என் மலர்
சென்னை
- சாதி பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
- கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி என்ற பெயர்களை மாற்ற வேண்டும்
செங்குந்த முதலியார் சங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கம் தொடர்பான வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடத்தை நடத்துகிறார்கள். ஆனால் அந்தப் பாடம் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தின் பெயரில் சாதியில் உள்ளது. இது எப்படி நியாயமாகும்! என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதனால் கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். ஆனால், சாதி பெயரை நீக்குவது குறித்து அரசு தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது இப்போது நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சங்கங்களில் உள்ள சாதி பெயரை நீக்குவது குறித்து பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த சாதிப் பெயரை தொடர்ந்து சங்கங்கள் பயன்படுத்தி வந்தால் அது சட்டவிரோதம் என்று அறிவித்து அந்த சங்கத்தின் பதிவை ஐ.ஜி. ரத்து செய்ய வேண்டும்.
மேலும் பள்ளிகள் கல்லூரிகளில் சாதியின் பெயரில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பதிவுத்துறை ஐ.ஜி.நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அதன்படி சாதிப்பெயரை நீக்கி கல்வி நிலையங்கள் பெயர் பலகை வைக்க வேண்டும். ஒரு வேலை இதை செய்ய மறுத்தால் அந்த கல்வி நிலையத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை, அங்கீகரிக்கப்பட்ட வேறு கல்வி நிலையங்களில் சேர்க்க வேண்டும்.
அதேபோல அரசு நடத்தும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்பதில் இருந்து இந்த ஆதிதிராவிடர் என்ற சாதி பெயரை நீக்க வேண்டும். வேறு சாதியின் பெயரில் அரசு பள்ளிக்கூடம் நடத்தினாலும் அந்தப் பெயரையும் நீக்க வேண்டும்.
நன்கொடையாளர்கள் கல்வி நிலையங்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயரில் இருந்த ஜாதியை நீக்க வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் 3 மாதங்களுக்குள் அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன் பின்பு நீதிபதி, தற்போதுள்ள மாணவ சமுதாயம் பள்ளிக்கூடங்களில் புத்தகப் பைக்குள் அருவாளை எடுத்துச் சென்று ஜாதியின் பெயரால் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கின்றனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்தார்.
- கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
- தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசவில்லை.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே அந்த வெற்றியை பெற்ற இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இவர்கள் போட்ட வழக்கில் வெற்றி கிடைத்திருக்கிறது. அதனால் அந்த கொண்டாட்டத்துக்காக நான் இங்கு வந்து முதலமைச்சரை சந்தித்தேன்.
தேசிய அளவில் இந்த வெற்றியை நாம் மற்றவர்களுக்கும் பயன்படும்படி கொண்டாட வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசவில்லை. மேல்சபை எம்.பி. சீட் தொடர்பாக பேச வரவில்லை. அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
- ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
சென்னை:
கோடை வெயில் தாக்கம் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகமாக இருந்தது. வெப்பம் படிப்படியாக அதிகரித்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென்று கோடை மழை பெய்தது.
சென்னையில் இன்று காலை வெயில் அடித்தப்படி இருந்தது. சுமார் காலை 9 மணியளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்தில் சென்னையின் சில இடங்களில் மழை பெய்தது. பின்னர் படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. அதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மதுரவாயல், பூந்தமல்லி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. அதே போல் காஞ்சீ புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாட்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இன்று பெய்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தின் போது இருக்கும் சூழல் இன்று நிலவியது.
திடீர் மழை காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நிலவரப்படி சென்னை மேடவாக்கத்தில் 13 செ.மீ. மழை பெய்து உள்ளது. வளசரவாக்கத்தில் 11 செ.மீ., சாலி கிராமம், நெற்குன்றத்தில் தலா 10 செ.மீ., மணலியில் 9 செ.மீ., பாரிமுனையில் 8 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், ராஜாஅண்ணாமலைபுரத்தில் தலா 7 செ.மீ., நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 6 செ.மீ., அடையாறில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
- மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும்.
- நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வரும் 22-ந்தேதி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
* மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும்.
* நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.
* தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- கோவையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவ சிலை நிறுவப்படும்.
- தமிழ் அறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடமை செய்யப்படும்.
சென்னை:
சட்டசபையில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விரிவாக பேசினார். அப்போது அவர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-
தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். அதன்படி தமிழ் அறிஞர்களுக்கு ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு ரூ.3,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும், எல்லை காவலர்களுக்கு ரூ.5,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
கோவையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவ சிலை நிறுவப்படும். தமிழ் அறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடமை செய்யப்படும்.
