என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.
    • இந்த சம்பவத்தில் 3 குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளதாக கூறி உள்ளனர்.

    கோவை:

    கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணி சார்பில் இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமை தாங்கினார். மகளிர் அணி நிர்வாகிகள் லீலா உண்ணி, விமலா கண்ணம்மாள் முன்னிலை வைத்தனர். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. மகஸே்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்கள் முட்புதரில் தூக்கி வீசி உள்ளனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார். அவர் கதறி அழுத பின்னரும் வக்கிர புத்தியுள்ள அந்த கும்பல் அவரை விடாமல் சீரழித்துள்ளது.

    இந்த சம்பவத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலைய செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்பேரில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த சம்பவத்தில் 3 குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் அவர்களை யாருக்கும் காட்டவில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா அல்லது போலி குற்றவாளிகளாக என்ற சந்தேகம் உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. தலைவர்கள் கண்டித்துள்ள நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் கவர்னரை சந்தித்து மனு கொடுத்த கனிமொழி எம்.பி. இதுவரை வாய் திறக்கவில்லை. அதேபோல கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போலீசார் தற்போது இல்லை. தி.மு.க. ஆட்சியில் 4150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மாநகரம் தொழில் நகரம். இங்கு ஏராளமானோர் வந்து செல்லும் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் பிரபாகரன், சிங்கைபாலன்,ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • துணை ஜனாதிபதி அங்கிருந்து சாலைமார்க்கமாக மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
    • தடை செய்யப்பட்ட நேரத்தில் தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கோவை:

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வர உள்ளார்.

    அப்போது அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதனையடுத்து துணை ஜனாதிபதி விமான நிலையத்தில் இருந்து 6.30 மணிக்கு சாலை மார்க்கமாக கோவை பிளிச்சி ஒன்னிபாளையம் ஸ்ரீ எல்லை கருப்புராயன் கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் 10,008 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து துணை ஜனாதிபதி அங்கிருந்து சாலைமார்க்கமாக மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் இரவு 9.40 மணிக்கு விமானம் மூலம் ராஜ்பூர் சென்றடைகிறார்.

    துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டத்தில் ஒன்னிபாளையம் கருப்புராயன் கோவில் சுற்றுவட்டார பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணிவரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட நேரத்தில் தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே துணை ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக மாநகர அளவில் 500 போலீசாரும், புறநகர அளவில் 1000 போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
    • பேருந்தில் பயணித்த பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடிவந்தநிலையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர். குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மதுக்கரை பகுதியில் அ.தி.மு.க.வினர் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கினர். பேருந்தில் பயணித்த பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி அ.தி.மு.க.வினர் பெப்பர் ஸ்பிரே வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கோவையில் 300 சிசிடிவிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கோவையில் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.

    * கோவையில் பல இடங்களில் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. பொதுமக்களும் அதனை கவனிக்க வேண்டும்.

    * பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.

    * பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    * பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர். எங்கும் எந்த நேரத்திலும் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.

    * தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து பாதிக்கப்பட்டவர்களை விமர்சிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.
    • பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.

    கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டோம்.

    * சந்தேகத்திற்கு இடமானவர்கள் வெள்ள கிணறு பகுதியில் பதுங்கி இருந்தனர்.

    * போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.

    * கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

    * கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிவகங்கையை சேர்ந்தவர்கள், 15 ஆண்டுகளாக கோவையில் உள்ளனர்.

    * சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு கொலை, திருட்டு வழக்குகள் உள்ளன.

    * சம்பவ இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 3 பேரும் கல்லை கொண்டு கார் கண்ணாடியை தாக்கி இளம்பெண்ணை தூக்கி சென்றனர்.

    * கைகளில் வைத்திருந்த அரிவாளை கொண்டு ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை தூக்கிச்சென்றனர்.

    * பிடிபட்ட மூவரில் 2 பேர் இருவரும் பிணையில் வெளியில் வந்துள்ள குற்றவாளிகள்.

    * கைது செய்யப்பட்ட சதீஸ், கார்த்தி ஆகியோர் சகோதரர்கள். குணா என்பவர் அவர்களது உறவினர்.

    * சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் 3 பேரும் சிக்கி உள்ளனர்.

    * பிருந்தாவன் நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து பணி சென்றுள்ளனர். அதன்பின்னர் தான் சம்பவம் நடந்துள்ளது.

    * இரவு 10.30 மணி முதல் 11 மணிக்குள்ளாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.

    * கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த இடத்திற்கு 15 நிமிடத்திலேயே சென்றாலும் போலீசாரால் உடனடியாக கண்டறிய இயலவில்லை.

    * பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.

