என் மலர்
சென்னை
- இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
- மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
சீமான் வீட்டு வாசலில் ஒட்டப்பட்ட சம்மனை சீமான் வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சுபாகர் கிழித்ததால் போலீசாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுபாகரையும், அவரது வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.
அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தங்களை போலீசார் கைது செய்திருப்பதாகவும், போலீசார் கூறிய குற்றச்சசாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும், துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால் தங்களை ஆயுத தடுப்பு சட்ட பிரிவின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
- சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
- திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரை தாக்கிய சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூ.4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது ஆகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது தான் பாசிசம் ஆகும்.
திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அருளை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.
- சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.
- சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.
உலக கிட்னி விழிப்புணர்வு தினம் இன்று. சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.
இதில் இருந்து ஒவ்வொருவரும் தன்னை தற்காத்து கொள்ள என் னென்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றி பிரபல கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்திரராஜன் விளக்கினார்.

அவர் கூறியதாவது:-
அறிகுறி தெரியாது:
எனக்கு கிட்னி பாதிப்பு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. சிறுநீர் கழிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீர் நிறையவும் செல்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பு தவறு.
சிறுநீரக பாதிப்பு என்பது வெளியே எளிதாக தெரிவதில்லை. 90 சதவீதம் சிறுநீரகம் செயலிழக்கும் வரை எந்தவிதமான அறிகுறிகளும் வெளியே தெரியாமல் கூட இருக்கும்.
அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதும் சிறுநீரக பாதிப்பின் காரணமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இதயம் ஒன்றே ஒன்று தான். அதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பெரும் பாலும் அறிகுறி தென்பட்டு விடும். அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என்று ஏதாவது பிரச்சினை இருக்கும்.
ஆனால், கிட்னி இரண்டு இருப்பதால் 90 சதவீதம் பாதிக்கும் வரை அது தனது வேலையை செய்து கொண்டே இருக்கும். நமக்கு வெளியே தெரியாது. கிட்னி செயலிழப்பு என்பது 'சைலன்ட் கில்லர்' போன்றது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.
சிறுநீரக பாதிப்பு:

தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்த பிறகு தான் கிட்னி பாதிப்பு, டயாலிசிஸ் என்பது பிரபலமானது.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார்.
அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த தஞ்சை மருத்துவ குழுவில் நானும் இருந்தேன். சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக முடிவு செய்து குளுகோஸ் ஏற்றப்பட்டதும் அவர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்.
ஆனால், அவரது ரத்த மாதிரியை நான் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு அறிகுறி இருப்பதாக மருத்துவ வல்லுனர் டீன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அடுத்த சில நாளில்
எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது சிறுநீரகம் செயலிழந்து இருந்ததை கண்டுபிடித்து உடனடியாக அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி சென்னை திரும்பினார்.
டயாலிசிஸ்

