என் மலர்
நீங்கள் தேடியது "சாதி பெயர்"
- ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களை தவிகர்க்கப்பட வேண்டும்.
- சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவு.
முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களை தவிகர்க்கப்பட வேண்டும்.
பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்ற பெயர்களை நீக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளூவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் பெயர்களையும், குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது.
- சாதிய அடையாளங்களை நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆகவே சாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மாநில அரசு இதற்கான பல்வறு விதிமுறைகளை பிறப்பித்துள்ளது.
அதாவது உத்தரபிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதிப் பெயர், சாதிய கோஷங்களை வாகனத்தில் ஒட்டினால் அபராதம். விதிக்கப்படும் என்றும் சாதிய அடையாளங்களை பெருமைப்படுத்தும் பலகைகளை கிராமங்களின் பொதுவெளியில் இருந்து அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் நோட்டிஸ் போர்டு மற்றும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதி பெயரை குறிப்பிடாமல் சம்பந்தப்பட்ட நபரின் அப்பா பெயரை அடையாளத்திற்கு குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் சாதிய வன்கொமை வழக்குகளில் மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாதி பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
- கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி என்ற பெயர்களை மாற்ற வேண்டும்
செங்குந்த முதலியார் சங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கம் தொடர்பான வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடத்தை நடத்துகிறார்கள். ஆனால் அந்தப் பாடம் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தின் பெயரில் சாதியில் உள்ளது. இது எப்படி நியாயமாகும்! என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதனால் கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். ஆனால், சாதி பெயரை நீக்குவது குறித்து அரசு தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது இப்போது நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சங்கங்களில் உள்ள சாதி பெயரை நீக்குவது குறித்து பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த சாதிப் பெயரை தொடர்ந்து சங்கங்கள் பயன்படுத்தி வந்தால் அது சட்டவிரோதம் என்று அறிவித்து அந்த சங்கத்தின் பதிவை ஐ.ஜி. ரத்து செய்ய வேண்டும்.
மேலும் பள்ளிகள் கல்லூரிகளில் சாதியின் பெயரில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பதிவுத்துறை ஐ.ஜி.நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அதன்படி சாதிப்பெயரை நீக்கி கல்வி நிலையங்கள் பெயர் பலகை வைக்க வேண்டும். ஒரு வேலை இதை செய்ய மறுத்தால் அந்த கல்வி நிலையத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை, அங்கீகரிக்கப்பட்ட வேறு கல்வி நிலையங்களில் சேர்க்க வேண்டும்.
அதேபோல அரசு நடத்தும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்பதில் இருந்து இந்த ஆதிதிராவிடர் என்ற சாதி பெயரை நீக்க வேண்டும். வேறு சாதியின் பெயரில் அரசு பள்ளிக்கூடம் நடத்தினாலும் அந்தப் பெயரையும் நீக்க வேண்டும்.
நன்கொடையாளர்கள் கல்வி நிலையங்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயரில் இருந்த ஜாதியை நீக்க வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் 3 மாதங்களுக்குள் அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன் பின்பு நீதிபதி, தற்போதுள்ள மாணவ சமுதாயம் பள்ளிக்கூடங்களில் புத்தகப் பைக்குள் அருவாளை எடுத்துச் சென்று ஜாதியின் பெயரால் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கின்றனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்தார்.
- கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
- மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன.
சென்னை:
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தமிழ்மணியின் நேர்காணலை அடிப்படையாக வைத்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என அரசு தரப்பில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதை படித்து பார்த்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என கூறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பொத்தாம் பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்
மேலும், 'மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன அவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும். தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கியது போல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுங்கள்' என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கல்வராயன் மலைப்பகுதிக்கு மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த குழுவுடன் ஐகோர்ட்டுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் தமிழ்மணியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது, வக்கீல் மோகன்தாஸ் ஆஜராகி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவர், 'பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 9 கோடி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஆனால் அந்த தொகை இன்னமும் முழுமையாக செலவிடப்படவில்லை' என்று கூறி அதுதொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தார். அதற்கு நீதிபதிகள், 'தங்களது கோரிக்கையை ஏற்கிறோம். அரசு குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாம்' என்றனர்.
- இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது.
- இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது.
சென்னையில் இன்று நாடார் சங்க கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய எம்.பி. கனிமொழி, "தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஐ.ஏ.அஸ் அதிகாரி படித்துக் கொண்டிருக்கும்போது அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மட்டும் தனியாக தெரிகிறது. ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுக்கிறீர்கள் என்று கூறினார். அப்போது வகுப்பின் பெயர் பட்டியலை எடுத்து உங்கள் பெயர்களை பாருங்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் பெயர்களை பாருங்கள். எங்கள் பெயருக்கு பின்னால் எங்கள் தந்தை பெயரோடு நிறுத்தி கொண்டோம். உங்கள் பெயருக்கு பின்னால் என்ன சாதி என்று வெளிப்படையாக உள்ளது.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது. நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள். இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது. நாம் எல்லோரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள். அதனால் இப்படி சாதி பெயரைப் போட வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
- பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார்.
- மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் விஜயகுமார் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார்.
அப்போது, குறிப்பிட்ட ஒரு இசைக்கருவியின் பெயரை குறிப்பிட்டு அந்த இசைக்கருவியை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பார்கள் எனக்கூறி ஒரு மாணவரின் பாடப்புத்தகத்தில், மாணவரின் சாதி பெயரை குறிப்பிட்டு எழுதி அனைத்து மாணவர்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவன் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி அழுதான். இதையடுத்து, 2 நாட்கள் கழித்து ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
பின்னர் குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, திருப்பத்தூர் தாசில்தார் நவநீதம், கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுலவர் உத்தரவிட்டுள்ளார். விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்களின் நினைவாக அல்லது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.
- சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்கள் இளைஞர்களிடையே பிரச்சினைகளை உருவாக்கும்.
திருப்பூர் :
பெயர்களில் சாதி அடையாளத்தைப் பயன்படுத்துவதை தமிழ்நாடு முற்றிலும் ஒழித்துவிட்டது. ஆனால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள சாலைகளில் ெதரு பெயர் பலகைகளில் இன்னும் சாதி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலகைகள் அகற்றப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பல்லடம் நுகர்வோர் விழிப்புணர்வு பேரவை தலைவர் கே.வி.எஸ்.மணிகுமார் கூறியதாவது:-பல்லடத்தில் சாதி பெயர்களை கொண்ட தெருப் பலகைகளின் பெயர்கள் உள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்களின் நினைவாக அல்லது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.
அந்தக்காலங்கள் போய்விட்டன. சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் பற்றி பேசுகிறோம் .ஆனால் சாதி பெயர்களை காட்ட அனுமதிக்கிறோம். சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்கள் இளைஞர்களிடையே பிரச்சினைகளை உருவாக்கும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக தெரு பலகைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க கோரி வருகிறோம். பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பல தெரு பெயர்களில் சாதி பெயர்கள் உள்ளன. வார்டு இரண்டில்பட்டியல் சாதி சமூகத்தை குறிக்கும் தெரு உள்ளது.இதே வார்டில் மற்றொரு சாதி பெயருடன் முடிவடையும் பல தெருக்கள் உள்ளன.இந்த பெயர்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. எனவே சாதி பெயர்களை அகற்ற வேண்டும் என்றார்.
இதுகுறித்து பல்லடம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தெருக்களின் பெயர்களை மாற்ற நகராட்சிக்கு அதிகாரம் இல்லை. அனைத்து கவுன்சிலர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்துவோம். சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஒரு முன்மொழிவை அனுப்புவோம். அவர்கள் இந்த விஷயத்தில் முடிவு செய்வார்கள் என்றார்.