    * பிடிபட்டுள்ள 3 பேரும் கூலிப்படையுடன் தொடர்புடைய நபர்களாகத் தெரியவில்லை. விசாரணைக்குப்பின் தெரியவர வாய்ப்பு உள்ளது.

    * 3 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர்.
    • போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர். குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

    துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கோவை துடியலூரில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே தடயவியல் நிபுணர் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
    • 3 பேரையும் தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

    கோவையில் நேற்றுமுன்தினம் இரவில், விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, நேற்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார்  சுட்டுப் பிடித்தனர்.

    குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர்.

    • வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.
    • இந்த சம்பவத்தை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

    கோவையில் நேற்று இரவில், விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, இன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ஆளும் திமுக அரசை அதிமுக, தவெக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சம்பவத்தை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக கட்சி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே பாஜக. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    முன்னதாக இந்த சம்பவத்தை கண்டித்து இன்றும் நாளையும் பாஜக சார்வில் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.  

    • அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
    • அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும்; தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில் கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    4.11.2025- செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது என்று ஆதவ் அர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி, நேற்று ஞாயிறு இரவு, கோவை விமான நிலையம் அருகே தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது, மதுபோதையில் அங்கே வந்த மூன்று பேர் காரில் அமர்ந்திருந்த அந்த மாணவியின் நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    நீண்ட நேரத்திற்குப் பிறகு, மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தனது செல்போன் மூலமாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு சான்றாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுவெளியில் அவர்கள் அச்சமின்றி பயணிக்கின்ற பாதுகாப்பான சூழலை ஒரு அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கடமை.

    ஆனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடங்கி, தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு இந்த அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த குற்றச் செயல்களுக்குக் காரணமாக, பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணமான மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ, அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

    மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட மாணவி அவர்கள் விரைவில் நலம்பெறவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து, சட்டத்தின் முன் அவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்காக கொள்கை உறுதியுடன் பணியாற்றி வருகிறேன்.
    • தி.மு.க.வில் மட்டும் குடும்ப அரசியல் இருப்பதாக கூறுகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்காக கொள்கை உறுதியுடன் பணியாற்றி வருகிறேன். இந்த இயக்கம் வலுப்பெற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் இன்றைக்கு செயல்பட்டு வருகிறோம்.

    தி.மு.க.வில் மட்டும் குடும்ப அரசியல் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க.வில் மட்டுமல்ல, அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை என்று தலையீடுகள் அ.தி.மு.க.வில் இருப்பது நாடறிந்த உண்மை.

    தன்னால் முடியாததை தன்னால் முடியும் என்று சொல்லி, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது என்றார். 

    • தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கோவை:

    காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை 3 பேர் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கோவையில் நள்ளிரவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார்.

    இந்த மாணவிக்கு, கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். முதலில் செல்போனில் நட்பாக பேசி வந்தஅவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். வார விடுமுறை நாட்களில் 2 பேரும் வெளியில் எங்காவது சென்று நேரத்தை செலவிட்டனர்.

    இதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று இரவு கல்லூரி மாணவியும், அவரது காதலனும் சந்தித்துக் கொண்டனர். காதலன், காரில் வந்திருந்தார். அந்த காரில் கல்லூரி மாணவி ஏறிக்கொள்ள கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்றனர். நள்ளிரவு 11 மணிக்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி விட்டு 2 பேரும் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு மர்மநபர்கள் 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி காரை நோக்கி வந்தனர். காரின் கதவை தட்டி உள்ளே இருந்த 2 பேரையும் மிரட்டினர். இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபடியே காரில் இருந்த காதலனை வெளியே இழுத்தனர். கல்லூரி மாணவியின் கண் முன்பே அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த காதலன் மயங்கி விழுந்தார்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் மாணவியை, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். அங்குள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே புதருக்குள் தூக்கிச் சென்று 3 பேரும், மாணவியை ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடி இருக்கிறார். அவரையும் அந்த கும்பல் தாக்கி கொடூரச் செயலை அரங்கேற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

    இதற்கிடையே மயக்கம் தெளிந்த காதலன், செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பீளமேடு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இன்ஸ்பெக்டர் அர்ச்சுன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு படுகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை அவர்கள் தேடினர். சுமார் 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த மாணவி, தண்டவாளம் அருகே உள்ள புதருக்குள் ஆடைகள் களைந்தநிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை போலீசார் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    காதலனை தாக்கி கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கும்பலை பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். இரவு விடிய, விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. அதேசமயம் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மட்டும் அந்த பகுதியில் கிடந்துள்ளது. அந்த மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரித்தபோது அது திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் யார், அவர்கள் மாணவர்களா அல்லது வேறு யாருமா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. 3 பேரும் கடும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், உதவி கமிஷனர் வேல்முருகன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த கொடூர சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×