என் மலர்tooltip icon

    சென்னை

    • வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.
    • சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அமித்ஷாவை பார்த்தால் எங்களுக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும். தி.மு.க.வை பார்த்து ஷாக் அடித்து தானே அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.

    * பிரதமர் எதற்காக 5 முறை தமிழகம் வர வேண்டும்.

    * கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்?

    * தமிழ் குறித்து தமிழர்கள் குறித்தும் பேசும் மத்திய பா.ஜ.க. அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுப்பது ஏன்?

    * வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.

    * இல்லாத சரஸ்வதி நதி, சமஸ்கிருதம் மொழிக்கு எதற்காக நிதி ஒதுக்கீடு.

    * பா.ஜ.க.வின் இந்துமத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அவர்களை பார்த்தால் எங்களுக்கு சிரிப்பாகத்தான் உள்ளது.

    * நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு 4 மடங்கு வருவாய் உயர்ந்துள்ளது.

    * அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி ஒன்றுதான் பாக்கி.

    * பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஒரு திட்டம் உள்ளது.

    * சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.

    * மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் மாநில நிதியில் இருந்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அருவெறுப்பான, வஞ்சனம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.
    • அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து அப்பட்டமான பொய்களை அமித்ஷா பேசி உள்ளார்.

    * தி.மு.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா சுமத்தி உள்ளார்.

    * அருவெறுப்பான, வஞ்சகம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.

    * தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டு பேசி உள்ளார்.

    * அமித்ஷாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது கிடையாது.

    * அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதவாத பிளவை உண்டாக்கும் வகையில் அமித்ஷா பேச்சு உள்ளது.

    * அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.

    * அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமாக பேசி உள்ள அமித்ஷாவின் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
    • அதிகபட்சமாக 05.05.2025 அன்று 3,23,899 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 2025-ம் ஆண்டு மே மாதத்தில் 89,09,724 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 05.05.2025 அன்று 3,23,899 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025, மே மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 5,86,430 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,268 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 169 பயணிகள், கியூஆர் கோடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 42,33,865 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 40,87,992 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து கடந்த ஏப்ரல் வரை 39 கோடி பயணிகள் பயணம் செய்ததாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெருமிதமாக தெரிவித்துள்ளது. மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி மெட்ரோ பயணிப்பதாக தெரிவித்துள்ளது.

    மேலும், எங்களை தேர்ந்தெடுத்ததற்காக எங்கள் அனைத்து பயணிகளுக்கும் நன்றி. சென்னை மெட்ரோ ரெயில் உங்கள் நம்பகமான பயண கூட்டாளியாக இருப்பதில் பெருமை கொள்கிறது என்று தெரிவித்துள்ளது.

    • பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த மு.க.ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு இன்னும் திருந்தவில்லை!
    • சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அ.தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

    சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு இரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் அ.தி.மு.க.வை சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது .

    மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த மு.க.ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு இன்னும் திருந்தவில்லை!

    தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

    பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது.

    தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது.
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.

    கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. கடந்த 7-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.71 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.118-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-06-2025- ஒரு கிராம் ரூ.117

    07-06-2025- ஒரு கிராம் ரூ.117

    06-06-2025- ஒரு கிராம் ரூ.118

    05-06-2025- ஒரு கிராம் ரூ.114

    04-06-2025- ஒரு கிராம் ரூ.114

    • மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • விடுதி காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்யப்பட்டார்.

    அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் மேத்யூவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
    • நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி இம்மாதம் (ஜூன்) 19-ந்தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.

    தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கடந்த 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இன்றுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

    வரும் 12-ந்தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிருந்தால் வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும்.

    • தலைமை செயலகத்தில் இன்று காலை பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    தமிழக அரசின் நலத்திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    நெடுஞ்சாலை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவு துறை ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    • கோடை காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • மொத்தம் 260 பேர் உயிரிழந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.

    சென்னை:

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என 2 மழை காலங்கள் இருக்கின்றன. இதில் தென் மேற்கு பருவமழை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வடகிழக்கு பருவமழை தென் இந்தியாவிலும் மழையை கொடுக்கிறது.

    இதுதவிர, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கக்கூடிய காலமாக இருக்கிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் ஆங்காங்கே தென்பட்டாலும், இந்தியாவில் பல இடங்களில் கோடை மழையும் கைக்கொடுத்து இருக்கிறது.

    அந்த வகையில் கோடை காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கடந்த மாதம் (மே) இந்தியாவில் இயல்புக்கு அதிகமாக மழை கொட்டியிருப்பதாகவும், 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழை பதிவாகி இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த மாதத்தில் 30 அதி கனமழை நிகழ்வுகளும், 155 மிக கனமழை நிகழ்வுகளும், 514 கனமழை நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது. அப்படி பெய்த மழையினாலும், மழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளாலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

    அதன்படி, இடி-மின்னல் தாக்கி மட்டும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, சத்தீஷ்கார், கர்நாடகா, ஜார்கண்ட், பீகார், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, அசாம், குஜராத், கேரளா, பஞ்சாப், சண்டிகர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 199 பேர் இறந்துள்ளனர்.