மதுரவாயல் வட்டம் குண்டலத்தில் திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும். தமிழ் தென்றல் வி.கல்யாண சுந்தரனாரை போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான குண்டலத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கம், மார்பளவு வெண்கல சிலை நிறுவி அங்குள்ள நூலகம் மேம்படுத்தப்படும்.
மொழி பெயர்ப்பாளர் ஜமதக்கிணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நினைவுத் தூண் நிறுவப்படும். கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாள் நவம்பர் 9-ம் நாளை தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும். இதே போல் இசை அரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ரூ.3 கோடி செலவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.
கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் மார்ஷல் நேசமணியின் போர் படை தளபதியாக விளங்கிய குமரிக்கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் நூற்றாண்டையொட்டி அவருக்கு நாகர்கோவிலில் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள நினைவரங்கங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாவட்ட, மாநில அளவில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.
அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதல் உள்ளிட்ட சேவைகள் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வண்ணம் இணைய வழியில் அவை மேற்கொள்ளப்படும். இது ஜூலை மாதம் முதல் (கியூ ஆர் கோடு வசதியுடன்) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மும்பை-ஐதராபாத், பெங்களூரு-சென்னை, திருச்சி-சென்னை விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்று, கனமழையின் காரணமாக ஒவ்வொரு விமானமும் தரையிறங்குவதில் 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் தரையிறங்க வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடித்து வருகிறது.
- மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
- குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல.
சென்னை:
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னையில் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது
- காலை அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், சென்னையில் அடுத்த 1 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
- இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர்,
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
* மாற்றுத்திறனாளி என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் கலைஞர் தான்.
* மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ரூ.1,432 கோடியாக உயர்த்தி உள்ளோம்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக நிதி தருவதில் தமிழ்நாடு தான் முன்னணி.
* மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும்.
* உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதியாக உள்ளது.
* அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
* புதிய அறிவிப்பின் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும்.
* இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.
* அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பை கலைஞர் எனக்கு வழங்கினார். அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போது அடைகிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து சட்டமுன் வடிவை நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு குரல் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த சட்டமுன்வடிவிற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
- அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
- 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதே அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்தக் கட்சிக்கு தேர்தலில் தோல்வியே கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணிக்கு காய் நகர்த்திய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அணியில் இருந்து கட்சிகளை இழுத்து புதிய கூட்டணியை அமைத்து விடலாம் என திட்டமிட்டார். ஆனால் அதற்கான சூழல் ஏற்படவே இல்லை .
இந்த நிலையில் தான் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சேர உள்ளன.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் ஓ. பன்னீர்செல்வம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோரும் இந்த கூட்டணியிலேயே தொடர உள்ளனர்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருக்கிறது. இப்படி அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எத்தனை இடங்களை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றன என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது இரண்டு மடங்கு கூடுதலாக அந்த கட்சி தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இதன் மூலம். 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது.
பா.ம.க.விற்கு 15 தொகுதிகள் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் தினகரனுக்கு 10 தொகுதிகள் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீ செல்வதற்கு தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை தக்க வைக்கும் வகையில் நான்கு இடங்களை ஒதுக்க லாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மீதமுள்ள சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி கொடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியில் 150 இடங் களில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ள தன் மூலம் மீதமுள்ள 84 தொகுதிகளையும் பார திய ஜனதா கட்சியிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மூலமாக மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. , பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கள் எவை? எவை? என்பது பற்றிய பட்டியலை தயா ரித்து வைத்துள்ளன.அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி இருப்பது போல மற்ற கட்சிகளுடனும் கூட்டணியை இறுதி செய்த பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என் கிற விவரங்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவ தற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் தங்களுக்கு செல் வாக்கு உள்ள பகுதியான கொங்கு பகுதியில் குறிப் பிடத்தக்க தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது. இதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி வடமாநிலங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெறுவதிலும் கவனம் செலுத்த தொடங்கி யுள்ளது.
இப்படி கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் தங்களுக்கு தேவையான இடங்களை பெறுவதில் தீவிரம் காட்ட தொடங்கி யுள்ளது.இதன்மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க, கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக விரைவில் இறுதி செய்யப் பட்டு தொகுதி பங்கீடும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமைச்சர், பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து அமைச்சர், பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதில், "இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிர் அணியினர் கையில் செருப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்தியா உள்ளிட்ட முக்கிய பெண் நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
- நாங்கள் அமைத்திருப்பது வலுவான கூட்டணியா? அல்லது வலுவில்லாத கூட்டணியா? என்பது தேர்தலில்தான் தெரியும்.
- எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.
சென்னை:
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேருவுக்கு எதிராக நமபிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, 'எதிர்க்கட்சியினர் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் பரிசீலனையில் உள்ளது. அதை இன்று எடுத்துக்கொள்ள முடியாது' என்று கூறினார்.
