என் மலர்
கடலூர்
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பண்ருட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளுடன் காரில் கடாம்புலியூர் வழியாக பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் பால கிருஷ்ணனின் காரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவரது காரில் சோதனை நடத்தினர். அவருடன் வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த காரில் எந்தவித பொருளும் கிடைக்கவில்லை. அதன் பிறகு பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த வாகன சோதனையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் பண்ருட்டியில் நடந்த தி.மு.க தேர்தல் பிரசார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பணம் எடுத்து செல்லும் வண்டிக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். தேவையில்லாமல் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாகன சோதனை என்ற பெயரில் தொல்லை கொடுக்கின்றனர் என்று குறிப்பிட்டார். #Loksabhaelections2019
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறார். பண்ருட்டி, கடலூர் உழவர்சந்தை, விருத்தாசலம் பாலகரை ஆகிய இடங்களில் கடலூர் பாராளுமன்றதொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்தும், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி ஆகிய இடங்களில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்தும் திறந்தவேனில் நின்றபடி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
ஸ்ரீமுஷ்ணம் காமராஜ் சிலை அருகே உள்ள கடை வீதியில் நேற்று இரவு பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இந்த கூட்டணி புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். நமது வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக டெல்லிக்கு சென்று தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய வாழ்வாதார பிரச்சனைபற்றி பேசி திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றால் இந்திய பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும். நமது கூட்டணி தமிழகம் வரவேற்கும் கூட்டணி. ஒட்டுமொத்த இளைஞர்கள், பெண்கள் ஆதரவுடன் அமோக வரவேற்பு பெற்ற கூட்டணி.
இந்த கூட்டணி அமையக்கூடாது என தி.மு.க. எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தது. அவற்றை எல்லாம் முறியடித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கேப்டன் ஆகியோர் சேர்ந்து இந்த கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி இயற்கையாக பூ, இலை, பழம் என அமைந்துள்ள கூட்டணி. இங்குநிற்கும் இந்த கூட்டத்தை பார்க்கும்போது, ஆற்றல்மிகு இளைஞர்களின் கூட்டமாக உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு கேப்டன் விஜயகாந்த் மறுத்துவிட்டு தற்போது வலுவான கூட்டணியில் சேர்ந்துள்ளார். தேனீக்கள் போல் தே.மு.தி.க. கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செயல்பட்டு வாக்குகளை சிதறாமல் வாக்குச்சாவடிகளில் சேர்க்க வேண்டும்.
பொதுமக்களின் ஆசீர்வாதத்தால் விஜயகாந்த் தற்போது நல்ல உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களின் நலன் குறித்தும் எங்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார். நீங்கள் எதிர்பார்த்தபடி விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார். அவர் பிரசாரத்துக்கு வருகிற தேதியை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMDK #Vijayakanth #Premalatha
பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழு தலைவர் அருள் கணேஷ் தலைமையில் பண்டரக்கோட்டையில் அதிகாலை 2 மணியளவில் வாகன சோதனை செய்தார்.
அப்போது கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிழக்கு தெருவை சேர்ந்த ஷபியுல்லா என்பவர் மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் ரூ.1 லட்சத்து 25ஆயிரம் இருந்தது அந்தபணத்திற்கு எந்தவித ஆவணமும் இல்லை. எனவே அந்த பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கீதா, துணை தாசில்தார் தனபதியிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழு தலைவர் சீனுவாசன் தலைமையில் ஆநத்தம் பகுதியில் மாலை 5 மணியளவில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த பண்ருட்டி வியாபாரி ராஜா என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் எந்தவித ஆவணமின்றி இருந்த 2 லட்சத்து 93ஆயிரத்து 530 ரூபாயை குழுவினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் பண்ருட்டி தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் கீதா, துணை தாசில்தார் தனபதியிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வேதவள்ளி (வயது 74).
இன்று காலை வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது பெண்ணாடத்தில் இருந்து கெள்ளாத்தான்குறிச்சியை நோக்கி ஒரு டிராக்டர் வேகமாக வந்தது. அந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக வேதவள்ளி மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வேதவள்ளி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வேதவள்ளி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வேதவள்ளியின் மகன் வெங்கடேசன் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக பெண்ணாடம் தெற்கு ரத வீதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாலுவை (52) போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசினார்.
அ.தி.மு.க. தலைமையில் பலமான வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி கட்சியினர் பாகுபாடின்றி வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்கள். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.
இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, தமிழக உரிமையை டெல்லியில் மீட்டெடுக்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை தேர்தல் முடிந்த உடன் நிறைவேற்றுவோம்.
தி.மு.க ஆளுங்கட்சியாக வரப்போவதில்லை. தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது. அதனால் அரசு ஊழியர்கள் தவறான முடிவை எடுக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் தவறு செய்ய மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ராமத்தம், திட்டக்குடியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவர் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி அவதூறு பரப்பி வருகிறார். அதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.
தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடை, நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை மூடிவிடுவார்கள். மேலும் உரமானியத்தையும் ரத்து செய்து விடுவார்கள்.
டாஸ்மாக் கடைகளால் தான் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். டாஸ்மாக் கடை திறந்து இருக்கும் நேரத்தை படிப்படியாக குறைத்து, பூரண மதுவிலக்கு கொண்டு வரநடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் விவசாயிகளுக்காக தனியாக ஒரு பட்ஜெட் போட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ramadoss #dmk #parliamentelection
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அ.தி.மு.க. வின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழி நடத்துகிறார் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை கூறி திருமாவளவனை தாக்கி பேசினார்.
இந்த நிலையில் நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு ராமதாஸ் தன் மீது கூறிய கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வாழை இலையில் சாப்பாடு பறிமாறிய ராமதாஸ் தி.மு.க. ஒரு துரோக கட்சி, அது அழிந்துபோககூடியது. ஆகவே தி.மு.க. வில் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.

அதில் இருந்து என் மீது வீண் பழி சுமத்தி சேற்றைவாரி தூற்றி வருகிறார். நான் ஒளிவு மறைவு இன்றி திறந்த புத்தகமாக வாழ்ந்து வருகிறேன்.
தி.மு.க.வில் கூட்டணி சேர்ந்தால் சீட்டு மட்டும் தான் கிடைக்கும், நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி, பேரம்பேசி கூட்டணி அமைத்துள்ளனர். அது வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி.
நம்மிடம் ஒரே குரல்தான் ஒழிக்க வேண்டும். மோடியை விரட்டி அடிக்க வேண்டும். ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்பது தான்.
மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இனிமேல் நாட்டில் தேர்தல் நடக்காது. மாநில கட்சிகளை ஒழிக்க பா.ஜ.க. அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. மோடியால் சிறு, குறு தொழில்கள் அழிந்து விட்டன.
விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்ரேட்டுகளின் செல்லப் பிள்ளையாக மோடி திகழ்கிறார். அம்பானி, அதானிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வெளி நாடு சென்றுவருகிறார். மொத்தத்தில் கார்ப்ரேட் பிரதமராகவே உள்ளார்.
இந்து சமூகத்தின் முதல் எதிரி மோடி. சாதி வாரியாக மக்களை பிரித்து மொத்த வியாபாரியாக செயல்படுகிறார். இந்த தேர்தலில் மதவாதமா? ஜனநாயகமா? என்று முடிவு செய்யவேண்டும். சாதி வெறி தூண்டல்களில் சிக்கவேண்டாம். எந்த காலத்திலும் சாதியவாதம், மதவாதம் உள்ள பா.ஜ.க. வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருக்காது. என்னை சாதியை சொல்லிமட்டுமே குற்றம் சுமத்த முடியும். வேறு எந்த குற்றமும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #Thirumavalavan #Ramadoss
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்தியில், மோடி ஆட்சி தான் மீண்டும் வரப்போகிறது. 40 தொகுதிகளிலும் நம்ம கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. மோடி ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வராதபடி நாம் அழுத்தம் கொடுப்போம். மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததே எதிர்க்கட்சி தலைவர் தான். அவர் என்னை பற்றி ஏதேதோ பேசி வருகிறார். கோபம் குடியை கெடுக்கும், நாம் மக்களை பற்றி சிந்திக்கிறோம்.
நமது கூட்டணி வளர்ச்சிக்கான கூட்டணி. தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தான் அக்கறை கொள்கிறோம். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுவார். அரியலூர் ஜெயங்கொண்டம் குன்னம் தொகுதிகளில் இதை விட அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #Ramadoss
பரங்கிப்பேட்டை அருகே தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் பிரபுதேவா (வயது 25). இவர் சென்னையில் தங்கி ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக பிரபுதேவா தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருடைய தாய் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே உனது சம்பளப் பணத்தை தா என்று பிரபுதேவாவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் மனமுடைந்த பிரபுதேவா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி பிரபுதேவா பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து சந்திரசேகரன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