    மேலும் கனமழை, பெருவெள்ளத்தினால் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, அசாம், டெல்லியில் 58 பேரும், காற்றினால் ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆக மொத்தம் 260 பேர் உயிரிழந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.

    பொதுவாக மே மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த காலங்களில் வெப்ப அலையினால் (ஹீட் வேவ்) பலருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் அப்படியே தலைகீழாக மாறி, வெப்ப அலையால் உயிரிழப்பு என்பதைவிட மழை நிகழ்வுகளால் இறப்பு என்பதே அதிகளவில் ஏற்பட்டு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.

    • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்.
    • திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாக நாடகமாடிய திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது.
    • இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சீத்தம்பூண்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்து வீடுகளில் தனியாக வாழும் மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றைத் தடுக்கத் தெரியாமல் திமுக அரசு தடுமாறி வருவது கண்டிக்கத்தக்கது.

    அண்மைக்காலங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் பெரியவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். 6 மாதங்களுக்கு முன் நவம்பர் 28-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    அதன்பின், கடந்த மே மாதத் தொடக்கத்தில் ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராமசாமி, பாக்கியலட்சுமி ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலைகளால் தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டது.

    நவம்பர் மாதம் நடந்த மூவர் படுகொலைக்கு காரணமானவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக கைது செய்யப்படாத நிலையில், மேலும் இருவர் படுகொலை செய்யப்பட்டதால், தமிழக காவல்துறையின் செயல்திறன் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டன.

    அதனால், விளாங்காட்டு வலசு கொலை வழக்கில் தொடர்புடையதாக ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ், ஞானசேகரன் ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறையினர், இவர்கள் தான் சேமலைக்கவுண்டன்பாளையத்தில் மூவரையும் கொலை செய்ததாகக் கூறி வழக்குகளை முடித்தனர். அப்போதே அவர்கள் தான் உண்மையான கொலையாளிகளா? என்பது குறித்து ஐயங்கள் எழுப்பப்பட்டன.

    இத்தகைய சூழலில் தான் பரமத்தி அருகே மேலும் ஒரு படுகொலை நிகழ்ந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்றால், இந்தக் கொலையை செய்தவர்கள் யார்? ஒருவேளை இந்தக் கொலையை செய்தவர்கள் புதிய கொலையாளிகள் என்றால், அதைத் தடுக்க அரசும், காவல்துறையும் தவறியது ஏன்? தோட்டத்துக் கொலைகளைத் தடுக்க பண்ணை வீடுகளை ஒட்டிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை கூறியிருந்த நிலையில் அவற்றையும் தாண்டி இந்த படுகொலை எவ்வாறு நடந்தது? என்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் விளக்கமளிக்க வேண்டும். மொத்ததில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாக நாடகமாடிய திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றன. சாலையில் சென்றாலும், வீடுகளில் இருந்தாலும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. இதற்கெல்லாம் காரணமான செயல் திறனற்ற திமுக அரசை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிவிட்டு, மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.
    • தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்.

    தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற பாஜகவின் அஜண்டாவை போல ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் 'ஒரே ஆள் ஒரே பேச்சு' என ரீதியில் பேசி வருகிறார்.

    ''தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் கோவைக்கு வந்த போது இதே டயலாக்கைதான் பேசினார். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுந்தோல் போர்த்திய புலி.

    ''ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லி போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலரும்'' எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலைத் தமிழர்கள் எப்படி மறப்பார்கள்?

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை பாஜகவினர் எப்படியெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள்? ''தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?'' என 2024 மே மாதம் அமித்ஷா சீறினார். இப்போது தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார்.

    ''ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் இருக்க வேண்டிய புதையல் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது'' எனச் சொல்லி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.

    அது மட்டுமா? ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை போல ஒருவரைச் சித்தரித்து, தமிழர் வேட்டி சட்டை அணிவித்து, வாழை இலையில் பழைய சோறு வைப்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வீடியோ வெளியிட்டு தமிழர்களைக் கேவலப்படுத்தியது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் ஒடிசாவிலேயே இருக்கிறது.

    ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது போலத் தமிழ்நாட்டைப் பிடிப்பார்களாம். ஒடிசாவின் லட்சணம்தான் இந்தியாவுக்கே தெரியுமே!

    ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்று 2024 ஜூன் 12-ம் தேதி ஆட்சியைப் பிடித்தது. 2024 டிசம்பர் வரையிலான ஐந்தே மாதத்தில் மட்டும் ஒடிசாவில் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    41 கூட்டுப் பாலியல் பலாத்காரம் உள்பட 509 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக 9 ஆயிரத்து 248 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

    கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 509 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. அந்த ஒடிசாவின் ஆட்சியைத்தான் தமிழ்நாட்டுக்குத் தரப் போகிறார்களா?