இதையடுத்து சபாநாயர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தொடர்பாகவும், தமிழகத்தில் ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு பங்கு வழங்கப்படுமா? என்பது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
நாங்கள் அமைத்திருப்பது வலுவான கூட்டணியா? அல்லது வலுவில்லாத கூட்டணியா? என்பது தேர்தலில்தான் தெரியும். ஒரு கட்சி வருகிற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
சேருகின்ற வாக்குகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து எதிரிகளை அகற்ற வேண்டும் என்ற கருத்து உள்ள கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சி செய்தோம். அந்த முயற்சியில் முதல் கட்டமாக பா.ஜ.க. எங்களுடன் இணைந்திருக்கிறது.
எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்திருக்கிறது. எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கிறது.
ஆனால் எந்த கட்சிகள் வரும் என்பதை வெளியில் சொல்ல முடியாது. சிலவற்றை தான் வெளியில் சொல்ல முடியும்.
அ.தி.மு.க. எங்கள் கட்சி. நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதற்கு தி.மு.க.வினர் ஏன் எரிச்சல் படுகிறார்கள். ஏன் அவர்கள் பயப்படுகிறார்கள்? இன்றைக்கு அவர்களுக்கு பயம் வந்து விட்டது.
அ.தி.மு.க. ஒரு பிரதான கட்சி. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி. எங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். நாங்கள் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது.
நீங்கள் ஏன் எரிச்சல் படுகிறீர்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அது எங்கள் இஷ்டம். இவருடன் கூட்டணி வைத்தால் வர மாட்டீர்கள், அவருடன் கூட்டணி வைத்தால் வர மாட்டீர்கள் என்கிறார்கள். இதை சொல்ல தி.மு.க. வினருக்கு அருகதை இல்லை. இதை மக்கள் முடிவு செய்வார்கள். வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அரசு என்று அமித்ஷா சொல்லவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். ஆனால் ஆட்சியில் பங்கு என்று அவர் சொல்லவில்லை. ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது.
டெல்லிக்கு பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு என்னுடைய பெயரை சொல்லி அமித்ஷா சொன்னார். இதில் இருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி நீங்கள் ஏதேதோ கண்டு பிடிக்கும் வேலையை விட்டு விடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
தி.மு.க.வை வீழ்தத வேண்டும் என்று ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் என்றுதான் அமித்ஷா கூறினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டுமே, ஆட்சியில் கூட்டணி அல்ல. ஆட்சியில் பா.ஜ.க.வினருக்கு பங்கு என கூறவில்லை.
சட்டசபையில் இன்று சட்டமன்ற பேரவை விதி 72-ன் கீழ் அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையை தெரிவிக்கும் தீர்மானத்தை அ.தி.மு.க. சார்பாக நாங்கள் கொண்டு வந்தோம். அது குறித்து அவையில் பேசுவதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார். அதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகன், சகோதரருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள இடங்கள், இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் 7.4.25 அன்று மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தியதுடன், சோதனைக்கு பின்பு மேல் விசாரணை நடத்தி 11.4.2025 அன்று விளக்கமான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கும் போது அளித்த உறுதி மொழியை மீறி இந்து மதத்தை பற்றியும், பெண்கள் பற்றியும் அவர் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு அவதூறாக பேசியது, அமைச்சர் பதவி ஏற்கும் போது அவர் ஏற்ற உறுதிமொழியை மீறிய செயலாகும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையான டாஸ்மாக் நிறுவனம் மற்றும் கடைகள் தனியார் மதுபான ஆலைகளில் மத்திய அமலாக்கத்துறை 6.3.2025 அன்று சோதனை நடத்தியது. முதல் கட்டமாக ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே இந்த காரணங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாங்கள் கடிதம் கொடுத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்ற போது அதை அப்போதைய சபாநாயகர் அனுமதி கொடுத்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது. அதை மேற்கோள் காட்டி நாங்கள் பேசினோம். எங்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்த காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
தமிழகத்தில் மக்களிடம் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அமலாக்கத்துறை பல்வேறு துறைகளில் சோதனை நடத்தி இந்த துறையில் இவ்வளவு கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்று செய்தி வெளியிடுகிறது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் வெளியிடப்படுகிறது.
ஒரு அமைச்சர் இந்து மதத்தை புண்படுத்துகிற விதமாகவும், பெண்களை இழிவுபடுத்துகின்ற விதமாகவும் பேசி இருக்கிறார். இதெல்லாம் முக்கிய பிரச்சனைகளாக இந்த ஆட்சிக்கு தெரியவில்லை. இதையெல்லாம் அவையில் விவாதிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை. இதை விளக்குவது அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.






