்தியும், கோவில் ஊழியர்களை பற்றியும் எச்.ராஜா தவறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்(56). இவர் அதே பகுதியில் கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இவருக்கும் வடலூர் அருகே உள்ள சேராக் குப்பத்தை சேர்ந்த செல்ல பாண்டியன் (24) என் பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று செல்லபாண்டியன் அவரது நண்பர்களான நாரயண சாமி, சூரிய மூர்த்தி ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு வடலூரில் உள்ள சேகரின் ஒர்க் ஷாப்பிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த சேகரை தகாத வார்த்தைகளால் திட்டி செல்ல பாண்டியனும் அவரது நண்பர்களும் தாக்கினர்.
அப்போது ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்த வீரசேகர் என்பவர் செல்ல பாண்டியனையும், அவரது நண்பர்களையும் தடுக்க முயன்றார். உடனே அவர்கள் வீர சேகரையும் சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் வீரசேகர் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து வடலூர் போலீசில் சேகர் புகார் செய்தார். அதன் பேரில் செல்லபாண்டியன், நாரயணசாமி, சூரிய மூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செல்ல பாண்டியனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் அருண்குமார் (வயது 23), நவீன்குமார் (20). இவர்கள் 2 பேரும் பல திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர்கள்.
இவர்கள் இருவரும் சென்னையிலிருந்து பண்ருட்டி வந்தனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை அருகே வந்து கொண்டு இருந்த போது கண்டரக்கோட்டை- சென்னை சாலையில் நடந்து சென்ற சத்துணவு பெண் ஊழியர் ஆதிலட்சுமி (55) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றனர்.
பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் சிவசங்கர் என்பவரின் மனைவி நந்தினி (28). இவர் தனது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆட்டோவுக்காக ரோட்டோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இவர்கள் இருவரும் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி நந்தினிடமிருந்து தங்க சங்கிலியையும், செல்போனையும் பறித்து சென்றனர்.
நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியில் ரோந்து பணியிலிருந்த போலீசார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு திருடர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் விஷ்ணுப் பிரியா, அண்ணாமலை, கோவிந்தசாமி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் ராஜ் ஆகியோர் பிடிபட்ட திருடர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சென்னையில் இருந்து திருடி வந்தது என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி, செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
கொள்ளையர்களை துணிச்சலாக துரத்தி பிடித்து சென்று பிடித்த பண்ருட்டி, புதுப்பேட்டை போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பாராட்டினார்.
கடலூர் மாவட்ட உலகத்திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா கடலூரில் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் மீட்கப்பட்டு ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். ஆனால் இதுநாள் வரை எந்த பணமும் வங்கியில் செலுத்தவில்லை. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை.
ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். பொருளாதார வீக்கம் குறைக்கப்படும் என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்போம் என்றார். ஆனால், இதில் எதுவும் நடைபெறவில்லை.
தமிழகத்திலேயே கடலூரில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் ரூ.34 மட்டுமே விற்பனை செய்கிறோம். இது மிகப்பெரிய கொள்ளை. இவ்வாறு, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு கொள்ளையடித்து வைத்துள்ளது.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் எதுவும் நடைபெறவில்லை. ஜி.எஸ்.டி வரியால் பல தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லை, நிலம் விற்பனை முடக்கியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் கேட்டால் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் சண்டை நடக்கிறது என்று கூறுகிறார், பிரதமர் மோடி.
வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் மிகப்பெரிய பாடத்தை கற்பிக்கும்.
இலங்கையில் தமிழர்கள் இறப்பிற்கு காங்கிரஸ் காரணமல்ல. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் எங்களுக்கு வருத்தம் இருந்தது. எனது தனிப்பட்ட கருத்து தலைவரை கொன்றவரை விடக் கூடாது என்பதே. ஆனால், ராகுல்காந்தி இந்த விஷயத்தில் தெரிவித்த கருத்தினை ஏற்றுக்கொண்டோம். அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்மீது ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். தீவிரவாதத்தால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் அதிகப்படியான இழப்பு. இந்திரா காந்தி, ராஜீவ்காந்தியை இழந்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க. எந்த இழப்பையும் சந்திக்கவில்லை. எனவே, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கையாகும்.
இவ்வாறு கூறினார். #PondicherryCM #Narayanasamy #PMModi
கடலூர்:
வடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார் வடலூரில் தனியார் பேக்கரி கடை எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வடலூர், அன்னை சத்யா தெருவை சேர்ந்த அருள்பாண்டி என்கிற அருள்(வயது 29) என்பவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரம்அடைந்த அருள்பாண்டி தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவை வெட்ட முயன்றார். அப்போது அங்கே நின்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பத்மா கொடுத்த புகாரின் பேரில் அருள்பாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது வடலூர், மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி ஆகிய 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து அருள்பாண்டியின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்(பொறுப்பு) கலெக்டர் அன்புசெல்வனுக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் அருள்பாண்டியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன்(36). இவர் தன்னுடைய 5 வயது அதிஸ்ரீ என்ற பெண் குழந்தையுடன் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த ஆம்புலன்ஸ் சீனுவாசன் மற்றும் அவரது மகள் மீது மோதியது. அப்போது சீனுவாசனும், அவரது மகளும் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தின் போது சீனுவாசன் கையில் இருந்த பெண் குழந்தை ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு லேசான காயமடைந்தது. இதில் சீனுவாசன் உடல் மீது ஆம்புலன்ஸ் ஏறிச்சென்றதால் அவர் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தார். உடனே விருத்தாசலம் போலீசார் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனுவாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்துக்குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவியரசு. இவரது மகன் ரவீந்திரன் (வயது 13). இவன் அதே பகுதியில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தான்.
நேற்று காலை ரவீந்திரன் வெளியே சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிசென்றான். ஆனால் நீண்ட நேரமாகியும் ரவீந்திரன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.
அப்போது வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மாணவன் ரவீந்திரன் மயங்கி கிடந்தான். இதை பார்த்த அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரவீந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கள்ள குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவீந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் ரவீந்திரனின்தாய் பாப்பாத்தி புகார் செய்தார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மாணவனை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமேற்கு வங்கக்கடலில், கலிங்கப்பட்டனம் என்ற இடத்திலிருந்து, சுமார் 550 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மேலும் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் திடீரென்று உள்வாங்கியது. இதுமட்டுமின்றி நேற்று காலை முதல் மதியம் வரை கடலூரில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.
இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 6 மணிக்கு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. #StormWarningCage