அந்த கால கட்டத்தில் டயாலிசிஸ்சும் பிரபலமாக வில்லை. எனது மனைவி தமிழிசை இரண்டு டயா லிசிஸ் கருவியை வைத்து 200 ரூபாய் கட்டணத்தில் வீட்டில் வைத்தே சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலி சிஸ் செய்து வந்தார்.
அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஹர்ஷவர்தன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார். அந்த நேரத்தில் டயாலிசிஸ் அவசிய தேவை பற்றி அவரிடம் பேசி கொண்டு இருந்தோம். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து டயாலிசிஸ் திட்டம் தொடர்பாக புள்ளி விபரங்களை மத்திய அரசு கேட்டு பெற்றது.
தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்போது சிறுநீரக பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
டாலிசிஸ் சென்டர்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அடுத்த இரண்டே மாதத்தில் வள்ளுவர் கோட்டம் அருகிலும், பெரம்பூர் ரெயில் நிலையம் அருகிலும் டயாலிசிஸ் மையங்களை திறந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்து கவுரவப்படுத்தினார். இந்தியாவிலேயே முதல் முதலாக மாநகராட்சி சார்பில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டது சென்னையில்தான்.
அந்த பெருமை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சேரும். இப்போது எல்லா மாவட்டங்களிலும் டயாலிசிஸ் வசதி கிடைக்கிறது.
இதயமும், சிறுநீரகமும் மாமன் மைத்துனன் மாதிரி. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன் என்று ஒன்றை தொடர்ந்து இன்னொன்றும் பாதிக்கும்.
கிட்னியின் நிலையை அறிந்து கொள்ள 'ஆல்புமின், கிரியேட்டின் அளவு, அடிவயிற்றுக்கு ஒரு ஸ்கேன் ஆகிய 3 பரி சோதனை மேற்கொண்டால் போதும்.
பொதுவாக 32 வயதை கடந்தவர்கள் ஆண்டு தோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் யாராவது கிட்னி பாதிப்புக்கு ஆளாகி இருந்தால் மற்றவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம். பெற்றோரிடம் இருந்து சொத்து மட்டுமல்ல.
இந்த மாதிரி வியாதிகளும் கிடைக்கலாம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நம் உடலில் இருந்து நச்சுப் பொருள்களை வெளியேற்றுவது முதல் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது வரை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காப்பதில் சிறுநீரகங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
ஆனால், நாம் நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு நம் சிறுநீரகங்களை நாம் கவனித்துக் கொள்கிறோமா?
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகப்படியான மருந்துகள், வலி நிவாரணி களைத் தவிர்ப்பது சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கும். முக்கியமாக சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
உடலை நீர் ஏற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். குடிப்பழக்கம், புகைப் பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும். ரத்த அழுத்தத்தை அன்றாடம் சரிபார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி, உடல் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
- சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
உலக ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் தமிழக வீரர் பிரணவ் வெங்கடேசுக்கு ரூ.20 லட்சம் ஊக்க தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற பீடே உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பிரணவ் வெங்கடேஷ், 2022-ம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேசின் பெற்றோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை 270 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- கோயம்பேட்டில் இருந்து நாளை தலா 51 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வார விடுமுறையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 966 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை (14-ந்தேதி) 270 பஸ்களும், 15-ந்தேதி 275 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து நாளை (14-ந்தேதி) மற்றும் 15-ந்தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து தலா 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
- சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.
- எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. கார்பரேட் நிறுவனங்களால் மல்டிப்ளெக்ஸ் திரைகள் அறிமுகமாவதற்கு முன்னரே சென்னையில் 4 திரைகளுடன் சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கியது.
ஒவ்வொரு திரையிலும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது. இருப்பினும் காலத்திற்கேற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரத் தவறியதால் உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.
உதயம் திரையரங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில் திரையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டரை தொடர்ந்து சென்னையில் உள்ள மேலும் இரு திரையரங்குகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கமும், பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா திரையரங்கமும் மூடப்படுவதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தண்டையார்பேட்டையில் பல வருடங்களாக செயல்பட்டு வந்த எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட எம்.எம். திரையரங்கம் தொடர்ந்து நட்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
பெரம்பூரில் 1985ஆம் ஆண்டு ஸ்ரீபிருந்தா தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அதன்பின்பு இந்த தியேட்டரை ரசிகர்கள் அன்போடு ரஜினி தியேட்டர் என்றே அழைத்தார்கள். இந்த தியேட்டரில் மாப்பிள்ளை, பாண்டியன், அண்ணாமலை போன்ற பல ரஜினி திரைப்படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடின.
சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.
- முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உதயகுமார் என்பவர் வடிவமைத்த குறியீடு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலட்சினையில் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
* தமிழக அரசு பட்ஜெட்டுக்கான லோகோவில் ரூபாய்க்கான குறியீடை நீக்கி விட்டு, ரூ என வெளியிட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.
* ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உதயகுமார் என்பவர் வடிவமைத்த குறியீடு மாற்றப்பட்டுள்ளது.
* உங்களால் எப்படி முட்டாளாக இருக்க முடிகிறது மு.க.ஸ்டாலின் அவர்களே?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாட்டில் நடக்கும் கொலைகளை தனிப்பட்ட பிரச்சனைகள் என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்.
- விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதேபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி, உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?
திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில்,
அன்றே இந்த விடியா திமுக அரசும் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா?
அது சரி- நாட்டில் நடக்கும் கொலைகளை "தனிப்பட்ட பிரச்சனைகள்" என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்..
"வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தனது ஆட்சியில் நடக்கும் அனைத்து தவறுகளையும், எதை போட்டு மறைக்க என தெரியாமல், யாரொ கதை வசனம் எழுதி கொடுத்த திசை திருப்பும் நாடகங்களில் நடிக்க கிளம்பியிருக்கும் முதலமைச்சர் அவர்களே, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது,
சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது. இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது,
விடியா ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.
- காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.
தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. திமுக அரசினால் கைகள் கட்டப்பட்டுள்ள காவல்துறை மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
சேமலைகவுண்டம்பாளையம் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.
- தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க. அரசு தலைமை கொறடா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.
தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்கிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட… என்று பதிவிட்டு லோகோவை அவர் வெளியிட்டுள்ளார்.
ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
- சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
- சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுவார். வரும் நிதியாண்டான 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிப்பார்.
இந்த நிலையில் மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட "தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25"-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.