    பாஜக ஆட்சி எப்படி இருக்கும்? என்பதை மணிப்பூரில் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! மணிப்பூர் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன.

    400-க்கும் மேற்பட்ட மத வழிப்பாட்டு தளங்கள் அழிக்கப்பட்டன. 70,000 பேர் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தனர். இணையச் சேவைகள், முடக்கம், ஊரடங்கு உத்தரவு , பாலியல் கொடுமைகள், கண்டதும் சுட உத்தரவு என மணிப்பூர் முடங்கிப் போனது. மணிப்பூர் பெண்களின் கற்புக்கே சவால் விட்டார்கள். கலவரத்தை பாஜக அரசு வேடிக்கை பார்த்தது.

    ஆனால், பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் மணிப்பூர் அரசைப் பதவி நீக்கம் செய்யாமல், ''முதல்வர் பிரேன் சிங் அமைதியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார்'' என சர்டிபிகேட்தான் கொடுத்தார்கள். மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்த பிறகும் கூட வன்முறை வெறியாட்டம் நிற்கவில்லை.

    இன்றைக்கும் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இணையதளச் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத பாஜக, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் மூலம் எங்களுடைய முதலமைச்சர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று விட்டார். பத்து ஆண்டுகளாகச் சீரழிந்து கிடந்த தமிழ்நாட்டை வளமானதாக்கி தலை நிமிர வைத்துள்ளார். நான்காண்டுகள் அடிமை ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிச்சாமியால் இப்படி ஓர் ஆட்சியைக் கற்பனையிலும் தர இயலாது.

    அதிமுக என்னும் கட்சியை மிரட்டியே விழுங்கிக் கொண்டிருக்கும் அமித்ஷா, கூட்டணி அமைத்த அன்றே தனக்கு அடிமைதான் எடப்பாடி பழனிச்சாமி என்பதை உலகத்துக்கே காட்டினார். இன்று திமுக ஆட்சி மீது அவதூறு பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார்.

    அமித்ஷாவுக்கு 2021 சட்டமன்றத் தேர்தல் மறந்து விட்டது போலும். பாஜகவின் அண்ணாமலையே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பயன்படுத்தித்தான் பிரசாரம் செய்தார். மோடியின் பெயரைக் கூட போடாமல் விளம்பரம் செய்த பாஜகவினர் கதைகள் நிறைய இருக்கிறது. பாஜக தலைவர்கள் தயவு செய்து பிரசாரத்துக்கு வந்துவிட வேண்டாம் என்று அதிமுகவின் வேட்பாளர்கள் கெஞ்சும் அளவுக்கு பாஜக மீதான வெறுப்பு தமிழ்நாட்டில் நிலவியது.

    அந்த வெறுப்பு அடங்கவில்லை என்பதைத்தான் அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் காட்டியது. தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜக மீது அது இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

    தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதும் தமிழ்நாட்டுக்கான நிதி உரிமையை மறுப்பதும் தங்களுக்கு வாக்களிக்காத தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்குவதற்காக பாஜக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பாஜக மீது தமிழ்நாட்டு மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2026 சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும் அவருக்கும் துணை போகிறவர்களுக்கும் சரியான தீர்ப்பைத் தமிழர்கள் எழுதுவார்கள்.

    இதெல்லாம் உளவுத் துறை மூலம் அமித்ஷாவுக்கு தெரியாமல் இருக்குமா? தெரியும். தேர்தலில் வெல்வது அல்ல அவர்களின் நோக்கம். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைக் கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பாஜக வர வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை இலக்கு. அதற்காக 2026 சட்டமன்றத் தேர்தலைப் பயன்படுத்துகிறார்கள்.

    அமித்ஷா தொடங்கியுள்ள இந்தப் பிரசாரம் எங்களுக்கு மிகவும் வசதியானதுதான். ஏற்கெனவே சொன்னது போல ஆளுநர்தான் எங்களை வெற்றி பெற வைக்க போகிறார் என்று நினைத்தோம். ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் போட்டு விட்டதால் அந்தப் பணியைத் தற்போது அமித்ஷா கையில் எடுத்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றிகள்.

    '2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றிபெறும்" என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து இப்படிப் பேசுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதையே பேசினார்.

    2019, 2024 மக்களவைத் தேர்தல்களின் போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று பேசினார். அவர் பேசியது எதுவுமே கடந்த காலங்களில் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான நாளில் இருந்தே தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது.

    தொண்டர்களின் நம்பிக்கையையே பெற முடியாதவர்கள் மக்களின் நம்பிக்கையை மட்டும் எப்படிப் பெற முடியும்? எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் எத்தனை "ஷா" கள் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது.

    2018-ம் ஆண்டு தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தித் தொடங்கிய திமுக தலைமையிலான கூட்டணி 13 தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திமுக கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியைப் பெறும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×